பாயிண்டு வரட்டும் பாயிண்டு வரட்டும்

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மண் வாசம் கூட
சேந்து மரியாதையும்
வீசும்ங்க எங்க ஊரு
வாண்டு கூட வாங்க
போங்கன்னு பேசும்ங்க
கோவை நா கெத்து
கோவை நா கெத்து கோவை
நா கெத்து எங்க ஊரு
கோயம்பத்தூர்

என பாடிக் கொண்டே கண்ணாடியைப் பார்த்து தலையை சீவிக் கொண்டிருந்தான் அவன்.

"அய்யா வெரசா கிளம்பலாங்களா நேரமாச்சு" என்றவனைப் பார்த்து "ம்ம்ம் போகலாம் போகலாம்" என்றவனோ கோவில் திருவிழாவில் வாங்கிய பத்து ரூபாய் கலர் கண்ணாடியை மாட்டிக் கொண்டு "வண்டியைக் கட்டுல " என்று கத்த

"அய்யா மாட்டுவண்டி மாட்டுத்தாவணி வரை போயிருக்கு "என்று கூற

"அப்போ குதிரை வண்டி "
"அது குற்றாலம் வரை போயிருக்கு " என்றவனை முறைத்தவன்

"வேற என்ன தான் இருக்கு " என்று கேட்டான்.

" தன் காலே தனக்கு உதவிங்கய்யா" என்று கூறி தலைக் குனிந்தவனை நாற்காலி மேல் ஏறி அவன் தலையில் கொட்டிவிட்டு அவனை முறைத்தவாறே நடக்க ஆரம்பித்தான் அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவன்.

நாட்டாமை பாதம் பட்டா
எங்க வெள்ளாமை வெளையுமடி
நாட்டாமை கை அசஞ்சா
மாசம் நாலு மழ பொழியுமடி
ஆ ஆ ஆ ஆ ....ஆ ஆ ஆ ஆ.....
நம்ம நாட்டாமை பாதம் பட்டா
எங்க வெள்ளாமை வெளையுமடி
நாட்டாமை கை அசஞ்சா
மாசம் நாலு மழ பொழியுமடி
ஆ ஆ ஆ ஆ ....ஆ ஆ ஆ ஆ.....


என்ற பாடல் அவன் பின்னணியில் பாட தெனாவட்டும் திமிரும் கலந்த காட்டாமையாய் ச்ச்சச நாட்டாமையாய் அந்த பஞ்சாயத்திற்குள் நுழைந்து மரத்தடியில் அமர்ந்தவன் சுற்றிலும் பார்வையை சுழல விட்டு " எங்க டா இங்கே இருந்த மரத்தைக் காணோம்"
எனக் கேட்க

" எங்க அய்யா மரத்தை வளத்துறாங்க?நீங்க தானே போனமுறை பஞ்சாயத்துக்கு வந்தப்போ மேலே இருந்த காக்கா கக்கா போயிடுச்சுனு வெட்ட சொன்னீங்க" என்று கூற

"ஓஓஓ என்றவன் சொம்பு எங்கே டா?" மறுபடியும் கத்த

" அதோ பக்கத்துல இருக்கு பாருங்க வாட்டர் பாட்டில் " என்றவனிடம் சரி என்றவாறு தலையாட்டினான்.
அவன் தான் குமரிமுத்து.

அந்த ஊரை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் பஞ்சாயத்து தலைவன்.
இவனுடன் ஒரு நால்வர் அணியும் சேர்ந்து அந்த ஊரை நாசம் செய்து கொண்டிருக்கின்றனர்.

"எத்தனை பிராது வந்துருக்கு " என்று கேட்டவனிடம்

" இன்றைக்கு நிறைய பிராது வந்துருக்குங்க அய்யா?" என்றவன்

" முதல் பிராது நம்ம மீசைமுருகனோடது " எனக் கூற
"ம்ம் என்ன பிராது கொடுத்துருக்கான்" என்றவனோ சுவிங்கத்தை வாயில் போட்டான். (வெற்றிலைக்கு பதிலாக)

"மீசை முருகன் நிலத்துல கம்பெனி கட்ட போறாங்களாம்."
"நல்ல விசயம் தானே மீசை"
"அய்யா அது வந்தா நிலம்,நீர்,காற்று என நம்ம ஐம்பூதங்களும் பாதிக்கப்படும் தண்ணீர் இல்லாமல் நம்ம துன்பப்படணும், வயலெல்லாம் அழிச்சுட்டு ஒரு நேர சோறுக்கு வழியில்லாமல் பட்டினி கிடந்து சாகணும் " என்று கூற

"முதல்ல தண்ணீர் குடி மீசை சோறு தானே பாத்துக்கலாம் பாத்துக்கலாம் ஏதோ பீட்சா பர்கர் வந்துருக்காமே அதை சாப்பிட்டுக்கலாம் " என்றவனை கேவலமாக முறைத்த மீசை "அந்த பீட்சால கூட காய்கறிகள் போட விவசாய நிலம் வேணுங்கய்யா" என முணுமுணுத்துக் கொண்டே சென்றான்.

"விடுப்பா விடுப்பா இடுப்புவலினா ஒத்தடம் கொடுக்கிறதும் விளைநிலம்னா கட்டடம் வரதும் சகஜம் தானே பா " என்ற நால்வர் அணியின் கோரஸிற்கு அவனும் எதிர் பாட்டு பாடி

"அடுத்த பிராது என்ன?"என்று கேட்க
"பூங்கொடி கொடுத்துருக்கா அய்யா " என்றவனை முறைத்தவன்

" அந்த சுண்டெலி லாம் வாய் பேசுதா?"

"ஏன் அய்யா நான் பேசக்கூடாது நான் பொதுத்தேர்வில் 1150 மதிப்பெண் எடுத்திருக்கேன் என்னை வெளியூரில் இருக்கும் கல்லூரியில் படிக்க வைக்கிறேனு சொன்ன அப்பாவை நீங்க பொட்ட புள்ளைக்கு படிப்பு எதுக்குனு சொல்லி அனுப்ப வேணாம் சொல்லியிருக்கீங்க...பெண்கள் நாட்டின் கண்கள் ஆணுக்கு பெண் இளைப்பில்லைனு சொன்னதை நீங்க காது கொடுத்து கேட்கவே இல்லையா இப்போலாம் விண்வெளிக்கும் பெண்கள் போக ஆரம்பிச்சுட்டாங்க" என்று ஆதங்கப்பட்டவளை
"ஓஓ அந்த ஊருக்கு கூட போகுறாங்களா? பெத்த அம்மா அப்பா பேச்சைக் கேட்காம அந்த ஊருக்கு போனனால தான் அந்தம்மா செத்து போச்சு " என்றவனை

"யாருங்க அய்யா " என்று அந்த நால்வர் அணி கேட்க

" யாருக்குத் தெரியும் (கல்பனா சாவ்லாவை சொல்லுது இந்த பக்கி) யோவ் உன் புள்ளையை அடிச்சு இழுத்துட்டு போ பொட்ட புள்ளைக்கு வாயைப் பாரு அடுத்த மாசம் கல்யாணம் பண்ணி போட்டா சரியாய் போயிரும்"

"விடுப்பா விடுப்பா பத்து மாசத்துல புள்ளை பொறக்குறதும் 16 வயசாகிட்டா கண்ணாலம் பண்ணுறதும் சகஜம் தானே பா" நால்வர் அணி கோரஸ் பாட
"அதே அதே என்றவனோ அடுத்த பிராது என்ன? " என்று கேட்டான்.

"பால்பாண்டிங்க அய்யா"

"நானே இரண்டு மாடு தான் வெச்சிருக்கேன் ஏதோ இரண்டு லிட்டர் பாலுல ஆறு லிட்டர் தண்ணீர் கலக்கிட்டேன் அது ஒரு குத்தம்னு அடிக்க வராங்க அய்யா " என்றவனிடம்

"அதுதானே அதுல என்ன தப்பு.
காபிதூளுனு மரத்தூள் கொடுக்கிறாங்க, மிளகாய்த்தூள்னு செங்கல் தூள் கொடுக்கிறாங்க....அதுலாம் வாங்குவீங்க இதை வாங்க மாட்டீங்களா போங்கயா போங்க " என்று கூறியவனை ஆமோத்திக்கும் படி

" விடுப்பா விடுப்பா குளியல்னா வெந்நீர் போடுறதும் பால்னா தண்ணீர் கலக்குறதும் சகஜம் தானே பா " என்றனர் நால்வர் அணி.

" அடுத்த பிராது என்ன?இன்னும் எத்தனை தான் இருக்கு ?என்றவனிடம்

" இனி இருக்க எல்லாமே ஒரே காரணம் தான் ஆனால் பிராது மட்டும் எல்லாரும் தனித்தனியா கொடுத்திருக்காங்க யா"

" அது ஏனாம்"

" தெரியலங்க அய்யா "என்றவனிடம்
" சரி சரி வரச் சொல்லு " என்றவன் பார்க்க அந்த காரணத்திற்காக பிராது கொடுத்தவர்கள் வரிசை நீண்டு கொண்டே சென்றது.

குமரிக்கே தலை சுற்ற அப்படி என்ன தான் யா காரணம் எனக் கேட்க
"அவங்க மனசுல தோணுனத்துக்கு உயிர் கொடுத்து எழுதி அனைவரோட ஆதரவும் கிடைக்கும் நினைச்சிருக்காங்க யா...ஆனால் யாருமே படிக்கலையாம் படிச்சவங்களும் கருத்து சொல்லலையாம்"

"ஓஓஓ என்றவன் "

" புது எழுத்தாளரா இருக்கும் பெரிய எழுத்தாளர் ஆகிட்டா அதெல்லாம் கிடைக்கும்... யோவ் உனக்கு போகப் போக ஆதரவு கிடைக்கும் பஞ்சாயத்தைக் கலைக்கலாமா ?"என்றவனிடம்

" அய்யா பிராது கொடுத்ததே பெரிய
எழுத்தாளர் தான்ங்க " என்றதைக் கேட்டு நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுந்தவன் அப்படியா எனக் கேட்க
ஆமாங்க அய்யா என்றவனும் அவரைப் போலவே தலையாட்டினான்.

"ஏன் பா இப்படி ஆச்சு...ஒருவேளை நீ ஒழுங்க அப்டேட் கொடுக்கலையா இருக்கும் , அவங்க கொடுக்கிற கருத்துகளுக்கு பதில் சொல்லாம இருந்தருப்பியா இருக்கும் " என்றவனிடம்

"அதெல்லாம் நான் சரியா பண்ணேனே " என ஒருவன் வந்து நிற்க

தலையில் கை வைத்தவன் " இப்போ என்ன தான் உங்க பிரச்சனை சொல்லுங்க " என்று கூறினான் குமரி.

"நான் ஒரு நான்கு கதை எழுதியிருக்கேன் என் கதையை படிக்க ஆளே இல்லை முதலில் ஆதரவு கொடுத்தவங்க கூட இப்போ கொடுக்கிறது இல்லை ஏன் தான் எழுதுறோம்னு சில தடவை எண்ணம் வந்துடுது.

ஆனாலும் எழுத்து எனக்கு உயிர் மாதிரி " என்றவனின் கண்களும் கலங்க ஆரம்பித்திருந்தது.
"ஏன் அவன் எங்கேயோ பாத்துட்டு இருக்கான் என்னாச்சு அவனுக்கு ?" என்ற குமரியிடம்

" எனக்கு கருத்து வரலனு புலம்பிட்டே இருந்தவன் வீட்டுக்கு வர எல்லார்கிட்டேயும் பொலம்ப ஆரம்பிச்சுட்டானாம் அதுனால அவனை எழுத வேணாம் சொல்லிட்டாங்க...அதோட பின்விளைவு தான் இப்படி.
மன அழுத்தம் அதிகமாகி இப்போ யார் பேசுறதும் கேட்காம ஏதோ தனியா ஒரு உலகத்துல இருக்கான் " என்று வருத்தத்துடன் கூறி முடித்தவர்
அந்த இளைஞனைப் பார்க்க அவனோ "அதோ அந்த வீட்டில் தான் கொலை நடந்தது " என அவன் எழுதிய கதையையே திரும்ப திரும்ப கூறிக் கொண்டிருந்தான்.

"இப்படி கூட ஆகுமா?" என்று கேட்க
ஒருத்தர் எழுத நேரமில்லாம் இரவு நேரத்தில் தூங்காமல் எழுதி எழுதி இப்போ உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

அந்த செய்தியை தன் வாசகர்களிடம் தெரிவிக்க அவருக்கு வந்த கருத்துகளில் உடல்நிலை இன்னும் மோசமாகி விட்டதாம் என்றவன் கூறியதைக் கேட்டு பதறிய குமரி
"என்ன " என்றுக் கேட்டு எழுந்திரிக்க
" இப்படி சும்மா சும்மா உடல்நிலை சரியில்லைனு போடுறீங்க...எதுக்கு இப்படி உடம்பை கெடுத்துட்டு எழுதணும் பொறுமையா எழுதி போடலாமே " என்று கேட்டாராம்.

சரியா தானே கேட்டுருக்கார்?
அதே அவர் தான் ஏன் இவ்ளோ பொறுமையா எழுதுனீங்கனு கடைசியா போட்ட பதிவுல சொன்னாராம்.

" சுத்தம் " என்றவனோ

"அப்புறம் " எனக் கேட்க
"சிலர் அவங்களுக்கு பிடித்த எழுத்தாளர் கதைக்கு மட்டும் தான் கருத்து சொல்றாங்களாம்"
என்ன செய்வது எனத் தெரியாமல் முழித்தவன்

" சரி நான் இறுதியா ஒரு கேள்வி கேட்கிறேன் நீங்க எல்லாரும் எழுத்தாளர்கள் தானே?"
"ஆம் " என்று அனைவரும் தலையசைக்க
" முதல்ல நீங்க இருக்க எல்லாரோட கதைகளையும் படித்து கருத்து சொல்லியிருக்கீங்களா?" என்று கேட்க

அமைதியே பதிலாக வந்தது...
" அப்போ போங்க யா...கருத்து வரல அது வரல இது வரல னு " என்றவன் எழுந்து செல்ல

"விடுப்பா விடுப்பா அர்ஜூன் படம்னா வைலண்டா இருக்கிறதும் ரீடர்ஸ்னா சைலண்டா இருக்கிறதும் சகஜம் தானே பா "என்ற நால்வர் அணியிர் கோரஸில் அந்த பஞ்சாயத்தும் கலைந்தது.

ஏன் இந்த கதை🤔உங்க எல்லாரோட எண்ணமும் புரியது? நான் எனக்காக பேச வரலை...
மொத்தமா தான் பேச வரேன்....
கருத்துகள் ரொம்ப முக்கியம் வளர்ந்து வர எழுத்தாளர்களுக்கும் சரி பெரிய எழுத்தாளர்களுக்கும் சரி...
எல்லா எழுத்தாளரும் முதலில் ஒரு வாசகர் மட்டுமே அதை மறந்து விடுகிறோம்.

என் கதையை படி என்று கூறும் நாம் அவர் கதையை படிக்க முன்வருவதில்லை..
நேரம் இல்லையா ? அதே பதில் அவருக்கும் இருக்கலாம்.
எதுக்கு முன்னாடி மூன்று உதாரணம் என நீங்கள் நினைப்பது எனக்கு தெரிகிறது...

அந்த பிராது போல தான் இந்த பிராதும்😂கடைசி வரை தீர்வே இல்லை😆.

கருத்து கருத்துனு உயிரை வாங்காதீங்க யா என நீங்க மனதில் நினைப்பது கேட்டு விட்டது சகோஸ்😂
அந்த கருத்து மட்டுமே எங்களை ஊக்குவிப்பது, அடுத்த பதிவு உடனே போட வழிவகுப்பது இப்படி பல கூறலாம்.

கருத்து வரவில்லை என்றால் யாருமே படிக்கல நான் யாருக்கு போடணும் என்ற எண்ணம் தான் தோன்றும்😊.
இந்த பதிவிற்கு பிறகு எத்தனை நபர் கழுவி ஊத்த போகிறார்களோ !!!!எத்தனை நபர் அன்பாலோவ் செய்ய போகிறார்களோ!!!

ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம்😒.
கருத்து வரவில்லை என்றாலும் நான் கதை எழுதுவேன்...
அப்படி எழுத வில்லையென்றால் மன அழுத்தம் வந்து எந்த நிலைக்கு ஆளாவேனோ😂

இந்த நிலையில் பலர் இருக்கின்றனர்.
கருத்து கூற ஒரு நிமிடம் ஆகுமா ? அதுவே அதிகம் தான் என நினைக்கிறேன்.
மாற்றம் ஒன்றே மாறாதது...
மாறலாமா? (எனக்கும் சேர்த்து தான் கூறுகிறேன்😴😴)

சரி சரி இந்த படத்துக்கு சுபம் போட்டுருவோம்😂யாரும் வன்முறையை கையில் எடுக்க வேண்டாம்😴😴.




நன்றி

தனு❤

 

Attachments

  • images - 2020-06-05T234125.694.jpeg
    images - 2020-06-05T234125.694.jpeg
    36.4 KB · Views: 134
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN