தீராக் காதல் திமிரா-5

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 5

அதிதியை தாக்க வந்த தடியனை அவள் அடிப்பதற்குள் இடையில் புகுந்து மற்றொருவன் ஓங்கி அடிக்க.... தரையில் கிடந்தான் அவன்...

அதிதி எவன் அவன்? என்பது போல் அடித்தவனை பார்க்க.... அவனோ அந்த உணவகத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் உடையில் இருந்தான்.

மற்ற மூவரும் அந்த தடியனை அடித்தவனை திருப்பி அடிக்க வர.... மற்ற உணவக பணியாளர்கள் அவனுக்கு உதவியாக அவர்களை பந்தாடினர். சிறிது நேரத்தில் அவ்விடமே கலவரம் ஆனது.

எப்பொழுதும்போல் சண்டைக்காட்சிகள் முடிந்தபின் தாமதமாக ஆஜரான போலீசார்கள்.... பணியாளர்களின் கவனிப்பால் நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்த நால்வரையும் தக்க மரியாதையோடு மாமியார் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

அதிதி தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி சொல்ல...
முதலில் உதவி செய்த ஒருவன்... அருண்குமார் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டதோடு
அவன் ஆரம்பத்திலிருந்தே அக்கூட்டத்தை கவனித்ததாகவும்... அவர்கள் கௌதமை படுத்திய பாட்டை கவனித்தாலும் ஹோட்டலின் கஸ்டமர்கள் என்பதால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இருந்ததாக சொன்னவன் கூடவே அதிதியின் தைரியத்தையும் பாராட்டினான்.

மௌனமாக அவனது பாராட்டுதலுக்கு தலையசைத்தவள்...
அருணா கௌதம் உடன் அவ்உணவகத்தில் இருந்து வெளியேறினாள்... அவளுக்கு அவனை எங்கோ பார்த்தது போலவே இருந்தது.... ஆனால் எங்கே என்றுதான் நினைவில் இல்லை.

அருணா ஆட்டோவில் அவள் வீட்டிற்கு சென்று விட... தன் பைக்கில் தம்பியுடன் வீட்டை வந்து சேர்ந்தாள் அதிதி....

கௌதம் அதிதியிடம் நன்றி சொல்ல முயற்சித்து அவளது இறுக்கமான முகத்தைப் பார்த்ததும் பயந்து சொல்லமுடியாமல் சோர்ந்த முகத்துடன் வீட்டிற்குள் நுழைய .... அவனுக்கு முன்னேயே உள்ளே வந்திருந்தாள் அதிதி..

அங்கோ மங்களம் தன் மாப்பிள்ளையிடம் எகிரிக் கொண்டிருந்தார்.

"அது எப்படி மாப்பிள வீட்டுக்கு பெரியவ நான் இருக்கும்போது நீங்க எப்படி அதிதிக்கு உங்க இஷ்டத்துக்கு மாப்பிள்ளை பாக்கலாம்"

"அத்த எனக்கு ரொம்ப தெரிஞ்சவங்க....அதனால என்னால மறுப்பு சொல்ல முடியல... வாக்குக் குடுத்துட்டேன்" என்று ஜெயேந்திரன் தன்நிலை விளக்க முயல....

அவரோ, "என்ன பெரிய தெரிஞ்சவங்க மாப்பிள.... வீட்ல வந்து என்கிட்டயும் என் பொண்ணு கிட்டயும் ஒரு வார்த்தை கேட்காம நீங்க எப்படி வாக்கு குடுக்கலாம்???... இதான் வயசுக்கு மூத்தவளா நீங்க எனக்கு கொடுக்கிற மரியாதையா?"

"நீ என்னடி ஒன்னும் சொல்லாம கல்லுளி மங்கன் மாதிரி நின்னுட்டு இருக்க... உனக்கும் சேர்த்து நானே பேச முடியுமா?" என்று தன் மகளையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டிருந்தார் மங்களம்.

'இப்ப எதுக்கு நம்ம பாட்டி இவ்ளோ ட்ராமா போடுது?' என்று மனதிற்குள் நினைத்தாலும் அவர்களின் காரசாரமான உரையாடலை சுவாரசியமாக கேட்டுக்கொண்டே.... சோபாவில் அமர்ந்து நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்தாள் ராகினி.

"அம்மா அதிதிக்கு எது நல்லதோ அதத்தான் அவர் பண்ணுவார்... நீ அமைதியாக இரேன்மா... அவருக்கு தெரியும் என்ன பண்ணனும்னு..." என்று சுகுணா மங்களத்தை அடக்க முயல....

"நீ என்னடி நெனச்சிட்டு இருக்க??... நான் சும்மாவா சண்டை போடுறேன்... அதிதி மாதிரிதானே ராகியும்... அவளும் ஃபேஷன் டிசைனிங் படிச்சு முடிச்சிட்டு வீட்ல வெட்டியா இருக்கா ...அவளுக்கும் கல்யாண வயசு தானே... அதிதிக்கு கல்யாணம் பண்ணும் போது அத பாத்து ராகி மனசு ஏங்காத...." என்று கண்ணை கசக்கிக் கொண்டே நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டிருந்த ராகினி அருகே அமர்ந்த மங்களம்....
அவளை பாசத்துடன் அணைத்துக்கொள்ள....
"ஸ்ஸ்ஸ் பாத்து பாட்டி.... ஜஸ்ட் மிஸ் நெயில்பாலிஷ் அழிஞ்சி போயிருக்கும் ..."என்று முகம் சுளித்தாள் ராகினி.

மற்றவர்கள் அறியாமல் அவளது கையில் கிள்ளிய மங்கலம் கண்ணை காட்ட... அதை புரிந்தது போல் தலையசைத்த ராகினி சோகமாக முகத்தை வைத்துக்கொள்ள....

"பாத்திங்களா மாப்பிள.... என் பேத்தி முகம் வாடிப்போய் இருக்கு இதுக்கெல்லாம் நீங்கதான் காரணம்" என்று மங்களம் மூக்கை உறிஞ்ச....

"இப்போ என்ன தான் செய்யணும்னு சொல்றீங்க அத்தை?" என்று இறங்கி வந்தார் ஜெயேந்திரன்.

"நீங்க அதிதிக்கு பார்த்து இருக்கிற இடம் பெரிய இடம் மாப்பிள... ஆனா அவ குப்பத்துல பொறந்து குப்பத்துல வளர்ந்த பொண்ணு.... மரியாதை பண்பாடு எல்லாம் கிலோ எவ்ளோன்னு கேக்குற ரகம்...ராகினி அளவுக்கு அழகும் இல்ல அறிவும் இல்ல ... அவளுக்கு அவ்ளோ பெரிய இடமெல்லாம் ஒத்துவராது மாப்பிள...." என்றவர் தன் பேத்தி ராகினியின் முகத்தை வருடி,
"இங்க பாருங்க உங்க பொண்ணு ராகினி எவ்வளவு அழகு... எவ்வளவு அடக்கம்... எவ்வளவு பண்பாடு உள்ள பொண்ணு ...இந்த மாதிரி பொண்ணு தான் அந்த மாதிரி பெரிய வீட்டுக்கு மருமகளா போகணும் அதுதான் நமக்கும் மரியாதை அவங்களுக்கும் மரியாதை" என்று முடிக்க.... ராகினியின் முகம் ஒரு நொடி அதிர்ந்து பின் இயல்பு நிலைக்கு திரும்பியது.

ஜெயேந்திரன் தன் அத்தையின் பேச்சை மறுத்து ஏதோ சொல்ல வர.... அதற்குள் சுகுணா முந்திக் கொண்டார்.

"அம்மா நீ சொல்றது உனக்கே நியாயமா அவர் ஏற்கனவே வாக்கு குடுத்துட்டு வந்துட்டார் ....அத எப்படி மாத்த முடியும்? அதுமட்டுமில்லாம மூத்த பொண்ணு அதிதி இருக்கும் போது ராகினிக்கு எப்படி கல்யாணம் பண்ண முடியும்?" என்றதும்...
கடுப்பான மங்களம்...

"அதிதிக்கு நானே வேற மாப்பிள்ளை பாத்து ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ஆனா இந்த பெரிய இடத்து சம்மந்தம் அவளுக்கு வேண்டவே வேண்டாம். நம்ம ராகினிக்கு வேணா அத பாக்கலாம்" என்று தன் பிடியில் உறுதியாக இருந்தார் அவர்...

ஜெயேந்திரன் சுகுணாவை இது என்ன என்பது போல் பார்க்க.... அவரோ நான் என்ன செய்ய என்பது போல் கணவரை பரிதாபமாக பார்த்தார்.

அப்பொழுது,
"நான் குப்பத்து காரி தான்... எனக்கு யாரும் மாப்பிள்ளை பார்க்க வேண்டாம் கல்யாணமும் பண்ணி வைக்க வேண்டாம்" என்றவாறு அங்கு வந்தாள் அதிதி.

அவளுக்குப் பின் வந்த கௌதம் என்ன நடக்கின்றது ...என்று புரியாமல் சோர்வுடன் தன் பாட்டியின் அருகே அமர போக...
"கௌதமு.. போய் மூஞ்ச கழுவிட்டு ஜூஸ் எதாவது குடி... டயர்டா இருக்கல"
என்று தம்பி மீது இருந்த அக்கறையால் அதிதி சொல்ல...
அவனும் சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு உள்ளே சென்று விட்டான்.

அதை கவனித்துக்கொண்டிருந்த மங்களம் ...
'இந்த சூனியக்காரி எம்மவள மயக்கி வச்சிருக்கிறது போதாம ... என் பேரனையும் வலைக்குள போட்டுக்க பார்க்குறாளா? விடமாட்டேன்' என்று உள்ளுக்குள் கொதித்து கொண்டிருக்க...

சுகுணாவோ அதிதியிடம்...
"ஏன்மா இப்படி சொல்ற? நீதான் எங்களுக்கு மொத பொண்ணு... உனக்கு கல்யாணம் பண்ணிட்டு தான் ராகினிக்கு நாங்க வரன் பார்க்க முடியும்..."
என்று கவலையுடன் சொல்ல...

ஜெயேந்திரனும்,
"அதிதி உன்னோட முழு பொறுப்பும் இப்போ எங்ககிட்ட தான் இருக்கு. இது வரைக்கும் உன் விருப்பப்படிதான் எல்லாம் நடந்திருக்கு. உன்னோட படிப்பு இப்ப நீ பாக்குற வேல ....எல்லாமே உன்னோட விருப்பம் தான். அது எதுலயும் நான் தலையிடவே இல்ல. அது உனக்கே நல்லா தெரியும். இப்பவும் நீ யாரையாவது லவ் பண்றேன்னா கூட சொல்லு அந்தப் பையனையே உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம். அப்படி இல்லாத பட்சத்துல இந்தக் கல்யாணம் மட்டும் எங்க சாய்ஸா இருக்கட்டுமே..." என்று தந்தையாக தன் பங்கிற்கு கூறினார் அவர்.

இறுக்கமான முகத்துடன் தந்தையையும் சித்தியையும் பார்த்த அதிதி.... "எனக்கு கல்யாணம் வேண்டாம். எனக்கு அதுல விருப்பமேயில்லை..." என்று அழுத்தமாக சொல்ல....

அவ்வளவு நேரம் அவர்கள் பேசுவதை பல்லை கடித்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்த மங்களம் அதற்கு மேலும் பொறுக்கமுடியாமல் ...
"ஆமா ஆமா கல்யாணம் பண்றதுல உனக்கு விருப்பமே இருக்காது உனக்கு விருப்பம் எல்லாம் கல்யாணம் பண்ணாம இதே வீட்ல இருந்து ஓசி சோறு சாப்ட்டுட்டு என் பொண்ணையும் மாப்ளையும் நிம்மதியாக வாழ விடாம காலம்பூரா தொந்தரவு பண்றது தானே.... உன்னோட அம்மா ஒரு கேடுகெட்டவ... என் மாப்பிள்ளை வாழ்க்கையை வீணாக்க வந்துட்டு போயிட்டா... அவ பொண்ணு புத்தி அவள மாதிரிதானே இருக்கும்" என்று சுள்ளென்று சுடு சொற்களால் அதிதியை தாக்க...

மங்களத்தின் வார்த்தைகளை பொறுக்கமுடியாமல்...
"அம்மா இப்படியெல்லாம் பேசாத" என்று சுகுணாவும்,
"அத்தை அவ சின்ன பொண்ணு எதுக்கு இப்படி பேசுறீங்க?" என்று ஜெயேந்திரனும் இடையில் சொன்ன வார்த்தைகள் அவரிடம் எடுபடவில்லை .

அத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த அதிதி...
முகத்தில் எவ்வித உணர்வையும் வெளிக்காட்டாமல் .....
"நான் இந்த வீட்டைவிட்டு போய்டறேன் பாட்டி எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க" என்றாள் அமைதியான குரலில்.

சுகுணா ஜெயேந்திரன் இருவரும் அதிதியின் பேச்சில் பதற.... மங்களத்தின் முகமோ பேரானந்தத்தை உள்ளடக்கி 'அப்பாடா தொல்லை ஓய்ந்தது' என்பதுபோல் நிம்மதி பெருமூச்சு விட்டது.

அவர் அருகிலிருந்த ராகினி பாட்டியை போல் பேரானந்தப்படவில்லை என்றாலும் இனி தனக்கு போட்டியாக யாருமில்லை என்று மகிழ்ச்சியாகத்தான் உணர்ந்தாள்.

"அம்மா காக நான் மன்னிப்பு கேட்டுக்குறேன் அதிதி.... அவங்க வயசானவங்க ஏதேதோ பேசுறாங்க நீ போகாத டா.... நீ கல்யாணம் எல்லா பண்ணிக்க வேண்டாம் எங்க பொண்ணா எங்க கூடவே இரு டா.. அதுவே போதும் எங்களுக்கு" என்று கண்கலங்கினார் சுகுணா.....

'அட ராமா இந்த தொல்லை புடிச்ச ராங்கி காரி அவளே போறேன்னு சொல்றா... பீடைய போய் தொலன்னு விடாம.... இவ வேற இடையில வந்து கண்ணீர் வடிச்சி பெர்ஃபாமன்ஸ் பண்றாளே ... இவ்ளோ நல்லவளா இருக்காளே எம்மக...உண்மையா இவள நான் தான் பெத்தேனான்னு எனக்கே சந்தேகமா இருக்கு" என்று மங்களம் மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டு புலம்ப....

அவரது மைண்ட் வாய்ஸை கேட்ச் பிடித்த அதிதி.... உள்ளுக்குள் சிரித்துக்கொண்டே ...
சுகுணாவிடம்,
"அய்யோ சித்தி ...நான் இன்னும் ஃபுல்லா சொல்லி முடிக்கலையே அதுக்குள்ள ஏன் அவசரம்" என்றவள்... அவரது கண்ணீரைத் துடைத்துவிட்டு,
"அதாவது பாட்டியோட ஆசைப்படி நான் அப்பா பாத்திருக்கிற மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணிட்டு இந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்கு போக போறேன்னு சொல்ல வந்தேன் சித்தி... இப்போ ஹேப்பி தானே" என்று சித்தியின் மனதை குளிர வைத்து விட்டு மங்களத்தின் தலையில் வெடி குண்டை தூக்கி போட.... ஹார்ட் அட்டாக் வராத குறையாக நெஞ்சை பிடித்துக் கொண்டார் அவர்.

******

உன் பாதம் போகும் பாத

நானும் போக வந்தேனே
உன் மேலே ஆசைப்பட்டு
பாத்துக் காத்து நின்னேனே....


"ப்ரோ வா வா இந்த சாங் சூப்பரா இருக்கு.... இத வச்சு டிக் டாக் பண்ணுவோம்" என்று மொபைலை பிடித்தபடியே கடற்கரை மணலில் கால்கள் புதைய நடப்பதுபோல் வீடியோ எடுத்தான் சுஜித்....

"சும்மாதான் வாயேன் டா... ஒன்னு மொபைல வச்சுட்டு சுத்து... இல்லனா பொண்ணுங்க கூட சுத்து.... இதுக்கு எதுக்கு என்ன கூட்டிட்டு வந்து தொல்ல பண்ணனும்" என்று எரிச்சல் பட்டுக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து வந்தான் வம்சி ....

அன்று அலுவலக வேலைகள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு வீட்டில் வெட்டியாக இருந்த வம்சியை தனியாக பேச வேண்டும் என்று இம்சை படுத்தி அழைத்து வந்திருந்தான் சுஜித்.

ஆனால் வந்ததிலிருந்து பேச வேண்டியதை பேசாமல்
"செல்பி எடுத்து ஸ்டேட்டஸ் போடலாம் ப்ரோ"...
"டிக் டாக் பண்ணிட்டு பேசலாம் ப்ரோ" என்று வாயால் மட்டுமே வடை சுட்டு கொண்டிருக்கிறான் அவன்...

பொது இடம் என்பதால் அவனை அடிக்கவும் முடியாமல்... மிதிக்கவும் முடியாமல்... துருதுருவென்று வந்த கைகால்களை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டிருந்தான் வம்சி ....

அப்பொழுது "சுஜித் பேபி நீ இங்க என்ன பண்ற என்று ஒரு குரல் கேட்க இருவருமே திரும்பினர்.

அங்கு சுஜித்தின் தற்போதைய கேர்ள் ஃப்ரெண்ட் நிஷா அவளது தோழி உடன் நின்றிருந்தாள்.

அவளைப் பார்த்ததும், 'இந்தத் தொல்லை இங்கேயும் வந்துட்டா' என்று நினைத்துக்கொண்டே....
"வாட் எ சர்ப்ரைஸ் பேபி நீ இங்கேயும் வந்துட்டியா??"என்று சுஜித் கேட்க....

"எஸ் பேபி... ஃபிரண்ட் கூட சும்மா அவுட்டிங் வந்தேன்..." என்ற நிஷா "அது சரி நான் ஃப்ரீயா ன்னு கேட்டதுக்கு ஆபிஸ் ஒர்க் இருக்குன்னு சொல்லிட்டு நீ இங்க என்ன பண்ற பேபி?" என்று சரியான பாயிண்டை பிடித்து கேட்டாள் அவள் .

உடனே சுதாரித்துக்கொண்ட சுஜித்...
"இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் பேபி ஆபிஸ் ஒர்க் எல்லாத்தையும் முடிச்சுட்டு ...என்னோட ப்ரோ கெஞ்சி கூப்ட்டானு பீச்சுக்கு வந்தேன்..." என்று பச்சையாக புளுக....

'படுபாவி பச்சையா பொய் சொல்றானே'என்று பல்லைக் கடித்த வம்சி... அடுத்தவர்களின் முன்னிலையில் தம்பியை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் மௌனமாக நின்றான்.

"ஓஓ அப்படியா பேபி" என்று சுஜித் சொல்லிய பொய்யை நம்பிய நிஷா... தன் அருகில் நின்று வைத்த கண் வாங்காமல் வம்சியை சைட் அடித்துக் கொண்டிருந்த தன் தோழியை... "சுரேகா" என்று சுஜித்துக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

சுஜித்தும் மரியாதைக்காக தன் அண்ணனை இருவருக்கும் அறிமுகம் செய்துவைக்க.... வேண்டாவெறுப்பாக இருவரிடமும் கைகுலுக்கிக் கொண்டான் வம்சி.

நால்வரும் சிறிது நேரம் பொதுவான விஷயங்களை பேசிக் கொண்டிருக்க.... நிஷா சுஜித் இருவரும் ஐஸ் கிரீம் வாங்கி வருவதாக சொல்லி விட்டு சென்றனர்.

தனியாக நின்ற வம்சியை ஒரு மார்க்கமாக பார்த்த சுரேகா,
"நீங்க ரொம்ப ஹேண்ட்ஸம்மா... மேன்லி யா இருக்கீங்க... வம்சி" என்று வழிய...
'இது வேறயா' என்பதுபோல் கடுப்பானவன் ...வேண்டா வெறுப்பாக "தேங்க்ஸ்" என்றான் .

அவளோ, "நீங்க சிங்கிள் தானே வம்சி?" என்று விடாமல் அவனிடம் பேச்சுக் கொடுக்க.... அவனோ தூரத்தில் எதையோ கூர்ந்து பார்த்துக்கொண்டே...
ஆம் என்பது போல் தலையசைத்தான் .

"வெல் நானும் இப்போதைக்கு சிங்கிள் தான்.... நீங்க ஓகேன்னு சொன்னா.... சிங்கிளா இருக்கிற நம்ம ரெண்டு பேரும் மிங்கிள் ஆகலாமா?" என்று வெட்கப்பட்டுக்கொண்டே கேட்க.... அவளுக்கு பதில் சொல்லாமல் கடலை நோக்கி ஓடினான் வம்சி.


அப்பொழுது தான் ஐஸ்கிரீம் வாங்கி வந்த சுஜித் நிஷா இருவரும்....
வம்சி ஏன் இப்படி தலைதெறிக்க ஓடுகிறான்? என்று சுரேகாவிடம் கேட்க...

அவளோ குழப்பமான முகத்துடன் நடந்ததை சொன்னாள்....

"அய்யய்யோ ஒரு முரட்டு சிங்கிள் கிட்ட போய் என்ன வார்த்தைமா கேட்டு இருக்க? ஒருவேள அதனாலதான் ப்ரோ சூசைட் அட்டென்ட் பண்ண கடலுக்குள்ள போறானோ? அடடா சுஜித் இருக்கும்போது சுஜித் ப்ரோ சூசைட்ஆ நோ வே" என்று விட்டு வாங்கி வந்திருந்த ஐஸ்க்ரீமை மண்ணில் தூக்கி எறிந்துவிட்டு தன் அண்ணன் சென்ற திசையை நோக்கி அவன் ஓட ...
பெண்கள் இருவரும் 'இவன் லூசா நம்ம லூசா' என்ற ரீதியில் முறைத்துக்கொண்டே அவனைப் பின் தொடர்ந்து வந்தனர்....

அங்கோ தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன் நடுக் கடலுக்குள் சென்று கொண்டிருந்தான் ஒருவன்....

அவன் முழுவதுமாக நீருக்குள் மூழ்குவதற்குள் ....கடலுக்குள் நீந்தி சென்று அவனை பிடித்து இழுத்துக்கொண்டு கரைக்கு வந்து சேர்ந்த வம்சி கோபத்துடன் அவனது கன்னத்தில் அறைய பொத்தென்று மயங்கி விழுந்தான் அவன். அவனது கைகளிலிருந்த தூக்கமாத்திரை பாட்டிலும் அவனோடு சேர்ந்து உருண்டு விழுந்தது...

தற்கொலைக்கு முயன்றவன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டபிறகு கடலில் மூழ்கி இறந்து விடலாம் என்ற மாஸ்டர் பிளான் உடன் வந்திருந்தான் போலும் ...

காலியான தூக்கமாத்திரை பாட்டிலை பார்த்தவுடன் சுதாரித்து செயல்பட்ட வம்சி ஆம்புலன்சுக்கு அழைக்க....
அதற்குள் சுற்றியிருந்தவர்கள் மயங்கி இருந்தவனை சூழ்ந்து இருந்தார்கள்.


சுஜித், நிஷா ,சுரேகா மூவரும் என்ன நடக்கிறது? என்று புரியாமல் வம்சியைப் பார்த்தபடியே நிற்க...
அவனை சூழ்ந்திருந்தவர்களை கோபத்துடன் பார்த்த வம்சி..." சாகக் கெடக்கிறவனுக்கு கொஞ்சமாவது ஏர் ஸ்பேஸ் வேணும் .....வேடிக்கை பாக்குற நல்ல மனுஷங்க எல்லாரும் கொஞ்சம் தள்ளி போறீங்களா?"என்று கத்த....

அவனது முகத்தில் தெரிந்த ஆக்ரோஷத்தை பார்த்து பயந்து சுற்றியிருந்த கூட்டமே நகர்ந்து சென்றது....

சுஜித் கூட ஒரு நிமிடம் அண்ணனின் முகத்தை பார்த்து அரண்டு விட்டான்.
நிஷா பயத்துடன் சுஜித் கையை பிடித்துக் கொள்ள.... "ஜஸ்ட் கூல் பேபி ...ப்ரோ டென்ஷன்ல இருக்கான்... அதான் இப்படி வயலெண்ட் ஆகிட்டான்" என்று அவளுக்கு ஆறுதல் சொல்வதாக நினைத்து தனக்கே சொல்லிக்கொண்டான் அவன்...


சிறிது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த ஆம்புலன்ஸ் பேச்சு மூச்சற்று மயங்கி கிடந்தவனை ஏற்றி சென்றுவிட....
பெண்களை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு பின்னாலேயே காரில் மருத்துவமனைக்கு விரைந்தனர் சகோதரர்கள் .....

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட .... இருவரும் வெளியே காத்திருந்தனர்.

சுமார் நான்கு மணி நேர சிகிச்சைக்குப் பிறகு வெளியே வந்த டாக்டர் அவனது உயிருக்கு ஆபத்தில்லை என்று சொன்னதோடு அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகள் எடுத்துக் கொண்டதால் கோமா ஸ்டேஜ் எனப்படும் தூக்க நிலைக்கு சென்றுவிட்டதாக சொல்ல....

அதற்குள் தகவல் அறிந்து பரிதவிப்புடன் மருத்துவமனைக்கு வந்திருந்த அவனின் தாய் மருத்துவர் சொன்னதை கேட்டதும்... "ஐயோ ராசா உன்ன விட்டா எனக்கு யாருயா இருக்கா... எனக்கு இருக்கிறது நீ மட்டும் தான...உங்க அப்பா செத்ததும் நானும் அவரோட போகாம உனக்காக தானே உசுர புடிச்சிகிட்டு வாழ்ந்தேன்.. இப்போ ஒரு பொண்ணுக்காக ஏன்டா இப்படி பண்ண? உனக்கு நான் இல்லையா? என்ன விட உனக்கு காதல் முக்கியமா போயிட்டாயா"என்று தலையில் அடித்துக்கொண்டு கதறி அழ... பாவமாகப் போய் விட்டது அனைவருக்கும்...

அவரை சமாதானப்படுத்த டாக்டர் சொன்ன அறிவுரைகளோ... வம்சி சுஜித் இருவரும் சொன்ன ஆறுதல்களோ... மூச்சு விடாமல் அழுத அந்தத் தாய் உள்ளத்திடம் எடுபடவில்லை....

தொடர்ந்து சில மணி நேரங்கள் அழுதவர் அதற்குமேல் அழக் கூட தெம்பில்லாமல் மயங்கி விழுந்தார்.

அவரின் முகத்தில் நீர் தெளித்து மயக்கத்தை தெளிய வைத்த வம்சி முதலில் கேட்ட கேள்வியே யார் 'அந்தப் பெண்?' என்றுதான்...


தொடரும்.....

தாமதமான பதிவிற்கு மன்னிச்சிடுங்க மக்களே...:(

அதுக்காக அடுத்த பதிவு நாளைக்கே தந்துடறேன்...:)
 
Last edited:

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எபிக்கு எபி சஸ்பன்ஸ் வைக்கிறதே இந்த ரைட்டர் ஜீக்கு வேலையாக போச்சு😢😢
அந்த வெயிட்டர் தான் ஹீரோவா??:eek::cry:o_O:cry:
 
OP
ஸ்ரீ வைஷு💫

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எபிக்கு எபி சஸ்பன்ஸ் வைக்கிறதே இந்த ரைட்டர் ஜீக்கு வேலையாக போச்சு😢😢
அந்த வெயிட்டர் தான் ஹீரோவா??:eek::cry:o_O:cry:
Na enga jiju suspense vachirken:rolleyes:ithenna puthu kadhaiya irruku...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN