நெஞ்சம் 4

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாலை, வேலை முடித்து வந்ததிலிருந்து... மகனின் முகம் வாடியிருப்பதை இப்படியும்... அப்படியும்... நொடிக்கு ஒரு முறை நடந்து கவனித்து கொண்டிருந்தார் தமிழரசி. வீட்டில் அணியும் உடையான கையில்லாத பனியன் மற்றும் கைலிக்கு மாறியிருந்தவனோ... வந்ததிலிருந்து யாரிடமும் பேசாமல் கூடத்தில் உள்ள சுவற்றில் சாய்ந்து... இடது காலை நீட்டி... வலது கால் முட்டியில் ஒரு கையை அண்டு கொடுத்து அமர்ந்திருந்தான்.

எப்போதும் திபாகரன் இப்படி இருப்பவன் அல்ல. வந்ததும் அன்றைய நிகழ்வுகளை தாயிடம் கேட்பான்... தங்கைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து, அவர்களுக்கு வீட்டுப் பாடம் முடிக்க உதவுவான். ஆனால் இன்று... அவனிடம் எந்த அசைவும் இல்லை... அமர்ந்தவன் அமர்ந்தவன் தான்.

பொறுத்து பொறுத்துப் பார்த்த தமிழரசி, “என்ன திபா... உடம்புக்கு என்ன செய்து... அப்பா ஞாபகமா?...” காலையில் மருமகளைப் பற்றி பேசியது எல்லாம் மறந்து போக, கணவனைப் பற்றி அவர் கேட்க... எதற்கும் பதில் தரவில்லை அவன்... அதே அமைதி அவனிடம்.

“என்ன கண்ணா... நீ இப்படி இருந்து நான் பார்த்தது இல்ல... பெத்தவ மனசு தவிக்குது... சரி செய்ய முடியாததுன்னு எதுவும் இல்ல திபாகரா... உன் அப்பா இழப்பையே நாம தாண்டி வந்திடலையா... அதனாலே, நீ கலங்காத...” பெரியவள் எடுத்துச் சொல்ல

அதில், தாயின் மடியிலேயே... தலை சாய்த்துக் கொண்டான் திபாகரன். கண்கள் கலங்க தாயின் கரங்கள் மகனின் கேசத்தை வருடியது.

“எல்லாம் சரியாகிடும் தம்பி... அப்பன் முருகன் கை விடமாட்டான் ராசா...” என்னவென்று தெரியாமலே மகனுக்கு ஆறுதல் அளித்தது அந்த தாய் உள்ளம்.

அவன் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டதும் தங்கைகளுக்கு தாங்கவில்லை. “அண்ணா... இந்த சுடிதாரை... அந்த டைலர் அக்கா சரியாவே தைக்கலனா... நீ ஆசையா பார்த்து பார்த்து வாங்கி கொடுத்தது.... வா ண்ணா ஒரு எட்டு கடைக்கு போய் என்னன்னு கேட்டுட்டு வரலாம்...” சித்ரா... தமையனின் மனதை மாற்ற முயற்சிக்க...

“நாளைக்கு போகலாம் சித்ரா...” தாய் மடியிலிருந்து முகத்தை நிமிர்த்தாமலே பதில் அளித்தான் இவன்.

இதற்கு மேல் என்ன செய்வது... என்ன பிரச்சனை என்று யாரும் அவனை கேட்டு நச்சரிக்கவில்லை... அதே சமயம் தமையனை இப்படி காணவும் யாருக்கும் மனமில்லை.

“அண்ணா இந்த தவமதியை பாரேன்... என்னை வீட்டு பாடமே எழுத விட மாட்டேங்கிறா... நான் ரெக்கார்ட் நோட் முடிச்சிட்டேன் ணா... ஆனா இவ முடிக்காம... என்னை வரைந்து தர சொல்லி தொந்தரவு செய்றா... கொஞ்சம் மிரட்டு ணா இவளை...” குலமதி... தங்கையை போட்டுக் கொடுக்க

அங்கு கூடத்தில் அமர்ந்து தான் இருவரும் வீட்டு பாடம் செய்தார்கள். இருவரும் இரட்டையர்கள் என்றாலும்... முதலில் குலமதி பிறந்ததால்... அக்கா ஸ்தானத்தை அவள் பிடித்துக் கொண்டாள்.

“அண்ணா... எனக்கு சரியாவே வரைய வர மாட்டுது... இவளும் வரைந்து தர மாட்டா... அட்லீஸ்ட் நீயாவது வரைந்து தா ண்ணா...” தவமதி கெஞ்ச

அந்த கெஞ்சல் அவனிடம் வேலை செய்தது... எழுந்து அமர்ந்தவன்... முதலில் எந்த பேச்சும் இல்லாமல்... தங்கைக்கு வரைய ஆரம்பித்தவன்.... பின் மெல்ல மெல்ல மற்றவர்களின் பேச்சிலும் கலக்க ஆரம்பித்தான்... அவனுக்கு தன் குடும்பத்தை நினைத்து பெருமையாய் இருந்தது. மறுநொடியே இப்படி ஒரு பாசத்தில் உருவான தன் குடும்பத்தில் அவளும் இல்லையே என்று... மனைவியைத் தான் தேடியது இவன் மனது.

இரவு உணவையும் வீட்டில் உள்ளவர்களுக்காக பேருக்கென்று தான் உண்டான். அப்போது, “அண்ணா அடுத்த வாரம் எங்களுக்கு பிறந்த நாள் வருது... நீ தானே சொன்ன... வெளிநாட்டிலிருந்து வந்த உடனே அதை சிறப்பா கொண்டாடலாம்னு...” குலமதி அவனுக்கு நினைவுபடுத்த

“அதுக்கு என்ன.. சிறப்பா கொண்டாடிடலாம் குலமதி. முதலில் வீடு மாற்றுவோம்.... அப்புறம் உங்க அண்ணி வந்திடுவா... எல்லோரும் ஒண்ணா சேர்ந்து கொண்டாடிலாம்....”

தமையனின் பதிலில் “ஹேய்... தன்யா அண்ணியா... ணா...” குலமதி ஆர்வமாய் கேட்க

“உங்களுக்கு வேற அண்ணி இருக்காளா..” இவன் மறு கேள்வி கேட்க

“ஹை... அப்போ தன்யா அண்ணி தான் டி. அண்ணா.. அண்ணியை உன் கல்யாணத்தன்னைக்கு பார்த்தது. அதற்கு பிறகு பார்க்கவேயில்ல. எனக்கு அவங்க முகமே மறந்து போயிடுச்சு ணா...” தவமதி தமக்கைக்கு பதில் தந்தவள்... பின் இறுதியில் தன் மனதை சொல்ல

‘ஆனா எனக்கு அந்த மாசுமருவற்ற குழந்தை முகம் மறக்கவே மறக்கலை...’ என்று கூக்குரல் இட்டது இவன் மனது. அதன் பின் மனைவியின் நினைவுகள் அவனை அழுத்த... மூச்சு முட்டவும்.. தன் படுக்கையை எடுத்துக் கொண்டு மாடிக்கு வந்து விட்டான் அவன்.

இங்கு, பலதரப்பட்ட குடும்பங்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு அடையாளமாய்.. ... கீழே குடியிருக்கும் ஆண்கள் பல பேர் மாடியில் படுக்க... தங்கள் படுக்கையை விரித்து... போனில் பாட்டு கேட்டுக் கொண்டும்... பேசிக் கொண்டும் இருந்தார்கள். தந்தை இருந்தவரை... திபாகரனுக்கும் இரவு படுக்கை இங்கு தான். நன்றாக கொட்டம் அடித்து விட்டு பின்னே தான் அனைவரும் உறங்குவார்கள். அதில் சிறுவர்... சிறுமிகளும் உண்டு.

ஆனால் இப்போது பெண் பிள்ளைகளை யாரும் இங்கு உறங்க அவரவர் வீட்டில் அனுமதிப்பது இல்லை. நம்பிக்கை இல்லை என்பதை விட... இப்போது நாடு இருக்கும் சூழ்நிலையில்... பயம் தான் பெண்ணைப் பெற்றவர்களை ஆட்டிப் படைக்கிறது.

திபாகரனைக் கண்டதும்... அங்கு இருந்தவர்கள் ஆளாளுக்கு அவனிடம் நலம் விசாரித்து.. கதை பேசினார்கள். அப்படி அவர்கள் பேசியது எல்லாம்... அவனின் மாமனார் மகிழ்வரதனின் புகழையும்... இவன் மனைவியின் நலம் பற்றி விசாரிப்பதாக இருக்கவும் மேற்கொண்டு அங்கு உறங்க பிடிக்காமல் கீழே தங்கள் பகுதிக்கே வந்து விட்டான் இவன்.

இவன் வாசல் கதவைத் தட்ட.. கூடத்தில் படுத்திருந்த தமிழரசி கதைவைத் திறந்தவர்... மகன் கூடத்தில் படுக்க பெட்ஷீட்டை விரிக்கவும்... மகனைத் தடுத்து... பாயை விரித்தவர், “சூடா... பால் எடுத்துட்டு வரேன்... குடிச்சிட்டு படு டா திபாகரா...” என்றவர்... மகனின் பதிலை எதிர்பார்க்காமல் சமையலறை சென்று அவனின் உறக்கத்திற்கு இவர் பாலை மிதமான சூட்டில் எடுத்து வந்து கொடுக்க.. மறுக்காமல் வாங்கிக் கொண்டான் இவன். வேறு பேச்சு இல்லாமல் தமிழரசி சமையல் அறையில் படுக்கையை விரித்து உறங்க சென்று விட... தானும் படுக்கையில் சாய்ந்தான் இவன்.

ஆனால் நித்திரா தேவி தான் அவனை நெருங்கவில்லை. அவன் சிந்தனை முழுக்க... மாலையில் வக்கீல் வல்லவனிடம் பேசிய பேச்சிலேயே சுழன்றது.

“அப்போ உன் மனைவி தர தண்டனையை ஏத்துக்க...” அவர் வைத்த வாதத்தில் இவன் நிலைகுலைந்து தான் போனான்.

‘நான் செய்ததற்கு மன்னிக்க வேண்டாம்... அதற்காக ஆயுள் தண்டனையா?!...’ இவன் மனம் மருகியது.

“ஒருத்தன் பேசலை என்கிறதுக்காக... விவாகரத்து வரை அவ போகலாமா சார்?” இவன் ஆற்றாமையில் கேட்க

“இங்க தான் நீ மறுபடியும் தப்பு செய்ற திபாகர்... சரி உன் வாதத்துக்கே வரேன்... இப்போ ஒண்ணும் நாம பண்டை தமிழர் மாதிரி ஒருவரை ஒருவர் பேசிக்க புறா விடு தூது காலத்தில் இல்ல... நொடிக்கு நொடி நம் மனதிற்கு விருப்பமானவர்களிடம் பேச... கையில் ஆன்ட்ராய்டு போன் இருக்கு.

இப்படி பட்ட காலத்தில்... தன்னிடம் பேசாத கணவன்... அவன் எங்கு இருக்கிறானே தெரியாது... அவன் உயிரோட தான் இருக்கிறானா... இல்ல வேறு ஒரு பெண் கூட வாழ்கிறானா... இது எதுவும் தெரியாது. எல்லாவற்றிக்கும் மேல் தன்னைப் பிடிக்கலையோ.. தன்னிடம் உள்ள பிரச்சனையால் ஒதுங்கிட்டாரோ...ஒருவேளை அவருக்கு விவாகரத்தில் விருப்பமோ… அதை அவர் வாய் மொழியாக கேட்காததால் நாமே தந்திடலாம்... இதெல்லாம் நான் ஒரு வக்கீலா.. இல்லறத்தில் வாழும் ஒரு பெண் நினைக்க கூடியதைத் தான் சொன்னேன்.

ஆனா தன்யா விவாகரத்து கேட்ட காரணம் எனக்கு தெரியாது... ஏன்னு… நான் கேட்டாலும் தன்யா சொல்லாது...” இவர் தன் நீண்ட வாதத்தை வைக்க... அவனிடம் அதே அமைதி மட்டும் தான். பின்னே.. அவர் வயதுக்கு எத்தனை குடும்ப பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திருப்பார்.

“நான் அவள் மேல் வைத்த நேசம் உண்மை சார். அதே அளவு நேசம் அவளிடம் இருக்கும் என்று நினைத்து அவள் புரிந்து கொள்வானு தான்.. நான் அவ கிட்ட எதுவும் சொல்லாமல் விட்டுட்டேன்...” இவன் ஒத்துக்கொள்ள

“உரியவரிடம் பகிர்ந்து கொள்ளாத நேசத்திற்கு ஆயுள் குறைவு திபாகர்...”

‘உண்மை தான்.. உண்மை தான்... இவர் சொல்வது உண்மை தானே...’ இருந்தாலும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘அதற்காக விவாகரத்தா?....’

அவன் முகத்தை வைத்தே அவனின் மனதை அறிந்தவர் போல், “தன்யா இடத்தில் உன் தங்கை இருந்தால் உன் முடிவு என்னவாக இருக்கும் திபாகர்?...” அந்த ஒரு கேள்வி வந்தவனை ஆட்டிப் படைக்க.. சுத்தமாய் நொறுங்கிப் போனான் இவன். தற்போது தான் இவன் செய்த தவறின் வீரியம் இவனுக்கு புரிந்தது. ஆனாலும் அவனுக்குள் ஒரு வேகம் பிறந்தது... அது மகிழ்வரதனின் மாளிகைக்குள் நுழைந்து.. மனைவி மறுக்க மறுக்க.. தன்னவளைத் தோளில் சுமந்து கொண்டு தன் வீடு வர வேண்டும் என்ற வேகம் தான் அது. அதன் விளைவே... இறுதியாய் தன்னுடைய முடிவை வக்கீல் வல்லவனிடம் எடுத்துரைத்து விட்டு வந்து விட்டான்.

தன்னவளுக்கு செய்த அநீதியை உணர்ந்த பிறகு அவனால் உறங்க முடியவில்லை. இங்கு இவன் தன்னவளின் நினைவில் இருக்க.. அங்கே இவன் ரிது டார்லிங்கோ... கணவனுக்கு விவாகரத்து பத்திரம் அனுப்பின நாளைப் பற்றிய நினைவில் இருந்தாள்..

அன்று வெளியே சென்று விட்டு வந்த தன்யாவின் மனமோ ரணமாய் இருந்தது. ‘இன்னைக்கு மம்மி டாடி கிட்ட பேசியே ஆகணும்....’ முடிவு எடுத்தபடி இவள் வீட்டிற்குள் நுழைய... எதிர்பட்டாள் சோனியா. அவளிடம் “நான் இன்று மம்மி... டாடியை... பார்க்கணும்...” இவள் அறிவிக்க

“மேம்.... பாஸ் இன்றைக்கு ஈவினிங் துபாயில் இருந்து வராங்க. Sir will be here only... சோ may be நைட் உங்களுக்கு appointment fix செய்திடறேன்...” சோனியா எப்போதும் தன்யாவின் தாய் சசிரேகாவை பாஸ் என்று தான் விளிப்பாள். அப்படி அழைக்கச் சொல்லி சசிரேகா தான் உத்தரவே போட்டிருக்கிறாள். அதே போல் மகிழ்வரதனை சார் என்று தான் விளிப்பாள்.
பெற்றவர்களிடம் பேச... அப்பாயின்மென்ட் வாங்கித் தரும் அந்த வீட்டு காரியதரசியை முறைக்காமல்.... சரி என்பற்கு அடையாளமாய் தலை அசைத்து விட்டு சென்றாள் நம் தன்யா.

அதன் பிறகு இரவு உணவுக்குப் பின் தான் அவளின் பெற்றோர்களை தன்யாவால் சந்திக்க முடிந்தது... “என்ன விஷயம் தன்யா...” அவள் தந்தை அவளிடம் கேட்க

“உடம்புக்கு ஏதாவது செய்யுதா?...” தாய் விசாரிக்க... இவளிடம் மவுனம் மட்டுமே.

“லுக் தன்யா... இன்னைக்கு தான் நான் துபாயிலிருந்து வந்தேன்... i am so tired... ஏதோ பேசணும்னு தானே எங்களை பார்க்கணும்னு சோனியா கிட்ட சொல்லி இருக்க... ஸ்பீக் அவுட்...” தாய் அதட்ட

தன்யா தந்தையை ஒரு பார்வை பார்த்தவள், “எனக்கு விது கிட்டயிருந்து விவாகரத்து வேணும்...” என்க

தந்தைக்கு யார் என்று தெரிந்தது. ஆனால் தாய்க்கு தெரியவில்லை போல... விவாகரத்தை ஒரு பெண் யாரிடம் கேட்பாள்... “who is this... விது?” சசிரேகா கேட்டு வைக்க

அங்கு மகள் முகத்தில் சலனமே இல்லை, “மை ஹப்பி மம்மி...” சின்னவள் நினைவுபடுத்த

“ஒஹ்... மகிழ் டியர்... அவன் பேரு என்னமோ தவாவோ... விபாவோன்னு சொல்லுவிங்களே... ஆனா அவன் பேரை நம் பேபி வேற ஏதோ சொல்றா....” ஏதோ தற்போது பெயர் தான் முக்கியம் என்பது போல் சசி தன் கணவனிடம் கேட்டு வைத்தாள்... இது தான் தன்யாவின் தாய் சசிரேகா.. திபாகரன் விஷயத்தில் அவளின் அலட்டல் எல்லாம் இவ்வளவு தான்.

“நம்ம மாப்பிள்ளை பேரு விதுனதிபாகரன்... அதைத் தான் உன்னை மாதிரி நம்ம மகளும் சுருக்கி... விதுன்னு சொல்கிறா...” மகிழ்வரதன் விளக்க

“அவன் பெயர் எதுவா இருந்தா என்ன... அட்லாஸ்ட் அவன் நம்ம தகுதிக்கு ஏற்றவனே இல்ல.... இப்பொழுதாவது நம்ம பேபி புரிஞ்சிகிட்டாளே... சீக்கிரம் விவாகரத்தை வாங்கி கொடுங்க... எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு மகிழ்... நான் தூங்க போறேன்... குட் நைட் மை ஸ்வீட் ஹார்ட்...” என்றவள்… இவ்வளவு தானே என்பது போல் மகளின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு விலகியிருந்தாள் சசிரேகா.

சின்னவள் தந்தையைக் காண, “எதுக்கு இந்த திடீர் முடிவு பேபி....” மகிழ்வரதன் மகளை விசாரிக்கவும்

“டாட்... i am not peaceful... முக்கியமா எனக்கு அமைதியான தூக்கம் வேணும்...”

மகளின் பதிலில் பரிவாய் அவளின் தலையைத் தடவி விட்ட மகிழ்வரதன், “ஓகே... நாளைக்கு வல்லவனை வந்து உன்னை சந்திக்க சொல்கிறேன்... அவன் கிட்ட பேசு... dont worry my child... எதுவாக இருந்தாலும் டாட் இருக்கேன்...” தந்தையின் பரிவான வார்த்தையில் கண்கள் கலங்க தலை அசைத்தால் இவள்.

அன்று விவாகரத்து பற்றி பேசும்போதே... தன்யாவின் பெற்றோர்கள் மறுப்பு சொல்லவில்லை. இன்று திபாகர், மனைவி கேட்ட விவாகரத்தை தந்து விட்டால்... மகளின் வாழ்வில் உள்ள அவன் தடத்தை எல்லாம் அழித்து... தன்யாவுக்கு புது வாழ்வு அமைத்து தர... சித்தமாய் இருக்கிறாள் சசிரேகா.

இரவு முழுக்க உறங்காமல் இருந்து விடியலில் தான் தன்னை மீறி கண்ணயர்ந்தான் திபாகரன். தான் எழுந்ததும் மகனை ஒரு பார்வை பார்த்த தமிழரசி... அவன் உறக்கம் கெடாமல் இவர் தன் வேலைகளை கவனிக்க... நன்கு விடிந்தும்... தங்கைகளின் ஆரவாரத்திற்கு பிறகுமே அசையவில்லை திபாகரன்.

“யப்பா... திபாகரா... விடிஞ்சிடுச்சு பாரு... எழுந்திருப்பா சூடா காபி எடுத்து வந்திருக்கேன் எழுந்திரு...” தமிழரசி மகனை எழுப்ப, அவனிடம் அசைவே இல்லை.

என்னமோ ஏதோ என்று பயந்த அவர் மகனைத் தொட்டு உலுக்க... அவன் உடலோ நெருப்பாய் கொதித்தது... “ஐயோ... திபாகரா! என் புள்ள உடம்பு இப்படி அனலா கொதிக்குதே... நேற்று என் புள்ள கோட்டு சூட்டுனு வந்து நிற்கும் போதே நினைத்தேன்... எவ கண்ணு பட்டுச்சோ... என் புள்ள இப்போ கட்டையா கிடக்குறான்...

அடியேய் குலமதி... அந்த வெளி கூடத்தை கூட்டி மண்ணை எடுத்துட்டு வா... சித்ரா... சாமி விளக்க ஏத்திட்டு... அப்படியே கையோட விபூதியை எடுத்து வா... ஆத்தா மகமாயி... நான் தவமா தவமிருந்து பெத்த புள்ள டி இவன்... அவனுக்கு எந்த குறையும் கொடுத்துடாத. என் புள்ள உடம்பு இப்படி கொதிக்குதே ஏழுமலையானே... உனக்கு பாதயாத்திரை வரேன்... என் பிள்ளையோட பிணியை போக்கு...”

திபாரனுக்கு இருந்த மன உளைச்சலில் வந்த சாதாரண காய்ச்சல் தான் இது. எம்மாடியோ! அதற்கே மகனைத் தன் மடியில் தாங்கிக் கொண்டு இந்தளவுக்கு ஆர்ப்பாட்டம் செய்து விட்டார் தமிழரசி. பின்னே அவர் தவமாய் தவமிருந்து பெற்ற மகன் இல்லையா அவன்... அதான் அளவு கடந்த பாசம் மகன் மேல்.

விபூதியை எடுத்து வந்து சித்ரா அண்ணன் நெற்றியில் பூசியவள்... “அம்மா... கொஞ்ச நேரம் அமைதியா இரு... காய்ச்சலில் அண்ணன் ஏதோ பினாத்துது...” என்றவள் தாய் அமைதியானதும்...

இவள் தன் காதை அண்ணன் உதட்டருகே வைத்து கேட்க, “ரிது டார்லிங்... ரிது டார்லிங்...” என்று அவன் முணுமுணுக்க

அவன் சொன்ன ரிது சித்ராவுக்கு சரியாக கேட்காமல் போக, “அம்மா.. அண்ணா டார்லிங்... டார்லிங்னு பினாத்துது... எனக்கு தெரிந்து வெளிநாட்டில் ஒரு வெள்ளைக்காரியை உன் பிள்ள டாவு விட்டிருக்குன்னு நினைக்கிறேன். அம்மா அப்படி மட்டும் இருந்தா நீ நினைக்கிற மாதிரி அந்த சீமாட்டி இந்த வீட்டுக்கு வரமாட்டா மா...” இவள் மகிழ்ச்சியாய் திட்டம் போட

“அடியேய்... நான் பெத்த மகளே.. என் புள்ள உடம்பு முடியாம இருக்கான்... உனக்கு அந்த சீம சித்தராங்கி தான் தெரியறாளா... போடி... போய் கார்த்திக் தம்பிக்கு போனை போடு... அண்ணனை ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போகணும்...” தாய் உத்தரவு இட.. அதை செய்ய விரைந்து ஓடினாள் சித்ரா.

மனைவி விவாகரத்து கேட்டதற்கே... இங்கு ஒருவன் தன்னிலை மறந்து பிதற்றிக் கொண்டிருக்கிறான்... இவனா விவாகரத்து தந்து விடுவான்?...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN