சாதி மல்லிப் பூச்சரமே !!! 14

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 14

அந்த இடத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் மச்சான் என்று உறவுமுறையில் அழைக்கப் பட்ட பெரியவரும், மீசையை முறுக்கிக் கொண்டு ஐயாருவும், எதைச் செய்யவும் தான் தயார் என்ற த்வனியில் வேந்தனும் நின்றிருந்தார்கள். அங்கு இவர்களைத் தவிர வேறு ஆண்கள் இல்லை. ஒருவேளை அவள் தந்தை கந்தமாறன் அங்கு இருந்திருந்தால் என்ன விஷயம் ஏது என்று விசாரித்து இருப்பாளோ? தனியே வேந்தனிடம் கேட்கலாம் என்றால் அதற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை தென்றலுக்கு.





இதே எண்ணத்தில் இருந்தவளுக்கு இரவு தூக்கம் என்பது வராமல் போக, சற்றே காற்றாட அந்த அறை பால்கனியில் யோசனையுடன் நின்றவள் கண்ணில் பட்டது அந்த காட்சி. அந்த மண்டபத்திற்கு காரில் வருபவர்களுக்கு என்று பக்கவாட்டில் ஒரு வழி வைத்திருக்க, அங்கு மங்கலான இருட்டில்... வேந்தன்!





ஆமாம்… அவன் தான் ஒரு இடத்தில் ரவுத்திரத்துடன் நின்றிருக்க, அவன் முன் ஒருவனை கையையும் வாயையும் கட்டி இழுத்து வந்து இருவர் போட்டனர். கிழிந்த நாராய் விழுந்து கிடந்தவனை அதே இரண்டு பேர் தூக்கி வேந்தன் முன் நிறுத்த, வேட்டியை மடித்துக் கட்டியவன் தன் கையில் உள்ள காப்பை விரலுக்குத் தள்ளி ஒரு முறுக்கு முறுக்கியவன் அந்த நாராய் கிடந்தவன் முகத்திலேயே பல குத்துகளை விட, “ஐயோ! இந்நேரம் அவன் முகம் பார்க்க முடியாத அளவுக்கு கிழிந்திருக்குமே...” கண்களை மூடி வாய் விட்டு சொல்லிய தென்றல், பின் அடி வாங்கியவன் முகத்தை நன்கு நோக்க...





“ஐயோ! இது கல்யாண மாப்பிள்ளை ஆச்சே....” என்று கதறியவளுக்கு அவளையும் மீறி அவள் உடல் நடுங்கியது. வாங்கிய அடியில் சகல சக்தியும் வடிய, வேந்தன் முன் துவண்டு போய் மண்டி இட்டான் அந்த மணமகன்.





வேந்தன் ஒற்றை விரல் நீட்டி அவனை ஏதோ மிரட்டியவன், எட்டி அவன் மார்பிலேயே உதைக்க, தூரப் போய் விழுந்தான் அடி வாங்கியவன். வேந்தன் பக்கத்தில் நின்றிருந்த அந்த இரண்டு பேரிடம் ஏதோ சொல்ல, அடி வாங்கியவனை தூக்கி வண்டியில் போட்டுக் கொண்டு எங்கோ கிளம்பினார்கள் அந்த இருவரும்.





தென்றலுக்கு நெஞ்சே வெடித்துவிடும் போல் வலித்தது. கண்ணில் கரகர என கண்ணீர் வழிந்தது. ‘ஏன் இப்படி? என் தோழி காதலித்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதற்கா? ஒருவேளை அடி வாங்கியவர் மாப்பிள்ளை இல்லையோ… வேறு யாரோ? இப்போ இதை என்னனு யாரிடம் சொல்ல? மாமாவிடமே கேட்போம். என்னனு... அவரிடம் கேட்டால் உஷார் ஆகிடுவார். பின்ன இதுக்கு என்ன தான் வழி?’ என்ற எண்ணத்துடன் சோர்ந்து போய் உட்கார்ந்தவளுக்கு ஒரு வழியும் புரியவில்லை. ‘எல்லாம் கூட்டு களவாணிகள்!’ என்று நினைத்தவளுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை.





விடியற்காலையில் தோழி புன்னகையுடன் எழுந்து தயாராகவும், நெஞ்சு வலிக்க ‘இரவு கண்டது எல்லாம் கனவாகிப் போகாதோ?’ என்று நினைக்கத் தோன்றியது தென்றலுக்கு.





மணமகளை அமர வைத்து எல்லா சம்பிரதாயமும் முடிய, பின் மணமகனை அழைக்க, அப்போது ஆரம்பித்தது மண்டபத்தில் சலசலப்பு. மாப்பிள்ளையைக் காணோம் என்ற சலசலப்பு. ‘இதோ நடந்து விட்டது… நான் நினைத்த படியே தான் நடந்து விட்டது. என் தோழி வேற்று சாதிப் பையனை காதலித்ததற்காக என்னமா சாதித்து விட்டார்கள்!’ தென்றல் மனதிற்குள் நினைத்த நேரம்





“ஐயோ! மோசம் போய்ட்டனே… பாவி மகன் வேற்று சாதியா இருந்தாலும் நல்லவன்னு தானே எங்க வீட்டுப் பொண்ண குடுக்க இருந்து இவ்ளோ ஏற்பாடும் செஞ்சேன்... கடைசில இப்டி ஆயிருச்சே....” நேற்று மச்சான் என்று அழைக்கப்பட்ட அந்த பெரியவர் தலையிலேயே அடித்துக் கொண்டு புலம்ப, அந்த இடமே களேபரமானது.





“என்ன மச்சான் என்ன ஆச்சு?” பதறிய படி ஐயாரு புதுசாய் வருவது போல் வர





“பொண்ணும் பையனும் காதலிச்சிட்டாங்களேனுதேன் கொலம் கோத்ரம் சாதி வரமுற பாக்காம பொண்ண குடுக்க சம்மதிச்சேன். அப்பா இல்ல வயசான அம்மா மட்டுதேன்னு சொன்னான். ஒரு அண்ணே… அவனும் இவன் காதலுக்கு சம்மதிக்கல. அவன் வெளிநாட்ல இருக்குதான். ஒண்ணும் பிரச்சனை இல்லன்னு அம்மா மவன் ரெண்டு பேத்தும் சொன்னாக.





இப்போம் பாத்தா அண்ணே சாகக் கெடக்கான்… எனக்கு இந்த கல்யாணம் வேணாம்னு கடுதாசி எழுதி வெச்சிட்டு ஆத்தாளும் மவனும் ஊர விட்டே போய்ட்டாக.... இப்போம் என் பொண்ணு வாழ்க்கை என்ன கெதி ஆகுமோ? அடேய் முனியா! ஒனக்கு வருசா வருசம் கெடா வெட்டி பொங்க வெச்சனே... இப்டி என் குடும்பம் நிக்கறதுக்காண்டியா” அந்த பெரியவர் வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு கதற





தென்றலுக்கோ நாக்கு துடித்தது ‘அவனா போனான்? எல்லாம் உங்க சாதி வெறி புடிச்ச குலக்கொழுந்துங்க தான் அடித்து விரட்டி விட்டதுங்க...’ என்று சொல்ல நினைத்தது எல்லாம் அவள் தொண்டைக்குள்ளேயே அடங்கியது.





“எதுக்கு மச்சான் இப்டி கலங்குதீய? நாங்கெல்லாம் எதுக்கு இருக்குதோம்? நமக்கு ஏதாவது ஒண்ணுனா... நம்ம சாதி சனம் விட்ருமா என்ன?” என்று மீசையை முறுக்கியவர் “இதுக்குதேன் மத்த சாதிக்காரனுவள அண்ட விடக் கூடாதுன்னு சொல்றது. எலேய் சற்குணம்! ஒன் மவன் இந்த பொண்ணுக்கு மொறை தாம்லே? நம்ம சாதி பெரிய தலை ஒண்ணு கலங்கி கெடக்கு… பாத்துட்டு நிக்க. புடிலே வெத்தலைய... குடுலே அவர்ட்ட. மணவறையில் ஒக்கார வைலே உன் மவன....” ஐயாரு துரிதமாய் காய் நகர்த்தி அதிகாரம் பண்ண





வெலவெலத்துப் போனாள் தென்றல். ‘ஏதோ கல்யாணத்தை நிறுத்துறாங்கனு பார்த்தா... இவங்க வேற பையனை இல்ல கட்டப் பார்க்கறாங்க. மனசார ஒருத்தனை நினைத்திட்டு அவ எப்படி இவனோட வாழ்வா?’ என்று நினைத்தவள் ஏதோ தோழிக்கு நல்லது செய்வதாக நினைத்து அந்த சபையில் அத்தனை பேரும் அமைதியாக இருக்க, “இங்க பாருங்க அவசரமா எந்த முடிவும் எடுக்க வேணாம்... எதற்கும் பொண்ணு கிட்ட...”





அவ்வளவு தான்… ஐயாரு மாறனைப் பார்க்க, அவரோ, “தென்றல்! இதென்ன பழக்கம்? சபைல இம்புட்டு பேர் இருக்காக. நீ எதுத்து பேசுறவ?” என்று பாதி பேச்சிலேயே மகளைக் கண்டிக்க





அப்போதும் விடுவேனா என்று நினைத்தவள், “இல்ல ப்பா... அது வந்து...” ஒரே பார்வையில் மகளைத் தடுத்தவர் வேந்தனைப் பார்க்க, புரிந்து கொண்டவன் அவளை நெருங்கி “கெளம்பு...” என்று காதில் ரகசியம் பேசியவன் தென்றலை அழைத்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினான். அப்போதும் தோழியைத் திரும்பித் திரும்பி பார்த்த படி தான் அவனுடன் சென்றாள் தென்றல்.





அவள் காரில் அமர்ந்ததும் இவன் காரை ஸ்டார்ட் செய்ய, “நீங்க எல்லாம் ஏன் இப்படி வெறி பிடித்து திரியறீங்க? உங்களுக்கு எல்லாம் அறிவே இருக்காதா? அதானே… படிச்சிருந்தா தானே அறிவு இருக்க... சாதி சாதினு ஏன் இப்படி பேயா அலையறீங்க? அதனால் எத்தனை பேர் காதலை இப்படி ரத்த காட்டேரி மாதிரி உரியப் போறீங்க?





அவ பாவம்! எவ்வளவு கனவோட இருந்தா? நீ தான் மாமா எல்லாத்துக்கும் காரணம். நீ தான்… நீ அந்த மாப்பிள்ளைய நேத்து நைட் கடத்தினதை நான் பார்த்தேன். ஏன் இப்படி பண்ண?” தன் குமுறலைத் தாறுமாறாய் தென்றல் கொட்ட, எதற்கும் அசராமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தான் வேந்தன்.





அதுவே அவளுக்கு எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல் இருக்க, “ஏதாவது வாயைத் திறந்து சொல்றியா? நீ செய்தது பெரிய தப்பு. சாதிக்காக காதலை பிரிச்சிட்ட. ச்சை... உன் கிட்ட போய் நியாயம் பேசுறேன் பாரு... உங்க எல்லோர் உடம்பிலேயும் ரத்தமா ஓடுது? சாதி... சாதி... சாதி... அதுதானே ஓடுது!” அவளுடைய ஆத்திரம் கோபம் ஆதங்கம் என்று கொட்ட





“சரிதேன் நிறுத்து டி!” இவன் ஒரு அதட்டல் போட





தூக்கி வாரிப் போட உடம்பு நடுங்கினாலும் “நான் ஏன்... நிறுத்தணும்? முடியாது... நிறுத்த மாட்டேன்...” இவள் எகிற





அதே நேரம் அவன் போனுக்கு அழைப்பு வரவும், எடுத்துப் பார்த்தவன் “மாமாதேன்... ஏதாச்சும் பேசுனா ஒன் மூஞ்சி மொகரை எல்லாம் பேத்துருவேன்...” இவன் கர்ஜிக்க, அடுத்த நிமிடம் கப்சிப் ஆனாள் அவள்.





“சொல்லு மாமா... கல்யாணம் நல்ல மாதிரி முடிஞ்சிருச்சா? இனி மண்டபத்துக்கா? வேணாம் மாமா... நாங்க வீட்டுக்குப் போறோம் நீங்க வந்துருங்க. ஒன் மவ கோவம் எல்லாம் ஒரு கோவமா மாமா? என் மாமன் பெத்த மரகதத்த பாத்துக்கிட எனக்கு தெரியும். நீங்க எல்லாம் முடிச்சிட்டு வெரசா வாங்க” இவன் கடைசி வரியைச் சொல்லும்போது தன்னவளைப் பார்த்து கண்ணடிக்க, இன்னும் கொதித்துப் போனாள் அவள்.





“அடப் பாவிகளா! கடைசியில உங்க சாதி வெறி ஜெயிக்க அவளுக்கு கல்யாணமே செய்து வச்சிட்டிங்களா! என்ன ஜென்மம்யா நீங்க எல்லாம்? ச்சை! சாதி வெறி பிடிச்ச குடும்பம்...” அவள் கிரீச்சிட...





“தென்றல் போதும்... வேணாம் வாய மூடுடி. பொறவு நான் என்ன செய்வனு தெரியாது...” ஆவேசமே இல்லாமல் இவன் அடி குரலில் அதட்ட





“முடியாது... என்ன செய்துடுவ? அடிப்பியா? அடியா....” வண்டி கிரீச்சிட்டு நின்றது கூடத் தெரியாமல் இவள் சாமி வந்தது போல் ஆவேசமாக ஆட...





இவன் அவளை நெருங்கும் போது தான் தன்னிலை உணர்ந்தவள், ‘ஐயோ! நிஜமாவே அடிச்சிடுவானா?’ என்று நினைத்தவள் பயத்தில் கண்ணை மூடிய நேரம் தன் இதழால் தன்னவள் இதழுக்கு பூட்டு போட்டுக் கொண்டிருந்தான் வேந்தன்.





அவன் விலக நினைத்தாலும் தன்னவளின் அமைதி இன்னும் அவனை நெருங்க வைக்க, இப்போது அழுந்த இதழ் ஒற்றளில் தான் தன் மாமன் தனக்கு முத்தம் கொடுத்திருக்கிறான் என்பதை அறிந்தவள் அவனைத் தன் பலம் கொண்ட மட்டும் பிடித்துத் தள்ளியவள் “ச்சீ... உனக்கு வெட்கமா இல்லை இப்படி எல்லாம் என் கிட்ட நடந்துக்க?” இனி என் கிட்ட இப்படி நெருங்கு.... பிறகு உன்னை என்ன செய்றேனு பாரு....” உதட்டைப் புறங்கையால் அடிக்கடி தேய்த்த படி இவள் கோபத்தில் ருத்திர அம்மனாய் மிளிர...





“சரி.... சரி... இனி கல்யாணம் வரைக்கும் ஒன்னையத் தொடல… போதுமா?” என்று சாதுவாய் சொன்னவன் “நேத்துல இருந்து என்னைய கொலையா கொன்னுட்டு இருக்கியே டி... எனக்கே எனக்கானவங்கிற நெனப்புதேன் இப்டி செய்ய வெச்சிருச்சி... நாந்தேன பாப்பு செல்லம்?” என்று கொஞ்சியவன் “நம்ம குடும்பத்தில் மத்தவிங்க எப்டியோ... ஒன் மாமனுக்கு சாதி வெறி எல்லாம் இல்லட்டி... அங்கன என்ன நடந்த” இவன் விளக்கம் சொல்ல முற்பட





“நீ எதுவும் சொல்ல வேணாம் போ...” கண்ணில் நீர் குளம் கட்ட இவள் முகத்தைத் திருப்ப





அவளை இழுத்து இவன் தன் தோளில் சாய்க்க, “வேணாம் விடு...” இவள் திமிர





“உன்ட்ட நடந்துக்காம வேற யார்ட்ட டி இப்டி நடந்துக்குவேன்?” என்றவன் விடாப்பிடியாய் அவளைத் தன் கை வளைவில் வைத்து “நான் சொல்றத நீ கேட்டுதேன் ஆகணும்...” அதிகாரம் இட்டவன் “ஒன் ஃபிரண்டு காதலிச்ச பையனுக்கு எயிட்ஸ் நோயாம்ல. அத மறச்சு அந்த பொறம்போக்கு ஏமாத்தி இருக்குதான். அவனுக்கு எப்பவோ விபத்து நடந்தப்போம் ரத்தம் தேவப்பட்ருக்கு. அதுல தவறுதலா எயிட்ஸ் நோயுள்ள ரத்தத்தை அவனுக்கு ஏத்தியிருக்கானுவ. அது அந்த நாய்க்கும் தெரிஞ்சிருக்கு....”





“நீங்க பொய் சொல்றிங்க. அவர் அப்படிப்பட்ட கெட்டவர் இல்ல...” இவள் ஏற்க மறுக்க





“நான் மட்டும் அவனை கெட்டவன்னா சொல்லுதேன்? நல்லவன்தேன்… அவனுக்கே தெரியாம அவன் ரத்தத்துல நோய் கலந்துட்டு. மானத்துக்குப் பயந்து அந்த பொறுக்கி இப்படி ஒரு குடும்ப வாழ்க்கைக்கு தயாராகி இருக்குதான். அவனை டெஸ்டு பண்ண டாக்டர் நேத்து வரவேற்புல பாத்துட்டு அந்த பொண்ணோட தாத்தாட்ட சொல்லி இருக்காக. அவுகளும் நமக்கு சொந்தக்காரங்கதேன். பொய் சொல்ல மாட்டாக” இவன் பொறுமையாய் மறுபடியும் விளக்க





“அப்போ அதை எல்லோர் முன்னாடியும் சொல்லி இருக்கலாம் இல்ல... ஏன்... நைட் அவனை உதைத்து துரத்தி விட்டிங்க?” இவள் விடுவதாய் இல்ல





“படிச்ச புள்ள… ஆனா சுத்தமா ஒனக்குதேன் டி அறிவு இல்ல...” இவள் முறைக்கவும் “பொறவு என்ன? அந்த பொண்ணு அவனை காதலிச்சிருக்கு… இதென்ன பட்டணமா... கிராமம்! யோசிச்சி பாரு… அவனுக்கு இருக்குத நோய் அந்த பொண்ணுக்கும் இருக்குமோனு சந்தேகப்பட்டு கண்ணு காது வெச்சு பேச மாட்டாகளா? பொறவு எப்டி அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகும்?” இவன் கேட்க





“அப்படி எல்லாம் இல்ல. நீங்க பொய் சொல்றிங்க. உங்க சாதி தான் உங்களுக்கு முக்கியம்.” இவள் நம்பாமல் விடாப் பிடியாய் அதிலேயே நிற்க





“ப்ச்சு...” என்று தன் மீசையை முறுக்கியவன் “நான் இப்டி யார்க்கும் வெளக்கம் குடுத்ததே இல்ல. உனக்காண்டிதேன் இம்புட்டும் பொறுமையா சொல்லுதேன். அதேன் நான் சொன்னத நீ நம்ப மாட்டேங்கிற இல்ல... அப்போ என் முத்தத்தை திருப்பி குடுடி” இவன் வழியில் அவளைக் கிடுக்குப் பிடி போட நினைக்க





அவன் நினைத்தது போலவே “என்னது!” என்று அதிர்ந்தவள் தன் சிவந்த முகத்தை ஜன்னல் புறம் திருப்பிக் கொண்டாள் தென்றல்.





இவனோ உல்லாசமாக விசிலடித்த படி தங்கள் மீதி பயணத்தைத் தொடர்ந்தான் வேந்தன். ஆனால் இந்த உல்லாசம் எல்லாம் வீட்டிற்குப் போன உடன் மாயமாய் விதி மறைய வைக்கப் போவதை அவன் அறியவில்லை.




 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 14
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN