சாதி மல்லிப் பூச்சரமே !!! 42

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 42

மனைவியின் காதலைப் பரிபூரணமாக உணர்ந்தவனுக்கு… அவளை நெருங்க முடியாத படி.. எங்கு மறுபடியும் ஒரு பிரிவு நேர்ந்திடுமோ.. என்ற எண்ணத்தில் இவன் காதலே அவளைத் தூர வைக்க… ஆனால் இன்று அவனையும் மீறி அவன் தன்னவளைத் தேடினான்.

பிரித்து அறிய முடியாத ஒரு உணர்வுடன் தன் அறைக்கு வந்து கைப்பேசிக்கு சார்ஜ் போட்டவன்... பின் பீரோவைத் திறந்து, அதனுள் இருந்த தாங்கள் சிறுவயதில் விளையாடிய பெண் மரப்பாச்சி பொம்மையைக் கையில் எடுத்து, “பாப்பு குட்டி… இன்னைக்கு ஒன் யாவகம் மாமாவுக்கு செத்த அதிகமா இருக்கு டி. எங்கட்டி இருக்க பாப்பு?” தன் மனைவி அதனுடன் தான் இருக்கிறாள் என்ற நிலையில் மானசீகமாய் அதனுடன் இவன் பேச…

எப்போதும் மனைவி ஞாபகம் வரும்போது எல்லாம் இதனுடன் பேசுவது இவன் வழக்கம் தான். அதே நேரம் பின்புறம் ஏதோ பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்கவும், “வீட்லதேன் யாரும் இல்லையே… பொறவு என்ன சத்தம் கேக்கு...” என்று முணுமுணுத்த படி கையில் உள்ள பொம்மையைக் கட்டில் மேல் வைத்து விட்டு இவன் சென்று பார்க்க, அங்கு பூனைகள் இரண்டும் விளையாடிக் கொண்டிருந்ததில் எழுந்த சத்தம் அது என்பதைப் புரிந்து கொண்டவன் பின், முன்புறம் வந்து கதவைப் பூட்டியவனுக்கு, வீட்டில் யாரும் இல்லாத வெறுமை ஏனோ இன்று அவனை அதிகமாகவே தாக்கியது.

இவன் தன் அறைக்கு வந்து போட்டிருந்த சட்டையையும் உள் பனியனையும் கழட்ட... அடுத்த நொடி அவன் முதுகில் பதட்டத்துடன் கூடிய ஸ்பரிசம் பதிந்தது... அதிலும் அந்த ஈர உதடுகள் சத்தம் இல்லாமல் “மதிமாமா” என்று முணுங்கவும்... மனைவியின் அதீத நினைவால் இது கனவோ என்று தான் முதலில் ஒரு நிமிடம் நினைத்தான் வேந்தன். ஆனால் இது உண்மை என்பதை மனைவியின் இறுக்கிய அணைப்பும் நடுங்கிய உடலும் அவனுக்குத் தெரியப்படுத்தியது.

“ஏட்டி... எப்போ டி வந்த... என்ன டா....” மனைவியின் இறுக்கிய அணைப்பில் இருந்த படியே சகஜமாய் கேட்டவன் தன்னவளை முன்புறம் இழுத்து நிறுத்தியவனின் முகமோ மனைவியைப் பார்த்து அதிர்ந்தது.

தலை முடி எல்லாம் தூசு படிந்து காற்றில் பறக்க... முகம் சோர்ந்து போய் வியர்வை வழிய. அதை விட கண்ணில் அப்படி ஒரு களைப்பு... புடவை வேறு ஆங்காங்கே கிழிந்து சேரும் சகதியுமாய் சில இடங்களில் இருந்தது. அவள் நிற்க முடியாமல் தள்ளாட… உடனே இவன், “என்ன டி ஆச்சு...” என்று பதறியபடி மனைவியை கைகளில் ஏந்த, அப்போது அவள் கால்கள் அவன் கண்ணில் பட... அவள் பாதம் முழுக்க காயங்களும் காய்ந்த ரத்தத்தின் சுவடுகளாய் இருந்தது. பார்த்து ஒரு நிமிடம் அதிர்ந்து உறைந்தவன், அடுத்த நொடி “பாப்பு குட்டி!” என்று முன்பை விட அதிர்ந்தே போனான்.

மனைவியைக் கட்டிலில் அமரவைத்து விட்டு, அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவள் பாதங்களை தொட்டு பாதங்களை ஆராய... அவளோ தன்னவனின் கேசத்தைக் கலைத்து... அவனை நிமிரச் சொல்ல, இவன் நிமிரந்ததும்... பேச முடியாமல் திணறியவள் தனக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டும் என்பது போல் இவள் வலது கையால் செய்கை செய்ய, அதில் சுத்தமாக செத்தே போனான் மதிவேந்தன். எழுந்தவன் அங்கிருந்த நீரை அவளுக்குப் புகட்ட, நிதானமாகக் குடித்தவள்... பின் கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள். மனைவியின் முதுகை வருடி ஆசுவாசபடுத்தியவனோ, “என்னட்டி ஆச்சு?” என்று ஆவேசமாய் கேட்க...

நடந்ததைச் சொன்னவள்… வழி தெரியாமல் ஏதோ என்று பாதை பிடித்து வர.. கடைசியில் தன் தாய் தான் தன்னை தெய்வமாய் இருந்து வீட்டில் கொண்டு வந்து சேர்த்தாகச் சொன்னவள், “வீட்டில் யாரும் இல்லை என்றதும் ஒரு அசதியில் உன் அறைக்கு வந்துட்டேன் மாமா... உனக்கு ஒன்னும் ஆகாதுன்னு தெரியும். இருந்தாலும் உன்னைப் பார்க்கிற வரை என் உசுரு என் கிட்ட இல்ல மாமா...” என்று திக்கித் திணறி சொன்னவள் தன்னவனை இன்னும் ஆவேசமாய் அணைத்துக் கொள்ள, வேந்தனுக்கு ரத்தமே கொதித்தது.

“நாளைக்கு இருக்கு டே ஒங்க எல்லாத்துக்கும்” என்று பல்லைக் கடித்தவன், நகத்துக்குக் கூட வலிக்காமல் வேலை செய்பவள்... ஆடைகளைப் பார்த்துப் பார்த்துப் போடுபவள்... அப்படி பட்ட தன் மனைவி இன்று அவனுக்காக இப்படி ஒரு கோலத்தில் வந்து நிற்கவும், கண்கள் கலங்கியது அவனுக்கு. கொஞ்ச நேரம் அவளை அணைத்து அமைதி படுத்தியவன் பின் “சரி இருடா.. நான் ஒனக்குச் சாப்பாடு எடுத்து வருதேன்” இவன் சற்றே விலக நினைக்க...

அவளின் பிடியோ உன்னை விட மாட்டேன் என்ற படி இன்னும் இறுகியது. “ஏட்டி... பசிக்குமல்லோ...”

“அதெல்லாம் இல்ல... இப்போ எனக்கு என் மாமா தான் வேணும்....” சொன்னதோடு மட்டுமில்லாமல் எக்கித் தன்னவன் கழுத்தை வளைத்து இவள் அவன் முகம் எங்கும் முத்த மழை பொழிய, அவள் செயலில் மனைவியின் இவ்வளவு நேர மன உளைச்சல் அவனுக்குப் புரிந்தது. இவன் அமைதியாய் தன்னவளின் அணைப்பில் அவளுக்கு ஆறுதலாய் நிற்க, பெண்ணவளுக்கோ இது போதும் என்ற நிலையில் அமைதியாய் இருக்க முடியவில்லை.

கணவன் நலமுடன் இருக்கிறான் என்பதைத் தன் தீண்டலாலும்... உதட்டின் ஊர்வலத்தாலும்... அவனின் ஸ்பரிசத்தாலும் அறியும் வேகம் வந்தது அவளுக்கு. காதல் கொண்ட மனதை யாரால் தடுக்க முடியும். இவள் அவனின் இதழயோடு சேர்த்துத் தன் பல் தடத்தால் இம்சிக்க... முதலில் பொறுமையாயிருந்து அனைத்தையும் உள்வாங்கியவனுக்கோ, தன்னவளின் காதல் புரிய... இவனும் அவளுடன் ஒன்ற நினைத்தவன்... உடனே நினைவு வந்தவனாக, “ஏட்டி, பாக்டரில தண்ணீ பைப் சரி இல்ல. அதனால அப்டியே வந்துட்டேன். நான் மேலுக்கு செத்த தண்ணீ ஊத்திகிட்டு வந்துருவா?” காதலோடு தன்னவளை அணைத்துக் கொண்டு ஏதோ கிணற்றுக்குள் இருந்து கேட்பது போல் அவன் கேட்க

அதையெல்லாம் அவன் மனைவி காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. அவள் தன் போக்கில் இதழ் ஊர்வலத்தையும் பல் தடத்தையும் அவனிடம் பதிக்க... வலுக்காட்டயமாக தன்னவளைத் தன்னிடமிருந்து பிரித்தவன், “நான் இன்னைக்கி இயற்கை உர பாக்டரிக்குப் போய் வந்தேன்.. அதேன் செத்த அழுக்கா இருக்குதேன் டி...” என்று இவன் அழுத்திச் சொல்ல...

அவன் எதார்த்தமாய் தான் சொன்னான். ஆனால் பெண்ணவளுக்கு அன்று கணவனை அவள் சொன்ன வார்த்தைகள் நினைவு வரவும், கண்னில் மறுபடியும் நீர் தேங்க, ‘அப்போ கடைசி வரை உன் காதலை எனக்கு கொடுக்க மாட்டீயா மாமா?’ என்று இவள் விழியாலேயே தன்னவனிடம் அவனின் காதலை யாசிக்க...

அதில் துடித்துப் போனவனாக, “என் பொஞ்சாதி காதலைக் கூட என்ட்ட தோள் நிமிர்த்தி கர்வமாதேன் கேக்கணும்” என்றவன், “இம்புட்டு நாள் ஒன் காதலை புரிஞ்சிக்கிடாம இருந்ததுக்கு இந்த மாமனுக்கு மாப்பு கொடுப்பியா டி...” என்று இவன் காதலோடு கேட்க, அடுத்த நொடி தன்னவனின் இதழைத் தன் இதழால் பூட்டியிருந்தாள் பூந்தென்றல்.

அதன் பிறகு இருவரும் இந்தனை வருட காதலையும், பிரிவையும் சேர்த்து இன்று ஒரே நாளில் கரைந்து போனார்கள். அப்படி இல்லை… அதீத காதலில் மெழுகாய் உருகித் தான் போனார்கள் இருவரும்.

நல்ல தூக்கத்திலும் தன்னை விடாமல் இறுக்கிக் கொண்டு தூங்கும் மனைவியைத் தன் தூக்கம் களைந்து பார்த்தவன், “பாப்பு குட்டிக்கு என்ன புடிவாதம்... இன்னிக்கு என்னைய ஒரு வழி பண்ணிட்டா” என்று செல்லமாய் காதலோடு முணுமுணுத்தவன்... அதே காதலோடு தன்னவளின் நெற்றியில் முத்தம் வைத்து விட்டு இவன் எழுந்து சென்று மஞ்சள் பத்தை எடுத்து வந்து தன்னவளின் காலுக்குப் பூச...

அதே நேரம் அவன் கைப்பேசிக்கு குறுஞ்செய்திக்கான சத்தம் வரவும் எழுந்து சென்று பார்த்தவன், அதில் இன்று தன்னைக் கொல்ல இருந்தவர்களின் தகவலைப் பற்றி ஒருவனிடம் கேட்டிருக்க, அதற்கான பதில் வந்திருக்கவும்... பார்த்தவன், பின் மனைவி தனக்கு அனுப்பியிருந்த வாய்ஸ் மெசேஜ்ஜைத் தன்னவளின் தூக்கம் கெடாமல் இருக்க ஹெட்செட் மூலம் கேட்டவனின் உடலோ அதிர்ந்தது.

“எப்டி பட்ட மரண பயத்தடே என் பாப்புக்கு நீங்க காட்டி இருக்குதீய... ஒங்க அத்தன பேத்தோட சங்க அறுக்கல.. என் பேர் மதிவேந்தன் இல்லடே!” என்று சபதம் செய்தவன், மனைவி கைப்பேசியில் கண்ணீருடன் கரைந்தாலும் அவள் வார்த்தையில் இருந்த காதலில் அதுவும் இவன் காதலுக்கு நிகரான காதலை அவள் கர்வத்துடன் உணர்ந்து சொன்னதைக் கேட்டவனுக்கு தன்னவளின் காதலில் உடம்பு சிலிர்த்துத் தான் போனது.

ஆனால் அவள் இப்படி சொன்னதைக் கேட்காமலே அவனாக இன்று அவளின் அலைபுருதலில் தன்னவளின் காதலைப் புரிந்து கொண்டானே இவன். அதில் மனம் நிறைந்தவனாக காதலோடு இப்போது இவன் மனைவியை நாடிச் செல்ல... அந்த தூக்கத்திலும் தன்னவனின் தேடலை ஏற்றுக் கொண்டாள் அவன் காதல் மனைவியும்.

காலையில் கதவு தட்டும் சத்தத்தில் முதலில் கண் விழித்தது என்னமோ தென்றல் தான். இவள் மணியைப் பார்க்க அது காலை ஒன்பது என்று காட்டவும், கணவனின் தூக்கம் கலையாமல் இவள் அவசரமாக தன்னைச் சரி செய்த படி ஓடிச் சென்று கதவைத் திறக்க... வெளியே தாமரை, சின்னத்தாய் மற்றும் சாமந்தி நின்றிருந்தார்கள்.

மருமகளைப் பார்த்ததும் மாமியார்கள் இருவரும் முதலில் அதிர்ந்து பின் சங்கோஜமாகி முகத்தைத் திருப்பிக் கொள்ள… இவள் இயல்பாக, “வாங்க அத்தை!” என்று அழைக்க, இருவருக்கும் முன்பு உள்ளே நுழைந்த சாமந்தியோ வாயைப் பொத்தி சிரிக்க, இவள் கேள்வியாய் அவளை நோக்கவும், “ஆமா... ராப்பொழுது முழுக்க நீயும் என் மச்சானும் கபடி வெளையாண்டீங்களோ...” வந்தவள் தன் வழமையில் குசும்பாய் கேட்க, இவள் புரியாமல் விழிக்க...

தாமரை, “சும்மா இரு சாமந்தி” என்று அதட்டியவர் இருவரையும் கண்டும் காணாத மாதிரி உள்ளே விரைய

தான் எப்போதும் இங்கு தங்காதவள் இன்று இங்கு தங்கியதால் அத்தைக்கு கோபமோ என்று தென்றல் குழம்ப, அவளின் முகத்தைப் பார்த்த சாமந்தி, “ரொம்ப யோசிக்காதிங்க... நீங்க கபடி வெளையாண்டதுக்கு அடையாளமா உங்க முகம் முழுக்க வேந்தன் மச்சான் நகத்தால கோலம் போட்டு இருக்காரே...” என்று இவள் ராகம் இழுக்க.

தென்றலுக்கு அவள் சொன்னது புரிந்ததும் வெட்கத்தில் ஐயோ என்ற படி அங்கிருந்த கண்ணாடியில் ஓடி சென்று தன் முகத்தைப் பார்த்தவள், அவள் முகத்தில் உள்ள கீரல்கள் எல்லாம் அவர் நகம் இல்லை கணவன் நெஞ்சில் தவழ்ந்த புலிப் பல்லால் ஏற்பட்டது என்பதை இவள் எப்படிச் சொல்வாள்... முகம் இன்னும் சிவக்க உள்ளே ஓடி வந்தவளுக்கு, சாமந்தியின் சிரிப்புச் சத்தம் இன்னும் இவளைச் சிவக்க வைத்தது.

எவ்வளவு நேரம் தான் அவள் உள்ளேயே இருக்க முடியும்... இவள் கணவனை எழுப்ப.. அவனோ தூக்கக் கலக்கதிலேயே தன்னவளை இழுத்துத் தன் மேல் சாய்க்க, “யோவ் மாமா.. நீ செய்த வேலையால் உங்க அம்மா என்னைப் பார்த்து சிரிக்கறாங்க...” இவள் விட்டால் அழுவது விடுபவள் போல் சொல்ல...

அவனோ கண்ணைத் திறவாமலே, “புதுசா நான் மட்டும் என்னத்தடி செஞ்சிட்டேன்... எல்லா ஊட்டுக்காரனுங்களும் செய்யறது தேன...” இவன் வெட்கமே இல்லாமல் பதில் தர... கோபத்தில் அவள் இவன் இடுப்பைக் கிள்ள, அதில் அவனோ “ஆஆஅ...” என்று அலறியதும் கணவனின் வாயைத் தன் கையால் பொத்தியவள்,

“கண்ணைத் திறந்து என்ன பாரு யா...” இவள் ரகசியமாய் கணவனை நெருங்கி சொல்லவும்

ஒரு வித மயக்கத்துடன் கண்ணைத் திறந்து மனைவியின் முகத்தைப் பார்த்தவன் அவள் கன்னத்தில் தங்களின் கூடலின் வரிகளாய் தடயங்களைப் பார்த்தவன் அவள் கையைத் தட்டி விட்டு சத்தம் இல்லாமல் இவன் சிரிக்க, அவள் முறைக்க... சிரிப்பின் ஊடே, “ஒன்னைய யார் டி என் நெஞ்சில் இருக்கிற புலிப் பல்லு கிட்ட வந்து முகத்தை ஒரசச் சொன்னது?” என்று தன்னவளைக் கண் சிமிட்டி இவன் கலாய்க்க

அதில் செல்லமாய் கோபித்துக் கொண்டவள், “ஆண்களுக்கு நெஞ்சு நிறைய முடி இருந்தா பேச்சில் எகத்தாளம் இருக்கும் என்றது சரியா தான் இருக்கு” என்றவள், “இந்த முகத்தோட அத்தை என்ன பார்த்துட்டாங்க தெரியுமா?” இவள் மறுபடியும் சிணுங்க

“இது என்னட்டி புதுசா புரளி கெளப்புத?” என்று அவள் முந்தைய பேச்சுக்குப் பதில் சொன்னவன், “பார்த்தா என்ன டி? எண்ணி பத்து மாசத்திலே பேரனோ பேத்தியோ வரப்போகுதுனு நெனைச்சிருக்கும் என் அம்மைங்க… போவியா” இவன் வீரமாய் இவ்வளவு தானே என்பது போல் வசனம் பேச

அதே நேரம் வெளியில் “வேந்தா....” என்று மகனை அழைத்தார் தாமரை. இவனோ ஐயோ நானா என்ற படி இவ்வளவு நேரம் அவளிடம் பேசியது எல்லாம் மறந்தவனாய் சங்கடமாய் மனைவியைப் பார்க்க, அவளோ சிரிப்புனூடே, ‘என் கிட்ட வீரமா பேசின… இப்போ போயேன்’ என்பது போல் சைகை செய்ய

அதற்குள் தாமரை, மகனின் நிலை புரிந்து கொண்டவராக அங்கிருந்த படியே, “ஒனக்கு காலை பலகாரம் குடுத்துட்டு வீட்ட ஒழுங்கு செஞ்சிட்டுப் போகத்தேன் நாங்க வந்தோம். செஞ்சிட்டோம் இதோ கெளம்பறோம்... ஒரு வாரம் அங்கை வீட்டில் தங்கி இருந்து அவளைப் பார்த்திட்டு வரோம். நீயும் ஒன் பொஞ்சாதியும் வீட்டைப் பார்த்துக்கிடுங்க. அதைச் சொல்லத் தேன் கூப்டேன்” என்றவர் கூடவே, “குளிச்சிட்டு ஒன் பொஞ்சாதிய வெளக்கு ஏத்தச் சொல்லுடே” என்க

‘ஏன்… அதை என் கிட்ட சொல்ல மாட்டாங்களா... இன்னும் என் மேல் கோபமா?’ என்று தென்றல் மனதிற்குள் நினைத்த நேரம்

“மருமகளே, பலகாரம் ஆறுது... சட்டு புட்டுன்னு இரண்டு பேரும் சாப்பிடுங்க. இந்த ஒரு வாரமும் அங்கனயிருந்து சாப்பாடு கொடுத்து விடுதேன். நீ வேலைக்கும் போய்ட்டு வீட்டையும் பார்த்துகிட்டு சிரமப் படாத...” என்று மருமகளுக்காய் அவர் மருமகளிடமே சொல்லி விட்டு அங்கிருந்து விலக

ரொம்ப நாள் கழித்து அவர் தன்னிடம் பேசியதில் மகிழ்ந்தவள்... அதே சந்தோசத்துடன் அவரிடம் எழுந்து விரைய நினைக்க... மனைவியின் நோக்கம் புரிந்து அவளின் கையைப் பிடித்து தடுத்தவனோ ஆள் காட்டி விரலால் அவள் முகத்துக்கு நேரே காற்றில் வட்டமடித்து அவளின் நிலையை நினைவு படுத்த... முகம் சிவக்க காதலுடன் தன்னவனின் மார்பில் முகம் புதைத்தாள் தென்றல்.

இத்தனை வருட தன் தவம் நிறைவேறிய மகிழ்ச்சியில் வேந்தனும்... அளவிலா காதலில் தென்றலும்... கணவனின் கனவு இடமான பம்பு செட் மேல் தளத்தில்... அந்த ஏகாந்த இரவில் சம்மங்கி பூ வாசத்தின் நடுவே தங்கள் கூடலுக்குப் பிறகு இவள் தன் கணவனைப் பாடச் சொல்ல

அவனோ பாரதியார் பாடலான
காணி நிலம் வேண்டும் - பராசக்தி

காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்

தென்றல் வரவேணும்.

அந்த “தென்றல்” என்னும் வார்த்தையை உச்சரிக்கும் போது மட்டும் மனைவியைக் காதலோடு பார்த்து இவன் அழுத்திச் சொல்ல... தன் இரு கைகளையும் கோர்த்து தன்னவன் நெஞ்சத்தின் மேல் வைத்து அதன் மேல் தன் தாடையை பதித்து... அவனுக்கு நிகரான காதலுடன் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தவளோ

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு

பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
பாலித்திட வேணும்.


என்ற மீதி வரிகளை இவள் பாடி முடிக்க... அங்கு இணையில்லா காதல் அவர்கள் வாழ்வில் மறுபடியும் அரங்கேறியது. இனி காலம் முழுக்க இருவரின் வாழ்விலும் காதல்… காதல்.. காதல்.. மட்டும் தான்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 42
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN