மாற்றம் ஒன்றே மாறாதது -3

Bhagya sivakumar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் -3



மழை எல்லாம் ஓய்ந்தது ஆனால் அதனின் சுவடு மறையாத வண்ணம் சாலையோரம் எல்லாம் நீர் பெருக்கெடுத்து காணப்பட்டது ஆம் அந்த சகதியான சாலையில் ஜானு நடந்து சென்று கொண்டிருந்தாள். அதான்,அன்று சிக்னலில் வண்டி நின்றுக்கொண்டு இருந்த தருவாயில் ஒரே குடைக்குள் காதல் ஜோடிகள் இருந்தார்களே அந்த ஜானுவே தான்.

"ஏய் ஜானு நில்லு நில்லு" என்று கத்தியவாறு பின்னால் நடந்து வந்தான் பிரகாஷ்.

"இப்ப எதுக்கு என்னை கூப்பிடுற ,அதான் எல்லாம் முடிந்து விட்டதே இனி உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை,இதுவே கடைசியாக இருக்கட்டும் நம்ம சந்திப்பது" என கடுகு பொறிந்து தள்ளுவது போல தன் கோபத்தை வெளிக்காட்ட அவனோ மன்னிப்பு கேட்டு கெஞ்ச சகஜமான மனநிலைக்கு ஜானு வரவில்லை....
இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த ரோஜா...

"எக்ஸ்கியூஸ் மீ அ..அது வந்து உங்கள் ப்ரைவேசில தலையிடுறதா நினைக்க வேண்டாம். இந்த மாதிரி ரோட்டில் நின்று காதல் விவகாரத்தை பேசுறது சரியில்லை.. வரவங்க போறவங்க எல்லாம் உங்களையே வேடிக்கை பாக்குறாங்க" என்று தனக்குறிய மெல்லிய குரலில் உரைக்க அந்த நிமிடம் பிரகாஷும் ஜானுவும் அமைதியாக நிதானித்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொண்டனர்.

"ஜானு ஐயம் சாரி"

"ம்ம்ம்"

அந்த நிமிடம் சூழ்நிலை சுமுகமாக முடிந்தது. ரோஜாவும் அமைதியாக அந்த சூழ்நிலையை கடந்து நடக்க துவங்கினாள். காதலில் ஊடல் சகஜம் தான் ஆனால் அநாகரிகமாக இப்படி நாலு பேரு கடந்து செல்லும் சாலையில் நின்றுக்கொண்டு சண்டை இடுவது சரியல்ல இதை ரோஜா அவர்களுக்கு உணர்த்திவிட்டு அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை உருவாக்கிவிட்டு வீட்டுக்கு வந்தடைந்தாள்.
......

போன் ரிங் அடித்தது அதை எடுக்கலாமா வேண்டாமா என்று மனதிற்குள் பட்டிமன்றம் நடத்திவிட்டு பின்பு எடுத்தாள்,ஏனெனில் அது வெளிநாட்டு நம்பராக அதுவும் தெரியாத நம்பராகவே இருந்தது.

"ஹலோ" என்றாள், அவள் சொன்ன ஹலோவில் சகல கஷ்டத்தையும் மறந்திருப்பர் எதிர்முனையில் இருந்தவர் ஏனெனில் அவ்வளவு இனிமை வாய்ந்த குரலில் இருந்தது அந்த வார்த்தை..

"ரோஜா..நான் கதிர் பேசுறேன்" என்றான் கலையின் அண்ணன் கதிர்.

"கதிர் நீங்களா? ஹாய் எப்படி இருக்கீங்க லண்டன் போய் யார் கிட்டயும் பேச நேரமே கிடைக்கில போல பாவம் கலை..அண்ணன் அண்ணன் என்று உயிரை விடுறா, அவளுக்கு ஒரு போன் பண்ணி நலம் விசாரிக்கலாம் இல்லே?"

"இல்லை ரோஜா நான் தினமும் இங்க பார்ட் டைம் ஜாப் வேற போறேன் அதான் டைம் கிடைக்க மாட்டேங்குது" என்று உரையாடலை நீட்டிக்கொண்டு சென்றனர். இவர்களுக்குள் உள்ள பரஸ்பரம் நட்பு ,அவன் லண்டன் சென்றவுடன் விரிசல் விட்டது போல் இருந்தாலும் இந்த அழைப்பேசி மூலம் புதுப்பித்தது.
நட்பு என்றால் இவர்கள் போல் அல்லவா இருக்கவேண்டும் என்று கலை பலமுறை பொறாமை கொண்டதும் உண்டு. சிறுவயதில் இவர்கள் இருவரும் அவ்வளவு பழகாத நிலையில் வளர வளர இவர்களுக்குள் ஒருவித நட்புணர்வு ஏற்பட்டது. இந்த நட்பில் எந்த வித எல்லைமீறலும் இல்லாமல் இயல்பாக இருந்ததால் பெரியவர்கள் இதற்கு முழு அனுமதி தந்தனர். கலையின் பெற்றோருக்கு ரோஜா என்றாலே பிரியம் தானே...

இவளுடன் பேசிவிட்டு ரவி ராதாவிடமும் பேசினான் கதிர். அழைப்பு துண்டித்தவுடன்... ஏனோ ரோஜாவின் முகம் வாட்டமாக இருந்தது..

"ப்ச்ச் நானும் படிப்பை தொடர்ந்து இருந்தால் இந்த மாதிரி மேல் படிப்பு எல்லாம் போயிருக்கலாம். என் வாழ்வில் காலேஜ் போறதுக்கு கொடுப்பனை இல்லாமல் போயிடுச்சு" என்று மனதளவில் நொந்து கொண்டாள். உண்மைதான் தனக்கென தனிப்பட்ட ஆசை எல்லோருக்கும் இருக்கும் தானே..ரோஜாவும் இளம்பெண் தான் அவளுக்கும் மனமுண்டு அல்லவா? ஆனால் விதி தாய் தந்தையை பறித்து கொண்டு அவளை படிக்க விடாமல் தம்பி தங்கைக்காக வேலைக்கு செல்லும் நிலையை ஏற்படுத்திவிட்டது.

"டேய் ரவி"

"என்னக்கா"

"நீ நல்லா படிச்சு பெரிய ஆபிஸரா வரனும் வருவியா"

"நீ என்ன சொன்னாலும் கேட்பேன் அக்கா நான் நல்லா படிக்கிறேன் அக்கா எனக்காக இல்லை உனக்காக"

"தாங்க்ஸ் டா" என்றாள் புன்னகையித்தபடி. அருகில் இருந்த ராதா அவள் தோள்களை பற்றியபடி
"எனக்கு உன் வலி புரியுது அக்கா..நீயும் கலை, கதிர் அண்ணன் மாதிரி காலேஜ் படிக்கனும் னு ஆசைப்படுறல"

"ம்ம்ம்"

"அக்கா நீ ஏன் கரஸ்பாண்டன்ஸ்ல சேரக்கூடாது, உனக்கு வரலாறு என்றால் பிடிக்கும் தானே . பி.ஏ ஹிஸ்ட்ரி அப்ளை பண்ணு" என்றாள் சட்டென்று யோசனையை முன்வைத்து.

"சரிதான் ராதா அப்படியே செய்றன்" என்றாள் புன்னகையித்தபடி. இதுவரை கல்லூரி படிப்பு படிக்க முடியவில்லை என்ற ஏக்கம் தனிந்தது. இந்த மாற்றம் இவளுக்குள் ஓர் திருப்புமுனை ஏற்படுத்தும் என நம்புவோம்.
....
மறுநாள் பொழுது விடிய அரக்கபரக்க காலை உணவை உற்கொண்ட ஆர்யா மெட்ராஸ் யுனிவர்சிட்டி செல்ல ஆயுத்தமானான்.

"டேய் எங்க கிளம்பிட்ட" என்றாள் ஆராதனா..

"யக்கவ் போகும்போதே இப்படி கேக்குற , ஒன்னுல என் பிரண்டோட தங்கச்சிக்கு பி.ஏ அப்ளிகேஷன் வாங்குறதுக்கு போறேன்..சீக்கிரம் வந்துவிடுவேன்" என்று சொல்லிவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்து அதை முறுக்கி கிளப்பிக்கொண்டு விருவிருவென சென்றான்.

சேப்பாக்கம் வரை வந்தடைந்துவிட்டான் இன்னும் கொஞ்சம் தூரத்தில் மெட்ராஸ் யுனிவர்சிட்டி வந்து விடும்..தற்செயலாக திரும்பி பார்த்தவன் ரோஜா நின்றிருப்பதை கண்டவன், பைக்கை அவளிருக்கும் திசையில் செலுத்தினான்.

"ரோஜா..."

"அ...ஹாய்" என்றாள் பதற்றத்துடன்.

"என்னை உங்களுக்கு தெரியும்ல நான் கலையோட க்ளாஸ் மெட்"

"ம்ம்ம் தெரியும்"

"என்ன இந்த பக்கம்"?

"அது வந்து நான் கரஸ்பாண்டன்ஸ்ல பி.ஏ அப்ளை செய்ய வந்தேன் திடிரென பஸ் ப்ரேக் டவுன் அதான் இப்ப எப்படி போறதுனு தெரியல இன்னொரு பஸ் பிடிக்க வெயிட் பண்றேன்"என்றாள் நிதானித்து.

"ஓகே நோ ப்ராப்லம்ஸ் நானும் அங்கே தான் போறேன் வாங்க ட்ராப் பண்றேன். இங்கே இருந்து இன்னும் கொஞ்ச தூரம் தான்" என்றான் சாதாரணமாக.

சரி என்று அவனுடன் பைக்கில் ஏறி அமர்ந்தாள். தான் இதுவரை மனதில் நினைத்து கொண்டிருந்தவளை தன் இருசக்கர வாகனத்தில் அமர்த்தி அழைத்து செல்லும் கொடுப்பினை அவனுக்கு கிடைத்த பாக்கியம்.

ஆனால் அவளுக்கென்ன தெரியும் அவன் மனதில் அவள் இருக்கிறாள் என்று, தெரிந்திருந்தால் உக்காந்து இருக்கமாட்டாளே பார்ப்போம் என்றாவது ஒருநாள் தெரிய தானே போகும்.

தொடரும்.





மாற்றம் ஒன்றே மாறாதது அத்தியாயம் -2
 

Author: Bhagya sivakumar
Article Title: மாற்றம் ஒன்றே மாறாதது -3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN