ஆதித்யா சக்கரவர்த்தி-24

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 24



நந்தனுக்கு மலரிடம் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை...
அடுத்தடுத்த நாட்கள் எல்லாம் மலரை ஆதித்யா தான் பள்ளிக்கு கொண்டு விட்டான்.
மாலையிலும் அவனே வீட்டிற்கும் அழைத்து சென்றுவிடுவான். இடையில் முழுவதும் பள்ளியில்தான் மலர் இருப்பாள். ஆனால் நந்தன் பள்ளிக்குள் செல்ல வேண்டுமென்றால், ஒன்று ஏதாவது ஒரு குழந்தையின் பெற்றோராக இருக்க வேண்டும்... இல்லையென்றால் பள்ளியில் வேலை செய்பவராக இருக்க வேண்டும்... காரணமில்லாமல் யாரும் உள்ளே போக முடியாது....
எப்படி மலரிடம் பேசுவது? என்று தெரியாமல் காலையும் மாலையும் பள்ளிக்கு வெளியே நின்று மலரிடம் பேசும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான் நந்தன்.

அன்று பள்ளியில்...
மதிய இடைவெளியில் வானதிக்கு பிடிக்கும் என்று வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த பால் பாயசத்தை கொடுத்தாள் மலர்.

"ஹைய்யா எனக்கு இது ரொம்ப பிடிக்கும்" என்று
அதை மகிழ்ச்சியுடன் வாங்கி சாப்பிட்ட... வானதியை பரிவுடன் பார்த்துக்கொண்டிருந்தாள் மலர்.

குழந்தைகள்...எப்பொழுதுமே அம்மா அப்பா அரவணைப்பில் இருக்கவேண்டும் என்று தான் ஆசைப்படும். பெற்றோர்கள் இருவருமே... குழந்தைகளின் இரண்டு கண்களை போன்றவர்கள். இருவரின் அரவணைப்பு இருந்தால்தான் வாழ்க்கை பாதையில் தெளிவுடன் நெளிவு சுளிவுகள் அறிந்து அவர்களால் பயணிக்க முடியும்.
வளர்ந்த பிறகு எப்படியோ... குழந்தைப் பருவத்தில் பெற்றோர்களின் அரவணைப்பும் கண்டிப்பும்... கண்டிப்பாக குழந்தைகளுக்கு வேண்டும்.
அன்று வானதி அவளது பெற்றோர்கள் பிரிந்ததற்கு நீதான் காரணம் என்று சொன்னதும் உண்மையிலேயே மனதிற்குள் உடைந்து தான் போனாள் மலர்.
பின் வானதி சிறு குழந்தை அவள் என்ன செய்வாள்? அண்ணி பேசியதை வைத்து தவறாக புரிந்து கொண்டாள்... என்று நினைத்த மலர் எப்படியாவது தன் அண்ணன் அண்ணியை சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைத்தாள்.
ஆனால் அதற்குள் என்னென்னவோ ஆகிவிட்டது.மகேஷ் மருத்துவமனையில் இருக்கும்பொழுது கூட குற்ற உணர்வினால் மலர் தவித்து தான் போனாள். ஏற்கனவே வேலை கிடைக்கவில்லை... என்று சோர்ந்து வீட்டிற்கு வந்தவனிடம் தான் வானதியை பற்றி மேலும் மேலும் பேசி அவனை வருத்தியது தான்... மிகப் பெரிய தவறு. தன்னால்தான் தன் அண்ணனுக்கு இப்படி ஆகிவிட்டது... என்று துடித்துக் கொண்டிருந்தவளை அன்று சுவாதியின் ஆங்கார பேச்சு அசைத்துப் பார்த்தது. உண்மையில் தான் அதிர்ஷ்டம் இல்லாதவளா? தன்னால்தான் அனைவருக்கும் பிரச்சனை வருகிறதா? என்று உள்ளுக்குள் புழுங்கிய மலரை யோசிக்க கூட விடாமல் ஆதித்யா உடன் சேர்ந்து வாழ கெஞ்சினாள் சுவாதி.....
முதலில் மறுத்தவள் பின், யோசிக்கும் போதுதான்
தானும் ஆதித்யாவும் சேர்ந்து வாழ்ந்தால் தான் தன் அண்ணன் அண்ணியின் வாழ்வு சீராகும் என்று அதற்கும் ஒப்புக் கொண்டாள் மலர்.

நதியின் பாதையில் பயணிக்கும் கூழாங்கல்லை போல்... தானும் தன் வாழ்க்கை போகும் போக்கில் வாழ்ந்து விட்டு போகலாம் என்று மனதை கல்லாக்கிக் கொண்டுதான் மீண்டும் ஆதித்யாவின் வீட்டில் காலடி எடுத்து வைத்தாள் மலர்.
ஆனால் மலர் ஆதித்யாவின் வீட்டிற்கு சென்ற பிறகுதான் இதற்கு முன்பு பார்த்த ஆதித்யாவிற்கும் இப்பொழுது இருக்கும் ஆதித்யாவிற்கும் உள்ள வித்தியாசங்கள் நன்றாகவே புலப்பட்டது...

இப்பொழுது எல்லாம் அடிக்கடி அவளை சீண்டுவதும் ஓரக் கண்ணால் பார்ப்பதும்... வாடிக்கையாகி போனது. இரவிலும் அவளை தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டு தான் தூங்குவான்.
முன்பு அவன் அருகில் தூக்கம் வராமல் அவதிப்பட்ட மலருக்கும் இப்பொழுது அவன் நெஞ்சில் படுத்தால் தான் தூக்கம் வருகிறது.
அவன் ஏதாவது சொல்லி மலர் மறுத்தால் பழைய ஆதித்யாவாக மாறி மிரட்டுவான்.... அதில் பயந்து போவாள் மலர்.
அவன் மனதில் என்னதான் நினைக்கிறான்?என்று யோசித்து யோசித்து மலருக்கு தலைவலி தான் மிச்சம்.

மலர் கொஞ்சம் அல்ல... நிறையவே அமைதி என்பதால் வாய் திறந்தும் கேட்காமல் அமைதியாக இருந்தாள்.
மலர் தன் பெற்றோர்களிடமும் தோழிகளிடமும் பேசும் பேச்சு கூட இன்னும் ஆதித்யாவிடம் வரவில்லை. அவனைப் பார்த்தாலே பயமும் பதற்றமும் தயக்கமும் தான் வருகிறது....
ஆனால் உண்மையில் இப்பொழுது சில நாட்களாக அவள் பார்க்கும் இந்த ஆதித்யாவை மலருக்கு பிடிக்க ஆரம்பித்திருந்தது.
ஆனது அடாவடித்தனம் கூட மலரை ரசிக்க வைத்தது....
ஆனால் அவளுக்கு இன்னும் அதிகமாக ஆதித்யாவை புரிந்துகொள்ளவேண்டும் என்றுதான் தோன்றியது. அதற்குள் தேவையில்லாமல் பகல் கனவு கண்டுவிட்டு... அது கலைந்து போய்விட்டதே... என்று வருத்தப்பட கூடாது என்று நினைத்தாள் மலர். இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் அறிந்து, அவர்கள் உறவின் மீது நம்பிக்கை வந்தால் மட்டுமே எதிர்கால வாழ்க்கையை பற்றி சிந்திக்கவே முடியும்...

மலர் இவ்வளவையும்... யோசிப்பதற்குள்,
பாயாசத்தை காலி செய்துவிட்டு கனவுலகத்தில் இருந்த தன் அத்தையை, "மலர் அத்தை" என்று கூவி அழைத்தாள் வானதி.

திடுக்கிட்டு தனது யோசனை கலைந்து திரும்பிய மலர்,
"என்ன வானதி?" என்று கேட்க....
"என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் உன்கிட்ட பேசணும்னு சொன்னாங்க அத்தை..." என்று கூறிய வானதி... அவர்கள் அமர்ந்திருந்த மரத்தடியின் பின்னால் கை காட்டினாள்.

இதற்கு முன் மலரின் மீது கோபத்தில் இருந்ததால்... மலர் தனது அத்தை என்று யாரிடமும் சொல்லாமல் இருந்த வானதிக்கு, இப்பொழுது மலர் இங்கு டீச்சராக வேலை செய்வது கூட பெருமையாகத் தான் இருந்தது. வகுப்பு தோழிகளிடம்,
"என்னோட அத்தை இங்கதான் டீச்சரா இருக்காங்க..." என்று மலரை கைகாட்டும் பொழுது அவளது முகத்தில் அத்தனை பெருமை. தன் வகுப்பிலேயே கெத்து காட்டி சுற்றிக் கொண்டிருந்தாள் சுட்டி குழந்தை வானதி ....

வானதி கைகாட்டிய திசையில் நான்கு வாண்டுகள் அவளையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருந்தது.
அதுவும் அவர்கள் நின்றுகொண்டிருந்த ஸ்டைலை பார்த்து சிரிப்பு வந்துவிட்டது மலருக்கு... ஏதோ பவர் ரேஞ்சர்ஸ் பொம்மைகள் போஸ் கொடுப்பது போல் இருந்தது .....

சிரிப்பை அடக்கி விட்டு... சைகை காட்டி அவர்களை தங்கள் புறம் வருமாறு அழைத்தாள் மலர். அவள் அழைத்ததும் ஓடி வந்த வாண்டுகள் வானதியின் அருகில் அமர்ந்து கொண்டது.
"அத்தை இவன் சுஜித்... இவ பூஜா... இவ மரியா... இவன் சம்சுல்.. இவங்க தான் என்னோட குளோஸ் பிரண்ட்ஸ்" என்று பெரிய மனுஷியாக அனைவரையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் வானதி.

அவர்களைப் பார்த்து புன்னகைத்த மலர்,"ஹாய் குட்டீஸ்" என்றாள்.
அதுவரை டீச்சர் என்ற லேசாக பயத்துடன் இருந்த நால்வரின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது.

"ஹாய் டீச்சர் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க...." என்று எடுத்த உடனே பேச ஆரம்பித்தான் சம்சுல்...

"தேங்க்யூ குட்டிப் பையா... உண்மையா நீங்கதான் ரொம்ப க்யூட்டா இருக்கீங்க" என்று அவனின் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள் மலர்

"அப்போ நானு க்யூட்டா இல்லையா டீச்சர்?" என்று போட்டிக்கு வந்தாள் மரியா...

"அச்சோ நீங்களும் கியூட்டா தான் இருக்கீங்க குட்டி..."
மலர் தன்னை கியூட் என்றதும்,
"தேங்க்யூ டீச்சர்" குதூகலித்தாள் மரியா.
"டீச்சர் நீங்க வானதிக்கு நல்லா ஸ்டோரிஸ் சொல்லுவீங்களா?" என்று அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த சுஜித் கேட்க....
"ஹம்ம் சூப்பரா சொல்வேனே..." என்று மலர் சொன்னதும்...
"எங்களுக்கும் ஆப்டர்நூன் பிரேக் டைம்ல கதை சொல்லுவீங்களா? ப்ளீஸ் டீச்சர்..." என்று தனது சிறிய கண்களை சுருக்கி ஆசையாக கேட்டான் சிறுவன்.

தனது ஆள்காட்டி விரலை தாடையில் வைத்து யோசித்தவள்....
"டெய்லி சொல்ல முடியாது... வீக்லி 2 டேஸ் சொல்றேன்..." என்று மலர் கூறியதும் குஷியாகி போன சுஜித் "ஹேய் ஜாலி" என்று கை தட்டினான்.
மற்றவர்களும் மகிழ்ச்சியாக கைதட்டினார்கள்...வானத்திக்கும் ரொம்ப சந்தோஷம் தான்... இப்பொழுதெல்லாம் அவளுக்கு யாரும் கதை சொல்வதில்லை... அவளது மலர் அத்தையின் கதைகளை மிகவும் மிஸ் செய்து கொண்டிருந்தாள்.

அவர்களில் பூஜா என்ற அந்த சிறு பெண் மட்டும் எதுவும் பேசாமல் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க... "குட்டி நீங்க ரொம்ப அமைதியா? வந்ததிலிருந்து பேசவே இல்ல" என்று குழந்தையின் கன்னத்தை தொட்டு கேட்டாள் மலர்
அதற்கும் புன்னகைத்த பூஜாவை ஆச்சரியமாக பார்த்தாள் மலர்...
"டீச்சர் அவ திக்கித் திக்கிப் பேசுவா... அதுவும் நல்லா பழகுன மட்டும்தான் யார்கிட்டயும் பேசுவா... இல்லன்னா யாராவது கிண்டல் பண்ணுவாங்கல" என்றான் சம்சுல்....
ஓஓ என்று அவளை பரிவுடன் பார்த்த மலர், "அப்போ என்ன பிடிக்கலையா குட்டிக்கு? என்கிட்ட பேச மாட்டியா?" என்று அவளிடம் கேட்க...
உடனே மறுப்பாக தலையாட்டிய பூஜா...
"உங்...உங்கள...எனக்..கு...ரொ...ரொம்ப...பிடிச்...பிடிச்சி...ருக்கு டீச்...டீச்சர்" என்றாள்.
அவள் கஷ்டப்பட்டு தடுமாறி ஒவ்வொரு வார்த்தையும் பேசுவதை உணர்ந்த மலர்... ஆதரவாக அவளை அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்தாள்.
"குட்டீஸ் நாளைக்கு எல்லாரும் இங்க வாங்க பேசலாம்... இப்ப கொஞ்ச நேரம் எல்லாரும் கிரவுண்ட் ல போய் விளையாடுங்க" என்று மலர் கனிவாக சொல்ல...
வானதியோ,
"நீங்க எல்லாரும் போங்க... நான் ஹேண்ட் வாஷ் பண்ணிட்டு வாரேன்" என்றதும் நால்வரும் மற்ற மாணவர்கள் இருக்கும் விளையாட்டு மைதானத்திற்கு சென்றனர் .
வானதிக்கு கையையும் வாயையும் கழுவி துடைத்து விட்ட மலர்...
பால் பாயாசம் கொண்டு வந்திருந்த டிபன் பாக்சை கழுவி கொண்டே...
"இன்னும் கொஞ்ச நாள்ல சம்மர் ஹாலிடேஸ் வரப்போகுதே... எங்க போகப் போறீங்க இந்த தடவ? அம்மா அப்பா ஏதாவது சொன்னாங்களா?" என்று வானதியிடம் கேட்டாள்.

"இல்ல அத்தை... முன்ன மாதிரி அம்மா அப்பா பேசிக்கவே மாட்டுக்காங்க ...ஏன்னு? நான் கேட்டா அம்மா முறைக்கிறாங்க... அப்பா அமைதியாகிடுறாங்க.. இந்த தடவை கூட்டிட்டு போக மாட்டாங்க போல எங்கேயும்..." என்று சோகமாக சொன்னாள் வானதி.

இன்னும் தன் அண்ணனுக்கும் அண்ணிக்கும் பிரச்சனை சரியாகவில்லை போலயே...
அண்ணன்தான் ஏதாவது கோபத்தில் இருக்கவேண்டும்... அண்ணி தன் அண்ணனுக்காக ஹாஸ்பிடலில் அழுத அழுகை என்ன? துடித்த துடிப்பு என்ன...!! அவர் சண்டை போட வாய்ப்பு இல்லையே....
கணவன் மனைவி சண்டைக்கு இடையில் தான் செல்வது சரியில்லை என்றாலும், அண்ணன் தனக்காக தான் சுவாதி அண்ணியின் மீது கோபமாக இருக்கிறான் என்பதை உணர்ந்த மலர்... மகேஷிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்தாள்.

"வானதி குட்டி நீ சமத்தா இருந்தா... அப்பா அம்மா உன்ன கண்டிப்பா சம்மர் வெக்கேஷன்க்கு வெளியே கூட்டிட்டு போவாங்க... சரியா... இப்ப போய் விளையாடு.." என்று அவளை சமாதானப்படுத்தி அனுப்பினாள் மலர்.

மாலையில் எப்பொழுதும்போல் அவளை அழைக்க வந்த ஆதித்தியா மலரின் வாடிய முகத்தை பார்த்து...
"என்ன ஆச்சு வேலை கஷ்டமா இருக்கா... ஏன் டல்லா இருக்க?" என்று கேட்க...
இல்லை என்பது போல் தலையசைத்தாள் மலர்

"பின்ன எதுக்கு ஒரு மாதிரி இருக்க....?" என்று ஆதித்யாவும் விடாமல் கேட்க....

"நான் என்னோட அண்ணன பார்க்க போகணும்" என்றாள் மலர் மெல்லிய குரலில்....
அவளைக் கூர்ந்து கவனித்த ஆதித்யா.

"இன்னைக்கே போகனுமா..." என்று கேட்க...
அதற்கும் ஆம் என்பது போல் தலை அசைத்தாள் மலர்.

சரி... என்றவன் நேரே மகேஷின் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.

உண்மையில் ஆதித்யாவிற்கு அன்று நாள் முழுவதும் வேலை விடயமாக சரியான அலைச்சல் தான்... அவன் செய்யும் எக்ஸ்போர்ட் பிஸினஸில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தான் எம்பி சுடலைமணி. ஏற்றுமதி செய்ய வேண்டிய பொருட்களை எல்லாம் அவனது ஆட்களின் மூலம் கடத்தி வைத்திருந்தான். அது விஷயமாக அலைந்து திரிந்து பிரச்சினையை முடித்தவன்... எப்பொழுதடா வீட்டிற்கு செல்வோம் என்ற மனநிலையில்தான் இருந்தான். ஆனால் மலரின் வாடிய முகம் அவனின் களைப்பை பின்னே தள்ளியது....

வீட்டிற்குள் இருந்த மகேஷ் காலிங் பெல் சத்தம் கேட்டதும் கதவை வந்து திறந்தான்.
வெளியே தங்கையும் தங்கை கணவனும் வந்திருப்பதை பார்த்ததும் மகிழ்ச்சியாகிய
மகேஷ்... "வாங்க வாங்க" என்று உற்சாகமாக வரவேற்றான்.

உள்ளே வந்த இருவரையும் அமரச் சொன்ன மகேஷ்.... கிச்சனுக்கு சென்று பிரிட்ஜில் இருந்த ஜூசை எடுத்து கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி கொடுத்தான்.

ஜூசை பருகிக்கொண்டே மலர் தன் அண்ணனிடம், "அண்ணி எங்கே?" என்று கேட்க...
முகத்தில் எதையும் காட்டாமல் சிரித்தவாறே....
"சுவாதியும் வானதியும் பக்கத்துல ஷாப்பிங் மால் வர போயிருக்காங்க..." என்றான் மகேஷ்.

"மகேஷ் இப்போ எங்க ஜாப்ல ஜாயின் பண்ணி இருக்க?" என்று ஆதித்யா கேட்க...
"நீ ரெகமெண்ட் பண்ண ஜேகே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி ல தான்... சேலரி கூட அதிகம்...தேங்க்யூ சோ மச்..." என்று அவனுக்கு நன்றி தெரிவித்தான் மகேஷ்.

"ஓஹோ அண்ணா சுவாதி அண்ணி கூட சேர்ந்ததும் வேலை வாங்கி கொடுத்துட்டார் போல...." என்று நினைத்த மலர்...
ஹாலின் ஓரத்தில் இருந்த ஃபிஷ் டேங்கை பார்த்துவிட்டு,
"அண்ணா என்னோட ஃபிஷ் டேங்க்ல கோல்டிய காணல.என்ன ஆச்சு அதுக்கு?" என்று பதட்டத்துடன் கேட்டாள்.

"அது ரெண்டு நாளைக்கு முன்னாடி செத்துப் போச்சு மா...." என்று மகேஷ் சொன்னவுடன்,
"பாவம் அண்ணா கோல்டி... நல்லாதானே இருந்துச்சு.... எப்படி இப்படி ஆச்சு" என்று கேட்ட மலரின் கண்கள் தன்னாலே கலங்கிவிட்டது.
ஆதித்யா மலரை முறைத்தான்.

"மீன் செத்தா கருவாடு... அதுக்கு எதுக்கு இவ்வளவு பாடு... இத்தனை நாள்ல என்னோட மனச புரியவைக்க எத்தனை தடவை முயற்சி பண்ணியிருக்கேன்.... அதையெல்லாம் கண்டுக்கிட்டாளா.... பக்கத்துல இருக்க மனுஷனோட ஃபீலிங்ஸ புரிஞ்சுக்கல... செத்துப்போன மீனுக்கு இவ்வளவு ஃபீலிங்ஸு" கடுப்பாகி அவளைப் பார்த்துக்கொண்டே ஜூசை பருகினான்.

தங்கையின் வருத்தத்தை பார்த்து,
"கோல்டிய நல்ல முறையா நம்ம வீட்டுக்குப் பின்னாடி அடக்கம் பண்ணிட்டேன் மலர் மா... கவலைப்படாத அதே மாதிரி இன்னொரு கோல்ட் பிஷ் வாங்கிடலாம்..." என்று கலங்கிய தங்கையை தேற்றினான் மகேஷ்.

"சரி அண்ணா...." என்று கண்களை துடைத்துக் கொண்ட மலர்,
"டேப்லெட் எல்லாம் கரெக்ட் டைமுக்கு எடுக்குறீங்களா?" என்று அவன் உடல்நிலை பற்றி விசாரிக்க ஆரம்பிக்க.... மகேஷும் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.

ஆதித்யா எதுவும் பேசாமல் அமர்ந்திருக்க... அவன் முகத்தில் மிகுந்த களைப்பு தெரிந்தது. அண்ணனிடம் பேசிக்கொண்டே எதேச்சையாக அவனைத் திரும்பிப் பார்த்த மலருக்கு அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

"ரொம்ப டயர்டா இருக்காரு போலயே... என்னாலதான் வீட்டுக்குப் போகாம இங்க வந்துட்டோம்... பாவம் சீக்கிரம் அண்ணன் கிட்ட பேசிட்டு போயிடணும்" என்று நினைத்தாள்.

ஜூஸ் குடித்து முடித்த ஆதித்யாவிற்கு போன் கால் வர, "எக்ஸ்க்யூஸ் மீ" என்று சொல்லிவிட்டு நகர்ந்து சென்றான் அவன்....
ஆதித்யா நகர்ந்து சென்றதும்தான் மலரால் வெளிப்படையாக பேச முடிந்தது...

"அண்ணா உனக்கு அண்ணிக்கும் திரும்பவும் பிரச்சனையா?" என்று கேட்ட தங்கையை... இவளுக்கு எப்படித் தெரியும்? என்று ஆச்சரியமாக பார்த்தான் அவன்...
ஆனால் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்...
"அப்படிலாம் இல்ல மலர்" என்று மகேஷ் சொல்லாமல் மறைக்க பார்க்க...
"நடிக்காதீங்க அண்ணா... சின்ன குழந்தைக்கு கூட நீங்க ரெண்டு பேரும் ஏதோ சண்டைல இருக்கீங்கன்னு தெரிஞ்சு இருக்கு..." என்று இன்று பள்ளியில் வானதி கூறியதை சொல்ல....
மகேஷ் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தான்...

"ண்ணா நீங்க என்ன நினைக்கிறீங்கனு எனக்கு புரியல.... என்ன பொறுத்த வரை சுவாதி அண்ணி நல்லவங்க தான் எப்பவுமே.... ஆனா உங்க விஷயத்துல மட்டும் பொசசிவ்னஸ் அவங்களுக்கு அதிகம்... உங்கள பங்குபோட அவங்க தயாரா இல்ல... அதுதான் அவங்க வீக்னஸ். அது தான் அவங்கள தப்பு செய்ய வைக்குது.... அவங்க என்ன தப்பு பண்ணியிருந்தாலும் அவங்க கூட பேசி சால்வ் பண்ண பாருங்க.... இப்போ சுவாதி அண்ணிக்கு தேவை
உங்க அன்பு மட்டும்தான்... நீங்க காட்ற ஒதுக்கம் அவங்கள வேற ஏதாவது தப்பு பண்ண வைக்கும் அண்ணா... நான் எப்போ உங்க வாழ்க்கையில வந்தேனோ... அப்ப இருந்தே உங்க ரெண்டு பேருக்கும் பிரச்சனை ஆரம்பம் ஆகிட்டுன்னு அவங்க மனசுல ஆழமா பதிஞ்சு இருக்கு... நீங்க இப்படி ஒதுங்கிப் போனா என் மேல அண்ணிக்கு இருக்குற வெறுப்பு இன்னும் அதிகமாகத்தான் செய்யும்...
கோபம் மனுஷனுக்கு என்னைக்கும் நிரந்தரம் இல்ல அண்ணா.... தயவுசெஞ்சு அண்ணி மேல கோபப்பட்டு அவங்கள ஒதுக்கி மட்டும் வைக்காதீங்க அண்ணா ப்ளீஸ்.... நீங்க ரெண்டு பேரும் இப்படி மனஸ்தாபத்துல இருந்தா.... என்னால நிம்மதியாக இருக்க முடியாது அண்ணா" என்று கெஞ்சி கேட்டாள் மலர்.

தங்கை சொல்வதும் சரிதானே... சுவாதிக்கு தன் மீது காதல் அதிகம் தான்... அதை கல்லூரி காலத்திலேயே பார்த்திருக்கிறான். யாராவது அவனிடம் கொஞ்சம் நெருங்கிப் பேசினாலே முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அலைவாள். அப்பொழுதெல்லாம் அவனுக்கு அவளுக்கு தன் மீது எவ்வளவு காதல் என்று பெருமையாக தான் இருக்கும். ஆனால் இப்பொழுதோ அவள் செய்த காரியத்தால் அவளை வெறுத்து ஒதுக்கி கஷ்டப்படுத்தி விட்டேனோ... நேரடியாக அவளிடம் கேட்டு சண்டை போட்டு புரிய வைத்திருக்க வேண்டுமோ?? என்று யோசிக்க ஆரம்பித்தான் மகேஷ்.
அண்ணன் யோசிக்கிறான் என்றால் நல்ல முடிவாக தான் எடுப்பான்.... என்று நினைத்த மலரும்....

"அண்ணா அவர் ஆஃபீஸ் விட்டு... என்ன அப்படியே பிக்கப் பண்ணி இங்க கூட்டிட்டு வந்து இருக்கார். அவருக்கு ரொம்ப டயர்டா இருக்கும். நாங்க இப்போ கிளம்புறோம் அண்ணா.... இன்னொரு நாள் வர்றோம். அண்ணி வந்தாங்கனா நாங்க விசாரிச்சதா சொல்லிடுங்க..." என்று மலர் கூறவும் சரியாக ஆதித்யாவும் போன் பேசி முடித்து விட்டு வந்தான்.
இருவரும் மகேஷிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினர்.

தங்கை கணவனுக்காக யோசித்து பேசியதை நினைத்தவனுக்கு... அவர்களுக்குள் எல்லாம் சரியாகிவிட்டது என்று மன நிம்மதி ஆகியது...
அண்ணனிடம் பேசிய பிறகுதான் மலரின் முகம் தெளிந்திருந்தது.

ஆதித்யா ஓரக்கண்ணால் அவளைப் பார்த்துக்கொண்டே... "எனக்கு ரொம்ப தலைவலியா இருக்கு மலர்" என்றான்.

"அச்சோ வீட்ல போய் காபி போட்டு தாரேன்.... எல்லாம் சரியாகிடும் கொஞ்சம் பொறுத்துக்கோங்க" என்று மலர் சொல்ல....

"அதெல்லாம் வேண்டாம் எனக்கு வீட்டுக்கு போனதும் ஹெட் மசாஜ் பண்ணி விடனும்... அப்பதான் தலைவலி சரியாப் போகும்" என்றான் ஆதித்யா.

"எனக்கு அதெல்லாம் பண்ண தெரியாதே..." என்று மலர் தயங்க...
"அதெல்லாம் நான் தெரிய வைக்கிறேன்... இன்னைக்கு நீதான் எனக்கு ஹெட் மசாஜ் பண்ணி விடுற..." என்று ஆதித்யா அழுத்தமாக சொன்னதும் மலர் எப்பொழுதும்போல் அமைதியானாள்.

வீட்டிற்கு வந்ததும் உடை மாற்றி விட்டு சோபாவில் வந்து அமர்ந்தான் ஆதித்யா.
மலரும் உடை மாற்றிவிட்டு கீழே சென்று அவனுக்கு காபி போட்டுக் கொண்டு வர... அதைக் குடித்தவன் "மசாஜ் பண்ணி விடு மலர்" என்று அவளிடம் கூறிவிட்டு அமர்ந்திருந்த சோபாவிலேயே தலை சாய்ந்து அமர்ந்தான்.
கைகள் நடுங்க அவன் தலையை லேசாக பிடித்து விட ஆரம்பித்தாள் மலர்...
அவளின் கைகள் செய்த ஜாலத்தினால் சிறிது நேரத்திலே தூங்கிவிட்டான் ஆதித்யா.
தூங்கும் பொழுது கூட முகத்தில் இறுக்கத்துடன் தூங்குபவனை பார்த்தவள்...
"தூங்கும் போது கூட முகத்துல கல்ல கட்டி வச்சுக்கிட்டு தான் தூங்குறார்...." மனதிற்குள் நினைத்துக் கொண்டு நகர்ந்தாள் மலர்.

மறுநாள் ஆதித்யா மலரிடம்... "இன்னைக்கு நீ வேற கார்ல ஸ்கூலுக்கு போய்க்கோ மலர்... இன்னைக்கு நான் ட்ராப் பண்ண முடியாது... எனக்கு நிறைய வேலை இருக்கு... இன்னைக்கு சீக்கிரம் கிளம்பணும்" என்றான்.

அவனிடம் சரி என்பது போல் தலையசைத்த மலரின் மனமோ,
"இன்னைக்கு அவன் டிராப் பண்ண மாட்டானா?" என்று உள்ளுக்குள் சிணுங்கியது.

தன் மனம் எண்ணியதை நினைத்துப் பார்த்தவளுக்கு,
"தானா இப்படி எல்லாம் நினைக்கிறோம்" என்று ஆச்சரியமாக இருந்தது. அவளையும் அறியாமலேயே இதழ்களில் புன்னகை மலர்ந்தது.

"அவளை கூட்டி சென்று விட முடியவில்லையே..." என்று கடுப்புடன்....கழுத்தில் டையை மாட்டிக்கொண்டிருந்த ஆதித்யா, அவளின் புன்னகையை கவனித்து விட்டு,
"நான் ட்ராப் பண்ண முடியாதுன்னு சொன்னதுக்கு இவ்வளவு சந்தோஷமா?" என்று கோபமான குரலில் கேட்டான்.

சிந்தனை கலைந்து பயத்துடன், இல்லை என்று வேகமாக தலையசைத்தாள் மலர்.
"அப்ப எதுக்கு நீ சிரிச்ச?" என்று ஆதித்யா கேட்டதும்,
என்ன சொல்வது? என்றே தெரியாமல் உதட்டை கடித்துக் கொண்டு மௌனமாக நின்றாள் மலர்.

"ப்ச்ச் இந்த பழக்கத்தை முதல்ல விடு மலர்... நானும் அடிக்கடி பாத்துட்டு தான் இருக்கேன்... உன்னோட லிப்ஸ் ரொம்ப சாப்ட் ....அதை ஏன் இப்படி கடிக்கிற... இனி எப்படி கடிக்கக் கூடாது" என்று ஆதித்யா அவளை கடிந்து கொள்ள... அதற்கும் மலரிடம் சிறிய தலையசைப்பு தான் பதிலாக கிடைத்தது.

கடுப்பாகிய ஆதித்யா,
"வாயில என்னத்த வச்சி இருக்க? எங்கிட்ட பேச கூட காசு கேப்பியா நீ... அந்த அளவுக்கு கஷ்டமா இருக்கா என் கூட பேசறதுக்கு? சகிச்சி கிட்டு தான் என்கூட இருக்கியா?" என்று கத்தியவன் டிரஸ்ஸிங் டேபிள் மேல் இருந்த பெர்ஃப்யூம் பாட்டிலை கீழே போட்டு உடைத்துவிட்டு கோபமாக வெளியேறி விட்டான்.

அவனின் இந்த செயலில் கண்கள் கலங்க பயத்துடன் உறைந்து நின்று விட்டாள் மலர் விழி.

"எதுக்கு இவ்ளோ கோபம்? அவ்வளவு சீக்கிரம் என்னால சர்வ சாதாரணமா பழகிட முடியுமா? என்ன... பழக எனக்கு கொஞ்சம் டைம் வேண்டாமா??...ரொம்ப தான் கோவப்படுற பூச்சாண்டி" என்று கலங்கிய கண்களுடன் உள்ளுக்குள் புலம்பிக்கொண்டே ,
அந்த கண்ணாடி பெர்ஃப்யூம் பாட்டிலின் உடைந்த பாகங்களை கையில் எடுக்க ஆரம்பித்தாள் மலர்.
அவள் அப்படி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது, கண்ணாடி துண்டின் கூரிய பாகம் ஒன்று மலரின் இடது கையை லேசாக கிழித்து பதம் பார்த்து விட அதில் இருந்து ரத்தம் வழிந்தது....
ஸ்ஸ்ஸ்... என்று கைகளை உதறி கொண்ட மலர் தனது கர்ச்சீப்பை எடுத்து காயத்தின் மீது வைக்கும்போது.... தனது மொபைலை எடுக்க மீண்டும் அறைக்கு வந்த ஆதித்யா அதை பார்த்து விட்டான்.

"மலர் என்னாச்சும்மா?" என்று பதறியபடி அவள் அருகில் வந்து அவள் கையில் ஏற்பட்டிருந்த காயத்தை பார்த்தவன்....
"உன்னை யாரு இது கிளீன் பண்ண சொன்னா ?வீட்ல எத்தனை வேலைக்காரங்க இருக்காங்க... தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பண்றது.." என்று கடித்தபடி அவளை அழைத்துச் சென்று காயத்தை கழுவியவன்... அறையிலிருந்த முதலுதவி பெட்டியிலிருந்து பேண்டேஜை எடுத்து காயத்திற்கு போட்டுவிட்டான்.
மலர் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க....
"என்ன அப்படி பாக்குற?" என்று ஆதித்யா கேட்டதும் ...
மீண்டும் ஒன்றும் இல்லை என்பது போல் தலை அசைத்தாள்.
இம்முறையும் வாய் பேசாமல் தலையை மட்டும் அசைத்தவளை அவனால் முறைக்க மட்டுமே முடிந்தது....
அவனது முறைப்பைப் பார்த்த மலருக்கு தன்னையும் மீறி சிரிப்பு வந்துவிட்டது...

அவளது சிரிப்பை கண் இமைக்காமல் பார்த்த ஆதித்யா பின்... தலையை உலுக்கிக் கொண்டு, "எனக்கு லேட் ஆகிட்டு போயிட்டு வாரேன்... நீயும் பத்திரமா ஸ்கூலுக்கு போ" என்று கிளம்பிவிட்டான்...
அறையைவிட்டு வெளியே வந்தவனின் இதழ்களும் புன்னகையால் விரிந்திருந்தது.

முதல்முறையாக தன் முன்னால் இயல்பாக சிரித்து இருக்கிறாள் மலர்... கூடிய விரைவில் அவள் இதயத்தில் தனக்கு இடம் கிடைக்கும் தன்னை அவள் காதலிப்பாள்... என்று மகிழ்ச்சியாகவே அலுவலகத்திற்கு சென்றான்......
அன்று அவர்களுக்குள் நடக்கப்போகும் போரை அறியாமல்....!!!
தொடரும்....
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN