mm-1

Rajeshwari karuppaiya

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
1

காட்சிப் பிழையாய் வரும் கனவுகள் துர் சொப்பனங்களில் சேராமல் போகும் நேரம் மிக நுண்ணிய நூலிழையில் வந்து போகும் ஆசையே வாழ்க்கையின் ஆதாரமாவும் அடித்தளமாவும் மாறிப் போவதுண்டு.

எனக்கும் ரொம்பவே சின்னதாய் ஒரு ஆசை முளைத்திருக்கிறது. மலர்விழியின் தந்தையின் மனதில் என் மீதான கடுகளவு நேசமாவது இந்த திருமணத்தின் ஆதாரமாய் அமைந்துவிட்டிருக்கும் என்று.

என் ஆசைக்கும் நிதர்சத்திற்கும் இடையில் நான் ஊசலடிக்கொண்டே நடக்கும் நிகழ்வுகளை பார்த்திருந்தேன்.

"இந்தப் புள்ளைக்கு என்ன குறைச்சல்ன்னு இப்படி ரெண்டாந்தாரமா கட்டி குடுக்க முடிவு பண்ணிருக்கீங்க ண்ணா.. புள்ள பவுனு கணக்கா மின்னுது. காலேசும் முடிச்சருக்கு. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்தா நல்ல வரணு அமையாமையா போயிரும் "என்று அங்கலாய்த்த என் அத்தையை 'ச்சு போ 'என்று லூசில் விட்டார் என் அப்பா தருமன்.

'நல்லாத்தான் வச்சாங்க பேரு தருமன். என்னை வசமாய் அடகு வைக்க எந்த இடம் தோதுப்படும்னு மனுஷன் அலைஞ்ச அலைச்சல்ல ஒரு சுத்து எளச்சு போய்ட்டாரு பாவம் 'என் மண்டைக்குள் இப்படியான பரிதாபம் வேறு.

"என்ன மச்சான் உங்க தங்கச்சி கேக்குறதுலயும் நாயம் இருக்குல்ல. இப்பென்ன அம்சுக்கு இருவத்தஞ்சு தான ஆச்சுது. இன்னும் ஒரு வருஷம் பொறுத்து தான் பாப்போமே."என்ற என் மாமாவின் பேச்சை ஊதி தள்ள முடியாமல் என் அப்பா கொஞ்சம் தொண்டையை செருமிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

"எனக்குமட்டும் எம்புள்ளய இப்படி கட்டி குடுக்க தேனாட்டம் இனிக்கவா செய்யுது மச்சா. அம்சா கண்ணாலத்துக்கு அஞ்சு வருஷம் முன்ன சோசியம் பாக்கும் போதே அந்தாளு சொன்னான். உன்ற மவளுக்கு ரெண்டாந்தாராம்னு. நீயும் வேணாம் உன் கிரகமும் வேணாம்னு அவனை மிதிச்சுட்டு வந்தவன் தான் நானு. இப்போ இத்தன வருசத்துல ஒரு மாப்பிளை முடிஞ்சுதா மச்சா.

சாதகத்துல ரகு கேதுன்னு இல்லாத பரிகாரம் பண்ணியாச்சு. கடைசியா இந்த மாப்பிள்ளை ஜாதகம் தான் பொருந்தி போயிருக்கு. இதையும் தட்டி கழிச்சு வுட்டுட்டு என்ன பண்றது மச்சான். நாளைக்கு இதுக்கு புறவு இருக்குற புள்ளைய நான் பாக்கணுமில்ல."

"புரியுது மச்சான். ஆனாலும் என்னவோ புள்ளைய பாக்க பாக்க மனசு ஒப்ப மாட்டிங்குது."என்றார் எனைப் பார்த்து பாவமாய்.

"நீங்க வெசனப்படாதீங்க மச்சா. பையன் படிச்சு நல்ல வேலைல இருக்காப்புடி. நம்ம சனத்துல கொஞ்சம் வசதியானவங்க தான். அவிங்க ஆத்தா அப்பன்னு எல்லாம் நல்ல மனுசங்க தான். மொத பொண்டாட்டி பிரசவத்தப்ப சன்னி வந்து செத்து போச்சாம். பச்ச புள்ளைய வச்சுட்டு அல்லாடிருக்காங்க. இந்த பையனும் மறு கண்ணாலம் பண்ண மாட்டேன்னு ஒரே புடிவாதமா இருந்துருக்கு. இப்ப தான் பேசி கீசி சம்மதிக்க வச்சுருக்காங்க.பையனும் வெளிய பழக்க வழக்கம்லாம் சுத்தமாதேன் இருக்கு"

"புறவு நம்ம அம்சாளுக்கு அந்த பையன்தான்னு எழுதியிருந்தா நாம மாத்தவா முடியும். ஏதோ நம்ம அண்ணி உசுரோட இருந்திருந்தா இன்னும் இந்த புள்ளைக ரெண்டும் நல்லா இருந்துருக்கும் "என்று சொல்லி மூக்கை உறுஞ்சிக் கொண்டார் என் அத்தை.

எனக்குமே சட்டென கண்ணீர் வர பார்த்தது தான். சட்டென தலையை குனிந்து கொண்டேன்.

"நம்ம கண்ணீரெல்லாம் நம்ம கண்ணு மட்டும் தான் பாக்கோணும். வேறவங்க கண்ணில்ல "இப்படி சில பல கோட்பாடுகள் மனதுக்குள் மணியடிக்கவும் தான் கண்ணை சிமிட்டி சமாளித்துக் கொண்டேன்.

குனிந்து கொண்டிருந்த என்னை பக்கத்தில் ஒரு சுண்டெலி சுரண்டியது.

"அக்கா அழறையா..?" என் பாசக்கார தங்கை தான்.'பயபுள்ள எப்படித்தான் கண்டு பிடிக்குதோ? சமாளி அம்சு.'

"நானெங்கடி அழுவுறேன். நீ வேற புரளிய கெளப்பாத. அப்புறம் ஒட்டு மொத்த கூட்டமும் கட்டிக்கிட்டு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுடும்."

"ச்ச உனக்கு கல் மனசுக்கா. அம்மா இல்லாம எவ்ளோ கஷ்டமா இருக்கு தெரியுமா."என்று சின்னவள் அழ தயாரானாள்.

"நீலும்மா நான் உனக்கு அம்மா மாறி தானே டா.."

"நீதானே.. ஒரு நாளாச்சும் என்ற தீனிய புடுங்கி திங்காம இரு ஒத்துக்கறேன்.."என்றாள் முறைத்துக் கொண்டே.

'பாவி புள்ள அடி மடில கை வைக்குறாளே. ஏதாச்சும் சொல்லி சமாளிக்கணுமே. ஹான் கெடச்சுப் போச்சு '

"அடியே நீலு இப்படி சொல்லிட்டல்ல டி. பாத்துக்கலாம் டி.நைட்டு பாத்ரூமுக்கு துணைக்கு வா! பல்லு விளக்க துணைக்கு வான்னு கூப்புடுவல்ல. அப்ப இருக்குடி உனக்கு.."

நான் நம்பியார் ரெஞ்சில் கையை பிசைய,

"க்கும்! இனி கூப்பிட மாட்டேன். அப்பா எனக்கொசரம் நம்ம பெட்ரும்குள்ளயே பாத்ரூம் கட்டி தரேன்னு சொல்லிருக்காரே "என்று முகத்தை வெட்டிக்கொள்ள,

'இந்த தருமருக்கு எப்பவும் சின்ன புள்ள தான் ஒசத்தி 'என்று நானும் என் மனதுக்குள் முறுக்கி கொண்டேன்.

****

நிக்க நேரம் இல்லாமல் ரெக்கை கட்டிக்கொண்டு ஓடியது நாளும் கிழமையும். என் வீடு முழுதும் சந்தை சாவடியெல்லாம் புற முதுகிடும் அளவிற்கு இரைச்சல் நிறைந்து காதை அடைத்தது.

நானோ பொம்மைக் கட்டை போல முகத்தை ஒப்பனைக்கு குடுத்துவிட்டு அமர்ந்திருந்தேன். 'பவுடரும் பொட்டும் வைத்திருந்தாலே போதுமட்டும் அழகாய் இருந்துருப்பேன். எதுக்கு இந்த கிரீமும் லிப்ஸ்டிக்கும் ' மனம் ஒரு புறம் சலசலத்தது.

"அக்கா அழகா இருக்க.."என் கன்னத்தை பிடித்துக் கொஞ்சினாள் நீலு.

"அதான்டி அம்சவேணி ன்னு பேர் வச்சுருக்காங்க "என்றேன் குறும்பாய்.

"பிறகு எனக்கு மட்டும் எதுக்கு நீல வேணின்னு வச்சுருக்காங்க. நான் என்ன நீலமாவா இருக்கேன்."உச்ச பச்ச பேர் ஆராய்ச்சியில் இருந்தவளை தலையை தட்டி வெளியே விரட்டி விட்டேன்.

என்னை விட ஐந்து வயது தான் சின்னவள் மனம் மட்டும் குழந்தையை போல. தொட்டது தொண்ணூறுக்கும் நான் வேண்டும் இவளுக்கு. நான் போன பிறகு இவள் தனியாக சமாளித்தாக வேண்டும் மெல்லமாய் பேருமூச்சு கிளம்பியது. விழியோரம் கண்ணீர் துளி முனுக்கென எட்டிப் பார்த்தது.

கைபேசி ஓரமாய் கிர் கிர்ரென ஒலி எழுப்பவும் எடுத்துப் பார்த்தேன். விவேகானந்தன் என்ற பெயர் திரையில் ஒளிரவும் முகம் பளிச்சென விளக்கு போட்டது. சிரிப்புடனே அழைப்பை ஏற்றேன்.

"என் செல்லத்துக்கு இப்போ தான் என் நியாபகம் வந்துச்சா?"போலி கோபத்துடன் நான்.

"......."

"நோ நோ... நான் உன் மேல கோவமா இருக்கேன்."

"........"

"அச்சோ இப்படி முத்தம் குடுத்தே கவுத்துடுறடா நீ. "

"......."

"சாரி சாரி...இந்தா உம்ம்மா....உம்ம்மா "போனில் முத்தமழை பொழிந்து விட்டு ஏதேச்சையாய் நிமிர, என்னை சுற்றியிருந்த அனைவரும் வாயை இறுக மூடி சிரிப்பை அடக்கி கொண்டிருந்தனர்.

"எதுக்கு இப்ப அல்லாரும் சிரிக்குறீக."என் மூக்கு விடைத்துக் கொண்டு நின்றது.

"ஏன்டி அம்சு கொஞ்சங்கூட கூச்சம் இல்லாம எங்க முன்னாடியே இப்படி கொஞ்சிட்டு கிடந்தா சிரிக்காம வேற என்ன பண்ணுவாங்க "என்று சொல்லி எங்க அத்தை என் கன்னத்தில் இடித்தார்.

வலித்த கன்னத்தை தேய்த்துக் கொண்டே "ஏன் கொஞ்சுனா என்ன தப்பாம்.. கொஞ்சுறது என்ன,தூக்கி இடுப்புல கூட வச்சுக்குவேன். இதுல எதுக்கு கூச்சம் வேண்டி கிடக்கு " எனக்கு சத்தியமாய் புரியவே இல்லை.

"நாளைக்கு உன்ற புருஷன இடுப்புல தூக்கி வச்சுக்கோ, மடில போட்டு தாலாட்டிக்கோ யாரு வேண்டாங்குறா."என்று இன்னொருத்தர் விஷமமாய் சொல்ல, நான் அதிர்ச்சியில் எழுந்தே விட்டேன்.

"அய்யயோ சித்தி நான் இப்ப பேசுனது மலரு கிட்ட. அவிங்க கிட்ட இல்ல.."என்றேன் வேகமாய்.

'அய்யோடா இவங்க சொன்னதை நினைச்சி பார்த்தா கூட கை முடியெல்லாம் கூசி போகுதே'

சுற்றிலும் கொல்லென்ற சத்தத்துடன் அறையே சிரிப்பில் நிறைந்து போனது.
நானோ வெட்கத்தில் உதட்டை கடித்து நின்றிருந்தேன். என் அருகில் வந்த அத்தை "கண்ணு மாப்பிள்ளை தம்பிய உனக்கு புடிச்சு தான கல்யாணம் பண்ணிக்குற.."என்றார் மெதுவாய்.

எனக்குள்ளும் அந்த கேள்வி இருக்கே. எனக்கு அவரை பிடித்திருக்கா, திருமணத்திற்கு பின் வரும் நெருக்கத்தை மனமுவந்து ஏற்பேனா. இரண்டாம் இடத்தில் இருக்கும் என் நிலையை எந்த அளவுக்கு மனசு சமாளிக்கும் . அதி முக்கியமாய் அவருக்கு அந்த விவேகானந்தனுக்கு என்னை பிடிச்சிருக்கா????.

கேள்விக்குறியாய் மண்டை குடைச்சல் எடுக்க என் அத்தையை பார்த்து கோட்டு புன்னகை மட்டுமே குடுத்தேன் அவருக்கு பதிலாய்.

என்ன புரிந்ததோ. என்னவாக எடுத்துக்கொண்டரோ "நீ சந்தோசமா இருக்கனும் கண்ணு "என்றவர் அறையை விட்டு வெளியே அழைத்துச் சென்றார்.

இது மாப்பிள்ளை வீட்டு முறையில் இரண்டாம் மணம் இல்லையா. பெரிதாய் கும்பல் கூட்டம் ஆடம்பரம் என்று கொண்டாடாமல் எளிமையாய் எங்கள் ஊரில் இருந்த கோவிலில் திருமணமும் சமுதாயக் கூடத்தில் சாப்பாடும், வீட்டிற்கு வெளியே சின்னதாய் மேடை வைத்து வரவேற்பும் வைத்துக் கொள்வதாய் ஏற்பாடு செய்திருந்தனர்.

நாங்கள் கோவிலின் உள்ளே நுழையும் போதே பார்த்திருந்த மலர் என்னை நோக்கி ஓடி வந்தாள். மணி வைத்த கொலுசின் சத்தம் என்னை சமீபத்திருந்த நேரம் அவளை தூக்கி கொண்டேன்.

ஒல்லியாய் வெள்ளையாய் இருந்த மலருக்கு என்னை பார்த்ததும் சின்னதாய் வெட்கம் வேறு வந்து விட்டது. அவளின் தலையை பற்றி கன்னத்தில் முத்தமிட்டேன். அவளும் பதிலாய் தந்தாள் என் கன்னத்தில். இது எங்கள் ஜென்டில் அம்மா பொண்ணு அக்ரீமெண்ட்.

தூரத்தில் இருந்து எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார் மலரின் தந்தை விவேகானந்தன். நானும் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.பட்டு வேஷ்டி சட்டையில் பனைமர உயரத்தில் இருந்தார்.நெற்றியில் சந்தனம் திருநீருடன் கொஞ்சமே கொஞ்சம் அழகாகத் தான் இருந்தார்.

'ஓரு பொண்ணுக்கு அப்பா மாதிரியா இருக்கார்'என் மனம் வேறு ரன்னிங் கமெண்டரி அடித்தது.

என் குறு குறு பார்வை அவர் கண்ணை கூச வைத்திருக்க வேண்டும். என்னிடம் இருந்து சற்று நேரத்திலேயே பார்வையை விலக்கிக் கொண்டார்.

எனக்கு வேறு அசந்தர்ப்பமாய் ஒரு எண்ணம் வேறு வந்து தொலைத்தது 'இந்த நேரத்தில் அவருடைய முதல் திருமணத்தையும் முதல் மனைவியையும் நினைத்துக்கொண்டிருப்பாரோ என்று'

மானசீகமாய் தலையில் தட்டிக் கொண்டேன். 'உன்னை வருத்தப்படுத்தும் எதையும் சிந்திக்காதே மனமே 'என்று.

என்னிடம் வந்த என்னுடைய வருங்கால மாமியார் மலரை என்னிடம் இருந்து வாங்கிக் கொண்டார்.என்னையும் கை பிடித்து அழைத்துச் சென்றார் அவர் மகனிருக்கும் இடத்திற்கு.

சற்று நேரத்தில் ஆரம்பமான மந்திர ஓதல்களின் முடிவில் செல்வி அம்சவேணியாகிய நான் திருமதி அம்சவேணி விவேகானந்தன் ஆகியிருந்தேன்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN