மாயம் 20

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிரிவை
எதிர்க்க
என் காதல்
ஆயுதமேந்த
நீயோ
அதை வரமாய் பெற்று
ஏன் என்னை
வதைக்கிறாய்???

ஶ்ரீ அவ்வாறு அமர்ந்திருக்க அவளது யோசனையை கலைத்தது அவளது மொபைல் அழைப்பு... அதை எடுத்து பார்த்தவள் மறுமுறை கலக்கம் அடைந்தாள்... அவளது கலக்கத்திற்கு காரணம் அழைப்பு ரித்வியிடமிருந்து என்பதனாலாகும்....
அழைப்பை எடுப்பதா வேண்டாமா என்று யோசித்தவள் எடுப்பதே உசிதமென்று முடிவு செய்து அழைப்பை எடுத்தாள்...

“ஹலோ ஶ்ரீ..”

“சொல்லுங்க அத்தான்..”

“ஹேமா பக்கத்துல இருக்காளா ஶ்ரீ???”

“இல்லையே அத்தான்... அவ இன்னைக்கு ஆபிஸிற்கு வரலையே..”

“ஓ... அவளுக்கு கால் பண்ணேன்.. போன் ரீச்சாக மாட்டேன்குது... உனக்கு அவ கால் பண்ணாளா???”

“இல்லை அத்தான்...அவ ஊருக்கு போன பிறகு கால் பண்ணவே இல்லை... லீவையும் எக்டென்ட் பண்ணியிருக்கதா டீம் லீட் சொன்னாரு..”

“சரி ஶ்ரீ.. அது சரி நீ ஏன் ஒரு மாதிரி டல்லா பேசுற?? ஏதும் பிரச்சனையா???”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை அத்தான்.. வர்க் டென்ஷன் அதான்... வேற எதுவும் இல்லை...”

“சரி ஶ்ரீ... ஹேமா உன்னை காண்டக்ட் பண்ணா எனக்கு கால் பண்ண சொல்லு... என்னமோ தெரியலை அவ ஊருக்கு போனதுல இருந்து மனசே சரியில்லை.. ஏதோ நடக்கூடாதது நடந்த மாதிரி என்னோட உள்ளுணர்வு சொல்லிட்டே இருக்கு.... எதனாலனு எனக்கு புரியலை... மனசு அவளை ரொம்ப தேடுது...” என்று ரித்வி கூற ஶ்ரீயோ அவனது உள்ளுணர்வு பலித்துவிடகூடாதென்று வேண்டிக்கொண்டாள்...

“ஒன்னும் இல்லை அத்தான்... அது ஹேமா ஊருல இல்லாததால அப்படி தோணியிருக்கும்.....”

“ஏதோ ஶ்ரீ.. அவ கால் பண்ணா மறக்காமல் எனக்கும் கால் பண்ண சொல்லு..”

“சரி அத்தான்.. நா அவகிட்ட சொல்லுறேன்.. கொஞ்சம் வர்க் இருக்கு அத்தான்.. நான் பிறகு பேசவா...??”

“சரிமா... நான் பிறகு பேசுறேன்...பாய்..” என்றுவிட்டு ரித்வி அழைப்பை துண்டிக்க அப்போது தான் இவ்வளவு நேரம் பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள் ஶ்ரீ...
சந்தேகம் வராமல் ரித்வியை சமாளிப்பது அவளுக்கு பெரும்பாடானது..

அழைப்பை துண்டித்துவிட்டாலே தவிர ரித்வியின் கேள்விக்கான பதில் தெரியாது குழம்பியிருந்தாள் ஶ்ரீ.... ரவி காட்டிய புகைப்படம் ஒரு வித பயத்தை உண்டுபண்ணியிருக்க அது உண்மை என்று உறுதியானால் அதை எவ்வாறு ரித்விக்கு தெரியப்படுத்துவது என்று கலங்கி நின்றாள் ஶ்ரீ... இவ்வாறு பல குழப்பத்துடன் இருந்தவளுக்கு வேலையில் கவனம் செலுத்தமுடியாமலிருக்க அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள் ஶ்ரீ... வீட்டிற்கு வந்தவள் தன் அன்னையிடம் ஏதேதோ காரணம் கூறிவிட்டு அறைக்குள் அடைந்துகொண்டாள் ஶ்ரீ...

அறைக்குள் நடை பயின்றவளுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.. நடந்தது என்னவென்று தெரிந்தவள் ஹேமா மட்டுமே..ஆனால் அவளிடமிருந்து எந்தவித தகவலும் இல்லை...ரவி கூறியதுபோல் ஏதும் நடந்திருந்தால் அதை நிச்சயம் ரித்வி தாங்கிக்கொள்ள மாட்டான்... ஐந்து வருடக்காதல் ஒரு நொடியில் இல்லையென்றானால் காதலை சுமந்தவனுக்கு வலிக்குமல்லவா....

இவ்வாறு அடியும் தெரியாது நுனியும் புரியாது உழன்றவளை கலைத்தது மொபைல் அழைப்பு... புது எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்க அதை எடுத்து காதில் வைத்தவள் ஹலோ என்று கூறு மறுபுறம் அமைதி நிலவியது..

“ஹலோ யாரு பேசுறீங்க?? கால் பண்ணிட்டு பேசாமல் இருந்தா என்ன அர்த்தம்...?? ஹலோ... ஹலோ..”

“ஹலோ ஶ்ரீ....”

“ஏய் ஹேமா... எங்கடி இருக்க??? யாரோட நம்பர் இது??அங்க என்தான்டி நடக்குது??”

“எனக்கு மேரேஜ் ஆகிருச்சி ஶ்ரீ..”

“என்னடி சொல்லுற?? அப்போ ரவி காட்டுன போட்டோ உண்மையா??? என்னடி நடந்துச்சு??? முழுசா சொன்னா தானே தெரியும்??”

“எனக்கு வந்த இடத்துல எதிர்பாரா விதத்துல மேரேஜ் நடந்துருச்சு... இனிமே ஐயம் மிசஸ். ராமவேந்தன்...”

“ஏய் லூசாடி நீ.. நீ ராஜூ அத்தானை விரும்புன...எப்படி அவரை தூக்கிப்போட்டு உன்னால இன்னொருத்தன் கூட வாழ முடியும்??? அதுக்கு உன்னோட மனசாட்சி இடம் கொடுக்குமா??? மேரேஜ் ஆகிருச்சினா எல்லாம் முடிஞ்சதா அர்த்தமா?? உன்னால உன்னோட காதலை மறந்துட்டு இன்னொருத்தனோட சந்தோஷமா குடும்பம் நடத்த முடியுமா?? அது அந்த மனுஷனுக்கு செய்ற துரோகமில்லையா???”

“ஶ்ரீ என்னோட காதல்... ரா.. ரித்வி எல்லாமே என்னோட பாஸ்ட்... என்னோட மேரேஜும் என்னோட ஹஸ்பண்டும் தான் என்னோட ப்ரசண்ட்.. நடந்ததை யாராலும் மாற்றமுடியாது... சோ அதை ஏத்துக்கிட்டு வாழுறது தான் என்னோட தலைவிதி....”

“லூசு மாதிரி பேசாத.. படிச்ச பொண்ணுதானே நீ.. ஏதோ பட்டிக்காட்டுல வளந்தவ மாதிரூ தலைவிதி ஏத்துக்கனும்னு சொல்லுற?? நீயும் ராஜ் அத்தானும் எவ்வளவு டீப்பா லவ் பண்ணீங்கனு நேரடியா பார்த்தவ நான்.. இப்போ நீ அந்த மனுஷனுக்கு என்ன பதில் சொல்ல போற?? அந்த மனிஷனோட நிலைமையை கொஞ்சமாவது யோசிச்சு பார்த்தியா?? உன்னை காதலிச்ச பாவத்துக்கு அவரு கஷ்டப்படனுமா??? எப்போ இருந்து நீ மனசாட்சி இல்லாதவளா நடந்துக்க ஆரம்பிச்ச??”

“என்னோட நிலைமையில் இருந்து பார்த்தா தான் உனக்கு என்னோட கஷ்டம் புரியும்... ரா.. ரித்விகிட்ட நீயே எனக்கு மேரேஜான விஷயத்தை சொல்லிரு... நான் மன்னிப்பு கேட்டேனும்.. அவரோட ப்யூச்சருக்கு என்னோட பெஸ்ட் விஷசையும் கன்வே பண்ணிரு..”

“ஸ்டாப் இட் ஹேமா.. உன்னை திட்ட வேணாமேன்னு பார்க்குறேன்... என்னடி நினைச்சிட்டு இருக்க உன் மனசுல...??? தப்பையும் நீயே பண்ணிட்டு நீயே ஆறுதல் சொல்லிருனு சொல்ற?? தெரியாமல் தான் கேட்குறேன்... இப்படி திடுதிடுப்புனு கல்யாணம் பண்ணிக்கிறதுக்கான காரணம் என்ன?? அதுவும் ராஜ் அத்தானை மனசுல வச்சுக்கிட்டே இன்னொருத்தன் கையால எப்படி உன்னால தாலி வாங்கிக்க முடிஞ்சிது??”

“முடியலடி... முடியலை.. மனசாட்சியை கொன்னு புதைச்சிட்டு தான் மணமேடையில உட்கார்ந்தேன்... அப்போ கூட தாலி கட்டுனவன் ராஜ்ஜாக தான் தெரிஞ்சான்... அந்த நிமிஷமே செத்துட்டா என்னான்னு கூட தோணிச்சு... ஏற்கனேவே செத்து நடை பிணமா இருக்கவள நீயும் ஏண்டி சாவடிக்கிற???”என்று போனில் கதறிய ஹேமாவின் கதறலில் ஶ்ரீயின் மனம் பதறியது..

மனதால் விரும்பியவனை மறக்கவும் முடியாமல் புதிதாய் வந்தவனை ஏற்கவும் முடியாமல் கதறும் ஹேமாவின் மனது ஒரு பெண்ணாக ஶ்ரீயிற்கு புரிந்தது... என்னதான் சூழ்நிலையால் வேறொருவரை மணம்புரிந்தாலும் ஐந்து வருடங்களாக எண்ணமும் சிந்தையும் அவனே என்றெண்ணியிருந்த பெண்மனது இன்னொருவனை கணவனாய் ஏற்பது சுலபமல்லவே...???

ஏற்கனவே மனதால் நொறுங்கியிருந்தவளுக்கு தன் கோபத்தால் வருத்தமளிக்க விரும்பாத ஶ்ரீ ஹேமாவிற்கு ஆறுதலாக பேசினாள்.

“சாரி ஹேமா... கோபத்துல அப்படி பேசிட்டேன்.. உன்னோட நிலைமை எனக்கு புரியிது... உன்னை மீறி நடந்த ஒரு விஷயத்திற்கு நீ என்ன பண்ண முடியும்??? சரி இப்பவாச்சும் என்ன நடந்ததுனு விவரமா சொல்லு பப்ளி...”

“வேணாம் ஶ்ரீ... அதை பற்றி மட்டும் கேட்காத... நான் இன்னும் அந்த சம்பவத்துல இருந்து மீண்டு வரலை...ப்ளீஸ்..”

“என்னடி....ப்ச்... சரி நீ எதுக்கு வேலையை ரிசைன் பண்ண?? உன்னோட ஹஸ்பண்ட் ஏதும் சொன்னாரா??”

“என்னோட புகுந்தவீட்டாளுங்க விருப்பப்படல... அதான் ரிசைன் பண்ணிட்டேன்..”

“சரி... மேடம் எப்போ ட்ரீட் தருவீங்க??”

“ம்ஹூ... பார்ப்போம் ஶ்ரீ... நான் ட்ரீட் தர்ற நிலைமையில இருந்தா நிச்சயம் ட்ரீட் தர்றேன்..”

“ஏன் பப்ளி இப்படி சொல்ற??? எல்லாம் சரியாகிரும் பப்ளி... நம்பு...”

“பார்ப்போம் ஶ்ரீ.... ரா... ரித்விகிட்ட எப்படி சொல்லுவ??? உடைஞ்சி போயிருவாரு... ஏதோ கொலை பண்ண மாதிரி ஒரு குற்றவுணர்ச்சிடி....இதுல இருந்து எப்படி மீளப்போறேனு தெரியலை... என்னால அவரோட லைப்பில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது...”

“அதை நான் பார்த்துக்கிறேன்.. ரிஷி அத்தான்கிட்ட சொல்லி பேச சொல்றேன்... அவருக்கு நாங்க எல்லோரும் இருக்கோம்... நீ அவரைப்பத்தி கவலைப்படாமல் உன்னோட புது லைப்பை ஹாப்பியா மாற்ற ட்ரை பண்ணு...”

“சரிடி... என் மாமியார் கூப்பிடுறாங்க... நான் திரும்ப உனக்கு கூப்பிடுறேன்..” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள் ஹேமா...
ஹேமாவிடம் பேசினால் விவரம் தெரியும் என்று எதிர்பார்த்தவளுக்கு ஏமாற்றமே மிச்சம்... அவள் ஏதும் விவரம் தெரிவிக்க மறுத்தது கூட அவள் எதையோ மறைக்கின்றாள் என்று உணர்த்தியது... அதோடு அவளது குரலில் ஒரு வித சோர்வு மற்றும் அதிர்ச்சியை தவிர்ந்து ஏதோவொரு உணர்வு இருந்ததை உணர்ந்தாள் ஶ்ரீ....
இத்தனை காலமாய் நட்பு பாராட்டிய அனுபவமே ஶ்ரீயிற்கு இதை உணர்த்தியது....

ஹேமா பற்றி அவளது பெற்றோரிடம் விசாரிக்க வேண்டுமென மனதில் குறித்துக்கொண்டவள் ரிஷிக்கு அழைத்தாள்... அவனோ பிசியாக இருப்பதாகவும் சிறிது நேரம் கழித்து அழைப்பதாக பதிலனுப்பினான்...

அவனது அழைப்பிற்காக காத்திருந்தாள் ஶ்ரீ....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN