ஆழி சூழ்ந்த உலகிலே...3

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நீ சொன்னால் எதையும் செய்வேன்
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உனக்கல்லவா...
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே...
சிவரஞ்சனிக்காக செட் செய்யப்பட்ட பிரத்தியேக அழைப்பு அடிக்க, தான் படித்துக்கொண்டு இருந்த புத்தகத்தை ‌மூடிவைத்துவிட்டு அவளின் அழைப்பை சந்தோஷமாக ஏற்றான் சக்தி சரவணன்.
"சக்தி... நீ எங்க இருக்க... பிசியா..." என்னவளின் தயக்கமான குரல் உள்ளுக்குள் சென்று இருந்தது. அவளின் குரலே கூறியது அவள் நலமாக இல்லை என்று.
"என்ன ஆச்சு ஷிவ்... நான் ஃப்ரீயா தான் இருக்கேன்... நீ சொல்லு..." அவனுக்கு எதுவும் முக்கியமான வேலை இல்லை என்ற பிறகே நிம்மதி அடைந்தாள்.
"வயிறு ரொம்ப வலிக்குதுடா... எனக்கு சீக்கிரம் டேப்லட் வாங்கிட்டு வந்து தாயேன்... வீட்டுல யாரும் இல்லடா..." என்று ஆணை பிறப்பித்தவளிடம் தற்போது எந்த தயக்கமும் இல்லை. வேலை, படிப்பு என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றும் அவனை தொந்திரவு செய்ய அவள் விரும்பவில்லை.
மாதாந்திர பிரச்சினையை புரிந்து கொண்டவன் "ம்ச்... என்னடீ நீ... நீ எப்போ என் மொற பொண்ண பெத்து குடுக்கறது..‌. அவ எப்போ வளர்ந்து என்னை கல்யாணம் பண்ணிக்கிறது... உங்களுக்கு என்னபத்தி அக்கறையே இல்லை..." அவன் கூறியதில் அவளுக்கு தன் வலியையும் மறந்து சிரிப்பு வர,
"என் பொண்ணுக்கு என்ன தலையெழுத்தா... கிழவன கல்யாணம் பன்னிக்க..." என்று அவனிடம் பதிலுக்கு பதில் பேசிக்கொண்டு இருந்தவளுக்கு அர்ஜூன் அங்கு வந்து அவள் படுத்திருப்பதை பார்த்துவிட்டு சென்றது தெரிய வாய்ப்பு இல்லை.
காலையில் நேரம் ஆனது கூட தெரியாமல் தூங்கி வழிந்து கொண்டு இருந்தவள் மணி ஒன்பதை தாண்டிய பிறகே எழுந்தாள். நேரம் ஆகி விட்டது என்பது அதிர்ச்சி என்றால் அர்ஜூன் அவளின் அருகில் அமர்ந்து மடிக்கணினியில் என்னமோ நோண்டிக் கொண்டு இருந்தது அதைவிட பெரிய அதிர்ச்சி. இவன் இன்னும் அலுவலகம் செல்லவில்லையா என நினைத்து கொண்டே அவசர அவசரமாக வெளியே வந்து அர்ச்சனாவின் அறையில் அடைந்து கொண்டவள் பிறகு மதியம் ஆகிய பிறகும் வெளியே வரவில்லை.
சமைத்து வைத்திருந்த உணவு எல்லாம் அப்படியே இருக்க அவளை காணாமல் வீட்டில் தேடியவன் அர்ச்சனா அறையில் இருந்து பேச்சுக்குரல் கேட்டு அங்கே சென்றான். சிவா யாரிடமோ சிரித்து பேசிக்கொண்டு இருப்பதை பார்த்து விட்டு தன் அறைக்கு சென்று விட்டான்.
அர்ஜூன் கஷ்டப்பட்டு செய்த ஒரு பிராஜெக்டிற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் காலையில் இருந்து நல்ல மனநிலையில் இருந்தவன் தற்போது அவளின் புன்னகையில் கடுப்பேறி போனான். தினமும் இதே கூத்து தான் நடக்கிறதா என்று சிவரஞ்சனி அலைபேசியில் சிரித்து பேசிக்கொண்டு இருந்ததை நினைத்தவனின் மூளை வேகமாக ஒரு திட்டம் தீட்டியது. அதை தன் மடிகணினியில் செயலாற்றம் செய்து கொண்டு இருக்க வீட்டின் அழைப்பு மணி அடித்தது.
அதை அலட்சியம் செய்தவன் தன் பணியில் மூழ்கி இருக்க வேகமாக அவனின் அறைக்கு வந்த சிவரஞ்சனி அவனிடம் "சக்தி வந்து இருக்கான். ஒரு டென் மினிட்ஸ் உள்ளயே இருங்களேன் ப்ளீஸ்..." என்று கெஞ்சல் கூறிலில் கூறியவள் அவன் பதிலளிக்கும் முன் அங்கிருந்து சென்று இருந்தாள்.
"திமிர் பிடிச்சவ... நீ சென்னா நான் கேட்டுடுவனா..." என பற்களை நறநறவென கடித்தபடி அவன் வெளியே சென்று சோஃபாவில் அமர்ந்து இருந்த சக்தியிடம் "ஹாய் சக்தி" என்றவாறு அவனின் எதிரில் இருந்த சோஃபாவில் அமர சக்தியின் திகைத்த முகம் அர்ஜூனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது...
‌ "மாமா... நீங்க வீட்டுலயா இருக்கீங்க..." அதிர்ச்சியாக கேட்ட சக்திக்கு "இன்னைக்கும் நாளைக்கு எனக்கு வீக் ஆஃப் சக்தி...." யோசனையாகவே பதில் அளித்தான் அர்ஜூன்.
அப்பொழுது தண்ணீரை கண்ணாடி குவளையில் எடுத்தபடி சிவா அங்கே வர தண்ணீரை எடுத்து கொண்ட சக்தி "என்கிட்டயே பொய் சொல்லர அளவுக்கு பெரிய ஆள் ஆகிட்ட..." என்றபடி தன் பாக்கெட்டில் கை விட்டவன் மாத்திரைகள் அடங்கிய அட்டையை கொடுக்க அதை வாங்கி கொண்டவள் மௌனமாக அர்ஜூனை குற்றம் சாட்டும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அதை போட்டுக்கொண்டு அர்ச்சனாவின் அறையில் படுத்து கொண்டாள்.
"மாமா... உங்களுக்குள்ள எதாவது பிரச்சனையா..." சக்திக்கு அவர்களின் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பது பிடிக்கவில்லை. இருந்தாலும் மனம் கேட்காமல் கேட்டான்.
"அப்படிலாம் ஒன்னும் இல்லையே... ஏன் கேட்கற..." சக்தியிடம் தங்கள் விஷயங்களை கடைபரப்புவது அவனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. எனவே பட்டும் படாமல் பதில் கூறினான்.
"காலையில இருந்து வயிறு வலியில் கஷ்டப்பட்டு இருந்து இருக்கா... நீங்க வீட்டுல தான் இருந்து இருக்கீங்க. உங்கள மாத்திரை வாங்கிட்டு வர சொல்லாம எனக்கு கால் பன்னி சொல்லரா... ஏன்...?" அவனின் கேள்வியில் அவனால் பதில் கூற முடியவில்லை. அவனுக்குமே குற்ற உணர்ச்சியாக இருந்தது... அவனும் இரு தங்கைகளுடன் பிறந்தவன் தானே... 'இதை கூட செய்யமாட்டோமா... ஏன் கேட்கவில்லை' என்று நினைத்தான். அவளுக்காக அவன் தான் ஒரு துரும்பை கூட அசைத்தது இல்லையே. எப்படி கேட்பாள்... என்று நினைக்க அவனுக்கே ஒரு நொடி அவளை நினைத்து பாவமாக இருந்தது. அவளே அவளின் தலையில் மண்ணை போட்டு கொண்டாள். நாம் என்ன செய்ய என்று நினைக்க அவனின் அந்த பரிதாப மனநிலை கூட இருந்த இடம் தெரியாமல் போனது. தான் செய்தது சரியே என நினைத்து கொண்டான்.
"அதை உன் அக்காட்ட தான் கேட்கனும் சக்தி..." என்று கூறியவன் வேறு புறம் திரும்பி கொண்டான். சின்ன பையன்லாம் கேள்வி கேட்கிற நிலைமைக்கு தள்ளிட்டாளே... என்று அதற்கும் சிவரஞ்சனி மீதே கோபம் கொண்டான்.
" சிவா எதாவது தப்பு செஞ்சிருந்தா நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் மாமா..." என எழுந்து கை கூப்பி மன்னிப்பு வேண்டிய சக்தி, "நான் வரேன்..." என்று மட்டும் கூறிவிட்டு வேகமாக அங்கிருந்து அகன்றான். மனமெல்லாம் பாரமாக இருந்தது அவனுக்கு. சக்தியின் மனதில் உயரத்தில் இருந்த அர்ஜூன் தற்போது ஒரு படி கீழே இறங்கி இருந்தான். அர்ஜூன் மனதில் சக்தியின் மீது இருந்த‌ பாசமும் சற்று குறைய ஆரம்பித்து இருந்தது.
புருஷன் பொண்டாட்டி சண்டையில் இவ்வளவு கேட்டதே தவறு என்று நினைத்து கொண்டான் சக்தி. இவர்களின் பிரச்சினை விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என வேண்டியவன் நேரே சென்ற இடம் அவன் எப்போதும் செல்லும் ஆசிரமம். சிவா மற்றும் சக்தியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியை அங்கு கொடுத்துவிட்டு சிறிது நேரத்தை செலவிட்டு விட்டே அங்கிருந்து சென்றான்.
லொஜக்... மொஜக்... பஜக்... குட்...
லொஜக்... மொஜக்... பஜக்...
லொஜக்... மொஜக்... பஜக்...
.
.
.
லொஜக்... மொஜக்... பஜக்... நோ.....
நோடா செல்லம்...
மாஸ்டர் நெக்ஸ்ட்...
ரொஸ்ட்டு...
வரவேற்பு அறையில் போடப்பட்டு இருந்த சோனி ஸ்மார்ட் டிவியில் வடிவேலுவின் பாடி சோடா மரண காமெடி ஓடிக்கொண்டு இருக்க அதை பார்த்து கொண்டு இருந்த அர்ஜூனின் முகத்தில் மருந்துக்கும் புன்னகை இல்லை. அவனின் ஜீவனில்லா முகத்தை கண்டு வருந்திய சிவரஞ்சனி தன் மனதில் ஒருவாரமாக அரித்து கொண்டு இருந்ததை இன்று தன் மாமனாரிடம் செல்லிவிட வேண்டும் என்று முடிவு எடுத்தவள் அர்ஜூனை பார்க்க அதே மோன நிலையில் தான் அமர்ந்து இருந்தான்.‌‌ எந்திரன் 3.0 என நினைத்த சிவரஞ்சனி அவனை எப்படி அழைப்பது ‌என்று தெரியாமல் லேசாக இரும்ப அவளை பார்த்தவன் மீண்டும் தொலைகாட்சியில் தன் பார்வையை பதித்துக் கொண்டான்.
"அப்பா உங்ககிட்ட பேசனும்னு சொன்னாரு..." என்றவள் அவனின் எரிக்கும் பார்வையில் "சும்மா பார்மாலிட்டிக்கு தான் பேசணும்னு சொன்னாரு..." அவசரமாக கூறியபடி அவளின் தொலைபேசியை நீட்டினாள். சக்தி அவளின் தந்தையிடம் கூறிவிட்டதாக நினைத்து கொள்வாரோ என்ற பயம் அவளுக்கு. அவனும் அதையே தான் நினைத்தான்.
அவளின் தொலைபேசியை வாங்கி வேகமாக சுவற்றில் விட்டு அடித்தவன் தன் அறைக்கதவை அறைந்து சாற்றிக்கொண்டான். அவன் விட்டு எரிந்த வேகத்தில் அவளின் ஐபோன் இரு பாகங்களாக விழ அதை எடுக்க கூட தோன்றாது அர்ச்சனாவின் அறையில் அடைந்து கொண்டாள் சிவரஞ்சனி.
"எவ்வளவு தைரியம் இருந்தா என்னையே கேள்வி கேட்பான்... பெரிய இவன் மாதிரி... பொடிப்பையன்... அதான் சண்டை போட அப்பாவ கூட்டிட்டு வரான்..." சக்தி மேல் வந்த கோபத்தை அந்த அறையில் இருந்த பொருட்களின் மேல் காட்டிக்கொண்டு இருந்தான் அர்ஜூன். அவனை பொறுத்தவரையில் அவன் செய்வது சரியே...
எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அர்ஜூனை கேள்வி கேட்க தயங்குவர். படித்த இடங்களிலும் சரி... வேலை செய்யும் இடங்களிலும் சரி... ஏனெனில் அவன் அனைத்திலும் குற்றமற இருப்பவன். Mr. Perfect என்று கூறலாம்... ஆனால் தன்னை விட வயதில் சிறிய ஒருவன் அவனை நேருக்கு நேர் கேள்வி கேட்டதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை... சக்தியின் குற்றம் சாட்டும் பார்வையால் கோபம் அடைந்தவனுக்கு அவன் கேட்ட மன்னிப்பு அவன் சமாதானம் அடைய போதுமானதாக இல்லை. ஏன் அது அர்ஜூனின் காதில் கூட விழவில்லை...
கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் கீழே போட்டு உடைத்து அறையை இரண்டாக்கியவன் கோபம் தனியாமல் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டான். தனது தோழனின் வீட்டிற்கு சென்று அன்றைய நாளை கழித்தான். அவன் திரும்பி வரும்போது நள்ளிரவை தாண்டி இருக்க அழைப்பு மணி அடித்தும் யாரும் கதவை திறந்தபாடில்லை.
அலைபேசியை எடுத்து பார்க்க அதில் புதிய எண்ணில் இருந்து வந்த அழைப்புகள் பல எடுக்கப்படாமல் இருந்தன. அப்பொழுது தான் பார்த்தான் தனது அலைபேசியின் ஒலிப்பெருக்கி அமைதியான முறையில் வைக்கப்பட்டு உள்ளதை. அவனின் மனம் ஏதோ தவறாக உள்ளதை எடுத்துரைக்க வேகமாக அந்த எண் யார் என்று பார்க்க ட்ரூ காலர் ஐடியில் சிவா என்று இருந்தது‌. ஒருவேளை சிவரஞ்சனியாக இருக்குமோ... எதற்கு இத்தனை முறை அழைத்து இருக்கிறாள்... வீட்டில் உள்ளவர்கள் எங்கே... என்ற பல கேள்விகளால் அந்த எண்ணிற்கு அழைத்தவன் தன் தங்கையின் உடைந்த குரலில் பதறி அடித்து கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தான்.
- தொடரும்...
உங்களுக்கு இப்பகுதி பிடித்து இருந்தால் உங்கள் வாக்குகள் மற்றும் கருத்துக்களை தெரிவிக்கவும்.
 

Author: Priya Pintoo
Article Title: ஆழி சூழ்ந்த உலகிலே...3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN