மண்ணில் தோன்றிய வைரம் 3

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்றுதான் ஆரா கல்லூரி விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கப்படுகின்றது. ஹய்யா விடுமுறை முடிந்து விட்டது என்று ஒரு கட்சியினரும், ஐயோ முடிந்து விட்டது என்று ஒரு கட்சியினரும், முடிந்தால் என்ன முடியாவிட்டால் என்ன என்று வீ டோன்ட் கேர் என்று முற்றிலும் வேறுப்பட்ட எண்ணமுடையோர் என பலதரப்பட்டோரை வரவேற்றுக்கொண்டிருந்தது அந்த கல்லூரி கட்டிடம். கல்லூரி என்றாலே எல்லோருக்கும் மூளையில் பளீச்சிடும் சொல் ராகிங்.

என்னாதான் பல கடுமையான சட்ட திட்டங்களை அமுல் படுத்தினாலும் ராகிங் என்ற பெயரில் சில வானரங்கள் கட்சி அமைத்து செயல்படுவது இன்றுவரை நிறுத்தப்படாமுடியாத ஒன்று. ஆரா கல்லூரியும் அதற்கு விதி விலக்கல்லவே. தாம் சீனியர்ஸ் என்று புதிய மாணவர்களுக்கு காட்டுவதற்காக வாயிலில் இருந்து கல்லூரி கட்டிடம் செல்லும் நடை புதையில் தளா ஐந்து ராகிங் கூட்டணி கூடாரமிட்டு இருந்தது. புதிய மாணவர்களை அழைத்து அவர்களை ராகிங் என்ற பெயரில் வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். பலர் அதனை விளையாட்டாக எடுத்துக்கொண்ட போதிலும் சிலர் கோபப்பட்டு,அழுது சண்டையிட்டு குதூகலத்தை ரணகளப்படுத்தினர்.

அப்போது தன் தோழி அபிநிஷாவுடன் அக்கல்லூரியின் முதலாமாண்டு மாணவியாக காலடி எடுத்து வைத்தாள் சாரு.

"சாரு இங்க ராகிங் இருக்கும்னு அண்ணா சொன்னாங்க. உன்னோட வாய் துடுக்கை இங்க காட்டி விடாதே. நமக்கு சீனியர்ஸ்ஸோட ஹெல்ப் வேணும்.சோ ஏதும் கலாட்டா பண்ணா பேசாம வந்துரு தாயே. ராக்கேஷ் அண்ணா ராகிங்கில் மாட்டுனா தேஜஸ்வின் அண்ணாவோட சிஸ்டர் னு சொல்ல சொன்னாரு. சோ நீயும் அதையே சொல்லிரு. அதை விட்டுட்டு அவங்க கூட சண்டைக்கு போன உன்னை அங்கயே விட்டுட்டு நான் ஓடிவிடுவேன் சொல்லிட்டேன்"என்ற நிஷாவிடம் "அதுயாருடி தேஜஸ்வின்?? இந்த காலேஜ் தாதா வா?? தாதா வுக்கு இப்படி ஒரு அழகான பெயரா?? எங்கயோ இடிக்கிதே" என்று ஆராய்ச்சியில் இறங்கிய தன் தோழியை எண்ணி தலையில் அடித்துக்கொண்ட நிஷா "ஏன்டி உன் புத்தி இப்படி கிறுக்குத்தனமா யோசிக்குது?? ராகிங்கில் இருந்து தப்பிக்க காலேஜ் தாதா பெயர் மட்டும் தான் சொல்லனுமா?? ஒரு சீனியர் பெயரை சொல்லக்கூடாதா?? இதுக்கு தான் கண்டதை பார்க்காதனு சொல்றேன். என் பேச்சை எப்போ கணக்கில எடுத்திருக்க??" என்று புலம்பிய தன் தோழியிடம்

"இதுக்கு தான் நானும் சொன்னேன் டிவி சீரியல் பார்க்காதனு. எங்க கேட்ட??.இப்போ பாரு எப்படி புலம்பிட்டு வர்றனு. இதான் பெரியவங்க சொன்னா கேட்கனும்னு சொல்றது" என்று நிஷாவை வம்பிழுத்தவாறு சென்ற வேளையில் "தங்கைகளா இங்க கொஞ்சம் வந்துட்டு போங்க" என்ற குரல் அவர்களது நடையை தடை செய்தது.குரல் வந்த திசையை நோக்கிய நிஷா மற்றும் சாருவை வரவேற்றது ராகிங் கூட்டணி.

"என்னமா அங்கயே நிற்கிறீர்கள்.... சீனியர்ஸ் கூப்பிடுகின்றோம் தானே இங்க கொஞ்சம் வந்துட்டு போங்க"என்று சாரு மற்றும் நிஷாவை அழைத்தது அந்த கும்பல்.

"சாரு சொன்னது நியாபகம் இருக்குல. ஏதும் செய்து வம்பில் மாட்டி விட்டுறாத. ஓகே வா.."

"ஐயோ போதும் டி வா." என்றவாறு தன் தோழியுடன் சென்றாள் சாரு.
" என்னாமா சீனியஸிற்கு குட்மானிங் சொல்லாம போறீங்களே?? இது தப்பாச்சே..என்னடா தப்பு தானே??" என்று தன் ராகிங் அணியிடம் வினவிய அக்கூட்ட தலைவனை வழிமொழியும் விதமாக அக்கும்பல் "ஆமா ஆமா "என்று ஆமாம் போட சட்டென சாரு " இப்போ உனக்கு திருப்தியா நிஷா?? எத்தனை தரம் சொன்னேன் சீனியஸ்சிற்கு ஒரு குட் மானிங் சொல்லிட்டு போகலாம்னு. நீ தான் யாரோ தேஜஸ்வின் அண்ணாவ பார்க்கனும் ஆட்டுகுட்டிய பார்க்கனும்னு இழுத்துட்டு போன.. இப்போ பாரு நம்ம சீனியர்ஸிற்கு நாம அவங்களை மதிக்காம நடக்குறோம்னு தோணுது... என் பேச்சை என்னைக்கு தான் கேட்டுருக்க??" என்று தன் தோழியை வைவதாய் சாரு நாடகமொன்றை அரங்கேற்ற அந்த சீனியர் "அம்மாடி நிஷா உனக்கு சீனியர் தேஜஸ்வின் அண்ணாவா??" நிஷா பதிலளிக்கும் முன் சாரு

"ஆமா அண்ணா காலேஜ் வந்தோன அவரை வந்து பார்க்க சொன்னாருனு சொல்லி தான் இவள் என்னை நீங்க கூப்பிட்டும் நிற்காம இழுத்துகிட்டு போன.."

"ஏன்மா இதை முதலிலேயே சொல்லி இருக்கலாமே... நீங்க ரெண்டு பேரும் கிளம்பி முதலில் போய் அண்ணாவ பாருங்க " என்று அவர்களை வழியனுப்பி வைத்தான் அக்கூட்டத்தின் தலைவன்.

அங்கிருந்து சற்று தூரம் நகர்ந்த பின்னும் ஏதும் பேசாமல் வந்த நிஷாவை பார்த்து
"ஏய் நிஷா என்னடி ஏதும் பேசாம வர்ற"

"உன்னோட நடிப்புத்திறனுக்கு என்ன அவார்ட் குடுக்கலாம்னு யோசிச்சிட்டு வர்றேன்."

"ஹாஹ.. என்ன டார்லிங் இதுக்கே இப்படி ஷாக் ஆகிட்டா எப்படி?? இன்னும் நீ பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கு.." என்று இல்லாத காலரை தூக்கி விட்ட சாருவை பார்த்து

"என்னை அங்கு நல்லா பஞ்சர் ஆக்கிட்டு இங்கே இல்லாத காலரை தூக்கி விட்டு கெத்து காட்டுறியா??

"என்னடி பண்ண நீ ஏதோ திருவிழாவில் தொலைந்த பிள்ளை மாதிரி திருதிருனு முழிச்சிட்டு இருந்த. அதான் நானே களத்திலே இறங்க வேண்டியதா போய்விட்டது. விடு டார்லிங். இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில ரொம்ப சகஜம்.." என்றவாறு தன்னுடன் நடந்த சாருவிடம் "ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் இந்ந வாய்துடுக்கு உன்னை வச்சி வகையா செய்தா இல்லையானு பாரு.." என்ற நிஷாவை வகுப்பினுள் இழுத்து சென்றாள் சாரு...
பல கலாட்டாக்கள், சேட்டைகள், எக்ஸாம்ஸ், கல்ச்சரல்ஸ் என்று கல்லூரி வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் தன் தோழியுடனும் புதிதாய் கிடைத்த நட்புகளுடனும் அணுவணுவாய் அனுபவித்தாள் சாரு.
இவ்வாறு வாழ்க்கை சென்று கொண்டிருக்க சாரு அஸ்வினை பற்றி அறியும் நாளும் வந்தது.

"ஏன்டி நிஷா உன்கிட்ட ரொம்ப நாட்களாய் ஒன்று கேட்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்"

"இப்பவும் அப்படியே நினைத்துக்கொண்டே இரு ஆனா கேட்காத" என்று மொக்கையாய் பதிலளித்த நிஷாவிடம்

"ஐயோ என் பங்கு காமடி பண்ணிட்டா. சிரிப்பு ஓவர் பிளோவில் வருகிறது. நான் அந்த பக்கம் போய் சிரிச்சிட்டு வரவா??" என்ற சாருவிடம்

"அம்மா தாயே உன்கிட்ட வாய் குடுத்தது தப்பு தான். இப்ப சொல்லு என்ன கேட்கனும்னு நினைத்தாய்??"

"அந்த பயம் இருக்கட்டும். சரி யாரு அந்த தேஜஸ்வின்?? ராகிங் அன்று அவர் பெயரை கேட்டதும் அந்த பயலுங்க அப்படி பம்முனாய்ங்க. அப்போ நான் சொன்ன மாதிரி அவர் காலேஜ் தாதா வா??"என்று நண்பியின் தலையில் நறுக்கென்று கொட்டினாள் நிஷா.

"ஏய் லூசு ஏன்டி இப்படி கொட்டுன?? இப்போ பாரு தலைக்கு மேலே வெங்காயம் வரப்போகுது. இன்று முழுவதும் நான் இப்படியே சுற்ற வேண்டியது தான்" என்று தன் தலையை தடவியவாறு கூறிய சாருவை நிஷா "என்னது வெங்காயமா??"என்று வினவ

"ஆமா அதான் ஆங்கிலத்தில் ஆனியன்னு சொல்லுவாங்களே??" என்று விளக்கம் கொடுத்த சாருவின் பேச்சில் குழம்பிய நிஷா

"அடியேய் புரியிற மாதிரி பேசு"

"ஓஹோ அப்போ உனக்கு வெங்காயம் மேட்டர் தெரியாதா??"

"சாரு சும்மா கடுப்பேற்றாம என்ன மேட்டர்னு சொல்லு"

"கொட்டுனா மண்டைக்கு மேல வெங்காயம் வரும்னு என் தலைவர் சொல்லியிருக்காரு."

"என்னது தலைவர் சொன்னாறா?? என்னடி குழப்புற?? யாருடி உன்னோட தலைவர்??" என்று அழுது விடும் தோரணையில் கேட்ட நிஷாவிடம்

"வேற யாரு நம்ம தலை சின்சன் தான்" என்று சொன்னது தான் தாமதம் நிஷா சாருவை தன் கையால் மொத்தி எடுத்துவிட்டாள்.

"அடி ஏன்டி மறுபடியும் அடிக்கிற வலிக்குது டி" என்ற சாருவை அடிப்பதை நிறுத்தி விட்டு வாயினால் வசை பாட தொடங்கினாள்.

"ஏன்டி நீ எல்லாம் திருந்தவே மாட்டியா?? சின்னப்பிள்ளைகள் பார்க்குறத எல்லாம் பார்த்திட்டு வந்து இங்க என் உயிரை வாங்குறியா?? அதுல தலைவராம்.மண்ணாங்கட்டி"

"ஒரு கட்டியும் இல்லை. இப்போ சொல்லு.எதற்கு என்னை கொட்டுன??"

"ஹா.... தேஜஸ்வின் அண்ணாவ தாதா னு சொன்னதற்கு தான்"

"நான் சொன்னதுல என்னடி தப்பு இருக்கு?? வந்த நாளில் இருந்து பார்க்கிறேன். அவர் பெயரை சொன்னா எல்லாரும் பம்முறாங்க. அப்போ அவரு தாதா இல்லாம வேற யாரு??" என்ற சாருவை தன்னால் முடிந்த மட்டும் முறைத்தாள் நிஷா.

"ஏய் ஏன்டி என்னை முறைக்கிற?? நான் சொல்லுற பாய்ண்ட் சரிதானே"

" நீ எல்லாம் எப்படி ஸ்டேட் பஸ்ட் வாங்குனனு எனக்கு டவுட்டா இருக்கு.. "

"அதான் வாங்கிட்டேன் இல்ல... பிறகு என்ன டவுட்டு..சரி நீ எதுக்கு முறைச்ச?? அதுக்கு பதிலை சொல்லு"

"சாரு தேஜஸ்வின் அண்ணா தாதா இல்லை டி. அவர் தான் ஸ்டுடண்ட் கவுன்சிலிங் பிரசிடன்ட்... அப்புறம் நம்ம காலேஜில் ஆல் அரவுன்டர் னா அது அஸ்வின் அண்ணா மட்டும் தான். ஒகெஸ்ரா டீம் லீடரும் அவர்தான். அண்ணா ட்ரம்ஸ் வாசிக்க தொடங்கினாரால் அந்த மேடையையே தெறிக்க விட்டுருவாரு. அப்புறம் படிப்பிலும் யாராலேயும் அண்ணாவ மிஞ்ச முடியவில்லை. அதோடு அண்ணா சூப்பரா டான்ஸ் ஆடுவாங்க. அதோடு நம்ம காலேஜ் புட்போல் டீம் கேப்டனும் அண்ணா தான். இப்படி எல்லாத்திலும் டாப்ரா இருப்பவரை ஜூனியர்ஸ் மதித்து நடப்பதில் என்னடி தப்பு?? அண்ணா பெயரை சொன்னா ஏன் எல்லாரும் பம்முறாங்கனு கேட்டல?? அண்ணா என்னதான் எல்லாருடனும் ப்ரண்ட்லியா இருந்தாலும் பெண்கள் விஷயத்தில் ரொம்ப ஸ்ட்ரிக்ட். ராகிங்னு சொல்லி யாராவது கேள்ஸ்கிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பண்ணாங்கனா அவங்களுக்கு அண்ணாகிட்ட அடி கண்பார்ம். அதுக்காக காலேஜ் உள்ள சண்டை போட மாட்டாரு. ஆனா அவங்களுக்கு தரமான கவனிப்பு கிடைக்கும். அதுனால தான் பசங்ககிட்ட பொண்ணுங்க அண்ணா பெயரை சொல்லிட்டு தப்பிச்சிருவாங்க. அது மட்டும் இல்லை ஏதும் காலேஜில் ஆர்கனைஸ் பண்ணனும்னா அண்ணா சப்போர்ட் வேணும். அதுனால தான் அண்ணா பெயரை கேட்டாலே எல்லோரும் பம்முறாங்க. இப்போ புரியுதா அஸ்வின் அண்ணா யாருனு??"

"ஓ... இவ்வளவு மேட்டர் இருக்கா?? எனக்கு அந்த ரௌடி பேபியை பார்க்கனுமே??"

"ஏய் இவ்வளவு சொல்லுறேன் மறுபடியும் ரௌடினா சொல்லுற??" என்றவாறு தன் தோழியை துரத்த தொடங்கினாள் நிஷா.

வழமை போல் அன்றும் கல்லூரி மைதானத்தில் வழமையாக அமரும் இடத்தில் அமர்ந்து மைதானத்தில் விளையாடுபவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் சாரு. அப்போது யாரோ பேசும் குரல் கேட்டது. எப்பொழுதும் மற்றவர்கள் பேசுவதை அவசியமற்று ஆர்வமாக காதில் வாங்கிக்கொள்ளாத சாருவிற்கு ஏனோ அந்த உரையாடலை கேட்க தோன்றிட தவறு என்று மூளை கூறினாலும் அதை கண்டுகொள்ளாது அவ்வுரையாடலை இன்னும் ஆர்வத்தோடு கேட்கத்தொடங்கினாள்.
அவளுக்கு மறுபுறம் உடலைக்காட்டியவாறு மர நிழலின் கீழ் இருந்த அந்த நீண்ட பெஞ்சினில் அமர்ந்து தன் குடும்பத்தாருடன் வாட்சப் வீடியோ கால் பேசிக்கொண்டிருந்தான் அஸ்வின்.

"என்ன கவி மா சித்தி உன் மேல ஒரு பட்டியல் குற்றச்சாட்டு முன் வைத்திருக்காங்க... இதுக்கு உன் தரப்பு பிரதிவாதம் என்ன??"
என்று இப்புறம் அஸ்வின் கேட்க அந்த புறம் கூறியதற்கு பதில் அளிக்கும் முகமாக

"ஆகா மொத்தம் நீ ஒன்னும் பண்ணவில்லை அப்படி தானே?? அப்போ எதுக்கு சித்தி கவி மா சேட்டை பண்ணுறதா சொல்லுறாங்க?? சரி அதை விடு. ஒழுங்கா படிக்கிறீங்களா கவி மா?? இல்லாட்டி பக்கத்து வீட்டு குள்ள கத்தரிக்காயோட எப்பவும் விளையாட்டு தானா??"

"......"

"குட் கேள். மாது என்ன பண்றான்?? அவனை பிடிக்கவே முடியலை..விளையாட போய்விட்டானா??"

"...."

"சரி ஒழுங்கா இருக்கனும். சேட்டை பண்ணக்கூடாது சரியா?? அப்போ தான் அண்ணா வரும்போது நீங்க கேட்க பிளே ஸ்டேஷனை கொண்டு வருவேன்.. ஓகே வா??

"..."

"சரி போனை பாட்டிகிட்ட குடுங்க"

"பாட்டி எப்படி இருக்கீங்க?? தாத்தா எப்படி இருக்காங்க ?? "

"......"

"நான் நல்லா இருக்கேன் பாட்டி. நீங்க கேட்ட மூட்டுவலி மருந்து வாங்கிட்டேன். வீட்டுக்கு வரும்போது எடுத்துட்டு வருகிறேன்"

"..."

"இல்லை பாட்டி இப்போ வரமுடியாது. நீங்களே கவியை துணைக்கு கூட்டிட்டு போய் பார்த்துட்டு வந்துடுங்க. நான் கந்தசாமி அண்ணா கிட்ட போனில் பேசினேன். அவரும் ரொம்ப கவலைப்பட்டாரு. நம்மால் அவங்களுக்கு ஆறுதல் சொல்ல தான் முடியும். சோ என் சார்பா நீங்க அதை செய்வீங்களாம் சரியா??"

"....."

"என்னோட சமத்து பாட்டி. அப்புறம் தாத்தா இருந்தா அவரிடம் போனை குடுங்களே"

"ஹேலோ யங் மேன் எப்படி இருக்கீங்க?? உங்க பெஞ்சாதி உங்களை கண்கலங்காம பார்த்துக்கிறாங்களா??"

"..."

"ஹாஹா சூப்பர். இதை காதல கேட்கவே இவ்வளவு கிளுகிளுப்பா இருக்கே. இதை பார்க்க குடுத்து வைக்கவில்லையே எனக்கு??"

"...."

"கட்டாயம் வருவேன் தாத்தா நீங்க இவ்வளவு ஆசையா கூப்பிடும் போது அந்த காட்சியை லைவா பார்க்கிற சான்சா விடுவேனா??"

".."

" நான் நல்லா இருக்கேன் தாத்தா. சரி தாத்தா நான் இப்போ ஹாஸ்டலுக்கு போகனும் நாளைக்கு பேசுறேன். எல்லோரிடமும் சொல்லிருங்க" என்றவாறு போனை அணைத்து விட்டு அவ்விடம் விட்டு அகன்றான் அஸ்வின்.

அவனது உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த சாருவிற்கு தானும் அக்குடும்பத்தின் ஒரு அங்கத்தவராக இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்ற ஏக்கம் உருவானது. என்னதான் பணம் கொட்டி கிடந்தாலும் தன்னை நலம் விசாரிக்க இவ்வுலகில் யாரும் இல்லையே என்று சாரு எப்போதும் ஏங்குவதுண்டு. அன்னை இருந்தவரை பாசத்தினால் சிறைப்பிடிக்கப்பட்டு சீராட்டப்பட்டவள் அன்னை இறந்த பின் அந்த அன்புச்சிறை அதன் பூட்டை திறந்து அவளை வெளியே தள்ளியது. தந்தை என்ற உறவு இருந்த போதிலும் சாருவை பற்றி நினைத்துப்பார்க்க அவருக்கு நேரம் இருக்கவில்லை.

தன் நண்பர்கள் தம் குடும்பத்தாருடன் உரையாடும் போது தனக்கு இப்படி விசாரிக்க யாரும் இல்லையே என்று எண்ணும் சாருவின் மனம் இன்று அஸ்வினின் உரையாடலை கேட்ட போது தோன்றிய எண்ணம் அவளை திடுக்கிட வைத்தது. என்னாதான் அது வழமையான ஏக்கம் என்று மூளை சமாளித்தாலும் மனமோ நீ அந்த குடும்பத்தில் ஒருவராக இணைய ஆசைப்படுகிறாயா?? என்று கேள்வி கேட்பதை நிறுத்தவில்லை. தன் மனம் போகும் பாதை அறிந்த சாரு அதிர்ந்தாலும் தற்போது மனதின் கேள்விக்கான பதில் தன்னிடம் இல்லை என்று தனக்கு தானே கூறிக்கொண்டு அவ்விடம் விட்டு நகர்ந்தாள். என்ன தான் மனிதன் தன் மனதை சரியாக உணராவிட்டாலும் அதை உணர்த்துவதற்கென்றே சில சம்பவங்கள் விதியின் விளையாட்டால் உருவாக்கப்படுகின்றன.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN