ஆழி சூழ்ந்த உலகிலே...7

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ராஜரத்தினம் வீட்டிற்கு வந்து இன்றோடு இரு வாரம் ஆகி இருந்தது. அர்ஜூன் எடுத்திருந்த விடுப்பு முடிந்து அவனும் அலுவலகம் செல்ல ஆரம்பித்து இருந்தான். லட்சுமி ஒருமாதம் மருத்துவ விடுப்பு எடுத்து ராஜரத்தினத்தை உடனிருந்து கவனிக்க சிவரஞ்சனி வீட்டின் எல்லா பொறுப்புகளையும் எடுத்துக்கொண்டதோடு மும்முரமாய் படித்துக்கொண்டு இருக்கும் அர்ச்சனாவிற்கும் நல்ல ஆசானாகிப் போனாள். இன்னும் ஒருசில நாட்களில் அர்ச்சனாவிற்கு பொதுத்தேர்வு ஆரம்பமாக இருந்தது.

அர்ஜூன் விடுமுறையில் இருந்தவரை அவன் கிழக்காக இருக்க சிவரஞ்சனி மேற்காகி போனாள். அன்று தொலைபேசி வழியாக பேசியதோடு சரி. அதன்பிறகு அவளும் அவனிடம் பேசவில்லை... அவனும் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

அவர்களின் வாழ்க்கை அதன் போக்கில் ஏனோதானோ என்று போய்கொண்டு இருக்க, அர்ஜூன் தான் அடுத்து சிவரஞ்சனி என்ன அணுகுண்டை தூக்கி அவன் குடும்பத்தின் மீது போடப்போகிறாளோ என்று பயந்தான். ராஜரத்தினத்தின் உடல்நிலை அவனை பயப்பட செய்தது. அவள் திரும்ப விவாகரத்து என்று ஆரம்பித்தால் அவருக்கு என்ன ஆகும் என்று தெரியவில்லை. அவளை தவிர்ப்பதற்காகவே அலுவலகமே கதி என்று இருந்தான்.

அன்று ஒருநாள் காலையில் லட்சுமியும் சிவரஞ்சனியும் துவைத்த படுக்கை விரிப்புகளை உலர வைக்க மாடிக்கு வந்து இருந்தனர். அன்றாட துணிகளை பால்கனியில் உலரவைக்கும் அவர்கள் கனமான துணிகளை மாடியில் உலரவைப்பர். எல்லா வீடுகளை சேர்ந்தவர்களும் அவ்வாறு தான் செய்வர் என்பதால் மாடி காலியாக தான் இருந்தது. அர்ச்சனா அதிசயமாக இரவு வெகுநேரம் படித்து விட்டு தூங்கியதால் அவளை தொந்திரவு செய்யாமல் இருவரும் தங்கள் வேலையை தொடர்ந்தனர்.

அர்ஜூன் அலுவலகத்திற்கு கிளப்பிக்கொண்டு இருந்ததால் அவனிடம் ராஜரத்தினத்தை சிறிது நேரம் பார்த்து கொள்ள கூறிவிட்டு தன் மருமகளுடன் மாடிக்கு வந்த லட்சுமிக்கு அந்த காட்சி தென்பட்டது... ஒரு இளைஞன் அங்கிருந்த தடுப்பு சுவர் மீது ஏறி நின்று கீழே பார்த்து கொண்டு இருந்தான். அவன் நின்றிருந்த விதத்திலேயே தெரிந்தது அவன் குதிக்க முயற்சி செய்கிறான் என்று.

லட்சுமிக்கு சர்வமும் ஆடிப்போக அவர் பின்னோடு வந்த சிவரஞ்சனி, அவனை கண்டு சற்று சுதாரித்து, வாயில் ஒற்றை விரலை வைத்து காட்டி லட்சுமியை அமைதியாக இருக்குமாறு சைகை செய்துவிட்டு, மெதுவாக முன்னேறியவள் அவன் எதிர்பாராத நேரத்தில் அவனின் கையை பிடித்து உள்புறமாக இழுக்க நிலைதடுமாறி அவனும் உள்புறமாக விழுந்தான். முழு பலத்தையும் உபயோகித்து அவனை இழுத்த சிவரஞ்சனியும் கீழே விழ லட்சுமி அந்த புதியவனை அடையாளம் கண்டு கொண்டு கோபத்தில் வாய்க்கு வந்த வார்த்தைகளால் அவனை திட்டி தீர்த்தார்.

அவன் பெயர் ராக்கி என்கிற ராகேஷ். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன். அர்ஜூன் வீடு அமைந்து இருக்கும் தளத்தில் அவர்களின் வீட்டில் இருந்து மூன்றாவது வீடு. அவனும் அர்ச்சனா செல்லும் அதே பயிற்சி மையத்திற்கு செல்வதால் அவர்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒருவன். ஓரிரு முறை அவர்களின் வீட்டிற்கு கூட வந்து இருக்கிறான். அவனின் தாய் தந்தை இருவரும் ஐ.டி ஊழியர்கள். ஒரே மகன் என்பதால் பணத்துடனும், பாசத்துடன் வளர்க்கப்பட்டவன்.

லட்சுமி கோபத்துடன் அவனை கத்திக்கொண்டு இருக்க அவனோ காலை மடித்து அமர்ந்து முழங்காலில் முகம் புதைத்து அழுதுகொண்டு இருந்தான். அதைக்கண்ட சிவரஞ்சனி கீழே விழுந்ததால் தன் கால் முட்டியில் வலி ஏற்பட்டதை அலட்சியம் செய்து எழுந்தவள், அவளின் மாமியாரை தேற்றும் விதமாக அவரின் முதுகை தடவி கொடுத்து ஒன்றும் ஆகவில்லை என்று கூறிக்கொண்டே, அவரை அந்த அதிர்ச்சியில் இருந்து மீட்டவள், அவனிடம் எதற்கு இவ்வாறு செய்தான் என்று விசாரிக்கும் படி கூற, அவனை விசாரித்த லட்சுமி‌ அவன் கூறிய விஷயத்தில் இன்னும் அதிர்ச்சி அடைந்தார்.

ராக்கி மற்றும் ப்ரீத்தி இருவரும் ஒரே வகுப்பு பயிலும் காதலர்கள். ஒருமுறை ராக்கி ப்ரீத்தியை அழைத்து கொண்டு அவனின் நண்பன் வினோத்தின் பிறந்தநாள் விழாவிற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வில்லாவிற்கு சென்றிருந்தான். அங்கே நடைபெற்ற பார்ட்டியில் கலந்து குடித்து கும்மாளம் அடித்தவர்கள் இறுதியில் கட்டிலை பகிர்ந்து கொள்ள, வினோத் அந்த அறையில் வைத்திருந்த கேமரா அதை அழகாக படம் பிடித்து வைத்தது.

இதை அறியாத இருவரும் போதையின் வசத்தில் எல்லை மீறிக் கொண்டு இருந்தனர். இருநாட்களுக்கு பிறகு வினோத் அந்த காணொளி காட்சியை காண்பித்து பணம் கேட்டு ராக்கியை மிரட்ட, அதில் செய்வதறியாது திகைத்தவன் அவன் கேட்கும் பணத்தை வீட்டிற்கும் ப்ரீத்திக்கும் தெரியாமல் கொடுக்க ஆரம்பித்தான். இந்த விஷயம் ப்ரீத்திக்கு தெரிந்தால் நிச்சயம் அவள் தற்கொலைக்கு முயற்சி செய்வாள் என்பதால் வினோத் கேட்கும் பணத்தை விட அதிக பணம் கொடுத்து அவனின் வாயை அடைத்திருந்தான்.

ஆனால் அதெல்லாம் பத்து நாட்களுக்கு மட்டுமே. தற்போது வினோத் கேட்பது ப்ரீத்தியை. அவன் விரித்த வலை ப்ரீத்திக்காக தான். ஆனால் இடையில் வினோத்தின் தந்தை அவனின் பிறந்தநாள் விழாவில் போதைபொருட்களை அலையவிட்டதை தெரிந்து கொண்டு கோபமானார். அவனின் பாக்கெட் மணியை கட் செய்ததால் வினோத் தன் தேவைகளை பூர்த்தி செய்ய ராக்கியை உபயோகித்து கொண்டான். தற்போது அவனுக்கும் அவன் தந்தைக்கும் இடையேயான பிரச்சினை தீர, திரும்பவும் அவனின் செல்வ செழிப்பு திரும்பியது. அதனால் இப்போது அவனின் தேவை ராக்கியின் காதலி ப்ரீத்தி.

வினோத்திடம் கெஞ்சி பார்த்த ராக்கி, அவன் அவனின் நிலைப்பாட்டில் இருந்து சிறிதும் விலகி கொள்ளாமல் இருக்க, ப்ரீத்தியிடம் அவன் கொண்ட உண்மையான காதல் அவனை தற்கொலைக்கு தூண்டியது. அவளை வினோத்திடம் கொடுக்கவும் முடியாமல் அவனை எதிர்க்கவும் முடியாமல் தினறியவன் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தான். தற்கொலை செய்து கொண்டால் எல்லாம் முடிந்துவிடுமா என்று அவன் யோசிக்கவில்லை. அடுத்து மாட்டப்போவது ப்ரீத்தி தானே என்று அவன் நினைக்கவில்லை. தற்போது அவனுக்கு அமைதி தேவை. அந்த அமைதியை மரணம் மட்டுமே கொடுக்க முடியும் என்று தப்புக்கணக்கு போட்டான்.

ராக்கியிடம் விசாரித்த லட்சுமி அவனுக்கு நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் கூறி அவனை கையோடு அவர்களின் வீட்டிற்கு அழைத்து வந்தார். அவனை தனியாக விட அவர் துணியவில்லை.

அழுது வடிந்த தடத்துடன் பக்கத்து வீட்டு சிறுவனை தன் தாயும் மனைவியும்‌ வீட்டிற்கு அழைத்து கொண்டு வந்திருப்பதை யோசனையுடனேயே பார்த்தான் அர்ஜூன். அவனின் யோசனை சரி என்பது போல வந்தவன் பிரச்சினையுடனேயே வந்து இருந்தான். லட்சுமி விவரத்தை கூற அர்ஜூன் ஒருநொடி அதிர்ந்தவன் பிறகு தன்னை சமாளித்து கொண்டு,

" மா... உங்களுக்கே தெரியும். எனக்கு இந்த மாதிரியான **** விஷயங்கள்ல தலையிட பிடிக்காதுன்னு... ஆள விடுங்க..." என்றவன் தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டான். ஆங்கில கெட்ட வார்த்தையை சபையில் சாதாரணமாக அவன் உபயோகபடுத்தியது சிவரஞ்சனிக்கு தான் ஒருமாதிரி ஆகியது. மற்ற இருவரும் கண்டு கொண்டதாக இல்லை. அவளுக்கு தெரியவில்லை இது சாதாரனமாக அர்ஜூன் அவன் நண்பர்களுடன் பேசும் சொற்களுள் ஒன்று என்பதையும் அவன் அதன் உட்பொருளை உணர்ந்து கூறவில்லை என்றும்.

அவன் பின்னோடு சென்றவள் தன் மனஸ்தாபங்களை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு ராக்கிக்காக அர்ஜூனிடம் மன்றாடினாள்.

"இப்போ நாம விட்டோம்னா கண்டிப்பா அவன் சூசைட்க்கு ட்ரை பன்னுவான். ஒரு உயிர் போகிறதுக்கு நாமளும் ஒரு காரணமா இருக்க வேண்டாம் அர்ஜூன்..." ஆளுயர கண்ணாடி முன்னின்று தலையை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருந்தவன், தன் பின்னால் நிற்கும் சிவரஞ்சனியை கண்ணாடியினுடே முறைக்க, அவனின் முறைப்பில் பொறிதட்ட "சாரி..." என்று வேகமாக கூறியவள் தன் கீழ் உதட்டை பற்களால் சிறைப்படுத்தி கொண்டாள்.

நெடுநாட்களுக்கு பிறகு அவனுடன் பேசுவதால் அவளையும் அறியாமல், அவனின் பெயர் அவள் வாயில் வந்துவிட்டது. 'ரொம்ப ஓவரா தான் போரான்... ஒருநாள் மாட்டுவான்..‌. அப்போ வச்சிக்கரேன்...' என்று அவளின் மனம் அவனை கழுவி ஊற்றியது என்னமோ உண்மைதான்...

உடையை ஒருமுறை சரிபார்த்தவன் அவள் புறம் திரும்பி, மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு அவளின் பற்களிடம் வதைபடும் அவளின் உதட்டையே சில நொடிகள் பார்த்தவன், அவள் என்னவோ யோசிப்பதை பார்த்து விட்டு, "நாம ஹெல்ப் பண்ணற அளவுக்கு அவங்க ஒன்னும் ஒழுக்கமா நடந்துக்கலயே..." என்றான் தன்மையாகவே.

"லவ் பன்னறவங்க... ஏதோ அவசரத்துல தப்பு பன்னிட்டாங்க..."

"கல்யாணம் ஆன நாமே அவசரபடலயே..." என்றவன் நகர்ந்து கட்டில் மேல் இருந்த தனது மடிக்கணினியை எடுத்து பையில் வைக்க,

"ஓ காட்... யார யாரோட கம்பேர் பன்னறீங்க... அவங்க லவ் பன்னறாங்க... நம்மல மாதிரி பிடிக்காம கல்யாணம் பன்னிட்டு வாழல... யார்தான் இந்த காலத்துல ஒழுக்கமா இருக்காங்க..." என்றவளின் பேச்சில் அவனிடம் இருந்த தன்மை மறைந்து போக,

"ஏன் ஏழு வருஷமா நான் இல்ல... அதுசரி இந்த பொண்ணுங்க எல்லாரும் ஒழுக்கமா இருந்தா தான் விட்டுட்டு போய்டுவீங்களே... முதல்ல அவ... இப்போ நீ... **** " திரும்பவும் அதே கெட்ட வார்த்தையை உபயோகப்படுத்தினான். அவனின் நல்ல காலமோ என்னவோ அது அவளின் கருத்தில் பதியவில்லை.

"வாட் டூ யூ மீன்... சோ நான் டைவஸ் கேட்டது இதுக்காகதான்னு சொல்லரீங்க...." என்றவளின் ஆள்காட்டி விரல் கட்டிலை காட்டி இருந்தது. அவள் கூறிய பிறகே தன் பேச்சின் வீரியம் உணர்ந்தவன் தன் பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

கட்டிலில் தெப்பென்று அமர்ந்தவளின் கண்கள், சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த அவர்களின் திருமண புகைப்படத்தில் பதிந்து இருந்தது. அவளின் நினைவுகள் கடந்த காலத்தில் பயனித்து இருந்தது.
 

Author: Priya Pintoo
Article Title: ஆழி சூழ்ந்த உலகிலே...7
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN