3. என் பார்வை உனக்கும் இரகசியமா?

Sankaridayalan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அந்த துண்டுச்சீட்டு செய்தியைப் படித்தவுடன் ஏற்கனவே படபடத்த என் இதயத்தின் துடிப்பு என் காதுகளுக்கே நன்றாக கேட்க ஆரம்பித்தது . என் புகுந்த வீட்டில் எனக்கு எதிர்ப்புகள் இருக்கும் என்ற விஷயம் நான் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான் . ஆனால் இந்த அளவுக்கு நான் எதிர்பார்க்கவில்லை . வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து ஒரு நாள் கூட முழுதாக ஆகியிருக்கவில்லையே... யோசிக்க யோசிக்க தலை லேசாக சுற்ற ஆரம்பிக்கவே தலையில் கையைப்பிடித்துக்கொண்டு அமர்ந்து விட்டேன் .


சிறிது நேர ஆசுவாசத்திற்குப் பிறகு மேசையின் மீதிருந்த புத்தகத்தைப் பார்த்தேன் . புத்தக வாசிப்பில் லயிக்க இப்பொழுது என்னால் இயலமுடியவில்லை . எனவே அந்த புத்தகத்தை எடுத்து அதனுடைய புத்தக வரிசையில் அடுக்கிவிட்டு எங்கள் அறையை நோக்கிச் சென்றேன் .அந்த துண்டுச்சீட்டை ஹரியிடம் காண்பிக்கலாமா வேண்டாமா என்ற யோசனையுடன் எங்கள் அறைக்குள் நுழைந்தேன் .


என் கணவர் ஆழ்ந்த நித்திரையில் அமிழ்ந்திருந்தார் . அவரை எழுப்ப மனமில்லாமல் கதவை மெல்ல தாளிட்டுவிட்டு அவரருகில் சென்று படுத்தேன் . அமைதியாக தூங்கும் என்னவரையே பார்த்துக்கொண்டிருந்தேன் . காதலித்த நாள் முதல் இன்றைய பொழுது வரை என்னை இவர் நடத்திக்கொண்டிருக்கும் விதமே மறுபடி மறுபடி என்னவரின் மேல் காதலில் விழவைத்துக்கொண்டிருந்தது . அவரிடம் இந்த துண்டுச்சீட்டைக் காண்பித்து அவரையும் மனவருத்தம் கொள்ள வைக்க என் உள்ளம் பிரியப்படவில்லை . அதனால் அந்த துண்டுச்சீட்டை சுக்குநூறாக கிழித்து அருகிலிருந்த டஸ்ட்பின்னில் போட்டுவிட்டேன் . எதுவாக இருந்தாலும் என் ஹரி என்னுடன் இருக்கும்போது ஒருகை பார்த்துவிடலாம் என்ற எண்ணமே எனக்கு மேலோங்கியிருந்தது அது எனக்கு கூடுதல் மனதைரியத்தையும் கொடுத்தது .


எனக்கும் பிராயாணக்களைப்பு அசதியைக் கொடுத்ததால் படுத்த சில மணி நேரங்களிலேயே உறக்கம் என்னை பீடிக்க ஆரம்பித்தது . எவ்வளவு நேரம் தூங்கினேன் என தெரியவில்லை. நான் கண் விழிக்கையில் ஹரி ட்ரஸ்ஸிங் டேபிளின் முன் நின்றுகொண்டு தலை வாரிக்கொண்டிருந்தார் . கண்களைக் கசக்கிக்கொண்டு அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன் . கண்ணாடி வழியாக நான் எழுந்துவிட்டதைப் பார்த்தவர் " என்ன மேடம் கும்பகர்ணனுக்கு ஒன்னுவிட்ட தங்கச்சி மாதிரி இவ்வளவு நேரம் தூக்கம் .... டைம் என்ன ஆச்சு தெரியுமா ? "


" எவ்வளவு ஆச்சு "


" ம்ம்ம்.... நைட் எட்டு மணி "


" என்னது.நைட் ஆகிடுச்சா.... இவ்வளவு நேரமாவா தூங்கினேன் ... என்னங்க நீங்க கொஞ்சம்.என்னை.எழுப்பி விட்ருக்க கூடாதா ... "


" இன்னும்.கொஞ்ச நேரத்துல நீ எழுந்துக்கலைன்னா நானே எழுப்பி விடலாம்னுதான் நினைச்சேன் . அதுக்குள்ளதான் நீயே எழுந்துட்டியே ... "


" எல்லாத்துக்கும் ஒரு பதிலை ரெடிமேடா கையிலயே வச்சிட்டு இருப்பீங்களா ஹரிமா"


" நான் பதில் சொல்லனும்னுதானே நீ கேள்வியே கேக்குற வானுமா "


" உங்க கிட்ட பேசி என்னால ஜெயிக்கவே முடியாது பேபி..."


" சரி சரி என்னை வின் பன்றது அப்புறம் இருக்கட்டும் . எனக்கு ரொம்ப பசிக்குது வானு பேபி... சீக்கிரம் ஃப்ரஸ் அப் ஆகிட்டு வா சாப்பிட போகலாம் "


எனக்கு மறுபடியும் அனைவரையும் சந்திக்கும் சந்தர்ப்பம் . இவ்வளவு நேரம் மறந்திருந்த அந்த துண்டுச்சீட்டு சமாச்சாரம் மீண்டும் என் மனத்தில் குழப்ப ரேகையை உண்டாக்கியது . யாருமில்லா லைப்ரரியில் அதை வைத்தது யார்? . மீண்டும் மீண்டும் படபடப்பு நொடிக்கு நொடி அதிகரித்தது . கடவுளே .... எனக்கு மன உறுதியை கொடு என்று வேண்டிக்கொண்டே குளியலறைக்குச் சென்று முகம் கழுவிக்கொண்டு வந்தேன் .


பின் இருவரும் இரவு உணவை உண்பதற்கு கீழே டைனிங் ஹாலிற்க்குச் சென்றோம் . நாங்கள் அங்கு சென்றபின்தான் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தார்கள் .ஆனால் என் மாமியாரை மட்டும் காணவில்லை . நந்திதாவும் சிறிது நேரத்திற்கெல்லாம் வந்து சேர்ந்தாள் . உண்மையிலேயே அவள் மிக அழகாகத்தான் இருந்தாள் . சரியாக சொல்வதென்றால் ஒரு ஜாடையில் நடிகை ராஷி கன்னாவை எனக்கு நினைவுபடுத்தினாள் .


வந்தவள் என் அருகினில்தான் அமர்ந்தாள் . நான் அவளைப் பார்த்தபோது என்னைப்பார்த்து ஸ்நேகமாகப் புன்னகைத்தாள் . சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது எனக்கு . காலையில் அப்படி முறைத்தவள் இரவு ஸ்நேகமாகப் புன்னகைக்கிறாள் .


பின்பு என்னைப் பார்த்து அந்த புன்னகை மாறாமலேயே ... " ஹாய் வான்மதி ... நான் நந்திதா... உஷாவோட சிஸ்டர் "


" ஹாய் நந்திதா .... " என்றபடியே அவளுக்கு புன்னகையுடன் பதிலளித்தேன் முகத்தில் மட்டுமே ... மனத்திற்குள் குழப்பம் கும்மியடித்துக்கொண்டுதான் இருந்தது .


"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க வான்மதி ... ஹரிக்கு ரொம்ப பொருத்தமா இருக்கீங்க ... எனிவே ஹாப்பி மேரிட் லைஃப் வான்மதி ... " என்றபடி கைகுலுக்கினாள் .


நானும் புன்னகையுடன் அவளின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டேன். அடுத்த பத்து நிமிடங்களில் எங்கள் இரவு உணவை முடித்துக்கொண்டோம் . சாப்பிட்டு முடித்து அறைக்கு திரும்பும் வேளையில் மீண்டும் என்னைப்பார்த்து புன்னகையுடன் "குட்நைட் வான்மதி" என்ற நந்திதாவிடம் "ஐயம் எக்ஸ்டீரீம்லி சாரி நந்திதா " என்றேன் .


" சாரியா ? பார் வாட் வான்மதி " என்று குழப்பத்துடன் கேட்டாள் .


" அது... அது ... ஹரிக்கும் உங்களுக்கும் கல்யாண ஏற்பாடு ...." என்று என் வாக்கியத்தை முடிப்பதற்குள் " ஸ்டாப் ஸ்டாப்.... அது முடிஞ்சு போன சாப்டர் வான்மதி... பழைய கதை... இப்போ எதுக்கு அதெல்லாம் . நியூ லைஃபை சந்தோஷமா ஸ்டார்ட் பண்ணுங்க ... " என்று கூறினாள் . சற்று நிம்மதியாக இருந்தது . ஆனால் அவள் இன்று காலையில் என்னைப் பார்த்து முறைத்த பார்வையை மட்டும் என்னால் மறக்க இயலவில்லையே . துவேஷம் நிறைந்த முறைப்பு அது . உடனடியாக எப்படி மாறமுடிந்தது இவளால் .


"இந்த வீட்டிற்கு வந்ததிலிருந்து எனக்கு ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனுபவங்கள் சற்று விசித்திரமானவையாகவே இருக்கின்றன" என்று என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை .


நந்திதாவுடன் நான் பேசிய பிறகு ஹரியிடம் சென்றேன் . " என்ன வானு அவ கிட்ட என்ன பேசிட்டு இருந்த ?" என்ற ஹரியிடம் " ஒன்னும் இல்ல ஹரி ஜஸ்ட் நம்ம மேரேஜ்க்கு விஷ் பண்ணா அவ " என்றேன் . பிறகு அவரும் நானும் எங்களறைக்கு வந்துவிட்டோம் .


எங்கள் கட்டிலில் நான் அமர்ந்துகொண்டே " ஹரி... அம்மா இன்னும் சாப்பிட வரலையே ஏன் ? என் மேல இன்னும் கோபமா இருப்பாங்களோ ? மதியம் கூட சாப்பிடலைங்க ... இந்த வீட்டுக்கு வந்த முதல் நாளே இப்படின்னா எனக்கு கஷ்டமா இருக்குங்க... " என்று கூறினேன்.


அதுவரை நின்று கொண்டிருந்தவர் என் அருகினில் அமர்ந்து என் முகத்தை மெல்ல நிமிர்த்தி " கவலைப்படாத வானு . எல்லாம் போக போக சரியாகிடும் . உன்னைப்பத்தி அவங்க நல்லா புரிஞ்சிக்கிட்டாங்கன்னா மருமகளே ! மருமகளே !ன்னு வாய்நிறைய கூப்பிட்டு கைநிறைய இந்த வீட்டோட கொத்து சாவியும் கொடுத்துடுவாங்க... நீ இப்படி உம்முன்னு இருக்காதடா எனக்கும் கஷ்டமா இருக்கு " என்று ஆறுதலளித்தார் .


காலையில் இருந்த படபடப்பு இப்பொழுது சற்று கணிசமாக மட்டுப்பட்டிருந்தது . ஆனால் அந்த துண்டுச்சீட்டு செய்தி மட்டும் மனதினுள்ளிருந்து போவேனா என்றபடி சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்தது .


அறைக்கு வந்த பிறகு என்னுடைய துணிமணிகளையெல்லாம் வாட்ரோப்பில் அடுக்கிக்கொண்டிருந்தேன் . சட்டென்று என் தோளில் ஒரு கரம் ஊர்ந்து சென்றது . திரும்பிப்பாராமலேயே அது யாரென்று கண்டுகொண்டேன் . என் ஹரியின் ஸ்பரிசம் எனக்குத் தெரியாதா ?


துணிகளை அடுக்குவதை நிறுத்திவிட்டு அவர்புறம் நோக்கித் திரும்பினேன் . காதலுடன் என்னைப் பார்த்தவர் " இதையெல்லாம் நாளைக்கு பார்த்துக்க கூடாதா ... இன்னைக்கே எல்லாத்தையும் செய்யனுமா ? "


" இல்லைம்மா ... இப்ப சும்மாதானே இருக்கேன் ... தூக்கமும் வரலை அதான் லக்கேஜை அததோட இடத்துல வச்சிட்டு இருக்கேன் "


" சும்மா இருக்கியா.... இனிமே சும்மா இருக்க விட்டாதானே என்றபடியே என்னருகே இன்னும் நெருங்கி வந்து காலையிலிருந்து ஏற்பட்ட அதிர்ச்சிகள் அனைத்தையும் மறக்கடித்துக்கொண்டிருந்தார்.


******


இருவரும் ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்தோம் . எனக்கு திடீரென முழிப்பு தட்டியது . ஏதோ சன்னமான குரலில் யாரோ வான்மதி என்று கூப்பிடும் சப்தம் . அது மட்டுமின்றி எங்கள் அறையின் கண்ணாடி சாளரத்தின் வழியே யாரோ இருப்பது போல் நிழலாடியது .


யாரென்று பார்ப்பதற்க்காக கட்டிலிலிருந்து எழுந்து அறையின் விளக்கைப் போட்டேன் . அடுத்த நொடியே சாளரத்தில் நிழலாடிக்கொண்டிருந்த உருவம் விருட்டென்று மறைந்தது . என்ன இது விநோதம் என மனத்தினில் நினைத்தபடியே கதவைத் திறந்து வெளியில் சென்றேன் . யாருமே இருக்கவில்லை . ஒருவேளை அதிகமாக சிந்தனை வயப்பட்டிருந்ததால் இது என் பிரமையாக இருக்குமோ என்று நினைத்தபடி மீண்டும் அறைக்குள் வந்தேன் . அறைக்குள் நுழைந்த நொடி அறைக்கதவிற்கு அருகே என் காலில் அது தட்டுப்பட்டது . அழகான கிஃப்ட் ரேப்பரால் சுற்றப்பட்டு சாட்டின் ரிப்பனால் கட்டப்பட்டிருந்த பரிசுப்பெட்டி .


இது நிச்சயமாக பிரம்மையில்லை. அந்த பரிசுப்பெட்டியை எடுத்து உள்ளே என்ன இருக்கிறது என்பதற்காகத் திறந்து பார்த்தேன். அதில் நானும் ஹரியும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது . அந்த புகைப்படத்தில் என் முகத்தில் மட்டும் பெருக்கல் குறி இடப்பட்டிருந்தது . அதைப்பார்த்தவுடன் படபடவென்று இதயம் அடித்துக்கொண்டது. இந்த புகைப்படத்தை நான் என் பெட்டியில் அல்லவா வைத்திருந்தேன் . யாரோ நான் இல்லாத சமயமாக பார்த்து என் பெட்டியிலிருந்து இப்புகைப்படத்தை எடுத்து இந்த ரூபத்தில் வைத்திருக்கிறார்கள் . அது யார்? .இதுவரை பயத்தில் மூளையின் நியூரான்கள் செயலிழந்து போய் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டேன் ... யார் அது ? யார் என்னைப் பின்தொடர்வது ?


மனத்தினில் கேள்விகள் அரித்துக்கொண்டிருக்க அந்த பரிசுப்பெட்டியை எடுத்து வந்து மறைத்து வைத்தேன். தூக்கமோ என்னைவிட்டு காத தூரம் பறந்துவிட்டது . என் மேல் இவ்வளவு வஞ்சம் கொண்டவர் யாரக இருக்க முடியும் ?. என் மனத்தில் இந்த கேள்வி உதித்தபோது மனக்கண்ணில் நந்திதாவின் முகம் நிழலாடியது . ஒரு வேளை என்னிடம் நயமாகப்பேசிவிட்டு இப்பொழுது இந்த வேலையை அவள் செய்திருப்பாளோ?!!! .....
 

Author: Sankaridayalan
Article Title: 3. என் பார்வை உனக்கும் இரகசியமா?
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN