❤️உயிர் 9❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வழி நெடுங்கிளும் நீண்ட தேயிலை தோட்டம்,நாசி தடவும் குளிர் காற்று,வண்ண வண்ண ரோஜாக்களின் அணிவகுப்பு, கேமரன் மலையரசி அஞ்சலியை அழகாய் வரவேற்றாள்.

"வாவ் எவ்வளவு அழகு இந்த மலைப்பிரதேசம்.சின்ன வயசில் வந்தது இங்க.
ரொம்ப பிடிச்ச இடம் இது யுகேன்"சிறு பிள்ளைப் போல் குதூகலித்தவளை புன்னகையில் இரசித்தான்.

"அஞ்சு உனக்கு இந்த இடம் பிடிக்குமா?'ஆர்வமாய் கேட்டவனை கன்னக்குழி சிரிப்பில் எதிர்க்கொண்டாள்.

''புடிக்குமாவா?ஆயுசுக்கும் இந்த பச்சை மலைக்காட்டில் இஸ்டம் போல திரியணும், படம் பிடிக்கணும்,மலைக்காற்றில் மழை வந்தால் ஆசை தீர நனைந்து கரையணும், இப்படி சின்ன சின்ன ஆசைகளுடன் கனவுகள் கட்டி நான் வெச்சிருந்த இடம் இது."

"வாழ்க்கையில் இது நடக்குமானு கூட தெரியாம ரொம்ம ஆசைப்பட்ட இடம் இது யுகேன்"தன்னை மறந்த நிலையில் பேசியவளை, தன்னோடு இரசனைகளில் ஒன்றியவள் மீது தோழி என்ற எண்ணம் கடந்து துணைவி என்ற எண்ணம் அப்பொழுது யுகேன் மனதில் லேசாய் உராய்ந்தது.

கடந்த காலம் கொஞ்சம் கண் முன் நிழலாடியது.ரீட்டாவை இங்கு அழைத்து வந்து அவன் நொந்துக்கொண்டது மனதில் தோன்றியது.

"இது என்ன காட்டுக்கு கூட்டிட்டு வந்திருக்கிங்க யுகேன்?ஜாலியா சுத்திப்பார்க்க எவ்வளவு இடங்கள் இருக்கு?இந்த பச்சை மலைய பார்க்க பார்க்க கடுப்பா இருக்கு,என்னால இங்கெல்லாம் ஆயுசுக்கும் இருக்க முடியாதுப்பா."சொர்கம் மாதிரி கே.ல் இருக்க இங்க யாரு வந்து அவஸ்த்தைபடுவா?'' அனல் கக்கிய ரீட்டாவின் வார்த்தைகளில் யுகேனுக்கு மலை குளிர் கூட உறைக்காமல் போய் விட்டது.அவன் கற்பனைக் கோட்டைகளும் அப்பொழுதே தவிடு பொடியாகிவிட்டது.

நிழல் கலைந்து நிஜ உலகிற்கு வந்தவன், விழி அசைக்காமல் பச்சை மலையை ரசிக்கும் அஞ்சலியை அவள் அறியாமல் இரசித்தான்.

''ஏஞ்சல் வெல்கம் டு அவர் ஹெவன்,''ஆங்கில பாணியில் அழகாய் உடல் வளைத்து அஞ்சலியை அவர்கள் வீட்டிற்கு வரவேற்றான்.
சின்ன வீடு என்றானே,
பழங்கால ஆங்கில பாணியில் ஓங்கி உயர்த்திருந்த அந்த பங்களா யுகேனுக்கு சின்ன வீடா?
பிரமித்து நின்றாள்.

"மை ட்ரீம் அவுஸ் அஞ்சு.''உனக்கு பிடிச்சிருக்கா? மெலிதாய் வினவியவனின் கண்களில் தெரிந்த ஆர்வம் அஞ்சலியை சிலிர்க்க வைத்தது.

'ஹை 5 சொல்லு மச்சி..என் கனவுகளை நீ நிஜம் ஆகிட்ட''
நீண்ட நாட்களுக்கு பின் பழைய அஞ்சலியை பார்த்து போல் இருந்தது அவனுக்கு.

பெரிய கணப்பு அடுப்புகளும்,விசாலமான தரையும்,கருந்தேக்கில் கடைச்சல் பிடித்த மாடிப்படிகளும்,அஞ்சலியை எதோ பழைய அரண்மனைக்குள் விட்டது போல் இலயிக்கச் செய்தன.

'எனக்கு பழமை பிடிக்கும் அஞ்சு,ஒரு மாதிரியான இரசனை அது..இந்த பங்களா பிடிச்சு போய் என் சம்பாதியத்தில் வாங்கியது''பெருமையாய் சொன்ன கணவனின் கைகளைப் பிடித்து உலுக்கினாள்.

''உன் இரசனைகள் அழகானவை,நன்றி யுகேன்' விசாலமான வீடு,வெளியில் பச்சை புல்வெளியுடன் இணைந்த தோட்டம்.சாலையின் இரு மருங்கில் அரண் போல் வளர்ந்த பைன் மரங்கள், மழை மேகம் சுமந்து நிற்கும் தானா ராத்தா மலைத்தொடர்.
யுகேந்திரனுக்கு சொந்தமான தொடர் தங்கும் விடுதிகள் கூட இங்கேயும் உண்டு.

வருடத்தில் 12 மாதங்களும் வெயில் கொளுத்தும் மலேஷியாவின் குளிர்ச்சியான மலைப்பிரதேசம் கொண்ட இடங்களில் கேமரன் மலை மிகவும் பிரசித்தம்.
உள்ளூர் பயணிகளும் வெளியூர் பயணிகளும் நிரம்பி வழியும் இம்மலையில் விவசாயம் சுற்றுலாத்துறை, தேயிலை பயிர் முக்கிய வருமானம் ஈட்டும் துறைகளாக விளங்கின.

அஞ்சலிக்கு அவ்விடம் சொர்கம் போல் இருந்தது. மனம் தளர்ந்து தன் வீட்டு வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.தேக்கில் செதுக்கிய பெரிய பிள்ளையார் சிலை ,அருகில் செயற்கை நீரூற்று,தண்ணீர் நிரப்பிய அகன்ற மண்உருலியில் ரோஜாக்கள், மஞ்சள் கிரிஸ்டல் விளக்குகள் என்று அந்த பங்களாவை அவளுக்கு பிடித்த மாதிரி மாற்றி அமைத்தாள்.அவள் இரசனைகள் அவனுக்கும் பிடிக்குமே.வார இறுதியில் தொல்பொருள் காட்சியகத்தில் நூதன வடிவமைப்பு கொண்ட சிலைகளை வாங்கி வீட்டை மேலும் அழகு செய்தாள்.

"வாவ் அஞ்சலி, amazing
வெள்ளக்காரன் வீட்டை அழகா நம்ம ஸ்டைலுக்கு மாத்திட்டியே'இதுக்குத்தான் கலை தெரிஞ்சவங்ககிட்ட வேலையை கொடுக்கணும் சொல்றது",

"அம்மணி பிரீனா அடியேனுடைய ஆபிஸ்க்கும் தரிசனம் தரலாம்''மனம் திறந்து பாராட்டியவனின் பேச்சையும் இரசித்தாள்.

உதவிக்கு ஒரு ஆயாவையும் ,அவளுடைய விவாவையும் பீடியிலிருந்து வரவழைத்தான்.
பெண்ணின் இடைப்போல் வளையும் மலைப்பாதைகளில் கவனமாய் கார் ஓட்டவும் கற்றுக்கொடுத்தான்.அந்த மலைவாசம் அஞ்சலிக்கு அலுக்கவே இல்லை.காலை பனி போர்வை விளக்கி எட்டிப் பார்க்கும் சூரியனை, கையில் காபியுடன் இரசிப்பது அவளுடைய தினசரி தேவைகளில் ஒன்றாயிற்று.

உற்சாகமாய் அவன் தேவைகளையும் கவனிப்பாள்.அவன் உடைகளை அயர்ன் செய்து சமயத்தில் அவனுக்கு டை கூட கட்டி விடுவாள்.வலது கைப்பழக்கமுடைய அஞ்சலி டையை மட்டும் இடது கையால் வளைத்துக் கட்டிவிடுவாள்.இதை யுகேனும் கவனித்திருக்கிறான்.
"தெரியல யுகேன்,இது மட்டும் இடதுகை வாட்டம்' என சிரிப்பாள்.அவள் சமையலும் அவனுக்கு பிடித்தம் ஆயிற்று.

"இப்பதான் தெரியுது இந்த உதய் பயல் ஏன் உப்பிப்போனானு"
"இப்படி ருசியா சாப்பிட்டா நான் குண்டோதரன் ஆயிர்வேன் அஞ்சு''இப்படி தினமும் அவளை கிண்டல் செய்து சிரிக்க வைப்பான்.

அவளும் அவனுக்கு ஈடு தருவாள்.அவனும் அவளை வம்பிழுக்கமால் ஓய்வதில்லை. அஞ்சலிக்கு தவளை என்றால் மிகவும் பயம். ஒரு ஐந்தடி தூரம் தவளையை பார்த்தாலே தலை தெறிக்க ஓடுவாள். அவ்வளவு பயம். இது யுகேனுக்கும் தெரியும்.

ஒருநாள் அஞ்சலி ஏதோ ஒரு கதை புத்தகத்தில் ஆழ்ந்திருக்கையில், தொபுக்கென்று யுகேன் ஒரு தவளையை பிடித்து அவள் புத்தகத்தின் நடுவில் போடா, வீல் என்று கத்திக் கொண்டு அஞ்சலி தெறித்துக் கொண்டு வீட்டை விட்டே வெளியே ஓடினாள். யுகேந்திரன் எவ்வளவு அழைத்தும் வீட்டுக்கு அவள் வரவே இல்லை.

"போடா லூசு பயலே, என் உயிரே போய்ட்டு திரும்ப வந்திருக்கு.நா வர மாட்டேன் எருமை.. எருமை " கோவத்துல கத்தினாள். இவள் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு மேஜர் அங்கிள் வந்து அவளை தன் வீட்டுக்கு அழைத்து சென்றார்.

"கம் பேபி,அந்த தடி பயல் இங்க வரட்டும், அவனை குருவி சுடர மாதிரி சுடரேன், நீ வா, ஆண்டி டீ டைம்க்கு சுட சுட மசாலா டீ பஜ்ஜி செஞ்சிருக்கா.நாம சாப்பிட போகலாம் "
மேஜர் திவாகர்- நளினி தம்பதி இவர்களின் பக்கத்து வீடு. பிள்ளை இல்லாத அவர்களுக்கு யுகேந்திரன் தான் பிள்ளை மாதிரி.
இப்ப அந்த பாசவலைக்குள் அஞ்சலியும் ஒரு அங்கமாகி போனாள். அந்த உரிமையில் அவர் அழைக்க, அவளும் அவனுக்கு உவ்வ்வே காமிச்சிட்டு அவருடன் சென்றாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN