மையலுடைத்தாய் மழை மேகமே-16

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"உனக்கெல்லாம் மனசாட்சினு ஒன்னு இல்லையா ருத்ரா? மயூரா என்ன உனக்கு விளையாட்டு பொம்மையா? அவள் மனசோட விளையாட நீ எப்படி துணிஞ்ச? உனக்கு அவள் மேல கோவம்னா நேரா அவகிட்ட சண்டை போட்டு இருக்கலாமே. அத விட்டுட்டு இப்படி சீப் அ நடந்துகிட்டியே ''

"டேய் உனக்கு ஒன்னு தெரியுமா? மயூரா பெட் விஷயம் எனக்குத்தான் மொத தெரியும். காதல் பெட் ல வர்ற விஷயம் இல்லனு அவளுக்கு சொல்லி புரிய வெச்சது நான்தான்.உன் மனசு காயப்படக்கூடாதுனு நான்தான் தேவியை தடுத்தேன். ஆனால் நீ அவளை பழி வாங்கிட்ட. தப்பு என்னோடதுதான். அவளை தடுத்துயிருக்கக் கூடாது. உன்னை எல்லாம் வெச்சு செஞ்சிருக்கனும். இப்ப பாரு எங்கயோ போயிட்டா. ''

பசித் தாங்கமாட்டாடா அவள்.வயசு பொண்ணு, வெகுளி மாதிரி இருப்பாள். எங்க போய் என்ன கஷ்டப்படுவாளோ? உன்னை பார்க்கவே எனக்கு பிடிக்கல ருத்ரா!'' அந்தரன் மனதில் கனன்று கொண்டிருந்த வலி வார்த்தைகளாய் வெடித்துக் கொண்டிருந்தது.அந்த வார்த்தைகளின் உண்மை ருத்ரன் நெஞ்சை சுட்டது. ஒரு வித இயலாமையோடு அந்தரனைப் பார்த்தான்.அந்தரன் கோவம் அதோடு நிற்கவில்லை.

மேலும் தொடர்ந்தான்."சின்ன வயசிலேந்து உனக்கு அவளை புரிஞ்சிக்கவே தெரியலை.அதுதான் உண்மை.நீ அவளை புரிஞ்சிக்கவே முயற்சிக்கல.மது பண்ற தவறுக்கு எல்லாம் உங்கிட்ட திட்டு,கொட்டு வாங்கறதுதானே அவள் வேலை. என்னிக்காச்சும் அவள் தப்பு பண்ணுவாளா மாட்டாளாணு நீ யோசிச்சு பார்த்தியா? உன் முரட்டு கோவம் மது பயந்திடுவானு எல்லா பழியும் அவளே தாங்கிக்குவா.அதுக்காக அதுதான் மயூரானு நீ எப்படி முடிவு பண்ணலாம்?
உனக்கு போய் எவன்டா என் தேவியை கல்யாணம் பண்ணச் சொல்லி வாக்கு சொன்னான்? இப்ப உனக்கு சந்தோசமா இருக்கும் இல்லை.உனக்கு கண்டிப்பா மனவிலக்கு தரேன்னு சொல்லியிருப்பா.தயவு செஞ்சி அத அசெப்ட் பண்ணிக்கோ.அவளையாச்சும் இனி நிம்மதியா வாழவிடு.உனக்கு புண்ணியமா போகும்." அந்தரன் கோவம் அதுவரை ருத்ரன் கண்டறியாதது.

அவன் பதிலுக்கு கூட காத்திராமல் அந்தரன் அறையை விட்டு வெளியேறினான்.ருத்ரா செயலற்று நின்றிருந்தான்.தன் கூடவே நிழல் போல் வளர்ந்தவளை தான் எந்த காலத்திலும் உணர்ந்து கொள்ளவே இல்லையே. தன்னை விட அந்தரன் அறிந்து வைத்திருக்கிறானே அவனது உயிரானவளின் மனதை.வாழ்க்கையில் பெரும் தோல்வியை அடைந்து விட்டதாய்
உணர்ந்தான்.அதனால் இனி எந்த பயனும் இல்லையே.அவன் கைகள் தன்னிச்சையாக அந்த பச்சையை தடவிக் கொடுத்தது. அவன் விரலில் மின்னிய மோதிரம் ஏளனமாய் அவனைப் பார்ப்பது போல் தோன்றியது.

கனத்த இதயத்தோடு மயூரா வால்பாறை சென்று சேர்ந்தாள்.முன்னமே யோகி தாத்தா அவள் வருவதை கூறியிருந்ததால் அவர் தங்கை அமிர்தமும் அவருடைய கணவர் சிவராமனும் மயூராவை ஆவலோடு வரவேற்றனர்.

"வாம்மா மயிலு,அண்ணா சொன்ன அந்த வாலுப் பொண்ணு நீதானா?எவ்வளவு அழகா இருக்க நீ.
எவ்வளவு நீண்ட கூந்தல் உனக்கு"அமிர்தம் மயூராவைக் கட்டிக்கொண்டார்.பார்ப்பதற்கு யோகி தாத்தா சாயலில் இருந்தார்.கனிந்த முகம்,குளிர்ந்த சிரிப்பு,அவரின் பேச்சு சாயல் கூட பெரும்பாலும் யோகித்தாத்தாவையே ஒத்திருந்தது.

"நீ முதலில் முகம் கழுவிட்டு வாம்மா,இவ விட்டா பேசிக்கிட்டேயிருப்பா.அமிர்தா மயிலுக்கு அவள் அறையை காமி.கொழந்தை போய் ப்ரெஷ் ஆயிட்டு வரட்டும்.நீ அப்புறம் வந்து உன் கடலைய போடு"சிவராமன் கிண்டலாய் கூறினார்.
அமிர்தம் சிரித்தவாறே"அதுவும் சரிதான்.வாம்மா உன் அறையை காண்பிக்கிறேன்.மொத போய் முகம் கழுவிடு.உனக்கு பசிக்கும் இல்லையாநான் உனக்கு சுட சுட தோசை சுட்டு தர்ரேன்" மாடியில் அவளுக்கான அறையை காண்பித்தார்.

மயூரா எதுவும் பேசாமல் சிறு புன்னகையோடு அவரைத் தொடர்ந்தாள். "ஹீட்டர் இருக்கும்மா, போய் குளிச்சிட்டு வந்திடு. அதற்குள் உனக்கு சுட சுட தோசை இட்லி பாட்டி செஞ்சி வெச்சிடறேன் '' புன்னகையோடு சுறுசுறுப்பாய் தன்னை கடந்து சென்ற அமிர்தம் பாட்டியை மயூரா அதிசயமாக பார்த்தாள். இந்த வயதிலும் அவர் அவ்வளவு சுறுசுறுப்பாய் இயங்குவது அவளுக்கு வியப்பளித்தது.அவளுக்கு தந்த அறைக் கூட அவர்கள் மனதைப் போல் விசாலமானது தான். அறை துளி தூசியில்லாமல் பளபளத்தது. ஷவரில் குளித்தவள் கைக்கு கிடைத்த சால்வாரை மாட்டிக் கொண்டு கீழே இறங்கினாள். அதற்குள் அமிர்தம் சுட சுட தோசை வார்த்து இட்லி சுட்டு வைத்திருந்தார்.

சாப்பாட்டு மேஜை இருக்கையில் வந்து அமர்ந்தவளை இன்முகத்தோடு சிவராமன் வரவேற்றார். "வாம்மா மயிலு எங்கள் கூட சாப்பிட இனி ஒரு துணை கிடைச்சாச்சு. டெய்லி இந்த கிழவி மூஞ்ச பார்த்துட்டு சாப்பிடற கஷ்டம் இருக்கே சொல்லிமாளாது. பேசமா நானும் என் மச்சான் கூட இன்பவனம் போயிருக்கணும். நெறைய லேடீஸ் எனக்கு பிரண்ட்ஸ் கிடைச்சு இருப்பாங்க. ஜாலியா வேளா வேளைக்கு நல்ல சாப்பாடு கிடைச்சிருக்கும்'' முதியவர் போலியாய் வருந்த அமிர்தம் அவரை முறைத்தார்.

"இப்போ மட்டும் என்ன கேடு வந்தது. தாராளமாய் போய்க்கோங்க. நானும் இந்த சமையலறையை ஒழிச்சிட்டு பாரீன் டூர் போயிட்டு வாரேன்.தொல்லை இருக்காது இல்லையா? '' டொக்கென்று சட்டினி கரண்டியை தட்டில் தட்டினார்.
மயூராவிற்கு அவர்கள் சம்பாஷணை கேட்கவே சிரிப்பாக இருந்தது.நிகழ் கால வலி சிறிது ஓய்வு பெற்றிருக்க, இலகுவாய் சிரித்தாள்.சுட சுட தோசையும் மணக்க மணக்க கடலை சட்டினியும் , நான்கு தோசைகளை வயிறு விழுங்கிய பின்னே மயூராவிற்கு பசி உறைத்தது

"இது என்ன பொண்ணே முடியை இப்படி கொண்டையா முடிச்சு வெச்சிருக்க. அழகான நீள முடி.. சீவி சிங்காரிச்சு போஷா வெச்சுக்க வேணாமா மயிலே'' பாட்டி அவள் முடியை வருடினார்."சாப்பிட்டு வாம்மா, நான் உனக்கு தலை வாரி விடறேன் ''.
இவள் சாப்பிட்டு வந்ததும் கையோடு கொண்டு வந்திருந்த மூலிகை எண்ணெய்யை அவள் நீளக் கூந்தலில் தடவி அழகாய் தலை வாரி பின்னலிட்டார். "இப்போ மயில்மோகினி மாதிரி இருக்க பாரு''

"இதெல்லாம் எனக்கு ஆர்வம் இல்லை பாட்டி.சீவி சிங்காரிக்க நான் விரும்பியதே இல்லை. மதனிகா தான் இதெல்லாம் செஞ்சுக்குவா.எனக்கு வெறும் கொண்டையே போதும் பாட்டி '' வார்த்தைகள் சுரத்தே இல்லாமல் வெளி வந்தது.
"அப்படி இல்ல கண்ணு, சீவி சிங்காரிச்சுக்கறது பெண்ணுக்கே உள்ள குணம் இல்லையா? மனசும் உடம்பும் அழகாய் வெச்சுக்கறது நமக்காக மட்டும் தான். ஒரு தன்னம்பிக்கையை நமக்குள்ள உண்டாக்கி விடறது இது போன்ற விஷயங்கள் தான் கண்ணே. எனக்கு பிள்ளைகளே பிறக்கல.பெண் பிள்ளை பிறந்தா சீராட்டி பாராட்டனும் ஆசை.அது இப்போ உன் மூலமாய் நிறைவேத்திக்கிறேன்டா. தயவு செய்து மாட்டேன்னு சொல்லிடாத. உங்க விஷயம் எங்களுக்கு தெரியும்மா.நீயா உன் காயம் ஆறி போற வரைக்கும் உன் சொந்த தாத்தா பாட்டியா எங்களை பாவிச்சிக்கோ. யோகி அண்ணா அடுத்த வாரம் வந்து உன்னை பார்ப்பார்.சரியா '' பரிவாய் அவர் விரல்கள் மயூராவின் தலையை வருடியது.

"பயணம் செஞ்ச களைப்பு இருக்கும். போய் படுத்துக்கோம்மா. உனக்கு எப்போ எழ தோணுதோ அப்போ கீழே வா. நீ பசித்தாங்க மாட்டியாம்.உன் யோகி தாத்தா உனக்கு வேளைக்கு உணவு கொடுக்க சொல்லியிருக்காரு''
யோகி தாத்தாவின் அன்பை நினைத்து மயூராவின் கண்கள் கலங்கியது. தன்னறைக்கு சென்றவள் களைப்பு மிகுதியில் உறங்கி விட்டாள். தலையில் தடவியிருந்த மூலிகை எண்ணெய் நிம்மதியாக அவளை உறங்க வைத்தது.
மறக்காமல் செல்லை ஆப் பண்ணி வைத்திருந்தாள். திரும்ப கண் விழித்த பொழுது மதியமாகியிருந்தது. அறையை சூழ்ந்த அமைதி அவள் உள்ளத்தையும் ஆக்கிரமிப்பு செய்திருந்தது. நேற்று காலை வரை நெஞ்சில் சுமந்திருந்த கனவுகள் தவிடு பொடியாகி விட்டதை மெல்ல மெல்ல உணர ஆரம்பித்தாள் .

எத்தனை கனவுகளை விழிகளில் தேக்கி வைத்திருந்தாள். மாமா மாமா வென்று ருத்ரனை கட்டிக் கொண்டு திரிய ஆசைப்பட்டாளே. நெற்றியில் அவன் தாழம்பூ குங்குமத்தை வைக்க , கழுத்தினில் பொன் தாலி சூடிக் கொள்ள, விரல்களில் மெட்டி இராகம் பாட, பெண்மை முழுமையாக உணரத் தவமிருந்தவளை எட்டி உதைத்து விட்டானே. மனம் மவுனமாய் அழுதது.அப்பா அம்மா, அத்தை மாமா, சித்தி சித்தப்பாவின் முகம் நினைவில் வந்து சென்றது.தன் நிழல் போல் தொடரும் அன்பு தங்கை முகம் தோன்றி மறைந்தது. ஒரே நாளில் ஒட்டு மொத்த உறவுகளையும் என்னிடமிருந்து பறித்து விட்டாயே கிராதகா, ருத்ரனை நினைக்க நினைக்க கண்கள் சிவந்து கலங்கின.


அமிர்தம் வந்து அழைக்கும் வரை அப்படியே உறைந்து அமர்ந்திருந்தாள். அவர் குரல் கேட்டு தன்னிலை உணர்ந்தவள் விரைந்து சென்று முகம் கழுவிக் கொண்டு கீழே இறங்கினாள்.
தொடரும்
🌹
 

Author: KaNi
Article Title: மையலுடைத்தாய் மழை மேகமே-16
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN