அத்தியாயம் 27 (final)

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆறு வருடங்களுக்கு பிறகு...
"நீங்க டிஸ்டிக்ட் லெவல்ல பஸ்ட் வர சொன்னீங்க... நான் நேஷனல் லெவல்ல வந்திருக்கேன்.... என்னுடைய சப்ஜெக்ட்ல..." என்றவள் தனது கையில் இருந்த மெடலை சக்திக்கு அணிவித்தாள் அர்ச்சனா.
டெல்லியில் ஆறுவருட படிப்பை முடித்துவிட்டு சக்தி ஊர்திரும்பி முழுதாக ஒருமணி நேரம் கூட ஆகவில்லை. புயலென அவனின் அறைக்குள் நுழைந்த அர்ச்சனா அவனை பேசவிடாமல் அவளே பேசிக்கொண்டு இருந்தாள்.
அடுத்து தனது பெரிய தோல்பையில் இருந்து ஒரு பெரிய அட்டைப்பெட்டியை எடுத்தவள், அதிலிருந்து கருநீலமும் வெண்மையும் கலந்திருந்த கண்ணாடியால் சட்டம் அமைக்கப்பட்டு பத்திரப்படுத்தி இருந்த ஒரு சான்றிதழை அவன் கையில் கொடுத்து "லார்ஜஸ்ட் ஸ்பிரே பெயிண்ட்டிங்காக (largest spray painting) நான் வாங்குன கின்னஸ் ரெகார்ட் இது..." என்றவள் பிறகு ஒரு பைலை எடுத்து காட்டி "இதுல இருக்குறது எல்லாம் நான் யுனிவர்சிட்டி லைவல், ஸ்டேட் லெவல், டிஸ்டிக்ட் லெவல்ன்னு நான் வாங்கின சர்டிபிகேட்ஸ்... வீட்டுல இன்னும் பிரைசஸ் மெடல்ஸ்லாம் இருக்கு... நியுரோ சர்ஜனான உங்களுக்கு இப்பவும் நான் தகுதியானவளான்னு எனக்கு தெரியாது... ஆனா இந்த ஆறு வருஷத்துல நான் உங்களை நினைக்காத நாள் இல்லை... எனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திகிட்டு தான் உங்க முன்ன வரனும்னு நினச்சேன்... என்னால முடிஞ்ச அளவு பன்னிட்டேன்... இனி நீங்க தான் சொல்லனும்..." என்று அவள் அமைதி காத்தாள்.
"அச்சு... ஒரு இரண்டு வருஷம் பொறுத்து நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாமா... அதுவரைக்கும் நாம லவ் பன்னலாம்..." என்ற சக்தி விரைந்து வந்து அவளை கட்டிக்கொள்ள அர்ச்சனா வானத்தில் இறகில்லாமல் பறந்தாள்.
*************
வங்கியில் வாங்கிய கடனை கட்ட முடியாமல் திணறிக்கொண்டு இருந்தாள் சுபத்ரா. அர்ஜூனை தொழிலில் வீழ்த்தவேண்டும் என்று நினைத்து, அர்ஜூன் வாங்கவிருந்த ஒரு நிறுவனத்தின் பங்குகளை சுபத்ரா நிறைய பணம் முதலீடு செய்து வாங்கியிருந்தாள். ஆனால் அவள் எதிர்பார்த்தபடி அர்ஜூன் அந்த நிறுவனத்தின் மற்ற பங்குகளை வாங்காமல் வெளிநாட்டிற்கு பறந்திருந்தான்.
அர்ஜூனையும் பழிவாங்க முடியாமல், போட்ட பணத்தையும் திரும்பப்பெற இயலாமல் திண்டாட்டத்தில் இருந்தவள், செய்த தவற்றை உணர்ந்து, ஒருநாள் யாருக்கும் தெரியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என ஊரைவிட்டே ஓடியிருந்தாள்....
*********
"நிலா... இந்தா இதையும் சேர்த்து பார்த்துடு...." என்றவாறு ஒரு பெரிய நோட்டை வெண்ணிலாவின் முன் போட்டான் நிரஞ்சன்.
"ஏங்க... மணி ஒன்னு... ப்ளீஸ் என்ன விட்டுடுங்க... எனக்கு தூக்கம் வருது..." என்றபடி ஒரு கொட்டாவியை வெளிவிட்ட வெண்ணிலாவை இரசித்து பார்த்தவன் "செல்லக்குட்டி... காலைல பத்துமணி வரைக்கும் கூட தூங்குடி செல்லம்... எனக்கு இப்போ இந்த கணக்கு வழக்கை முடிச்சு குடுத்துடு... நாளைக்கு டேக்ஸ் கட்ட கடைசி நாள்...ப்ளீஸ்டி செல்லம்..." என்றவன் அவளுக்கு மெதுவாக கால் பிடித்து விட, அந்த இதத்திலேயே மேலும் தூங்கிப்போனாள் வெண்ணிலா.
"அடிப்பாவி..." என்றவன் அவளின் தூக்கத்தை கெடுக்க மனமில்லாமல் அவளை கட்டிலில் சாய்ந்து படுக்க வைத்துவிட்டு, தன் கைப்பேசியையும் அனைத்து டாக்குமெண்ட்களையும் எடுத்து கொண்டு வெளியேறினான்.
வெண்ணிலா சிவரஞ்சனியின் இளங்கலை கல்வியியலில் உடன் பயின்ற தோழி. ஒன்றாகவே அவளுடன் வேலையும் செய்தாள். தற்போதும் ஸ்ரீ சிவசக்தி பள்ளியில் கணித ஆசிரியை. நிரஞ்சனுக்கு உற்ற தோழியான இவள், ஒருகட்டத்தில் நிரஞ்சனை காதலிக்க ஆரம்பிக்க, அதை சொல்வதற்குள் அவளின் தலையில் இடியாக இறங்கியது, நிரஞ்சன் சிவாவை காதலிக்கிறான் என்ற தவறான செய்தி... அதுவும் நிரஞ்சனின் தங்கை நிக்கித்தாவின் வாயாலிருந்து...
அதை உண்மை என்று நம்பியவள், சிவரஞ்சனி அர்ஜூனை திருமணம் செய்த பிறகு, ‌தன் வழி சரியானது என்று மகிழ்ச்சி அடையாமல் நிரஞ்சனுக்காய் வருந்தினாள். சிவரஞ்சனியிடம் பேசுவதை கூட நிறுத்திவிட்டாள். அன்றொருநாள் அர்ஜூனையும் சிவரஞ்சனியையும் ஒன்றாக பார்த்தவள், கோபமாக முகத்தை திருப்பி கொண்டு சென்றுவிட்டாள்...
அதற்கு பிறகு இரு ஆண்டுகள் கழித்து தான் தெரியவந்தது நிக்கித்தா கூறியது பொய் என்று... உடனே நிரஞ்சனிடம் சென்றவள், தன் காதலை கூற, முதலில் தயங்கிய நிரஞ்சன் பிறகு அவளின் காதலை ஏற்றுக்கொண்டான். தற்போது அவர்களுக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
"என் அத்தை பெத்த இரத்தினமே... என்ன பன்னற.‌.. எப்படி இருக்க..." நிரஞ்சன் கேட்ட கேள்வியில் குறும்பு மேலிட "லவ்வர்... எப்படி இருக்கீங்க... இங்கு அனைவரும் நலம்... அங்கு நலமா... சும்மா தான் இருக்கோம்.... சொல்லுங்க..." சிவரஞ்சனி துள்ளலாக பேசினாள்.
"அம்மா தாயே... அத விடவே மாட்டியா..." என்று அழுவது போல் கேட்டான் நிரஞ்சன்.
சிவரஞ்சனியை காதலிப்பதாக நிரஞ்சன் கூறிய பொய் அவனை மிகவும் வாட்டியது. தங்கை போல் நினைப்பவளை இப்படி கூற வைத்துவிட்டாளே என்று புலம்பித் தவித்தான் நிரஞ்சன். எனவே அவனை சரிசெய்யும் பொருட்டு, பழையபடி கிண்டலில் இறங்கி லவ்வர் என்று கூறி, அவனை சிரிக்க வைத்தாள் சிவரஞ்சனி. அதுவே காலப்போக்கில் அவனை சாதாரணமாக கிண்டல் செய்யும் வார்த்தையாக மாறியிருந்தது.
"வாய்ப்பில்லை ராசா..." என்றவள் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருக்க, பிறகு தொலைபேசி அர்ஜூனின் கைக்கு மாறியது. பிறகு இருவரும் தொழிற் சம்பந்தப்பட்ட பேச்சுக்கு மாறினர். வீடியோ காலிலேயே தொழில் வரி சம்மந்தப்பட்ட வேலைகளை நிரஞ்சனுக்கு முடித்துத்தந்தான் அர்ஜூன். இந்த ஆறு வருடத்தில் இருவரும் நல்ல நண்பர்கள் ஆகினர்.
********
"அஜூ.... உங்க பையன் சாப்பிட மாட்டீங்குறான் பாருங்க... வந்து அவனுக்கு ஊட்டிவிடுங்க..." சிவரஞ்சனியின் குரல் அதட்டலாக வந்தது.
அவளின் குரலுக்கு செய்துக்கொண்டு இருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு வந்தவன் "ஆதி... ப்ளீஸ் குட்டி... சாப்பிடுடா... அப்போதான் கேப்டன் அமெரிக்கா மாதிரி பவர்ஃபுல்லா இருக்க முடியும்... அயன் மேன் மாதிரி ஜீனியஸ்ஸா இருக்க முடியும்... நட்டாஷா மாதிரி ஸ்பீடா இருக்க முடியும்..." என்று அவன் ஏற்ற இறக்கத்துடன் கூற, "என்ன குட்டின்னு கூப்பிடாதீங்கன்னு சொன்னேன் இல்ல...." என்று முறுக்கிக்கொண்டான் அவர்களின் நான்கு வயது பையன்.
அர்ஜூனுக்கு ப்ரொமோஷன் கிடைத்திருந்ததால், அர்ஜூனும் சிவரஞ்சனியும் நியூயார்க்கில் குடியிருக்க வேண்டியதாக போயிற்று. கடந்த ஆறு வருடங்களாக அங்கு தான் இருந்தனர்‌.
இந்த ஆறு வருடத்தில் அவர்களுக்குள் காதல் பெருகிக்கொண்டே சென்றது. அர்ஜூன் கோபம் என்பதையே மறந்து முற்றிலும் மாறியிருந்தான்... ஆனால் அவர்களின் குட்டிக் கண்ணன் ஆதி மட்டும் பழைய அர்ஜூனை கார்பன் காப்பி அடித்தார் போன்று இருந்தான். எதற்கெடுத்தாலும் கோபம்... பள்ளியில் யாரையாவது அடித்துவிட்டு வருவது என்று இருந்தவனுக்கு அர்ஜூனைப்போல் மூளையும் அதிகமாகவே இருந்தது.
"நீ சாப்பிடலைன்னா நான் அப்படித்தான் கூப்பிடுவேன்..." என்றவன் "குட்டி... குட்டி... குட்டி..." என முழங்க அவனை பிடித்து சோஃபாவில் தள்ளிய ஆதி, அர்ஜூனின் மேல் அமர்ந்து அவன் நெஞ்சிலேயே குத்த ஆரம்பிக்க "நல்லா அடி ஆதி...." என்று கூறிய சிவரஞ்சனி, நிறைமாத வயிற்றுடன் உதட்டில் உறைந்த புன்னகையுடனும் அவர்களை இரசித்து கொண்டு இருந்தாள்.... ஆழியாய் அவனின் காதல் அவளை சூழ்ந்திருக்க, அவளின் உலகம் பேரின்பமாய் அமைந்தது...
*சுபம்*



​
 

Author: Priya Pintoo
Article Title: அத்தியாயம் 27 (final)
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN