சாதி மல்லிப் பூச்சரமே!!! 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 1





“திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி”

எனச் சம்பந்தரும்,





“தண் பொருநைப் புனல்நாடு”

எனச் சேக்கிழாரும்,





“பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி”

என்று கம்பரும்





இப்படி அனைவராலும் போற்றி, புகழ்ந்து பாடப் பெற்ற நம் திருநெல்வேயில் தான் இக்கதை பயணிக்கிறது.





வெண் பஞ்சு மேகங்கள் வானைத் தழுவ, அதை எட்டி முத்தமிடும் ஆசையில் வானுயர்ந்த அந்த கோவில் கோபுர உச்சியில் அமர்ந்திருந்த புறாக்கள் எல்லாம் “டங் டங்” என்ற மணி ஓசையில் தங்கள் தவம் கலைந்த கோபத்தில் சிறகுகள் படபடக்க விர்ரென்று பறந்து சென்றன.





இன்று அவ்வூரில் இருக்கும் பெரிய கோவிலில் திருவிழா! அந்த ஊருக்கு மட்டுமில்லை, சுற்றியிருக்கும் பதினெட்டுப் பட்டி கிராமத்திற்கும் இது தான் பெரிய கோவில். அப்பொழுது திருவிழா எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்.





ஜனத்திரள் நீக்கு நிரல் கொள்ளாமல் எங்கு பார்த்தாலும் நிரம்பி தளும்பியது. இப்போது இங்கு எள்ளு போட்டால் எண்ணையாகக் கூட வராது. மாறாக, மக்கி மண்ணோடு மண்ணாகத் தான் போகும். அப்படி ஒரு கூட்டம்! அப்படி ஒரு திருவிழா!





அங்கு ஒரு பக்கம் ஆட்டம் பாட்டம் என்றிருக்க, அதற்கு இன்னோர் புறம் ரங்கராட்டினம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு இயந்திரகள் என்று அனைத்து கேளிக்கைகளும் இருக்க, தெரு முழுக்க கடைகள் எங்கும் பரவியிருந்தது.





அந்த இடத்தை யார் பார்த்தாலும் சொல்லி விடுவார்கள் பாரதிராஜாவின் படத்தை நம் கண் முன்னே காட்சிப் படுத்தியது போல் ஒரு கிராமம் என்று!





காலையிலேயே ஐயாருவுடன் கோவில் பூஜைகளை முடித்து அம்மனைத் தரிசித்தாலும் மறுபடியும் தனிப்பட்ட முறையில் தங்கள் குடும்பம் மட்டும் அம்மனைத் தரிசிக்க வேண்டும் என்று நினைத்த கலையரசன், அதை பிள்ளைகளிடம் சொல்லியும் அவர்கள் போக்குக் காட்டி ஓடி விட்டனர்.





அந்த கடுப்பில் மனைவி அங்கையை மட்டும் அழைத்துக் கொண்டு அவர் கோவில் உள்ளே செல்ல, அதே நேரம் எதிரில் வந்த தாமரை, அவள் தங்கை அங்கையைப் பார்த்து விட்டு





“ஏளா! இந்த வேந்தன் பயல எங்கனா பாத்தியா?” என்று கேட்க





“இல்லையேக்கா, வெள்ளன பூசையில வச்சு பாத்ததோட சரி. ஒருவேளை மாறன் அண்ணே எங்கனா அனுப்புனாகளானு கேளு” என்க





“அடி போடி அவனைத் தேடுறதே அவுக தான்” என்று தாமரை பதில் கொடுக்க, அதே நேரம் மனைவி தன் பின்னால் வராததை உணர்ந்த கலையரசன் கோப முகத்துடன் உறுத்து விழித்த படி இவர்களை நோக்கி வர,





‘ஐயோ இவுக இங்கன வந்தா வேந்தன் புள்ளைய ஏசுவாகளே!’ என்ற பதைபதைப்பில் அங்கைக்கு வேர்க்க, அதை தங்கையின் முகத்திலிருந்து உணர்ந்த தாமரை,





“சரி நீ போ” என்றவர்





‘அப்… பப்பாஆஆ! இந்த மனுசன்ட்ட ஏதாச்சும் கேட்டா எம் புள்ளைய கரிச்சுக் கொட்டியே உண்டு இல்லன்னு செய்துடுவாக. அம்மா மாரியாத்தா! இவுக வாயிலிருந்து எம் புள்ளைய காப்பாத்தும்மா’ என்ற வேண்டுதலுடன் தாமரை கோவிலை விட்டு வெளியே வர, ‘அவன் இப்படி வாய் பேசுவது எல்லாம் பிறவி குணம் டி! அது மாறுமா?’ என்ற சொல்லுடன் மாரியாத்தா ஒதுங்கி நின்றாள்.





மனைவியிடம் வந்த கலையரசன், “என்னட்டி? என்னவாம் ஒன் ஒடன்பொறப்புக்கு?” என்று கேட்க





“வேந்..தன கா..ங்கலயாம்...” என்று திக்கித் திணறி இவள் பதில் தர,





“அந்த ஒதவாக்கரை, சேக்காளியோட எங்கன ஊர் சுத்துதோ? அதேன் மாமனுங்க ரெண்டு பேரும் பச்சப் புள்ள கணக்கா அவனை ஒக்கல்ல தூக்கி வச்சிகிட்டு திரியுதானுங்களே, அவிங்கள போய் கேட்டுக்கிடலாம் தான? எங்கன இருந்தோ வந்து வாழுதான்! புல்லட் பைக்கு வேற! பெரிய மிராசுதார் மாதிரி என்ன ஜபருதசு அந்த பயலுக்கு!” என்று கரித்துக் கொட்ட





‘அவனா ஒதவாக்கரை?’ என்று கேட்க நினைத்தவர் அப்படி கேட்காமல் ஏன் கணவனை நிமிர்ந்தும் பார்க்காமல் சந்நிதானத்துள்ளே சென்று விட்டார் அங்கை.





திருவிழா என்றால் ஜல்லிக்கட்டு இல்லாமலா? அங்கே அதற்கான ஆயத்தப் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மைதானத்தில் போட்டிருந்த கழி வேலியைச் சுற்றி ஆண்களும் பெண்களும் கூடியிருந்தனர்.





அங்கேயே சற்று ஒதுக்குப் புறமான இடத்தில் முகத்தில் கவலையோடும் பதட்டத்துடனும் நின்றிருந்த கந்தமாறனை நோக்கி வந்த மூர்த்தி, “அண்ணே! வேந்தன் மாப்ள எங்கணே? ஐயா ரொம்ப நேரமா அவன தேடுறாக. எங்கன தேடியும் அவன காங்கல. அதே கோபத்தோட இப்போம் மேடை ஏறிட்டாக. எங்கணே நம்ப மாப்ள?” என்று தன் பங்குக்கு மூர்த்தி அண்ணனிடம் விசாரிக்க,





“அட ஏம்ல நீ வேற உசுர எடுக்குற? அப்போம்திருந்து நானும் மாப்ளய தான் தேடிட்டு திரியறேன்லே” என்று இவர் சலித்துக் கொண்ட நேரம்



அவர்கள் வீட்டு கணக்குப்பிள்ளை வந்து ஐயா கூப்பிடுவதாக கந்தமாறனிடம் சொல்ல





“போச்சி போச்சி! ஐயா என்ன ஏசப் போறாகளோ!” என்ற பயத்துடன் இவர் மேடை ஏறி கை கட்டியபடி ஐயாரு பக்கத்தில் வந்து நின்றவர் பணிவுடன், “சொல்லுங்க ஐயா” என்று கேட்க





“என்னலே, ரொம்ப நேரமா அந்த வேந்தன் பயல் என்ட்ட ஆட்டோட்டம் காட்டுதான்? வேறென்னடே சோலி அவனுக்கு? எவன் மண்டையனா ஒடைச்சிகிட்டு கெடப்பான். சொல்லி வைலே, என் சபதத்துல நான் செயிக்கலனா அவனை உண்டு இல்லைன்னு பண்ணிடுவேனு சொல்லி வைலே!” என்று ஐயாரு கர்ஜிக்க,





”சரிங்க ஐயா” என்று அதற்கும் பணிந்தார் கந்தமாறன்.





ஐயா என்று அழைக்கப் பட்டவரின் பெயர் சிவகுரு. இந்த கிராமத்திற்கு மட்டுமில்லை சுற்றி இருக்கும் பதினெட்டு கிராமத்திற்கும் இவர் தான் தலைவர். அதனாலேயே ஊரில் உள்ளவர்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் இவர் ஐயாரு!





கருத்த நிறத்துடன் முறுக்கு மீசையுடன் எழுபது வயதில் இருக்கும் தாத்தா இவர். ஆனால் அவரைப் பார்ப்பவர்கள் ஐம்பது வயது ஆண்மகன் என்று தான் சொல்வார்கள்.





ஜல்லிக்கட்டைக் காண ஊர் தலைகளுக்கு என்று போடப்பட்ட மேடையில் ஐயாருக்கு என்று போடப் பட்ட இருக்கையில் அவர் கம்பீரமாய் அமர்ந்திருக்க, அவரைச் சுற்றி மற்ற தலைகள் அமர்ந்திருந்தனர்.





இன்னும் சற்று நேரத்தில் எல்லாம் ஜல்லிக்கட்டு ஆரம்பமாகப் போவதாக ஒலி பெருக்கியில் அறிவிக்க, முதலில் எந்த பண்ணையார் காளை வரப் போகிறது என்ற ஆவலில் எல்லோரும் வாடி வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.





“என்ன அழகி? என் மச்சான் இப்படி, என் மச்சான் அப்படின்னு ஆயிரம் முறை மச்சான் புகழ் பாடின! அதை நம்பி நாங்க வந்தா, உன் மச்சான ஆளையே காணோம்?” என்று தோழி ஒருத்தி நிலவழகியைக் கேட்க





“அவர் காளையை அடக்க வேணாம் டி, அட்லீஸ்ட் இப்படி எங்க கூட ஓரமா நின்றாவது ஜல்லிக்கட்ட பார்க்கச் சொல்லு டி” என்று இன்னோர் தோழி வம்பிழுக்க





“அதற்கும் அவருக்கு பயமோ என்னமோ?” என்று வேறு ஒருத்தி கூட எடுத்துக் கொடுக்க, அங்கே இருந்த மற்ற தோழிகள் எல்லோரும் கலீர் என்று சிரித்தனர்.





இவர்கள் எல்லோரும் நிலவழகியின் கல்லூரி தோழிகள். பட்டணத்தில் படிக்கும் மேல்தட்டுக் காரர்கள். இவர்களிடம் எல்லாம் அழகி அவள் மச்சானைப் பற்றி நித்தமும் புகழ, அதில் அவனைக் காணவேண்டும் என்று இவர்கள் புகைப்படம் கேட்க,





“ஏனோ தானோம்னு எல்லாம் என் மச்சான் படத்தைக் காட்ட முடியாது. அவுக யாரு? என் ஹீரோம்ல! அதேன் மாஸ் என்ட்ரியோட தான் நீங்க அவுகள பாக்கணும்’ என்று தன் தோழிகளிடம் சொல்லி அனைவரையும் வம்படியாக இந்த வருடம் ஜல்லிக்கட்டுக்கு அழைத்து வந்திருந்தாள் அழகி. அந்த கோபம் வேறு வந்திருந்தவளுக்கு இருக்க, இன்னும் வேந்தனைப் பார்க்காத கடுப்பில் இப்படி எல்லாம் பேச ஆரம்பித்தார்கள்.





அதில் ரோஷம் வர தோழிகளை முறைத்தவள் “என் மச்சான் ஒண்ணும் பயந்தாங்கோலி இல்ல. அவுக சீறும் சிங்கம்! பாக்கத் தான போறீங்க” என்று பதில் தந்தவள்,





பக்கத்தில் நின்றிருந்த தன் பத்து வயது தம்பியான கிரியிடம் திரும்பி “எலே கிரி! மச்சான் எங்கனடா?” என்று அவன் தலையில் ஒரு தட்டு தட்ட, அவனோ அவளுக்குப் பதில் தராமல் அக்கா அடித்து விட்டாள் என்ற புகார் பட்டியலைத் தன் தாயிடம் வாசிக்க உதடு பிதுங்க அந்த இடத்திலிருந்து ஓடினான்.





அந்நேரம் ஒரு பண்ணையாரின் பெயரைச் சொல்லி அவர் காளையை வெளியே விட, தன்னைப் பிடிக்க சுற்றி நின்றிருந்த இளைஞர்களை நோக்கி சீறிப் பாய்ந்தது அந்த காளை.





இப்படி உறவுகள் அனைவரும் வலை வீசி தேட காரணமான அந்த மதிவேந்தன் எங்கு இருக்கிறான் என்று பார்ப்போமா?...





அந்த ஹீரோ ஹோண்டா பைக் காடு மேடு என்று ஏன் கிளை வழிச் சாலைகளையும் கடந்து தோப்புத் துரவுக்குள் எல்லாம் புகுந்து சென்று கொண்டிருந்தது. அதை ஓட்டி வந்தவனை விட அதன் பின்னால் உட்கார்ந்து இருந்தவன் தான் படு உற்சாகம் மற்றும் பயம் என்று இரு வேறு உணர்வுகளுடன் இருந்தான்.





“எலே ஓணான்! ஒழுங்கா எந்தச் சேதாரமும் இல்லாமல் என்னைய கொண்டு போய் சேர்த்துடுலே” என்று கெஞ்சியவன், “நேத்து ராவுல சரசாவோட ஒயிலாட்டம் பாத்தப்பம்திருந்து அவ யாவகமாவே இருந்ததுடே. கடைசியில பாத்தா அவளுக்கும் என் யாவகம் இருந்தது போல! அதாம்ல சின்னப் பையன்னு கூட பாக்காம ஒன்கிட்ட சொல்லி என்னைய ஊருக்கு ஒதுக்குப்புறமா வரச் சொல்லி இருக்கா.





நேத்து அவ நெஞ்சில ஆயிரம் ரூவா குத்தினது வீண் போகலடே. அவ ஆட்டத்த இப்போம் நெனச்சாலும் கிளு கிளுப்பா இருக்குடே” என்று பரவச நிலையை அடைந்த படி பின்னால் உட்கார்ந்து வந்த காளி உடம்பை ஒரு குலுக்கு குலுக்க





“ஐயோ! மாமா பேசாம வாரும். நீங்க இப்போம் போட்ட பிரேக் டான்ஸ்க்கு நேர ரெண்டு பேரும் சொர்க்கம் போய் சேர்ந்திருப்போம் பாத்துகிடுங்க. just miss! பொறவு நீங்க வரலனு அங்கன சரசு அக்காவ யார்னா கொத்திகிட்டு போயிட போகுதான்” என்று வண்டியை ஓட்டிக் கொண்டிருந்த பதினேழு வயது பருவ பையன் அவனை எச்சரிக்க





“சின்னப் பயலா இருந்தாலும் நீ சொல்றது சரி தாம்ல மாப்ள” என்று ஒத்துக்கொண்டு அமைதியானான் காளி. ஊர் எல்லையைத் தாண்டி அந்த வண்டி ஒரு வட்டம் அடித்து அங்கிருந்த சவுக்குத் தோப்புக்குள் சென்றது.





“என்னடே இங்கிட்டு வந்து நிக்க! இங்கனயா வரச் சொன்னவ?” என்றவன், வண்டி நின்றதும் இறங்கி,





“சரசு எங்கிட்டு இருக்காடே மாப்ள?” என்று பரபரப்பாக காளி சரசுவைத் தேட





“அக்கட சூடு...” என்று ஓணான் என்று அழைக்கப்பட்ட நரேன் ஒரு இடத்தைக் காட்ட, அங்கே காளி பார்த்தது வேறொருவரை.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Devi

New member

வர்றது யாரு😎😎
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN