ஆதித்யா சக்கரவர்த்தி - 1

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
(இது முழுவதுமாக என்னுடைய கற்பனை அல்ல.... ஒரு தொலைக்காட்சித் தொடரை தழுவி எழுதப்பட்டது ...வாசகர்களின் விருப்பத்திற்கிணங்க மட்டுமே இந்த கதை இங்கே பதிவிடப்படுகிறது... விருப்பமுள்ளவர்கள் படித்துக்கொள்ளுங்கள்...Happy reading🙂)
ஆதித்யா சக்கரவர்த்தி



அத்தியாயம்-1

சண்முக சுந்தரத்தின் இல்லம் மகிழ்ச்சியால் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. எங்குமே சிரிப்பு சத்தமும், உறவினர்களின் வருகையால் கலகலப்பும் அதிகமாகவே இருந்தது. மணப்பெண்ணின் தந்தை சண்முகசுந்தரம் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு தான் இருந்தார் போலும் ...

ஓரிடத்தில் நில்லாமல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டே உறவினர்களையும், மாப்பிள்ளை வீட்டினறையும் முறைப்படி வரவேற்றுக் கொண்டிருந்தார் .
அங்கு அறையில் தயாராகிக் கொண்டிருந்த அன்றைய கதாநாயகி மலர்விழி கூட மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள்.

பின்னே அவளுக்கு இன்று நிச்சயதார்த்தம் மகிழ்ச்சியாக இல்லாமல் இருந்தால் எப்படி ???
அதுவும் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன் அண்ணனை வேறு இன்று சந்திக்கப் போகிறாள்.
அண்ணன் காதல் திருமணம் செய்ததால் வீட்டை விட்டு ஒதுக்கி வைத்த தந்தையை தன் திருமணத்தை காரணமாக வைத்து கெஞ்சி கூத்தாடி அல்லவா !!தன் உடன்பிறந்த அண்ணனை தன் நிச்சயதார்த்த விழாவிற்கு அழைக்க சொல்லி இருந்தாள். அதற்கு அவளது அப்பா சண்முக சுந்தரத்தை சம்மதிக்க வைப்பதற்குள் இவள் ஒரு வழி ஆகி விட்டாள் .
மலர்விழியின் அம்மா சுமதி ஒரு அப்பாவி ஜீவன். அவளது அப்பா என்ன சொன்னாலும் மறுப்பு சொல்ல மாட்டார். ஆனால் அவருக்கும் அவளது அண்ணன் மகேஷ்வரன் என்றால் உயிர். அண்ணனைப் பற்றி பேச்சை எடுத்தாலே தாயின் முகம் மலர்ந்து விடும் என்பதை அறிந்து வைத்திருந்தாள் மலர்விழி.
தந்தையிடம் வாய் திறந்து கேட்காவிட்டாலும் தன் அம்மாவுக்கும் தன் அண்ணனை தந்தை ஒதுக்கி வைத்ததில் பெருந்துயரம் என்பது அவளுக்கு நன்றாக தெரியும். தன் திருமணம் தன் சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக வைக்க வேண்டாமா??

எப்படியோ அண்ணன் தன் திருமணத்தை சாக்கிட்டு தன் குடும்பத்தோடு இணைந்தால் அவளுக்கு மகிழ்ச்சிதான். மகேஸ்வரன் தற்போது அண்ணியின் அண்ணன் வீட்டில் இருப்பதாகவும், அத்தோடு அவர்களுக்கு அழகான பெண் குழந்தை இருப்பதாகவும் அவளுக்கு தகவல் வந்திருந்தது.
மிகவும் சந்தோஷமாக தன் அண்ணனையும் அண்ணியையும் அந்த குட்டி பெண் குழந்தையையும் எதிர்நோக்கி ஆவலாக காத்திருந்தாள் மலர்விழி.

தனது அலங்கார அறையில் மலர்விழி இதே யோசனையில் மூழ்கி இருக்க...
"ஹேய் அங்க பாருங்கடி கல்யாணப்பொண்ணு இப்பவே கனவு லோகத்துக்கு போயிட்டா..." என்று அவளது தோழிகளில் ஒருத்தி கலாய்க்க ஆரம்பித்துவிட்டாள்.

"ஆமா ..ஆமா.. பின்ன ஹீரோ மாதிரி மாப்பிள்ளை கிடைச்சா யாருக்கு தான் கனவு வராது..." என்று கலாவதி நீண்ட பெருமூச்சுடன் கூற...

" நீ ஒன்னும் கவலைப்படாத டி செல்லம்... நீ கட்டிக்க போற உன்னோட மாமா மவன் கிட்ட இத அச்சு மாறாம அப்படியே சொல்லி புடுறேன்" என்று வந்தனா ராகத்தோடு சொல்ல அனைவரும் கொல்லென சிரித்தனர்.

"ஏய் கல்யாண பொண்ணு அவ தாண்டி... என்னை எதுக்குடி வச்சி கும்மி அடிக்கிறீங்க" என்று நழுவிக் கொண்டாள் கலாவதி.

"ஆஹா!!! ஆமா அந்த புள்ள பூச்சிய விட்டுட்டு இப்பொழுது நம்ம மலர சிறப்பா கவனிப்போம் " என்று நம்பியார் போல கைகள் இரண்டையும் தேய்த்துக்கொண்டு ஒருத்தி கூற ... மீண்டும் அங்கு சிரிப்பலை எழுந்தது.
தனக்குள் தன் அண்ணனையே எண்ணி கொண்டிருந்த மலர்விழி... தன் தோழிகள் கலாய்க்க ஆரம்பித்ததும் நந்தனை நினைத்து வெட்கப் புன்னகை புரிந்தாள்.

"ஆஹா !!!கல்யாண பொண்ணு வெட்கப்படுது டோய்..." என்று மீண்டும் கேலி பேசி சிரித்தனர்.
மலர்விழி புன்னகையுடனே அவர்களது உரையாடலைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.
அவள் எப்பொழுதும் அதிகம் பேசுவதில்லை... ம்ம்ம் ரிசர்வ் டைப் என்று சொல்வார்களே அந்த டைப்.

"சரி யாராவது மாப்பிள்ளை சார் பத்தி சொல்லுங்க..." என்றாள் கலா...

"பேரு நந்தன் என்ற நந்தகுமார்.. அமெரிக்காவில் ஒரு பெரிய பேங்க்ல வொர்க் பண்றார். மாப்பிள சாரோட அப்பாவும் மலரோட அப்பாவும் ஒண்ணா படிச்சவங்க ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ்.மாப்பிள சார் குடும்பத்தோட மலரோட பக்கத்து வீட்டுக்கு குடிவந்து அஞ்சு வருஷம் ஆகுது அதுக்கப்புறம்தான் அவங்களோட நட்பு திரும்ப ஆரம்பிச்சதுதாம் "
என்று ஒருத்தி கூற ஆரம்பிக்க மற்றவர்கள் ஆர்வமாக கேட்டனர்.

"ஆஹா...ஹீரோ அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே என்ட்ரி கொடுத்துட்டாரா அப்போ..." என்று வந்தனா ராகம் பாட எல்லாரும் சேர்த்தார் போல் ஓஹோ என்று கோரஸாக குரல் எழுப்பினர்.

"ஹேய் ...இது அரேஞ்ச் மேரேஜ் இல்லையா அப்போ??" கலாவதி முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்க...

"மாப்பிள்ளை சாருக்கு இது லவ் மேரேஜ்... நம்ம மலருக்கு மட்டும் அரேஞ்ச் மேரேஜ்... நமக்குதான் தெரியுமே இந்த விஷயத்துல மலர் கொஞ்சம் மக்குதான்னு..." என்று தோழிகளில் ஒருத்தி மலர்விழியின் காலை வார ...

"அப்டினா இல்ல ...மாப்பிள்ளை சார் இந்த வீட்டுக்கு குடி வந்த சமயம் கரெக்ட்டா அவரோட படிப்பு முடிஞ்சிட்டு... ஏதோ எக்ஸாம் எழுதி உடனே அமெரிக்காவுக்கு வேலைக்கு போயிட்டார் . இதுல எங்கிருந்து அவர மலர் லவ் பண்றதாம்" என்று மலர்விழிக்கு ஆதரவாக குரல் எழுப்பினாள் பானு.

" சரி சரி அத விடுங்க... நம்ம மாப்பிள்ளை சார் வெளிநாட்டுக்கு போய் படிச்சாலும் நம்ம ஊரு பொண்ணு தான் வேணும்னு இவளோட அப்பாகிட்டயே அடிச்சு சொல்லிட்டார்ல " என்று அங்கலாய்த்தாள் மற்றொருத்தி.

"அதனாலதான மாமனார் மருமகன் பக்கத்து வீட்டுல இருக்கான்னு நிச்சயதார்த்தத்துக்கு படுவேகமா ஏற்பாடு பண்ணிட்டார் போல ..." என்றாள் வந்தனா.

"ஆமா பின்ன இன்னும் ஒரு வாரத்துல நந்தன் திரும்ப வெளிநாட்டுக்கு போகப் போறாராம்... அடுத்த ஆறு மாசம் கழிச்சு தான் திரும்ப வருவாராம் ...அதுக்குள்ள எங்கேஜ்மென்ட் வைக்கலைனா நம்ம மலர வேற எவனாவது கொத்திட்டு போய்டமாட்டானா ...???அதுக்குதான் இவ்வளவு சீக்கிரமா எங்கேஜ்மென்ட் ஃபங்ஷன் ...நந்தன் ஆறு மாசம் கழிச்சு திரும்ப வந்தவுடனே கல்யாணம் தான்... டும் டும் டும் தான்..." என்று சைகையால் செய்து காட்டி சிரித்தாள் மணப் பெண்ணின் தோழி சுபா.
மலர்விழியின் முகம் மீண்டும் நாணச் சிவப்பை பூசிக் கொண்டது.

நந்தனின் தந்தை வேல்ராஜும் அவளது தந்தை சண்முகசுந்தரமும் நெருங்கிய நண்பர்கள் .
நந்தனுக்கு தாய் இல்லை .தந்தை மட்டுமே.தந்தையும் இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனார். இறப்பதற்கு முன் தன் நண்பனிடம் தன் மகனின் திருமண பொறுப்பை ஒப்படைத்துவிட்டு தான் கடவுளின் திருப்பாதங்களில் சரணடைந்தார்.

இறுதிச் சடங்குக்கு வந்த நந்தனிடம் அது பற்றி பேச வாய்ப்பு இல்லாமல் விட்டு விட்டவர்... மறுமுறை அவன் இந்தியா வந்தபோது பிடித்துக்கொண்டார் .

வெளிநாட்டிலேயே எந்தப் பெண்ணையாவது திருமணம் செய்து கொண்டாலும் சரி தனக்கு மகிழ்ச்சி என்று அவர் கூறியபோது அவன் உடனேயே மறுத்துவிட்டான்.
தனது தாய் மண்ணில் உள்ள பெண் தான் தனக்கு மனைவியாக வேண்டும் என்று அவரிடம் அவன் சொன்னபோது அவருக்கு பெருமையாக இருந்ததோடு உடனே தன் மகளின் ஞாபகம் தான் வந்தது. அதை அவர் கேட்கவும் ஒரு நொடி கூட தாமதிக்காது எனக்கு சம்மதம் என்று தெரிவித்து விட்டானாம் நந்தன். அவளைப் பார்த்ததிலிருந்து அவனுக்கு மலர் மேல் ஒரு க்ரஸ்(crush) அது காதலாக உருமாறி விட்டதாம்.
முதலில் தந்தையின் ஆசைக்காக திருமணத்திற்கு சரி என்றவள் ...பின் நந்தன் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்கு வந்திருந்த சமயம்... ஒருநாள் அவளை கோவிலுக்கு செல்லும் வழியில் தனியே சந்தித்த நந்தன் தன் காதலை தெரிவித்தவுடன் எல்லா இளம் பெண்களையும் போல தன் திருமண வாழ்க்கையை பற்றி ஆவலாக கனவு காண ஆரம்பித்துவிட்டாள்.

இதோ அதோ என்று நிச்சயதார்த்தம் செய்யும் தருணமும் வந்தது. நந்தனின் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள் என்பதால் மாப்பிள்ளை வீட்டினரின் எண்ணிக்கை மிகவும் குறைவுதான். நந்தனின் நண்பர்கள் ஒரு சிலரும் ...அவனது அப்பா வேல்ராஜின் தொழில்முறை நண்பர்கள் ஒரு சிலரும்... வேல்ராஜின் ஒன்றுவிட்ட அண்ணன் மற்றும் அவரது மனைவி மட்டுமே மாப்பிள்ளை வீட்டின் சார்பாக வந்திருந்தனர்.
இரு வீட்டிற்கும் பெரியவராக எல்லாவற்றையும் அரக்கப்பரக்க கவனித்தது சண்முகம் சுந்தரம் தான்.

"பொண்ண அழைச்சுட்டு வாங்கோ..." என்று ஐயர் குரலெழுப்ப வெட்கப் புன்னகையுடன் தலைகுனிந்தவாறு அழகு தேர் போல வந்து அமர்ந்தாள் மலர்விழி. அவளது அழகு விழிகள் பார்த்து கவிதைகள் பல எழுதலாம். அவளது விழிகளை பார்த்தே அவளது பெயரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்று பலர் கூறுவார்கள்.
கொடி போல் மேனி ... குழந்தைத்தனமான அமைதியான முகம்... மீன் போன்ற அகன்ற விழிகள் அவளது மூக்குத்தி கூட தனி அழகுதான் ... இயற்கையிலேயே சிவந்த அழகான செவ்விதழ்கள் மொத்தத்தில் மலர்விழி பேரழகி தான்.

மலர்விழியை கண்களால் விழுங்கியவாறே எதிர் வரிசையில் அமர்ந்திருந்தான் நந்தன் என்ற நந்தகுமார். ஆறடி உயரம்... கூர்மையான கண்கள்... சிரிக்கும் உதடுகள் ...அமெரிக்க வாசம் அவனை வெள்ளை வெளேர் என காட்டியது. அவனது முறுக்கேறிய தேகம் தினமும் உடற்பயிற்சி செய்பவனாக எல்லாருக்கும் சுட்டிக்காட்டியது. கண்களில் கனிவும் காதலும் கொஞ்சி விளையாட ...அவனது பளிச்சென்ற சிரிப்பு அவனை ஆண் அழகனாகவே காட்டியது எனலாம்.

ஐயர் நிச்சயதார்த்த பத்திரிகை வாசித்து முடிக்க மலர்விழியின் சார்பில் அவளது பெற்றோரும் ...நந்தனின் சார்பில் அவனது ஒன்றிவிட்ட பெரியப்பா பெரியம்மா மூலம் நிச்சயதாம்பூலம் மாற்றப்பட்டது.

அதற்கு அடுத்த நிகழ்ச்சியாக மணமக்கள் மோதிரம் மாற்றும் நிகழ்ச்சி நடந்து முடிந்த பின் தான் மலர்விழியின் அண்ணன் மகேஸ்வரன் வந்து சேர்ந்தான்.
அண்ணனை பார்த்ததும் மலர்விழியின் கண்கள் லேசாக கலங்கியது. அண்ணி முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் நிற்பதைப் பார்த்ததும் அவளுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருந்தது. பின்னர் தன் தந்தை தானே அவர்களை ஒதுக்கி வைத்தது. அது மனதில் இல்லாமலா இருக்கும்.

மகேஸ்வரன் கல்லூரி கடைசி வருடம் படிக்கும்போது சுவாதியின் மீது ஏற்பட்ட காதல்.. வீட்டினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டான்.
சுவாதிக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை ஒரு அண்ணனும் தங்கையும் மட்டுமே இருந்தனர்.
அண்ணன் தங்கையின் திருமணத்தை உடனே ஒத்துக்கொள்ள வில்லை என்றாலும் விரைவிலேயே ஏற்றுக்கொண்டான்.
ஆனால் சண்முகசுந்தரம் அவர்களின் திருமணத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அவர் மறுத்து விட்டதால் அவன் ஒன்றும் தாழ்ந்து விடவில்லை... சொல்லப்போனால் உயர்ந்து தான் இருக்கிறான். சுவாதியின் அண்ணன் பெரிய பணக்காரன். அதனால் மகேஸ்வரனுக்கு வேலையும் உடனே கிடைத்தது. தங்கையை விட்டு பிரிய மனமில்லாமல் கூடவே வைத்துக் கொண்டான் அவளது அண்ணன். சுவாதியின் அண்ணன் மகேஸ்வரன் இடம் ரொம்ப ஒட்ட வில்லை என்றாலும் விலக்கவும் இல்லை ... ஓரளவு செட்டில் ஆன பின் தந்தையிடம் பேச முயற்சி செய்தால் அப்பொழுதும் அவர் தனது முரட்டு பிடிவாதத்தை விடாமல் அவனிடம் பேச மறுத்துவிட்டார். தந்தையை மீறி தாயும் மகளும் ஒன்று செய்யமுடியாமல் இருந்ததால் அவர்களையும் அவன் எந்த விதத்தில் தொந்தரவு செய்யாமல் விலகிக் கொண்டான். ஆனால் குழந்தை பிறந்தவுடன் அவனால் தாய் தந்தையரை விட்டு விலகி இருக்க முடியவில்லை. என்ன இருந்தாலும் இது அவனது வீடு இல்லையே... மீண்டும் ஒரு முயற்சியாக குழந்தையோடு கணவன் மனைவி இருவரும் வீட்டிற்கு வந்திருந்த போதும் சண்முகசுந்தரம் அவனிடம் பேசவில்லை. ஆனால் விரட்டவும் இல்லை. தந்தையை மீறி தாயும் ஒன்றும் செய்ய இயலாமல் தவித்துக் கொண்டிருந்தார். மலர்விழி கல்லூரிக்கு சென்றிருந்ததால் அவளும் வீட்டில் இல்லை.

மகேஷ்வரன் தந்தையிடம் மன்னிப்பு கேட்டும் அவர் தன் வாயை இறுக மூடி கொண்டு இருந்தார். தாயும் சிலை போல நின்றாரே தவிர ஒரு வார்த்தை அவனுக்கு பரிந்து பேசவில்லை.
சுவாதிக்கு அவர்கள் இருவரும் பேசாமல் இருந்து கணவனை அவமதித்தது போல் இருக்கவும் அவள் கணவனை அழைத்துக்கொண்டு வெளியேறி விட்டாள்.

கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.
முன் தினம் தான் தன் தந்தையிடம் இருந்து தன் தங்கையின் நிச்சயதார்த்த விழாவிற்கு வருமாறு மொட்டையாக கடிதம் ஒன்று வந்திருந்தது.
அதற்கும் சுவாதியை சமாதானப்படுத்தி அழைத்து வருவதற்குள்ளேயே அவனுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி விட்டது. ஆனால் எக்காரணத்தை கொண்டும் குழந்தையை அங்கே அவர்களுக்கு காட்டப் போவதில்லை என்று உறுதியாக இருந்து விட்டாள் சுவாதி. அதனால் குழந்தை வானதியை சுவாதியின் தங்கை சௌமியாவிடம் ஒப்படைத்து விட்டு அவசர அவசரமாக வந்து சேர்ந்திருந்தனர்.

ஆனால் அவன் வருவதற்குள்ளேயே தங்கையின் நிச்சயதார்த்தம் முடிந்து விருந்து ஆரம்பித்திருந்தது.
அவனை யாருமே அங்கு எதிர் நோக்கவில்லை. தன் சொந்த தங்கையின் நிச்சயதார்த்த விழாவில்
ஒரு மூன்றாம் மனிதன் போல் தன்னை அவன் உணர்ந்தான் அவன் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் அவனது மனைவி வேறு சீக்கிரம் பரிசு கொடுத்து விட்டு கிளம்பலாம் என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.

தனக்கென்று இங்கு யாருமே இல்லையே என்று வருத்தத்துடன் மகேஷ்வரன் நிற்க...
அவனது வருத்தத்தை உடனே போக்குவது போல் அவனது தங்கை மேடையிலிருந்து 'அண்ணா' என்று கூவலுடன் வேகமாக இறங்கி வந்தாள்.
"நீயாவது என்னை ஞாபகம் வச்சிருக்கியா மா" என்று அண்ணன் உணர்ச்சி வேகத்தில் கேட்கவும்... தங்கையின் கண்களில் இருந்து கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது.
கண்ணீரை துடைத்து விட்ட அண்ணனின் கைகளை பற்றிக் கொண்டவள்...
"மகேஷ் அண்ணா உன்னோட சண்டை போட்டு அஞ்சு வருஷம் ஆகுது... நீ இல்லாம எத்தனை நாள் அழுது இருக்கேன்னு தெரியுமா?? அப்பாகிட்ட நானும் பேசிப் பார்த்தேன் அவர்தான் யார் பேச்சையும் கேட்க மாட்டாரே... இப்ப கூட நான்தான் அடம் பிடிச்சு என்னோட நிச்சயதார்த்தம் பங்ஷனுக்கு உன்ன அப்பாவ கூப்பிட சொன்னேன் ... அண்ணா இப்பவும் அப்பா உன்ன போக சொன்னா போயிடுவியா ??" என்று தங்கை மீண்டும் அழுதுகொண்டே கேட்கவும் உருகி விட்டான் மகேஷ்.
இந்த காட்சியை பார்த்த மலர்விழியின் தாயும் கண்ணீர் வடித்தாள். மகேஷ் தன் தாயின் கைகளையும் இறுக பற்றிக் கொண்டான்.

சுவாதி அங்கு நடந்த பாசப் போராட்டத்தை வேடிக்கை பார்த்தாளே தவிர ஒரு உணர்வையும் முகத்தில் காட்டவில்லை.
ஒருவழியாக சமாதானம் ஆகிய அண்ணன் தங்கை சகஜமாக பேசிக் கொண்டனர்.

அண்ணன் அண்ணி இருவரிடமும் குழந்தையை பற்றி நலம் விசாரித்த மலர் விழி அவர்களின் பாசமான உரையாடலை ஒதுங்கி நின்று புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நந்தனியிடம் தன் அண்ணனையும் அண்ணியையும் அறிமுகப்படுத்தி வைத்தாள் .
தங்கையின் வருங்கால கணவருடன் பேசிய மகேஸ்வரனுக்கும் நந்தனை மிகவும் பிடித்துவிட்டது.

சண்முகசுந்தரம் விருந்தினர்களை சாப்பிட வைப்பதில் படு பிஸியாக இருந்ததால் இதையெல்லாம் அவர் கவனிக்கவில்லை. அப்படியே கவனித்து இருந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார்.

விருந்து முடிந்து ஒவ்வொருவராக கிளம்பவும் பரிசை கொடுத்துவிட்டு மகேஷும் சுவாதியும் விடை பெற்றுக் கொண்டனர்.

விழா நிறைவடைந்த பின் பேச கிடைத்த தருணத்தில்,
"அப்பா அண்ணன் கிட்ட நீங்க ஏன் பேசல??? அண்ணனை நம்ம கூடவே இருக்க சொல்லலாம்ல" குறைபட்டுக் கொண்டாள் மலர்விழி .

"இந்த பார் மலருமா... உன்னோட மனத் திருப்திக்காக தான் அவன கூப்டதே... இதுக்கு மேலயும் என்கிட்ட எதையும் எதிர்பார்க்காதே... நீ இன்னைக்கு சந்தோஷமா இருந்தியா??" என்று சண்முகசுந்தரம் பாசத்துடன் கேட்க...

மலர்விழி ஆம் என்பது போல் தலையசைத்தாள்.
"அது போதும் டா கண்ணு உன்னோட சந்தோசம் தான்... இந்த அப்பனுக்கு முக்கியம்" என்று பேச்சை அத்தோடு முடித்துக்கொண்டார் சண்முகசுந்தரம்.

நிச்சயதார்த்தம் முடிந்த அடுத்த வாரத்தில் நந்தனும் அமெரிக்காவிற்கு சென்று விட்டான்.

நாட்கள் தெளிந்த நீரோடை போல் சென்று கொண்டிருந்த சமயம் தான் விதி தனது கோர விளையாட்டை ஆரம்பித்தது.
ஒரு திருமண விழாவிற்காக வெளியூர் வரை சென்றிருந்த மலர்விழியின் பெற்றோர் கார் விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பெற்றோரின் இறப்பிற்குப்பின் மலர்விழியின் வாழ்க்கை புயலில் சிக்கி படகாக திசை மாற காத்திருந்தது.
அந்தப் புயலின் பெயர் தான் ஆதித்யா சக்கரவர்த்தி சுவாதியின் அண்ணன்.

தொடரும்.....😊
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN