ஆதித்யா சக்கரவர்த்தி-18

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 18

நந்தன் மலர் ஏன் ஆதித்யா வீட்டில் இல்லாமல் இங்கு இருக்கிறாள்?? என்று யோசித்துக் கொண்டிருக்க .. அவனின் யோசனையை கலைத்தது மகேஷ் தான்...
"ஏதாவது வேல விஷயமா இந்தியா வந்திருக்கீங்களா நந்தன்?" என்று பொதுப்படையாக கேட்பதுபோல் மகேஷ் விசாரிக்க...

தனது யோசனையில் இருந்த வெளிவந்த நந்தனும்...
"ஆமா மகேஷ் சார்.இங்க ஒரு கான்ஃபரன்ஸ்காக வந்தேன்... அப்படியே இங்க என்னோட பெரியப்பா பொண்ணுக்கு கல்யாணம் வருது.. அதையும் அட்டெண்ட் பண்ணிட்டு இன்னும் பத்து நாள்ல ரிட்டன் போய்டுவேன்" என்றான்.
"அப்டியா?..." என்று கேட்டுக்கொண்டிருந்த மகேஷுக்கு போன் கால் வர,
"எக்ஸ்க்யூஸ் மீ" என்று அதை எடுத்துக் கொண்டு நகர்ந்து சென்றான் மகேஷ்.

அவன் அங்கிருந்து நகரவும், கிடைத்த இடைவெளியில் தனது பார்வையை வீட்டை சுற்றி படரவிட்டான் நந்தன்.
நல்ல நீட்டு வாக்கான ஹால்... தரையில் சிகப்பு நிற கார்பெட்... மூன்று சோபாக்கள்... அதன் நடுவே டீபாய்... அதன்மீது அலங்காரத்திற்காக ஒரு ஜாடியில் அவர்களின் தோட்டத்தில் இருந்து பறிக்கப்பட்ட ரோஜாப்பூக்கள் வைக்கப்பட்டிருந்தது.
ஹாலின் இடப்பக்க வளைவில் கிச்சன், பூஜை அறை அதையடுத்து இரண்டு படுக்கை அறைகள் இருக்க... அதனை அடுத்து மாடிக்கு செல்லும் பாதை இருந்தது.
ஹாலின் ஒரு பக்க சுவர் முழுவதும் மலரின் புகைப்படங்களும்... அவர்களின் குடும்ப புகைப்படங்களும் தான் நிறைந்திருந்தது.
அதை ஒட்டி பெரிய ஃபிஷ் டேங்க் ஒன்று இருக்க... அதிலிருந்த பல வண்ண மீன்களை பார்த்தவனுக்கு, மலருடன் முதல்முறையாக வெளியே சென்றிருந்த சமயம், ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே அவள் அதைப்பற்றி விவரித்து சொன்னது ஞாபகம் வந்தது.
ஒவ்வொரு மீனுக்கும் அவள் வைத்த பெயரை சொல்லி கண்கள் பளபளக்க... அவள் பேசிக் கொண்டே இருந்தது கூட அன்று அவன் கண்களுக்கு கொள்ளை அழகாகத்தான் இருந்தது.
ஆனால் இன்று மலர் அவனவள் அல்லவே?
எதையும் நினையாதே மனதே... அவள் இன்னொருவனின் மனைவி என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டாலும்.... அவனால் நினைவுகளை கட்டுப்படுத்தவும் முடியவில்லை.
இதே வீட்டில் அவனுக்கு நிறைய நினைவுகள் இருந்தது. இதோஇங்கு தானே மலருக்கும் நந்தனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. எவ்வளவு மகிழ்ச்சியான தருணம் அது... இப்பொழுது எல்லாம் தலை கீழாக மாறிவிட்டதே... யாரைக் குறை சொல்லி என்ன பயன் ?
எல்லாம் வீணாகி போய்விட்டதே... என்று பெருமூச்சு விட்ட நந்தனுக்கு காபி கொண்டு வந்தார் அந்த வீட்டில் வேலை செய்யும் லட்சுமி அம்மாள்.
அவனைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டவர்,
"தம்பி நல்லா இருக்கீங்களா? எப்ப ஊரிலிருந்து வந்தீங்க?" என்று கேட்க....

"நல்லா இருக்கேன் ம்மா... நேத்து காலையில தான் வந்தேன்" என்றான் நந்தன்.

"அப்படியா தம்பி... சமையல் எல்லாம் யாரு பார்த்துக்கிறா? சாப்பிட்டீங்களா?" என்று பரிவுடன் கேட்டவரை பார்த்து லேசாக கண்கள் கலங்கி விட்டது அவனுக்கு....

அவன் நேற்று மதியம் ரெஸ்டாரண்டில் சாப்பிட்டது. இரவு வெளியே செல்ல மனமில்லாமல் பால் காய்ச்சி குடித்து விட்டு படுத்து விட்டான். இதோ காலையில் கிளம்பி இங்கு வந்து நிற்கிறான். இதில் எங்கிருந்து ஒழுங்காக சாப்பிடுவது ? அவனுக்கு அன்புடன் சமைத்து பரிவுடன் பரிமாற யார் இருக்கிறார்கள்? ஏன் சாப்பிட்டாயா என்று கேட்கக்கூட அவனுக்கு நாதி இல்லையே... என்று நினையாமல் இருக்க முடியவில்லை அவனால்....
அவர் தன் பதிலுக்காக காத்திருப்பது புரிந்து,
"நான் ஹோட்டல்ல சாப்பிட்டேன் ம்மா." என்றான் நந்தன்.

"என்னப்பா நீ ஹோட்டல்ல சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துகுற..." என்றவர், "எத்தனை நாள் இங்கு இருக்கப் போற?" என்று கேட்டார்.
"பத்து நாள் தான் இங்க இருக்கப் போறேன்..." என்று நந்தன் சொன்னதும்,
"பத்து நாள் தானே தம்பி... நானே உனக்கு சமைச்சு தாரேன் பா... வெளியே எல்லாம் சாப்பிட்டு உடம்ப கெடுத்துக்காத..." என்றார்.
நந்தன், "வேண்டாம் ம்மா..." என்று தயங்க,
"அட போ தம்பி ...அம்மான்னு சொல்லிட்டு வேண்டாம்னு சொல்றியே?" அவர் உரிமையுடன் கோபித்துக் கொள்ளவும்... சரி என்று விட்டான். ஏனோ மனதிற்கு சற்று இதமாக இருந்தது அவனுக்கு....
மகேஷும் போன் பேசிவிட்டு வந்துவிட... அவன் முகம் டென்ஷனில் இருப்பதை பார்த்த நந்தன்,
"சார் ஏதாவது ப்ராப்ளமா? என்னால ஏதாவது உதவி செய்ய முடியுமா? சொல்லுங்க சார் கண்டிப்பா பண்றேன்" என்றான்.

தங்கள் குடும்ப விஷயத்தை அவனிடம் பகிர்ந்து கொள்ள மனம் வராததால்,
"அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல லேசா தலைவலிதான்... டேப்லட் போட்டா சரியாகிடும்." என்று சமாளித்து விட்டான் மகேஷ்.
அவன் ஏதோ மறைக்கிறான்... என்று புரிந்தாலும் அதற்குமேல் தோண்டி துருவி கேட்க தனக்கு உரிமை இல்லை என்று நினைத்த நந்தனும் விட்டுவிட்டான்.

"சொல்ல வந்த விஷயத்தை மறந்துட்டு ...நானும் ஏதேதோ பேசிட்டு இருந்துட்டேன் மகேஷ் சார்." என்ற நந்தன்,
தான் கையோடு கொண்டு வந்திருந்த செயினையும் மோதிரத்தையும் மகேஷ் இடம் காட்டினான்.
இது என்ன? என்பது போல் மகேஷ் கேள்வியாக அவனை பார்க்க,

"சண்முகம் அங்கிள் எனக்கு நிச்சயதார்த்தம் அன்னைக்கு போட்டது... இது அவரோட பரம்பர நகைன்னு என்கிட்ட சொல்லியிருக்கார். மத்த நகைனா நானும் கண்டுக்காம விட்டு இருப்பேன்... இது பாரம்பரியமா வர்றது... இது எப்படி இருந்தாலும் அவரோட மருமகனுக்கு தான் போய் சேரணும். அதனாலதான் குடுக்க வந்தேன்" என்று விளக்கம் அளித்தான் நந்தன்.
ஆனால் நந்தன் அதை சொல்லும் போது அவனது முகத்தில் சோகம் வழிந்தோட தான் செய்தது... அதை மகேஷும் கவனிக்காமலில்லை.
இன்று இவ்வளவு மரியாதையாக பேசும் நந்தன் அன்று பேசிய பேச்சு என்ன? இப்பொழுது நினைத்துப் பார்த்தாலும் கோபமாகத் தான் வந்தது. தன் தங்கையை கீழ்தரமாக எப்படியெல்லாம் பேசி விட்டான்.
அன்று சற்று பொறுமையாக பேசி இருந்தால் கூட நான் யோசித்து இருப்பேனே? இன்று என் குழந்தையையும், மனைவியையும் பிரிய வேண்டிய நிலை வந்திருக்காதே... மலரும் இவனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திருப்பாளே... என்று மனதிற்குள் மட்டுமே நினைக்க மட்டுமே முடிந்தது அவனால்....
காலம் கடந்தால் நினைத்துப் பார்க்க மட்டுமே முடியும் அல்லவா!!
மகேஷும் சரி என்று அவன் கொடுத்த செயினையும் மோதிரத்தையும் வாங்கிக் கொண்டான்.

"சரி மகேஷ் சார் நான் கெளம்புறேன்... ஏதாவது ஹெல்ப் வேணும்னா தயங்காம கேளுங்க..." என்று சொல்லி விடைபெற்று கிளம்பிவிட்டான் நந்தன். ஆனால் மலரும் மகேஷும் ஏன் இங்கே இருக்கிறார்கள்? என்பதற்கு மட்டும் அவனுக்கு விடை கிடைக்கவில்லை. கிடைக்கும் நாளும் தூரமில்லை...
யாருக்கும் காத்திராமல் மூன்று நாட்கள் கடந்துவிட,
மகேஷ் தனது அடுத்த வேலைக்கான இன்டர்வியூக்கு காலையிலேயே தயாராகினான்.

அண்ணனுக்காக பூஜை அறையில் வேண்டிக்கொண்டு திருநீறு கொண்டுவந்து மகேஷுக்கு பூசி விட்டவள்... "பெஸ்ட் ஆஃப் லக் அண்ணா... டென்ஷன் ஆகாம இண்டர்வியூ அட்டெண்ட் பண்ணுங்க... ஜெயம் உண்டாகட்டும்" என்று வாழ்த்தினாள்.

"தேங்க்ஸ் மலர் குட்டி... ஏதோ புதுசா இன்டர்வியூ அட்டன் பண்ண போற மாதிரி சொல்ற... எனக்கு டென்ஷனா? இப்பெல்லாம் ரொம்ப வாய் பேசுற நீ" என்று தங்கையின் தலையை செல்லமாக தட்டி விட்டு சென்றான் மகேஷ்.

இன்று தானே தங்கைக்கு பயங்கர டென்ஷன் கொடுக்கப் போகிறோம் என்பதை அறியாமல்....

அன்று காலையில் பள்ளிக்கு தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த மலருக்கு பின்னால் ஒரு கார் ஃபாலோ செய்து கொண்டே வந்தது.
முதலில் கண்டும் காணாததுபோல் சென்றவள், அவள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அந்த காரும் திரும்புவதை கவனித்து ஸ்கூட்டியின் வேகத்தை அதிகரித்தாள்.

பள்ளியின் அருகே வரும்வரை வேகத்தை குறைக்கவில்லை.
பள்ளியின் அருகே வந்தவுடன் ஹப்பாடா... என்று மலர் தனது ஸ்கூட்டியை நிறுத்தவும்,
அந்தக் கார் அவளின் முன் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
மலர் அதிர்ச்சியுடன் அந்த காரை பார்க்க, காரிலிருந்து மிடுக்காக இறங்கினான் ஆதித்யா. தனது கூலிங் கிளாசை கழற்றி தன் சட்டையின் ஓரத்தில் சொருகி கொண்டவன்... காரினுள் இருந்த வானதியை இறக்கி விட்டான்.
வானதியின் முகம் அழுது அழுது வீங்கி போய் இருப்பதை பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த மலரால் நன்றாகவே பார்க்க முடிந்தது. இந்த குழந்தைக்கு என்ன ஆச்சு? என்று மனதில் மட்டுமே நினைக்க முடிந்தது அவளால்... அருகில் சென்றாலே பயந்து ஓடி விடுகிறாளே...

வானதிக்கு நெற்றியில் முத்தமிட்டு... ஏதோ கூறி சிரிக்க வைத்து...தனது சட்டை பையிலிருந்து சாக்லேட்டை எடுத்து அவளுக்கு கொடுத்து பள்ளிக்குள் அனுப்பியவன்...
மலரை நோக்கிதான் வந்தான். என்றும் இல்லாத அதிசயமாக அவன் கூடவே வரும் பாடி கார்ட்ஸ் என்றழைக்கப்படும் அல்லக்கைகள் வரவில்லை.
'தல வால்கள் இல்லாம வருதே' என்று மனதில் நினைத்த மலர்,
ஸ்கூட்டியை பார்கிங்கில் நிறுத்தி விட்டு, தனது ஹேண்ட் பேக்கை எடுத்துக்கொண்டு...
அவனை கண்டு காணாமல் உள்ளே செல்ல போக...
"விட்டது தொல்லைன்னு ரொம்ப நிம்மதியா இருக்க போல?" என்ற ஆதித்யாவின் கடுமையான குரலில் பிரேக் அடித்தாற்போல் நின்று விட்டாள்.

என்னதான் வெளியில் தன்னை பலசாலியாக காட்டிக் கொண்டாலும் இன்னும் ஆதித்யாவை பார்த்தால் உள்ளுக்குள் உதர தான் செய்தது.
"அப்படிலாம் இல்ல..." என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர பார்க்க,
"அப்ப நின்னு பேசிட்டு போகலாமே..." என்றான் ஆதித்யாவும் விடாமல்.

'விடாது கருப்பு வீராச்சாமி' என்று மனதிற்குள் புலம்பியவாறு...
"இல்ல எனக்கு நிறைய வேலை இருக்கு ..."என்று மலர் பிடிவாதமாக மறுத்து கூறிவிட்டு நகர பார்க்க,
அது சாலை என்றும் பாராமல் அவளது கைகளைப் பற்றி நிறுத்தினான் ஆதித்யா.

மலரின் கண்களில் அவளையும் மீறி அந்த பூச்சாண்டியின் மீது இருந்த பயம் லேசாக வெளிவந்துவிட்டது. தனது கண்கள் வெளிப்படுத்திய பயத்தை மறைக்க அவனைப் பார்க்காமல் குனிந்து கொண்டவள்,
"ப்ளீஸ் கைய விடுங்க... யாராவது பாத்தா தப்பா ஆகிடும்" என்று மலர் கெஞ்ச....

"இன்னும் நமக்கு டைவர்ஸ் ஆகல... நான் உன்னோட புருஷன் தான்" என்று ஒருமாதிரியான குரலில் சொன்னான் ஆதித்யா.
அவன் சொன்ன விதத்தில் அவனது கண்களை பார்த்தவள், என்ன நினைத்தாளோ மீண்டும் தலை குனிந்தவாறே,
"யாராயிருந்தாலும் சரி ... இது பப்ளிக் பிளேஸ்... அதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கணும் கையை விடுங்க மொதல" என்று தன் கையை அவனிடமிருந்து இழுத்துக்கொண்டாள் மலர்.

ஆனால் அவள் மனதிலோ பலவிதமான யோசனைகள் ஓடியது. காரணம் காரியம் இல்லாமல் இவன் எதுவும் செய்ய மாட்டானே!! அண்ணனின் அனைத்து வேலைகளுக்கும் விடாமல் ஆப்பு வைப்பவன்... இன்று தான் வேலை செய்யும் இடத்திற்கு வந்திருக்கிறான் என்றால் ஏதோ காரணம் இருக்க வேண்டும்.
என்னவாக இருக்கும் என்று மூளையைக் கசக்கி யோசித்த மலருக்கு ...இன்று தன் வேலைக்கு உலை வைக்க தான் வந்துள்ளானோ என்று சந்தேகம் வந்தது .

மலர் வேலை செய்யும் பள்ளி கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் கீழ் செயல்படும் பள்ளி தான். இங்கு ஒழுக்கம்.... ஒழுக்கம்..... எல்லாவற்றிலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். அது ஆசிரியரோ? மாணவரோ? யாராக இருந்தாலும் சரி அந்தப் பள்ளியில் நிலையாக இருக்க வேண்டுமானால்... அவர்களிடம் கண்டிப்பாக ஒழுக்கம் என்னும் பண்பு இருக்க வேண்டும்.
இன்று வழிமறித்து தன்னிடம் வம்பு இழுத்து ...தன்னுடைய வேலைக்கும் ஆப்பு வைத்து விடுவான் போலயே...!!!என்று நினைத்தவளின் கண்கள் யாராவது தாங்கள் பேசுவதை பார்க்கிறார்களா? கேட்கிறார்களா? என்று சுற்றும் முற்றும் அலசி ஆராய்ந்தது.

பள்ளியின் அருகே உள்ள சாலை என்பதால் கூட்டமாகத்தான் இருந்தது. பள்ளிப் பேருந்துகள்' வேன்கள் ஒருபுறம் வருவதும் போவதுமாக இருக்க.... வேலைக்கு செல்லும் பெற்றோர் பிள்ளைகளை அவசரமாக விட்டுவிட்டு சென்றுகொண்டிருந்தனர்.
அங்கு பிசியாக தங்களது பிள்ளைகளை விட வந்த யாருக்கும் இவர்களது சம்பாஷனைகள் கேட்கும் அளவிற்கு பொறுமை இல்லை...என்பதை உணர்ந்து ஆசுவாசமாக ஆதித்யாவை நிமிர்ந்து பார்த்தாள் மலர்.

அவளின் யோசனை முடிவதற்குள், ஆதித்யாவும் அவளை ஓரளவு ஆராய்ந்து இருந்தான். அவர்களின் திருமணத்தன்று சேலை அணிந்ததோடு சரி... அதன்பிறகு ஒரு நாளும் மலர் சேலை உடுத்து அவன் பார்த்ததில்லை. இன்றுதான் பார்க்கிறான்.
சேலையில் தேவதையாக நின்றவளைப் பார்த்து மனதிற்குள் லேசாக சலனம் வந்தாலும் அவள் மனதில் தான் தனக்கு இடம் இல்லையே... அவள் மனம் முழுவதும் இருப்பது நந்தன் தான் ...என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவன் அவளை தெனாவெட்டாகவே பார்த்தான்.

அவனின் பார்வையை தாங்கி நின்றவள் "சொல்லுங்க என்ன பேசணும் என்கிட்ட?" என்று அவனை சரியாக கணித்து கேட்டாள் .

ஆதித்யாவும் சுற்றி வளைக்காமல் நேரடியாகவே பேச ஆரம்பித்தான்.
"உனக்கு என் கூட வாழ ஆசையா?"
அவள் இல்லை என்று சொல்வாள் என்று தெரிந்தே ஆதித்யா கேட்க...
அவளும் அவன் எதிர்பார்த்தது போலவே இல்லை என்பது போல் தலையாட்டினாள்.

"ஹம் நல்லதுதான்" என்றவனுக்கோ அவளின் பதிலில் உள்ளுக்குள் சுள்ளென்று வலித்தது.
அதை தனக்குள் மறைத்து கொண்டு,
"அப்போ நம்ம ரெண்டு பேரும் டிவோஸ் பண்றதுல்ல... உனக்கு எந்த பிரச்சினையும் இல்ல" என்று ஆதித்யா அவளின் கண்களை பார்த்து அழுத்தமாக கேட்கவும்... மலரும் சாதாரணமாக உதட்டைப் பிதுக்கி இல்லை என்பது போல் தலையாட்டினாள்.
உள்ளுக்குள் மூண்ட சினத்தை மறைக்க முடியாமல்...அவளை முறைத்தவாறே,
"உங்க அண்ணனும் சுவாதியும் டிவோஸ் பண்றதுல்ல கூட உனக்கு சந்தோஷம் தானா அப்போ?" என்று ஆதித்யா கோபத்தை அடக்கிய குரலில் கேட்கவும்,
அவ்வளவு நேரம் ஓரிரு வார்த்தைகளில் விடையளித்தவள், அப்பொழுதுதான் வாயைத் திறந்து நீளமாக பேசினாள்.
"கண்டிப்பா இல்ல என்னோட அண்ணன் குடும்பம் குழந்தை னு சந்தோஷமா இருக்கணும்னு தான் எனக்கு ஆசை... அவங்க டைவர்ஸ் பண்ணினா எனக்கு என்ன லாபம்? என் அண்ணா அண்ணி எப்பவுமே நல்லா இருக்கணும்"
என்றவள்...
அவன் முகம் குழப்பமாக மாறுவதை உணர்ந்து,
"நான் அண்ணன் கிட்ட அண்ணி கூட போங்கன்னு சொல்லிட்டேன்... அவர்தான் எனக்காக பாக்குறாரு" என்று முணுமுணுத்தாள் மலர்.
ஆதித்யா அவளைக் கூர்ந்து பார்க்க, அவள் பொய் சொல்வது போல் தெரியவில்லை.

அவளைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டு,
"வானதி அவ அப்பாவ ரொம்ப தேடுறா... ஸ்கூலுக்கு வரக்கூட அடம்பிடிக்கிறா..." என்றவன்,
லேசாக தொண்டையை செருமிக்கொண்டு,
"அதனால எனக்கு உன்கிட்ட ஒரு ஃபேவர் வேணும் மலர்... கொஞ்சம் உங்க அண்ணன் கிட்ட பேசி சுவாதியை டிவோர்ஸ் பண்ண வேண்டாம்னு கன்வின்ஸ் பண்ணு... நம்ம மட்டும் டிவோஸ் பண்ணிப்போம்..." என்றான்.

மலர் அதற்கு சரி என்பதுபோல் தலையசைத்துவிட்டு,
"எனக்கு நேரம் ஆகுது..." என்று அவனிடம் கூறிவிட்டு விடுவிடுவென்று பள்ளிக்குள் சென்றுவிட்டாள்.

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்...
"பார்த்து அஞ்சு மாசம் ஆகுது... என்ன பாத்ததும் முகத்துல கொஞ்சமாவது சந்தோஷம் வந்துச்சா... எப்படி வரும்? அவ மனசுல தான் நான் இல்லையே" என்று நினைத்தவனுக்கு எல்லாவற்றின் மீதும் வெறுப்பாக வந்தது.

அமைதியாக காரில் ஏறி அமர்ந்தவன்,
"என்ன விட்டு பிரிஞ்ச...
மிஸஸ். ஆதித்யா சக்கரவர்த்தி... இப்போ ஸ்கூல்ல மிஸ் ஆகிட்டா.. வாழ்க்கையே வினோதம் தான்" என்று தனக்குத்தானே கூறியவாறு காரை ஸ்டார்ட் செய்தான்.

இங்கு பள்ளியில் ஸ்டாப் ரூமில் அமர்ந்திருந்த மலருக்கு வானதியை நினைத்துதான் ரொம்பவும் கவலையாக இருந்தது.
அப்பா அம்மா பிரிந்து இருந்து... குழந்தைகளை ஏன் தண்டிக்க வேண்டும். மகேஷ் சுவாதி இருவருமே குழந்தையின் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பது மலருக்கு நன்றாகத் தெரியும். விவாகரத்து வாங்கினாலும், குழந்தை அங்கு பாதி நாள் இங்கு பாதிநாள் என்று ஜவ்வாக இழுக்கப்படும்... அது குழந்தையின் மனநிலையை வேறு பாதிக்குமே... என்று கவலைப் பட்டவள்...மதிய இடைவெளியில் வானதியை பார்த்து பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.

மதிய உணவை நந்தனுக்கு பரிமாறிக் கொண்டிருந்த லட்சுமி அம்மாள்...
"தம்பி இன்னைக்கு அவசர அவசரமாக பருப்புசாதம் தான் பண்ணினேன். எப்படி இருக்கு?" என்று கேட்க.....

"ரொம்ப அருமையா இருக்கு ம்மா... நீங்க மட்டும் இன்னைக்கு இத செஞ்சு தரலனா... காஞ்சி போன ரொட்டியை தான் தின்னுட்டு இருந்திருப்பேன்" என்று பாவமாக சொன்னான் நந்தன்.

அதைக் கேட்டு அவரின் முகம் மலர்ந்தது.
சாதத்தை ரசித்து சாப்பிட்டுக்கொண்டே,
"நீங்க மலர் வீட்ல எப்போ இருந்து வேலை பாக்குறீங்க?" என்று நந்தன் கேட்க...

"மலர் பாப்பாவுக்கு மூணு வயசு இருக்கும்போது தான் எனக்கு இங்க வேலை போட்டு கொடுத்தார் சண்முகம் ஐயா. அவர் மட்டும் இல்லனா என் குழந்தைங்க எல்லாம் பட்டினியா கிடந்து செத்து இருக்கும். நல்ல மனுஷன்" என்று பாராட்டினார் அவர்....

ஓஓஓ... என்றவன் எப்படியாவது மலர் மகேஷ் இருவரும் எதற்காக இங்கு இருக்கிறார்கள்? என்பதை கேட்டு விட வேண்டும் என்ற ஆவலை அடக்கிக் கொண்டு,
"இங்க வீட்ல யாரும் இல்லாதப்போ வேலைக்கு என்ன பண்ணிங்க?" என்று அவன் பேச்சை வளர்க்க...

"இந்த வீடு மட்டும் இல்ல தம்பி பக்கத்திலேயே நாலு வீட்ல வீட்டு வேல செய்றேன்... இங்க வீட்ல யாரும் இல்லாததால... அப்பப்ப சுத்தம் பண்ணி மட்டும் வைப்பேன்" என்றவர்...
"இன்னும் கொஞ்சம் சாதம் போட்டுக்கோங்க தம்பி" என்று அவனை கவனிக்கவும் மறக்கவில்லை.

"உங்களுக்கு... எனக்கும் மலருக்கும் எங்க எங்கேஜிமெண்ட் நின்னு போனதெல்லாம் தெரியுமா?" என்று நந்தன் உள்ளே போன குரலில் கேட்க...
"அதெல்லாம் கேள்விப்பட்டேன் தம்பி... ரொம்ப வருத்தமா இருந்துச்சு... யாருக்கு யாருன்னு கடவுள் போட்ட முடிச்சு. அத யாராவது மாத்த முடியுமா? என்றவர்...

"ஆனா கடவுள் மலர் பாப்பாவ தான் ரொம்ப சோதிக்கிறார் தம்பி. அந்த புள்ள எவ்வளவு கஷ்டத்தை தான் தாங்கும்... அம்மா அப்பா இல்லாத பொண்ணு வேற... அவள கல்யாணம் முடிச்சு பாவி அவள வேண்டாம்னு சொல்லிட்டானாம்... மகேஷ் தம்பி அதை தட்டிக் கேட்டாராம். ஏதேதோ சண்டை எல்லாம் நடந்துச்சாம்... கடைசிவரை அந்தப் பாவி மலரை வேணாம்னு தான் சொன்னானாம்.மகேஷ் தம்பிக்கும் கோபம் அதிகமாகி... என் தங்கச்சி உனக்கு வேண்டாம்னா உன்னோட தங்கச்சி எனக்கு வேண்டாம்ன்னு சொல்லிட்டு மலர் பாப்பாவ கூட்டிகிட்டு இங்க வந்துட்டாரு. கிட்டத்தட்ட அஞ்சு மாசம் ஆகுது. ஒரு முன்னேற்றமும் இல்ல தம்பி. சண்முகம் ஐயா... மலர் பாப்பாவ வேலைக்கு போனா கஷ்டப்படுவானு...வீட்டிலேயே வச்சிட்டார்.ஆனா விதியை பாத்தியா தம்பி...இப்போ அந்த பொண்ணு வேலைக்கு போயிட்டு இருக்கு... எங்க போய் இந்த கொடுமைய சொல்ல தம்பி... நல்லவங்களா தான் கடவுள் சோதிக்கிறார்" என்று அவர் பாட்டுக்கு புலம்பிக்கொண்டே நந்தன் சாப்பிட்டு முடித்த பிளேட்டை தூக்கிக் கொண்டு சமையலறைக்குள் சென்றார்.

நந்தனுக்கு தான் எப்படி உணர்கிறோம் என்று புரியவில்லை.
மலர் தன்னை விட்டு சென்றாலும் அவள் கணவனுடன் நன்றாக வாழ்கிறாள் என்று எண்ணி இருந்தவனுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி தான் இது....

மதிய இடைவெளியில் வானதியை என்று தேடி அவள் வகுப்பறைக்கு சென்றாள் மலர்.
வகுப்பறையில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே இருக்க... மற்ற குழந்தைகள் சாப்பிட்டுவிட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பதாக, அந்த வகுப்பின் ஆசிரியர் கூறினார்.
மலர் மைதானத்திற்கு சென்று பார்த்தால் வானதி மரத்தடியில் தனியாக அமர்ந்திருந்தாள்.

மற்ற குழந்தைகள் விளையாடும் போது இவள் எதற்கு தனியாக அமர்ந்து இருக்கிறாள்? என்று யோசித்துக்கொண்டே மலர் அவள் அருகில் சென்று அமர்ந்தாள்.

தன் அருகில் யாரோ அமர்வதை உணர்ந்து அண்ணாந்து பார்த்த வானதி... அது மலர் என்று தெரிந்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு மற்றொரு மரத்தின் அடியில் சென்று அமர்ந்தாள்.
மலரும் முகம் சுளிக்காமல், மீண்டும் வானதியின் அருகில் சென்று அமர்ந்தாள். இம்முறை மலரை கோபமாக முறைத்து விட்டு இன்னொரு மரத்தடிக்கு வானதி தாவ,
'கஜினி முகமது போல விடாமல் முயற்சி செய்ய வேண்டும்' என்று தனக்குள் நினைத்துச் சிரித்துக் கொண்டு மீண்டும் வானதியின் அருகே சென்று அமர்ந்தாள்.

இம்முறை வானதி மலரை பார்த்து அழுதுகொண்டே,
"போ அத்தை என்கிட்ட பேசாத நீ ரொம்ப மோசம்" என்று முகத்தை திருப்பிக் கொள்ள,

மலர் வானதியின் முகத்தைப் பார்த்து, "என்னடா...அத்தை என்ன தப்பு பண்ணினேன்... எதுக்கு இந்த கோபம்... சொல்லு" என்று கனிவுடன் கேட்டாள்.

"நீதான என்னோட அம்மா அப்பாவை பிரிச்ச... உன்னால தான் என்னோட அம்மா தினமும் அழறாங்க... நீ ரொம்ப மோசமானவ. உன் கிட்ட பேச கூடாதுன்னு அம்மா சொல்லி இருக்காங்க..." என்று வானதி முகத்தை சுருக்கி கோபமாக சொல்லவும்... மலருக்கு என்னவோ போலிருந்தது.

"அப்படிலாம் இல்ல குட்டிமா.. அம்மா அப்பா சீக்கிரம் சேர்ந்திடுவாங்க" என்று மலர் ஆறுதல் கூற,

வானதியோ, "நீ பொய் சொல்ற அத்தை ...என் பெஸ்ட் ஃபிரண்ட் விக்கி ஓட அப்பா அம்மாவும் அவன் பிறந்த அப்பவே பிரிஞ்சு தான் இருக்காங்க... இன்னும் சேரவே இல்லையாம்.... எனக்கு அப்பா வேணும்னு அம்மாகிட்ட சொல்லி அழுதா... என்ன நல்லா அடிக்கிறாங்க... அப்பா இருந்தா என்ன அடிக்கவே விடமாட்டார்னு அழுதுட்டே சொன்னதுக்கு... நீதான் என்னோட அப்பாவை கூட்டிட்டு போயிட்டேன்னு அம்மா அழுதாங்க... நீ ரொம்ப ரொம்ப மோசமானவளாம்... என்கிட்ட பேசாத... இங்கே இருந்து போய்டு" என்று மூச்சு விடாமல் வானதி கத்த....

பிஞ்சு குழந்தையின் மனதில் விஷத்தை விதைக்கிறார்களே! இந்த அண்ணி ...என்று நினைத்த மலரும் அதன் பிறகு எதுவும் பேசாமல் எழுந்து சென்றுவிட்டாள்.

மாலை வீட்டிற்கு வந்த மலருக்கு வானதியை பற்றிய யோசனை தான்....
"அண்ணன் எனக்காக குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சி பெரிய தப்பு பண்ணிட்டாரே... அவரோட செல்ல பொண்ணு இப்போ அவர் இல்லாமல் தவறான வழிக்கு கூட போக வாய்ப்பு இருக்கு... முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகிடக்கூடாது" என்று பலவாறு யோசித்தவள்...
இன்று உறுதியாக தன் அண்ணனிடம் இதைப் பற்றி சொல்லி... இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று அவனுக்காக காத்திருந்தாள்.

மலர் உடை மாற்றி விட்டு காபி போட்டு கொண்டு வரவும் மகேஷ் வரவும் சரியாக இருந்தது.
தான் பேச வேண்டியதை பற்றி மட்டுமே நினைத்தவள், தன் அண்ணனின் முகத்தை கூர்ந்து கவனிக்கவில்லை. ஒருவேளை கவனித்திருந்தால் அடுத்து நடக்கப் போகும் அசம்பாவிதத்தை தடுத்திருக்கலாம்.

மகேஷ் கண்களை மூடி நெற்றிப்பொட்டு அழுத்தி தேய்த்துக்கொண்டு அமர்ந்திருக்க, "காபி குடிங்க அண்ணா" என்று ஒரு கப்பை எடுத்து அவனுக்கு கொடுத்தாள் மலர்.

தங்கையின் முகத்தை பார்த்து முயன்று புன்னகைத்தவன்.... காபியை பருகிக் கொண்டே தன்னை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
"என்ன அண்ணா வேலை கிடைச்சிருச்சா?" என்று மலர் கேட்க...

"நான் இன்னைக்கு போன கம்பெனில ஆதித்யாவும் பார்ட்னர் போல... சோ அவனும் இன்டர்வியூ எடுக்கிற இடத்துல இருந்தான்" என்று தன் அண்ணன் இழுத்து சொன்னதில் இருந்தே... இந்த வேலை தங்களுக்கு இல்லை என்று புரிந்தது மலருக்கு....

இன்று காலையில் தான் தன் அண்ணனிடம் பேச சொல்லி விட்டு சென்றான்.... அதற்குள் ஏன் இந்த கொலைவெறி?? என்று நினைத்தவள்,
"இன்னைக்கு மதியம் ஸ்கூல்ல வானதியை பார்த்தேன்..." என்று அவர்கள் பேசிய அனைத்தையும் சொன்னவள்... காலையில் ஆதித்யா தன்னைப் பார்த்து பேசியதை சொல்லவில்லை மறைத்து விட்டாள்.
பின்பு அதற்காகத்தான் இப்படி பேசுகிறாள்... என்று தன் அண்ணன் நினைத்து விட்டால்....
தனது பார்வையை காபி கப்பில் வைத்துக்கொண்டே, வானதியை பற்றிப் பேச ஆரம்பித்தாள் மலர்.
"அண்ணா வானதினா உங்களுக்கு உயிர்னு எனக்கு தெரியும். அண்ணா நம்ம வானதி தடம்மாறி போய்டக்கூடாது. ஒரு நல்ல தந்தையா உங்களோட பாசமும் வழிகாட்டலும் அவளுக்கு இப்போ தேவைப்படுது.... தயவுசெஞ்சு என்ன பத்தி கவலைப்படாம அண்ணி கூட போயிடுங்க அண்ணா... அவர நா டைவர்ஸ் பண்ணா எங்க ரெண்டு பேரையும் தவிர வேறு யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்ல. ஆனா நீங்க பண்ணினா இடையில ஒரு குழந்தை இருக்கா... அவளோட எதிர்காலத்தையும் நம்ம பார்க்கணும். ப்ளீஸ் அண்ணி கூட போயிடுங்க அண்ணா. சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்.... நான் ஒன்னும் குழந்தை இல்ல. என்ன நானே பார்த்துப்பேன். என்ன பத்தி கவலைப்படாம போங்க" என்று பேசிக்கொண்டே தன் அண்ணனை பார்க்க... அவனோ சோபாவிலேயே மயங்கி சரிந்து இருந்தான்.
ஒரு நொடியில் உலகமே நின்றுபோன உணர்வுதான் அவளுக்கு....

அண்ணா.....!!! என்று கத்தி கதறியவள்...

தான் கதறினால் மட்டும் அண்ணன் சரியாகி விடுவானா? என்று மூளை விழித்துக் கொள்ள ஆம்புலன்சுக்கு கால் செய்தாள் மலர்.

அப்பொழுதுதான் வெளியே சென்று விட்டு வந்த நந்தன் காரை வீட்டிற்கு முன் நிறுத்தினான்.

எதிர்த்த வீட்டில் ஆம்புலன்ஸ் நிற்பதையும், மலர் கதறிக்கொண்டே பின்னால் ஏறுவதையும் பார்த்தவன், நொடியும் தாமதிக்காமல் தனது காரை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டவன் மலருக்கு அடுத்ததாக ஏறினான்.

மலர் எதையும் உணரும் நிலையில் இல்லை. தன் அண்ணனின் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவள்... கதறி கதறி அழுதாள்.

அவள் தான் உலகத்திலேயே துரதிர்ஷ்டசாலி. அம்மா அப்பா இல்லை. கட்டிய கணவனும் கூட இல்லை. தனக்கு துணையாக வந்த அண்ணனும் இதோ இங்கு இந்த நிலையில்....? அதற்கும் சேர்த்து தான் அழுதாள்.

மகேஷ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்க... வெளியே இருந்த இருக்கையில் அமர்ந்து... ஆற்றுவார் தேற்றுவார் இன்றி அழுதும் ...புலம்பியும் கொண்டிருந்த மலருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான் நந்தன்.

பின் அவளது அழுகையை பொறுக்க முடியாமல் அவள் அருகில் சென்று அமர்ந்து... ஒரு நண்பனாக அவளது கையைத் தட்டிக் கொடுக்க.... ஏற்கனவே விக்கி விக்கி அழுது துவண்டிருந்தவள் அதற்குமேல் அழுவதற்கு தெம்பில்லாமல் அவன் தோளிலே சாய்ந்து விழுந்தாள். தன் அருகில் இருப்பவன் யார் என்றெல்லாம் அவளுக்கு அப்போதைக்கு தெரியவில்லை...
தன் அண்ணன் நினைவு மட்டுமே அவளது நினைவில்....

நந்தனுக்கு அவளை ஆறுதல் படுத்திய திருப்தி....

ஆனால் விதி யாரை விட்டது?

விவரம் கேள்விப்பட்டு ஆதித்யா மருத்துவமனைக்குள் பிரவேசிக்கும் பொழுது அவன் முதலில் பார்த்தது என்னவோ மலர் நந்தன் அமர்ந்திருந்த நிலையை தான்...

தொடரும்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN