ஆதித்யா சக்கரவர்த்தி 12

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 12

அழுதுகொண்டிருந்த தங்கையை சமாதனப்படுத்தி கொண்டிருந்தான் ஆதித்யா. எதை வேண்டுமானாலும் தாங்கி கொள்பவனுக்கு தங்கையின் கண்ணீரை மட்டும் எப்பொழுதுமே தாங்கிக்கொள்ள முடியாது.
பாசமலர் சிவாஜி போல் என் கண்ணே... மணியே... என்று கொஞ்சா விட்டாலும் தங்கைகள் தான் ஆதித்யாவின் உயிர்.

மலர் அப்படி பேசி விட்டு சென்றதும், ஓடி வந்து அறையில் அழுது கொண்டிருந்தவள் தான்...
இன்னும் டேங்கை மூடும் வழியைக் காணோம்...

என்ன சமாதானம் சொன்னாலும் அழுதுகொண்டே இருப்பவளை என்ன தான் செய்வதென்று தெரியாமல்... ஆதித்யா அவள் அருகில் அமர்ந்து இருந்தான்.
அவனுக்கு மலரின் மீது கோபம் வந்தது. அவள் கடைசியாக சொன்ன வார்த்தைகளால்... தன் தங்கையின் மனது எவ்வளவு பாடுபடும்? என்று கூட யோசிக்காமல் சொல்லிவிட்டு சென்று விட்டாளே!! என்று வெறுப்பும் கூடவே வந்தது.

ஆனால் மலரின் நிலையிலிருந்து அவன் மனம் யோசிக்கவில்லை...தங்கையின் மீதிருந்த பாசம் அதை யோசிக்கவும் விடவில்லை. தங்கையை போல அவளும் ஒரு பெண் தான்... அவளுக்கும் ஆசைகள் உணர்வுகள் எல்லாம் இருக்கத்தான் செய்கிறது என்பதை ஆதித்யாவின் முரட்டு மனம் உணரவில்லை. தன் தங்கை என்று தன்னலத்திலேயே இருந்தது அவன் மனம்... இதில் எங்கிருந்து மலரின் மனம் புரிய?

ஆதித்யா மீண்டும் தங்கையிடம் சமாதானமாக,
"ஒன்னுமில்ல சௌமி மா ...மலர் சொன்னத மனசுல வச்சுக்காதே... உனக்கு இந்த அண்ணன் இருக்கேன். அவள ஒரு வழி பண்ணாம விட மாட்டேன் நீ கவலையே படாதே" என்று ஆறுதல் சொன்னான்.

அதை கேட்கும் நிலையிலா சௌமியா இருக்கிறாள்...
மூக்கை உறிஞ்சி கொண்டே,
"அண்ணா... எனக்குமட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது? மலர் என்ன இப்படி சொல்லிட்டாளே அண்ணா... என்னால இதை தாங்கிக்கவே முடியல ...ரொம்ப ரொம்ப ஹர்ட் ஆகிட்டேன்" என்று இதையே இத்தோடு பதினைந்தாவது முறையாக சொல்லி ஏங்கி அழும் தங்கையின் தலையை தடவி விட்டவனுக்கு மலரின் மீது மீண்டும் கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது.

சிறுவயதிலிருந்தே சௌமியா அடுத்தவரின் ஒரு சொல்லையும் பொறுக்க மாட்டாள். உடன் பயின்ற தோழிகளின் கேலி... கிண்டல்கள் எதையுமே அவளால் பொறுக்க முடியாது.

முக்கியமாக அவளது உருவத்தை குறை கூறி, கேலி செய்தால் அவ்வளவுதான்... அறையிலேயே அடைந்து கிடப்பாள். தாழ்வு மனப்பான்மை ரொம்பவும் அதிகம்.
அதற்கு வேறொரு காரணமும் இருந்தது. பழைய சம்பவங்களால் ஊரை மாற்றி வந்தாலும் அவளது தாழ்வுமனப்பான்மை குறையவே இல்லை. அதை யாரும் கவனிக்கும் நிலையிலும் இல்லை.

ஊர் மாறி வந்த பிறகு தொழிலில் முழு வீச்சோடு இறங்கியிருந்த ஆதித்யாவும் இதை கவனிக்கவில்லை. சுவாதிக்கு தெரிந்தாலும் அவளும் அவளை மாற்ற முயற்சி செய்யவில்லை. காலப்போக்கில் மாறி விடும் எல்லாம் என்று நினைத்தாள்.

சௌமியா சோர்ந்திருக்கும் சமயம் இரண்டு வார்த்தை ஆறுதலாக பேசுவதோடு சரி அவ்வளவு தான் தன் கடமை முடிந்தது என்றிருந்தாள் சுவாதி.

அந்த குடும்பத்தில் பெரியவர்கள் என்று பேச்சுக்கு கூட யாரும் இல்லை. இருந்த அனைவரையும் ஒதுக்கி வைத்திருந்தான் ஆதித்யா. அனைவரிடமும் அவ்வளவு வெறுப்பு அவனுக்கு ...
தன் குடும்பத்திற்கு எல்லாமே ஆதித்யா தான் பார்த்து பார்த்து செய்தான்.

தங்கைகளை இரு கண்களாக பாவித்து என்ன செய்ய? அவனும் இளைஞன் தானே!! பெரியவர்களுக்குறிய பக்குவமும் போதிய அனுபவ ஞானமும் அவனுக்கு இல்லை. அவனது ஒரே குறிக்கோள் பணம் சம்பாதிப்பது....

ஆம் பணம் சம்பாதிப்பது தான்... அப்பொழுதுதான் அவனால் சமூகத்தில் முக்கிய இடம் வகிக்க முடியும். கஷ்டத்தின் சுவடுகள் இல்லாமல் தங்கைகளை வளர்க்கமுடியும். தங்கைகள் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுக்க முடியும்.மரியாதை,கௌரவம், புகழ், செல்வச் செழிப்பு எல்லாம் கிடைக்கும். அதனால் அவனுக்கு பணத்தின் பின்னால் சென்றே காலம் போய்விட்டது. தங்கைகள் என்ன ஆசைப்பட்டாலும் வாங்கி கொடுப்பதைத் தவிர அவனுக்கும் அதற்குமேல் என்ன செய்ய ?என்று தெரியாது...
அதுதான் கடமை என்று நினைத்து தங்கைகள் என்ன சொன்னாலும் வாங்கி கொடுத்து விடுவான். மறுப்பேதும் சொல்ல மாட்டான். ஆனால் அது மட்டும் போதுமா?
தங்கைகளின் மனப்பான்மையை அவன் அறிந்திருக்கவில்லை. அப்படியே அறிந்திருந்தாலும் அதை மாற்ற அவனிடம் போதிய நல்ல மனப்பான்மை இல்லை.

சுவாதி மகேஷின் மீது காதல் கொண்டு கொஞ்சமேனும் கொஞ்சம் மாறி இருந்தாள் தான்... ஆனால் சௌமி ஆதித்யா இருவரும் மாறவில்லை.

அதிலும் சௌமியாவிற்கு தன்னம்பிக்கையும் கிடையாது உறுதியான மனப்பான்மையும் கிடையாது.... அதை ஆரம்பத்திலேயே யாராவது கவனித்து மாற்றியிருந்தால் இப்பொழுது இந்த மாதிரியான நிலையே உருவாகி இருக்காது.

விதியை மாற்ற யாரால் முடியும்?

கடந்த காலத்தின் துயரத்தின் காரணமாக ஆதித்யா மற்றவர்களுக்கு கொடூரன் ஆகவும், தங்கைகளுக்கு பாசமான தமையன் ஆகவும்... இருக்கிறான் என்றால், தங்கைகள் இருவரும் சுயநலம், உரிமை பேய் பிசாசு பிடித்தவர்களாக இருந்தனர்.

வருடங்கள் பல கடந்து ஆதித்யா தொழிலில் திடமாக நின்ற சமயம் தான் சௌமியாவிற்கு பணக்காரர்களுக்கு இயல்பாக வரும் தற்பெருமையும்... கர்வமும்... வந்திருந்தது.

அதனால் அவளது தாழ்வுமனப்பான்மை தட்டி அடியில் கிடந்தது. ஆனால் அவளது நிச்சயதார்த்தம் அடுத்தடுத்து உடைந்து அவளிடம் இருந்த கர்வம் தற்பெருமை எல்லாம் பறந்து இருந்த சமயம் தான் மலர் வந்து சேர்ந்தாள். முதலில் யாரிடமும் கிடைக்காத நட்பிற்காக பழகியவள்... அடுத்து நந்தாவை பார்த்ததும் பொறாமைப்பட, எல்லாம் தலைகீழ் ஆனது.

தன் தோழிகள் முன்னால் நந்தாவை கணவனாக நிறுத்தி... 'பார் என் கணவனை' என்று பெருமைப்பட நினைத்தாலே தவிர,
அவளுக்கு நந்தா மீது காதல் கண்றாவி என்றெல்லாம் இல்லை. ஒரு விலையுயர்ந்த பொருளின் மீது ஆசைப்படும் மனப்பான்மைதான் அவளுக்கு.... ஆனால் அவளின் இந்த மனப்பான்மைதான் மலரில் உள்ளத்தை கொத்தி கூறு கூறாக போட்டது.

சௌமியாவிற்கு மனதின் ஒரு ஓரத்தில் மலருக்கு துரோகம் செய்கிறோம் என்ற குற்ற உணர்வு இல்லாமல் இல்லை.
ஆனால் அதையும் போக்கும் விதமாக இன்று மலர் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதில் இறங்க... மலருக்கு மட்டும் நந்தன் கிடைக்கவே கூடாது என்று வெறியே வந்தது அவளுக்கு...

மலருக்கு தான் யார் என்று நிரூபித்து தண்டனை கொடுக்க வேண்டும்... என்று அதிலேயே உறுதியாக நின்றாள் சௌமியா.

"அண்ணா... அண்ணா எனக்கு நந்தா கிடைக்கல நாளும் பரவால்ல ...அந்த மலருக்கு கிடைக்க கூடாது... அப்படி மட்டும் நடந்துச்சுன்னு நான் உயிரோடவே இருக்க மாட்டேன் இது நம்ம அப்பா மேல சத்தியம்" என்றாள் சௌமியா ஆதித்யாவின் தோளில் சாய்ந்து விசும்பிக் கொண்டே ...

அவ்வளவு நேரம் சௌமியாவின்
தலையை ஆதரவுடன் தடவி விட்டுக் கொண்டிருந்த ஆதித்யாவின் கை அப்படியே நின்றது. நிமிர்ந்து தங்கையின் முகத்தை பார்த்தான் அதில் அத்தனை தீவிரம்...

"ப்ச்ச் நீ சொல்றபடி எல்லாமே நடக்கும் சௌமி... ஆனா அண்ணா உனக்கு வேற மாப்பிள்ளை பாக்கறேன்... உனக்கு அவன் வேண்டாம் டா" என்றான் ஆதித்யா அமைதியாக...
ஆனால் அவன் குரலில் அத்தனை தீர்க்கம் இருந்தது.

சௌமியா முகம் சுருங்கி யோசித்தாள். மனம் நந்தன் கிடைக்கவில்லை என்றாலும் மலருக்கு கிடைக்க கூடாது என்று நினைத்ததுதான்...
ஆனால் என்னவோ நந்தாவை விடவும் மனம் வரவில்லை.

"அண்ணா மலர் நந்தன பிரிச்சா மட்டும் போதும்... நீ வேற எதுவும் செய்ய வேணாம்... மீதியை நான் பார்த்துகிறேன். நந்தா எனக்குத்தான்" என்று அவள் பிடியிலேயே நின்றாள் சௌமியா.
ஆதித்யாவின் முகம் இன்னும் இறுகி கோபத்தை காட்டியது.
ஆனால் அதை தங்கையிடம் காட்ட முடியவில்லை.

கோபத்தை உள்ளுக்குள் அடக்கி கொண்டு,
சரி என்றவாறு தலையசைத்துவிட்டு வெளியேறினான் ஆதித்யா.
செல்வதற்குமுன் மலரின் அறைக்கதவை பார்க்க தவறவில்லை.

அதன் பிறகு வந்த நாட்களில் சௌமியா ஆதித்யா இருவரையும் மலர் கண்டுகொள்ளவே இல்லை. வானதியை தன்னுடனே வைத்துக் கொண்டாள். தன் அண்ணி வானதியை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை தன்னிடம் தானே விட்டார் என்று...

நாட்களை நெட்டித் தள்ளி அண்ணன் அண்ணி வரும் நாளை எதிர்நோக்கி காத்திருக்க ஆரம்பித்தாள் மலர்.
இடையில் நந்தன் உடன் மொபைலில் பேச முயற்சிக்கவும் தவறவில்லை.

என்னதான் வெளியில் மலர் தைரியமாக இருந்தாலும் உள்ளுக்குள் உடைந்து தான் இருந்தாள். அவளது கடைசி நம்பிக்கை அவளது அண்ணன் தான்...

ஆதித்யாவும் வேலை விடயமாக வெளியூர் என்று அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்ததால் அவனும் எதையும் கவனிக்காமல் இருந்து கொண்டான்.

அன்று மலர் அப்படி பேசிய பிறகு சௌமி மலரின் முகத்தை பார்க்கக்கூட இல்லை. வானதியை கூட பார்க்காமல் இருந்து கொண்டாள். ஆனால் மலரின் மீது உள்ளுக்குள்ளேயே வஞ்சம் வளர்த்துக் கொண்டிருந்தாள்.
சரியாக ஒரு வாரம் கழித்து பிஸ்னஸ் ட்ரிப் முடிந்த வந்து இறங்கினர் சுவாதியும் மகேஷும்....

வாயிலில் கார் சத்தம் கேட்டதும்
எல்லாரும் வெளியே வந்தனர்.
தாயைப் பார்த்ததும் 'அம்மா' என்று சிரித்துக்கொண்டே... ஓடிவந்து அணைத்துக்கொண்டாள் வானதி.
சௌமியா தனது அக்காவை பார்த்து புன்முறுவல் புரிந்தாள்.
ஆதித்யாவும் பொதுவாக இருவரையும் வாங்க என்று வரவேற்றான்.

மகேஷ் மலரை பார்க்க, அவளோ அவ்வளவு நாள் தனக்குள்ளேயே மூடி வைத்திருந்த துக்கம், சோகம், இயலாமை, வெறுப்பு, கோபம் எல்லாவற்றையும் தன் அண்ணனை பார்த்ததும் அடக்கமுடியாமல் அழுதுகொண்டே மகேஷை அணைத்துக்கொண்டாள்.

மகேஷ் தங்கையின் அழுகையை கண்டு பதறி... "அழாதடா மலர் அண்ணன் வந்துட்டேன்ல்ல" என்று கூறி ஆதரவாக தலையைத் தடவி விட்டான்.

சுவாதி பல்லை கடித்துக்கொண்டு,
"மலர் நாங்க ரெண்டு பேருமே திரும்பி வந்துவிட்டோம்... செல்லம் கவலையே படாத... இங்க பாரு வானதி கூட அழுகாம சமத்தா இருக்குறா.. நீ இன்னும் குழந்தையா அழுதுட்டு இருக்காத" என்று மகேஷிடம் இருந்து அவளை பிரித்து தன்னுடன் அணைத்துக் கொண்டாள்.

மலர் பெருகி வந்த அழுகையை அணை போட்டு தடுக்க முடியாமல்....சுவாதியை அணைத்துக்கொண்டு மீண்டும் அழுக ஆரம்பித்தாள். அவளின் கண்ணீர் சுவாதியின் உடையை நனைத்தது.

அப்படி ஒரு அழுகை. சுவாதிக்கு ஏற்கனவே சௌமியா நடந்ததை ஓரளவு மேலோட்டமாக போன் செய்து சொல்லிவிட்டதால் அவள் மலரின் வாயை அடைக்கத்தான் மகேஷிடம் இருந்து பிரித்தாள்.
ஆனால் மலரின் அழுகை சுவாதியை சற்று யோசிக்க வைத்தது.

என்னதான் சுயநலம் பிடித்தவளாக இருந்தாலும் மகேஷின் தங்கை என்பதால் அவளுக்கு கொஞ்சமேனும் கொஞ்சம் மலரை பார்க்க பாவமாக இருந்தது.

"போதும் மலர் சின்ன குழந்தை மாதிரி அழுகாத... இங்க பாரு என்னோட ட்ரெஸ்ஸே நனஞ்சு போச்சு.. எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள போய் பேசிக்கலாம்" என்று அவளது தோள்பட்டையை அழுத்திவிட்டு நகர்த்தினாள் சுவாதி.
மலர் முயன்று அழுகையை கட்டுப்படுத்தினாள். ஆனால் கேவல் நிற்கவில்லை.

ஆதித்யாவின் கண்கள் மலரை தான் ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கும் மேலாக ஆதித்யா அவளைப் பார்க்கவில்லை. பார்க்க முயற்சிக்கவில்லை என்றும் சொல்லலாம். ஏற்கனவே மெல்லிய தேகம் கொண்டவள் மேலும் மெலிந்து இருந்தாள்.கண்ணைச் சுற்றிக் கருவளையம், நெற்றியில் காயம் ஆறி தழும்பும் மட்டும் மீதம் இருந்தது அதை முடியை வைத்து மறைத்திருந்தாள். மொத்தத்தில் அவளைப் பார்க்கவே பரிதாபமாகத்தான் இருந்தது.
அண்ணனின் பார்வையை கவனித்த சுவாதியின் முகம் சுருங்கி யோசனையில் மூழ்கியது.

மகேஷ் தன் தங்கையின் கண்ணீரை தன்னை விட்டு பிரிந்ததால் ஏற்பட்ட வேதனை என்று தவறாக கணித்தான்.

என்னதான் இருந்தாலும் பெற்றவர்களைப் போல் முகம் அறிந்து செயல்படுபவர்கள் யார்?
அனைவரும் வீட்டிற்குள் வந்து அமர, ஆதித்யா மகேஷ் இருவரும் தங்களது தொழில்முறை பேச்சினை தொடர்ந்தனர்.

ரொம்பவும் அழுததால்... மலர் முகம் கழுவிட்டு வர, அவளது அறைக்கு சென்றாள். கிடைத்த இடைவெளியில் சுவாதி தங்கையிடம் முதலில் கேட்டது.

ஆதித்யாவிற்கு மலரை பிடித்துள்ளதா? என்றுதான்...

சௌமியா அதுவரை இதைப் பற்றி யோசிக்கவே இல்லை...
"தெரியல அக்கா அண்ணன் எனக்காகத்தான்... மலர் கிட்ட நெருங்கி நந்தாவ விலகிவிட்டார் என்று நினைக்கிறேன்" என்று யோசனையாக தான் சொன்னாள்.

சுவாதிக்கு தான் தன் அண்ணன் ஆதித்யாவிற்கு மலரின் மீது ஈடுபாடு வந்துள்ளதை அவனது பார்வை விம் பார் போட்டு விலகிவிட்டதே...!!!
ஆனால் அது என்னவோ அவளுக்கு அந்த அளவிற்கு உவப்பாக இல்லை தான்....

ஆதித்யா எப்பொழுதுமே தங்கைகளை தவிர மற்ற பெண்களை அவன் நெருங்க விட்டதில்லை. அவனது பணத்திற்காக ஒரு கூட்டமே அவன் மேல் வந்து விழுந்தாலும்... அசராமல் ஆதித்யா நகர்ந்து விடுவான்.

சுவாதிக்கு கூட ஆதித்யா திருமணம் செய்ய மாட்டான் என்றுதான் மனதில் பதிந்திருந்தது. வருங்காலத்தில் அவனது சொத்துக்கள் எல்லாம் தனக்கும் தங்கைக்கும் தான் வரும் என்று நம்பினாள். இப்பொழுது திடீரென்று என்ன வந்தது அவனுக்கு?

தமக்கையின் சிந்தனையில் குறுக்கே புகுந்தாள் சௌமியா..
"அக்கா நீ எனக்கு சப்போர்ட் பண்ண போறியா?.. இல்லனா... உன்னோட நாத்தனார் மலருக்கு சப்போர்ட் பண்ண போறியா?" என்று மூக்கு விடைக்க கேட்ட தங்கையை முறைத்தாள் சுவாதி.

"என்னோட தங்கச்சிக்கு அப்புறம்தான் யாரும்..." என்ற சுவாதியை பாசத்துடன் அணைத்துக் கொண்டாள் சௌமியா.

ஆனால் சுவாதியின் மனதிற்குள் ஒரு உறுத்தல். ஏற்கனவே ஒருத்திக்கு நிச்சயம் ஆனவன் அதுவும் அண்ணன் முறைதானே... அதையே சௌமியாவிடம் சொன்னாள்.
அதற்கு அவளோ,

"நீ ஒரு விஷயத்தை நல்லா புரிஞ்சுக்கணும் அக்கா... மலருக்கு நிச்சயமாகுறதுக்கு முன்னாடியே நந்தா என்னோட ஃப்ரெண்ட்... இது வெறும் நிச்சயம் மட்டும்தான் ...யூ டோன்ட் வொரி என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் மலர் நந்தாவுக்கு அண்ணன் ஆகிடுவார். சோ ப்ராப்ளம் இல்லையே எனக்கு..."
என்று நந்தனை திருமணம் செய்வதில் சௌமியா உறுதியாக இருந்தாள்.

ஆனால் பின்விளைவுகள் பலமாக இருக்கும் என்று அவள் அறியவில்லை. எப்பொழுதுமே பொறாமை உணர்வு நல்லதில்லை. அதுவும் அளவுக்கு மீறிய பொறாமை உணர்வும்... தன் அழகின் மேல் அவளுக்கு இருந்த தாழ்வு உணர்ச்சியும் ஏற்கனவே பிடிவாத குணம் உள்ளவளை ஆணித்தரமாக அதிலேயே நிற்க வைத்தது.
நல்லதை சொல்லிக்கொடுக்க தாய் தகப்பன் இல்லாமல் வளர்ந்த அண்ணன் தங்கைகளுக்கு உறவுகளின் மகிமையும் உணர்வுகளும் புரியவில்லை.
புரியும் காலம் வரும்பொழுது அவர்கள் புயலில் சிக்கிய படகுகளாக ஓய்ந்து இருப்பார்கள். சுயநலம் பிடித்தவர்கள் எப்பொழுதுமே தன்னலம் மட்டுமே கருதுவார்கள். இங்கும் அதுதான் நடந்து கொண்டிருந்தது.

"அக்கா நீ கேட்டதுக்கு அப்புறம் தான் எனக்கு ஒரு யோசனை வருது.. பேசாம மலர நம்ம அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவோமா? அதுக்கப்புறம் அவளால நந்தன கல்யாணம் பண்ணிக்க முடியாது" என்றாள் சௌமியா திடுதிப்பென்று..
சுவாதிக்கு ஒரு நிமிடம் மூச்சே அடைத்துப் போனது. இவள் என்ன புதுசு புதுசா குண்டு போடுறா என்று அவளை முறைத்தாள் சுவாதி.

என்னதான் மலர்மேல் கோபமும் எரிச்சலும் இருந்தாலும்... அவளின் மீது லேசாக இரக்கமும் இருந்தது.
"ப்ச்ச் அக்கா நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா?" என்றும் முறைக்கும் அக்காவை குழப்பத்துடன் பார்த்தாள் சௌமியா.

"மலர் மட்டும் நம்ம அண்ணன கல்யாணம் பண்ணிக்கிட்டா... எல்லோருக்குமே நல்லதுதான். மலர் நீ சொல்றத தட்ட மாட்டா ....அமைதியான பொண்ணு... அப்புறம் கண்டிப்பா கல்யாணம் முடிஞ்சிட்டா நந்தன் பக்கம் எட்டிப் பார்க்க மாட்டா" என்று ஒவ்வொன்றாக சொல்லி சுவாதியின் மூளையை சலவை செய்தாள் சௌமியா.

சுவாதியின் மூளை வேகமாக கணக்கு போட்டது.வேறொருத்தி தனக்கு அண்ணியாக வந்து தன்னை ஆட்டிப் படைப்பதற்கு பதிலாக தங்களால் எளிதாக ஆட்டி வைக்க முடிகிற மலர் தங்களுக்கு அண்ணியாக வருவதில் தங்களுக்கு ஆதாயம் தான் என்று நினைத்தாள்.

ஆனால் தங்கையிடம் நம்பிக்கையை வளர்க்க கூடாது என்று நினைத்த சுவாதி,
"அதுக்கு மகேஷ் பர்மிஷன் கொடுக்கணும் சௌமி..."என்றாள்.
அவளுக்கு இன்னுமே மனது கேட்கவில்லை தான்... என்ன இருந்தாலும் மகேஷ் மேல் உயிரே வைத்திருந்தாள் சுவாதி... அவன் தங்கை வருத்தப்பட்டால் அவனும் அல்லவா வருத்தப்படுவான் என்று அவளது காதல் கொண்ட மனது உள்ளே இருந்து பிராண்டி கொண்டிருந்தது.

"அதான் நீ இருக்கியே அக்கா மாமா கிட்ட சொல்லி சீக்கிரம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வை... அப்போதான் எனக்கு நந்தா கிடைப்பான்... எனக்கு உன்ன விட்டா யாரு இருக்கா...எனக்கு நீதானே அம்மா மாதிரி" என்று சுவாதிக்கு ஐஸ் வைத்து காரியத்தில் கண்ணாக இருந்தாள் சௌமி என்கிற சுயநல காரி.

சுவாதியின் மனம் தங்கைக்காக உருகியது. ஆனால் இன்னும் நெஞ்சில் ஏதோ முட்டுவது போல் இருந்தது.
"ஆனா சௌமி..."என்று சுவாதி இழுக்க...

"நீ சொன்னா மகேஷ் மாமா கேட்க மாட்டாரா அக்கா?? அவ்வளவுதான் உன்னோட பேச்சுக்கு மதிப்பா?" என்று நக்கல் அடித்தாள் சௌமியா.
அதாவது சுவாதியின் பலவீனத்தில் அடித்தாள்.

சுவாதிக்கு உரிமை உணர்வு ரொம்பவும் அதிகம்....
தங்கை சொன்னதை கேட்ட உடனே சுவாதி பொங்கி விட்டாள்.

"நா என்ன சொன்னாலும் மகேஷ் நம்புவார் என் மேல அவ்வளவு பாசம், அவ்வளவு நம்பிக்கை... அவ்வளவு லவ்" என்றால் பெருமையாக...

"அப்போ பேசி சம்மதிக்க வை.. என் செல்ல அக்காவே..." என்றாள் சௌமியா கிண்டல் தொனியில்...

சுவாதியும் வாயை விட்டு விட்டாள் "சரி" என்று....
சௌமி உள்ளுக்குள் வெற்றி சிரிப்பு சிரித்துக்கொண்டாள்.

சுவாதிக்கு மகேஷ் தான் சொல்வதைக் கேட்பான் என்று லேசாக தான் நம்பிக்கை இருந்தது.ஏனென்றால் தங்கை விடயத்தில் மகேஷ் ரொம்பவும் எமோஷனல் ஆகிவிடுவான்... அவனை அந்த நேரத்தில் கட்டுக்குள் வைக்கவே முடியாது என்று நினைத்தவள்,

சௌமியாவிடம்... "நம்ம அண்ணன் கிட்ட முதல்ல இதுக்கு சம்மதம் கேட்கணும்" என்றாள்.

"போக்கா... நம்ம என்ன சொன்னாலும் நம்ம அண்ணன் நமக்காக செய்வார்... ஆப்ட்ர் ஆல் ஒரு கல்யாணம் பண்ணிக்க மாட்டாரா?" என்று அலட்சியமாக கேட்ட சௌமியாவிற்கு தெரியாது இதற்கெல்லாம் அவள் சேர்த்துவைத்து அனுபவிப்பாள் என்று...

இருவரும் சேர்ந்து ஆதித்யாவிடம் இதைப் பற்றி பேச வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

மதிய உணவினை முடித்துவிட்டு தங்களது இல்லத்திற்கு திரும்பினர் மகேஷ் குடும்பத்தினர்....

அந்த வீட்டை விட்டு வந்ததுமே மலர் சற்று நிம்மதியாக உணர்ந்தாள். அன்று முழுவதும் சுவாதி... மகேஷ் உடன் இருந்ததால் மலரினால் அவனுடன் பேச முடியவில்லை.

மறுநாள் காலையில் மகேஷ் ஊரில் இருந்து கொண்டு வந்த ஒப்பந்தம் சம்பந்தமான ஃபைல்களை தூக்கிக்கொண்டு எப்பொழுதும் போல் அலுவலகம் சென்று விட , சுவாதி மலருக்கு ஊரில் இருந்து வாங்கி கொண்டு வந்ததை கொடுத்தாள்.

ஊரில் சுற்றிப் பார்க்க சென்ற இடங்களை பற்றி எல்லாம் கதை கதையாகச் சொன்னாள். அவளிடமும் லேசாக பேச்சு கொடுத்தால் வீட்டில் என்னவெல்லாம் நடந்தது என்று... ஆனால் மலர் எதுவும் சொல்லவில்லை சமாளித்து விட்டாள்.

எவ்வளவுதான் சுவாதி தன்னுடன் நெருங்கி பழகுவது போல் இருந்தாலும் தன் மனதில் உள்ளதை தன் அண்ணியிடம் தெரிவிக்க... மனது வரவில்லை. என்ன இருந்தாலும் சௌமியா அண்ணியின் தங்கை அவளுக்கு தான் பரிந்து பேசுவார்கள் என்று நினைத்தாள். அதுவும் சரிதானே...!!!

மாலை சுவாதி வானதியை மலரிடம் விட்டுவிட்டு ஆதித்யாவின் வீட்டிற்கு கிளம்பி சென்று விட்டாள்.
அவனிடம் திருமணத்தை பற்றி பேசத்தான்...
இங்கு சுவாதி சென்றதும் மலரும் அலுவலகத்திற்கு சென்றிருந்த மகேஷின் வருகைக்காக காத்திருந்தாள். அவனிடம் எல்லாவற்றையும் கூற வேண்டும் என்று நினைத்தாள். சுவாதி இல்லாத நேரம் தானே அவளால் மனம் விட்டு பேச முடியும்...

ஆனால் வெகு நாட்கள் கழித்து அலுவலகம் சென்ற மகேஷுக்கு வேலைகள் குவிந்து கிடந்தது.
அதனால் அவன் வீட்டிற்கு செல்ல தாமதமாகும் என்று வீட்டின் பொது தொலைப்பேசிக்கு அழைத்து சொல்லிவிட்டான். மீண்டும் மனம் சோர்ந்தாள் மலர்.

விதி விளையாடும் விளையாட்டில் எல்லாரும் விளையாட்டு பொம்மைகள் என்பதை மலர் உணரவேண்டிய காலம் வர காத்திருந்தது....

அண்ணன் வர தாமதமாகும் என்றதும் மலர் நந்தனின் மொபைலுக்கு தன் மனதில் இருப்பதை எல்லாம் கொட்டி மெசேஜ் செய்தாள். ஆதித்யாவின் பேச்சு சௌமியாவின் நடவடிக்கை இருவரின் திட்டம் என்று எல்லாத்தையும் அனுப்பினாள். தன் அண்ணன் திரும்பி வந்து விட்டதால் இனி எந்த பிரச்சினையும் இல்லை சீக்கிரம் திரும்பி வர சொல்லி அனுப்பினாள். அவன் தனது மெசேஜை பார்த்து புரிந்து கொள்ள வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.

இங்கு சுவாதி...சௌமியா இருவரும் அண்ணனிடம் பேச தயாராகினர். ஆதித்யா இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு என்ன விஷயம்? என்று கேட்டான். காரணம் காரியம் இல்லாமல் தன் தங்கைகள் இப்படி சேர்ந்து வந்து தன்னை சந்திக்க மாட்டார்கள் என்பது அவனுக்கு நிச்சயம்.

சுவாதி தான் முதலில் ஆரம்பித்தாள். மலரினை ஆதித்யா திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றும்... நந்தனை எப்படியாவது சௌமியாவிடம் சேர்த்துவிட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே சென்றவளை கைநீட்டி நிறுத்தினான் ஆதித்யா.

"சௌமியாவுக்கு நல்ல வாழ்க்கையை நான் நிச்சயமா அமைச்சு கொடுப்பேன்... ஆனா என்னால மலர கல்யாணம் பண்ணிக்க முடியாது. என் மேல விருப்பம் இல்லாதவள நான் எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்? நானும் அவமான படனுமா? என்னால முடியவே முடியாது" என்று ஆதித்யா பயங்கர ஆத்திரத்துடன் கத்தவும் சுவாதி தயங்கினாள்.

பழைய காயத்தின் வலி இன்னும் அவனுள் இருப்பதை அவளால் உணர முடிந்தது. அவளுக்கும் தெரியும் தான்...

ஆனால் அவனுக்கு மலரை பிடித்துள்ளது என்பதை அவன் கண்கள் காட்டிக் கொடுக்கிறதே... பின்பு எதற்கு இந்த மறுப்பு என்று என்று நினைத்தாள் சுவாதி. பாரம்பரியம் மரியாதை என்று இருக்கும் மலர் கண்டிப்பாக திருமணத்திற்கு பின்பு ஆதித்யாவை விட்டு பிரிய மாட்டாள் என்பது நிச்சயம் பின்பு எதற்கு தன் அண்ணனுக்கு இந்த தயக்கம்... கோபம் என்று புரிபடவில்லை அவளுக்கு...

சுவாதி இதைப்பற்றியே யோசனையில் ஆழ்ந்திருக்க...
ஆனால் திருமணத்திற்கு அண்ணன் மறுத்ததும் அவனை சம்மதிக்க வைக்க தனது ஆயுதத்தை எடுத்தாள் சௌமியா.

சுருக்கமாக சொன்னால் அழ ஆரம்பித்து விட்டாள்...

'ப்ச்ச்... இவ வேற ஆனா ஊனா டேங்க ஓபன் பண்ணிடுவா... இவளுக்கு வேற வேலை இல்ல...காரியம் சாதிக்க ... நீலிக்கண்ணீர் வடிக்க ஸ்டார்ட் பண்ணிட்டாளா?... இனி அண்ணன சம்மதிக்க வைக்காம ஓயமாட்டா" மனதில் நினைத்துக்கொண்ட சுவாதி... சௌமியா அண்ணனிடம் என்ன பேசுகிறாள் என்பதில் கவனத்தைச் செலுத்தினாள்.

அழும் தங்கையை பார்த்து ஆதித்யா எப்பொழுதும்போல் வேதனைப்பட்டான். அதேசமயம் கோபமும் வந்தது...

"ப்ச்ச் ஏன் சௌமி அழுகுற... உன் அண்ணன் என்ன செத்தா போயிட்டான்... உயிரோட தான இருக்கான்... எப்போ பார்த்தாலும் அழுதுட்டே இருக்க..." என்று கோபத்தோடு அவன் கேட்டாலும் அதில் வேதனை தான் அதிகமாக இருந்தது.

சௌமியாவோ விடாமல் கண்ணீர் வழிய வழிய பேசினாள்.
"மலர கல்யாணம் பண்ணிக்கலனா... நந்தனும் மலரும் திரும்பவும் சேர்ந்திடுவாங்க அப்போ எனக்கு எப்படி நந்தா கிடைப்பான்?"
ஆதித்யாவிற்கு தங்கையின் கண்ணீரை பார்க்க முடியவில்லை. அதற்காக மலரை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்ன... அவள் மனதில் தான் ஏற்கனவே ஒருவன் இருக்கிறானே...

அதை மீறி அவளை திருமணம் செய்து கொண்டால் தனக்குத்தான் துன்பம்... விருப்பம் இல்லாதவளை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது அவனது கொள்கை. தன்னை மணந்து கொள்பவள் தன்னை காதலுடன் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைத்தான் ஆதித்யா.

"ப்ச்ச் சௌமி மா... சும்மா சும்மா அழாத இங்க பாரு அண்ணன மலருக்கும் நந்தனுக்கும் கண்டிப்பாக கல்யாணம் நடக்காது... அதுக்கு நான் பொறுப்பு" என்று ஆதித்யா உறுதியாக சொல்ல...

"இல்ல அண்ணா மலர் உறுதியா இருக்கிறவரை கல்யாணம் நடக்க வாய்ப்பு இருக்கு... ஏனா நந்தனுக்கு மலர ரொம்ப பிடிக்கும். ஒருவேளை மனசு மாறி ரெண்டு பேரும் கல்யாணம் கூட பண்ணிக்கலாம்... மலருக்கு மட்டும் கல்யாணம் ஆகிடுச்சுனா... நான் நிம்மதியா இருப்பேன். ப்ளீஸ் ...எனக்காக கல்யாணம் பண்ண மாட்டியா அண்ணா" என்று உருக்கமாக சௌமியா கேட்கவும் ஆதித்யாவின் மனது உருக தான் செய்தது.

ஆனால் அப்பொழுதும் ஆதித்யா மற்ற விஷயங்கள் போல உடனே சரி என்று தலையை ஆட்டி விடவில்லை...
யோசனையாகவே அமர்ந்திருந்தான்.

அவனது யோசனையை பார்த்த சௌமியா,
"அண்ணா நீ தானே எனக்கு அம்மா அப்பா எல்லாமே... நான் கேட்டா எது வேணாலும் செய்வியே... ஆப்ட்ர்ஆல் எனக்காக இது கூட செய்ய மாட்டியா? சின்ன வயசுல உன்னோட உயிர் நான்தான்னு சொல்வியே அதெல்லாம் பொய்யா?" என்று உதடுகள் துடிக்க சௌமியா கேட்கவும் மொத்தமாக கவிழ்ந்து விட்டான் ஆதித்யா.

அவனது முகத்தில் அளவுகடந்த வருத்தத்தின் சாயல் பரவியது. அதை எப்பொழுதும் போல் மனதிற்குள்ளேயே மறைத்தான்.
இரு தங்கைகளையும் நன்றாக பார்த்துக் கொள்வதாக வாக்களித்திருக்கிறானே... அதை எப்படி மீற முடியும்? தனது கொள்கையை விட... தங்கையின் சந்தோஷம்தான் முக்கியம் என்று நினைத்து மலரை திருமணம்செய்ய ஒத்துக்கொண்டான் ஆதித்யா.

ஆனால் ஒரே ஒரு நிபந்தனையுடன்..!?

அண்ணன் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததும் சுவாதியும் சௌமியாவின் மகிழ்ந்தனர்.
அதனால் அவனது நிபந்தனையை இருவருமே கண்டுகொள்ளவில்லை...!?
ஆனால் அதன் விளைவு பெரிது...

தன்னை சுற்றி மீண்டும் பின்னப்படும் மாயவலையில் மாட்டிக் கொள்வாளா மலர்விழி?
தொடரும்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN