ஆதித்யா சக்கரவர்த்தி-6

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 6

மலர் மயங்கி...
அவளது கைகளைப் பிடித்திருந்த ஆதித்யாவின் கைகளிலேயே தொய்ந்து விழ... ஒருநொடி திடுக்கிட்டாலும்
அவளை கீழே விழாமல் தாங்கிப் பிடித்தான் ஆதித்யா.
அவளது கன்னங்களைத் தட்டி பார்த்தான். உணர்வே இல்லை.

பதறிய தங்கையையும், அழ ஆரம்பித்த வானதியையும்,
அமைதியாக இருக்க சொன்னவன்...
மலரை வீட்டிற்குள் தூக்கிச்சென்று கீழிருந்த ஓர் அறையில் படுக்க வைத்தான்.

வேகமாக தனது மொபைலில் டாக்டருக்கு போன் செய்து எமர்ஜென்சி என்று உடனே வரச் சொன்னான்.

அடுத்ததாக அலுவலகத்திற்கும் போன் செய்து அன்றைக்கு ஏற்பாடாகியிருந்த அனைத்து மீட்டிங்கையும் கேன்சல் செய்ய சொன்னான். ஏன்? எதற்கு? என்று கேட்ட பிஏ விடம் எரிந்து விழுந்தான்.

டாக்டர் வருவதற்குள் , சௌமியாவை மலரின் உள்ளங்கையையும் காலையும் நன்றாக தேய்த்துவிட சொன்னான்.
அழுதுகொண்டிருந்த குழந்தையை சமாதானப்படுத்தி வேலை செய்யும் ஆயாவிடம் பார்த்துக் கொள்ள சொன்னான் ஆதித்யா.

டாக்டர் வரும்வரை வாயிலுக்கும்... மலர் இருந்த அறைக்கும்... நூறு தடவைக்கும் மேலாக அலைந்திருப்பான்.

அவன் போன் செய்த அரை மணி கழித்துதான் வந்து சேர்ந்தார்
டாக்டர் கண்ணகி.

அவர் வரும்போது வாசலில் நின்ற ஆதித்யாவை பார்த்தவர்...
"ஃபேஷன்ட் எங்க இருக்காங்க?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார்.

ஆதித்யா டாக்டரை அமைதியாக மலர் இருக்கும் அறைக்கு கூட்டி சென்றான்.

மலரின் இதயத் துடிப்பையும் நாடித் துடிப்பையும் பரிசோதித்த டாக்டர்...
"மிஸ்டர் ஆதித்யா... இவங்களுக்கு ஒன்னுமில்ல... லேசான அதிர்ச்சி தான்... இவங்க ரொம்ப சாப்ட் நேச்சர் உள்ள பெர்சன் போல... அதனாலதான் மயங்கி விழுந்திருக்காங்க... நத்திங் டு ஒரி அபௌட் இட் ... இன்னும் கொஞ்ச நேரத்துல நார்மல் ஆகிடுவாங்க... நான் எழுதிக் கொடுக்கிற டேப்லெட்ஸ கரெக்ட் டைமுக்கு எடுத்துக்கணும்... அப்றம் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கணும் அதுவே போதும்..." என்று சொன்னவர் மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு அவர்களிடமிருந்து விடை பெற்றார்.

அவர் சென்ற மறுநிமிடம் சௌமியா அண்ணனிடம் பாய்ந்தாள்.
"அண்ணா என்ன இருந்தாலும் நீ ஓவரா தான் இன்னைக்கு கத்திட்ட...
நான்தான் மலர் மேலயும் வானதி மேலயும் தண்ணி அடிச்சேன்... தேவையில்லாம அவளை புடிச்சு கத்திட்ட பாவம் அண்ணா அவ ...இனி அப்படி அவகிட்ட ஹார்சா நடந்துக்காத..." என்று அவனுக்கே அட்வைஸ் செய்து விட்டுசென்ற தங்கையை பார்த்து சிரிப்புதான் வந்தது ஆதித்யாவிற்கு...

மாலை 6 மணி அளவில் கண்விழித்த மலர், தான் எங்கே இருக்கிறோம்? என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்தாள்.

அவள் இருந்த அறையின் எதிர்பக்க சுவற்றில் ஆதித்யாவின் உருவப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது.
அந்தப் படத்திலும் ஆதித்யா முறைத்துக் கொண்டிருக்க ... அதைப்பார்த்து மீண்டும் நடுங்கிய மலருக்கு நடந்ததெல்லாம் ரீவைண்ட் ஆனது.

கடைசியாக அந்த காட்டுமிராண்டி கைகளிலேயே மயங்கி விழுந்தது ஞாபகம் வர... திடுக்கிட்டு நிமிர்ந்தாள் மலர்.
"ச்சே போயும் போயும்... அவன் கைலயா நான் மயங்கி விழனும்... எவ்வளவு பெரிய கேவலம்..." என்று நினைத்தவள்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அந்த அறையில் யாரும் இல்லாததை உணர்ந்து மெதுவாக அந்த அறையை விட்டு வெளியேறினாள்.

இரவானதால் மலருக்கு சாப்பாடும் மருந்தும் கொண்டு வந்த சௌமியா, மலர் அந்த அறையில் இல்லாததை உணர்ந்து, அவளது அறைக்குள் சென்று பார்த்தாள்.
போர்வையை தலை முதல் கால் வரை மூடிக்கொண்டு படுத்திருந்தாள் மலர்.
சௌமியா மலரை எழுப்பியதும், கண்களை திறக்க முடியாமல் திறந்து அவளைப் பார்த்தாள்.

அவளின் சிவந்த கண்களை பார்த்த சௌமியா,
"இப்போ எப்படி இருக்கு?" என்று கேட்டுகொண்டே அவளது நெற்றியை தொட்டு பார்த்தாள்.
உடல் லேசாக சுட்டது. அவளை சாப்பிட வைத்து மாத்திரையை கொடுத்தவள்... இரவில் காய்ச்சல் அதிகரித்தாலும் அவளை கூடவே இருந்து பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து இன்று தன்னுடன் வந்து தங்குமாறு அவளை அழைத்தாள் சௌமியா.

மலருக்கும் தனியாக தூங்க பயமாக இருந்ததால் அவளும் உடனே சரி என்று ஒத்துக்கொண்டாள்.

மறுநாள் காலையில், சூரிய வெளிச்சத்திற்கு பிறகும் மலர் மாத்திரையின் பயனால் அடித்துப்போட்டது போல் நன்றாக தூங்கினாள்.

ஆதித்யா அலுவலகத்திற்கு கிளம்பி விட்டு தங்கையை காண அவளது அறைக்கு வந்தான்.
அவள் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கி கொண்டிருப்பதை பார்த்ததும்,
"சௌமி இவ்வளவு நேரம் எல்லாம் தூங்க கூடாது... மணி பத்து ஆக போகுது...எழுந்து சீக்கிரம் ரெடி ஆகு" என்று அவளை தட்டி எழுப்பினான்.
தூங்கிக்கொண்டிருந்த மலர் ஆதித்யாவின் குரல் கேட்டு சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.

முகமெல்லாம் சிவந்து கண்களில் ஒளியிழந்து இருந்த மலரின் முகத்தை பார்த்தவன்...
"உடம்பு எப்படி இருக்கு?"என்று சாதாரணமாக கேட்டான்.

மலர் பயத்துடன் அவனைப் பார்த்தாலே தவிர பதில் எதுவும் சொல்லவில்லை.

அதுவும் ஆதித்யாவை அவமதிப்பது போல் இருக்கவும் கோபத்துடன் எழுந்தான் அவன்...

அப்பொழுதுதான் குளியலறையில் இருந்து வெளியே வந்த சௌமியா,
அண்ணனைப் பார்த்ததும்...
ஆபீஸ் கிளம்பிட்டியா அண்ணா? என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.
"ஆமா சௌமி போய்ட்டு வாரேன்..." என்றவன் மலரை ஒரு பார்வை பார்த்துவிட்டு விறுவிறுவென்று வெளியேறி விட்டான்.

அவன் சென்றதும் தான் அடக்கி வைத்திருந்த மூச்சை மொத்தமாக வெளியிட்டாள் மலர்.

அடுத்தடுத்த நாட்களில் ஆதித்யா அவளைப் பார்த்தாலும் பேசுவதில்லை. அவளது விஷயங்களில் தலையிடுவதும் இல்லை.

வானதி மலர் அறையில் இருந்தால் கதவை தட்டுவான் ஆதித்யா. இவள் வானதியை தூக்கி அவனிடம் கொடுப்பாள். அத்தோடு சரி... ஒரு வார்த்தை அவனும் சொல்வதில்லை இவளும் பேசுவதில்லை.நிம்மதியாக இருந்தாள் மலர்.
முன்பை போல் மதிய வேளைகளில் ஆட்டம் போடுவதில்லை...
சௌமியா கூப்பிட்டாலும் மறுத்துவிடுவாள்.

அன்று அப்படி மறுத்துவிட்டு ஹாலில் அமர்ந்து டிவியில் ஆழ்ந்திருந்தவளிடம்,
வேலையாள் ஒருவன் வந்து அவளை பார்க்க ஒருவர் வந்திருப்பதாக சொல்லவும் ஆச்சரியப்பட்டுப் போனாள் மலர்.

அவளது சொந்தக்காரர்கள் யாரும் அவளைப் பார்க்க இவ்வளவு தூரம் வர வாய்ப்பில்லை.பின் யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே சென்றவள்,
விசிட்டிங் அறையில் நின்ற நந்தனை பார்த்ததும் ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள்.
அதற்குள் நந்தனும் அவளை பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தான்.

இது கனவா! என்று கண்கள் கலங்கி நின்றாள் மலர்.

இருவரும் அதிகமாக பேசிக் கொண்டதில்லை என்றாலும், அவளின் உணர்வுகள் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.
"கண்ண தொடச்சுக்கோ மலர். இப்போ உன் வீட்ல இருந்து தான் வாரேன். உன்னோட வீட்ல வேலை பாக்குற லட்சுமி அக்கா தான் இந்த அட்ரஸ் தந்தாங்க" என்றவன்...

மலர் கண் கலங்கியபடி நிற்கவும்,
"நான் எல்லாத்தையும் கேள்விப்பட்டேன் மலர் ...உன்னோட அளவுக்கு இல்லனாலும் எனக்கும் ரொம்ப வருத்தமா தான் இருக்கு ...அங்கிள் ஆன்ட்டி ரொம்ப நல்லவங்க யாருக்கும் எந்த கெடுதலும் செய்யாதவங்க... கண்டிப்பா மேல உன்ன பார்த்து ஆசீர்வாதம் பண்ணிட்டு தான் இருப்பாங்க... நீ இப்படி அழுதா அவங்க மேல எப்படி சந்தோஷமா இருப்பாங்க..." என்று நந்தன் சொன்னவுடன்,
வேகவேகமாக கண்களைத் துடைத்துக்கொண்டு புன்னகை புரிய முயற்சி செய்தாள் மலர்.

"குட் கேர்ள்" என்றவனை பார்த்து முறுவலித்தவள்...
"நீங்க இன்னும் மூணு மாசம் கழிச்சு தான வர்றதா இருந்தீங்க... திடீர்ன்னு எப்படி...?" என்று தயக்கத்துடன் இழுத்தாள் மலர்.

"இங்க எனக்கொரு பிராப்பர்டி இருக்கு... அத சேல் பண்றதுக்கு என்னோட சைன் தேவைப்படுது னு ப்ரோக்கர் சொல்லிட்டே இருந்தார்...
அதுமட்டுமில்லாம அங்கிள் போன் வேற நாட் ரீச்சபிள் னு வந்துட்டே இருந்துச்சு... உங்கிட்ட வேற மொபைல் இல்ல... ஏதோ தப்பா நடக்கிற மாதிரி உள்ளுக்குள்ள ஒரு ஃபீலிங்... அதான் கிளம்பி வந்துட்டேன்" என்றான் நந்தன்.

"ஆக்சிடெண்ட்ல அப்பாவோட போன் நொறுங்கிப் போயிட்டு... அதனால உங்கள காண்டாக்ட் பண்ண முடியல... அண்ணன் ட்ரை பண்ண தான் செஞ்சாங்க" என்று மீண்டும் கண் கலங்கினாள் மலர்.

"ச்சே...சண்முகம் அங்கிள் சொன்ன டேட்ல கல்யாணம் நடந்திருந்தா... இந்நேரம் நமக்கு கல்யாணம் முடிஞ்சு இருக்கும்... எனக்கும் உரிமை இருக்கும் " என்றவனை புரியாமல் பார்த்த மலரிடம்,

"நீ இப்படி அடிக்கடி அழுதுட்டே இருக்க... உன்னோட கண்ணீர தொடச்சு விடக்கூட தயக்கமா இருக்கே" என்றான் நந்தன்.
லேசாக முகம் சிவந்த மலர்,
"அப்பாவா கல்யாணத்தை சீக்கிரம் வைக்க சொன்னார்?"என்று மெதுவாக கேட்டாள்.

"ஆமா மலர் உன்னோட அப்பா நம்ம நிச்சயதார்த்தம் நடந்த டேட்ல தான் மேரேஜ் பிக்ஸ் பண்றதா... இருந்தார் கல்யாணத்துக்கு ஒரு நாளைக்கு முன்னாடி நிச்சயதார்த்தம் வச்சுகிட்டா... போச்சுன்னு என்கிட்ட கூட சொன்னார். நான் தான் உனக்கு பாஸ்போர்ட் விசா எல்லாம் வர ஆறு மாசம் ஆகும். அதுக்கப்புறம் மேரேஜ் பண்ணிட்டு கையோட உன்ன கூட்டிட்டு போகலாம்னு நெனச்சேன். ஆனா இப்படி ஆகும்னு நெனச்சே பாக்கல.."
என்றான் நந்தன் உண்மையான வருத்தத்துடன்...

தனது வருத்தத்தை மறைத்து,
"யாரு என்ன நினைச்சாலும் விதியே மாத்தவே முடியாது... ஒரு விஷயம் நடக்கணும்னு விதில எழுதி இருந்தா... அது கண்டிப்பாக நடந்தே தீரும் ...அத நெனச்சு கவலைப்படாதீங்க" என்றாள் மலர் தேறுதலாக...

அதற்குள் பின்னிருந்து "நந்தா மாஸ்டர்.." என்ற குரல் கேட்க...
இருவரும் திரும்பிப் பார்த்தனர்.
சௌமியா விழிகளில் ஆச்சரியத்துடன் நின்றுகொண்டிருந்தாள்.

நந்தன் அவளைக் கூர்ந்து பார்த்துவிட்டு "மிஸ் சேமியா" என்று அழைக்கவும், "நானேதான்... நந்தா மாஸ்டர்" என்று துள்ளிக் குதித்துக் கொண்டு அவர்கள் அருகில் வந்தாள் சௌமியா.

இருவரையும் ஆச்சரியமாக பார்த்த மலர், "உங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே அறிமுகம் இருக்கா?" என்று கேட்டாள்.

"ஆமா மலர்... இவர் நந்தா மாஸ்டர் என்னோட காலேஜ் சீனியர்" என்று சௌமியாவும்...
"ஆமா மலர்...இவ சேமியா என்னோட காலேஜ் ஜூனியர்" என்று நந்தனும்... ஒரே நேரத்தில் சொன்னார்கள்.
மலர் சட்டென்று சிரித்து விட...
நந்தன் அவளை ரசனையாக பார்த்தான்.

"ம்ம்க்கும்... நாங்களும் இங்கதான் இருக்கோம்" என்றாள் சௌமியா.

"உன்ன யாரு இருக்க சொன்னா? போ... போய் வேற வேலையை பாரு சேமியா..." என்று நந்தன் கிண்டலாக சொன்னான்

"ஐயோடா இது என்னோட வீடு நந்தா மாஸ்டர்... நான் எதுக்கு இங்கிருந்து போகணும்? நீங்க தான் போகணும்" என்றாள் சௌமியா நக்கல் பார்வையுடன்...

"நான் ஒன்னும் உன்னோட வீட்ட ரசிக்கலையே... எனக்கு சொந்தமானது... என்னோட பிராப்பர்டி... நான் ரசிக்கிறேன்... நீ போ சேமியா... போய் சேமியா ஐஸ் சாப்பிடு" என்று நந்தன் நக்கல் செய்ய,

"ஹையோ அப்போ ... என் கிளாஸ்மேட் ரம்யாவை இப்படித்தான நீங்க சைட் அடிச்சிங்க... அப்போ அவளும் உங்க பிராப்பர்டி தானா நந்தா மாஸ்டர்..." என்று குரலில் கேலி இழையோட சௌமியா சொன்னாலும் அதில் லேசாக சினம் மிகுந்திருந்தது.

சௌமியா சொன்னதை கேட்டதும் மலரின் முகம் சுருங்கியது.
அதை கவனித்த நந்தன்,
"வந்ததுல இருந்து ஒரு மனுஷன் நின்னுகிட்டே பேசிட்டு இருக்கேன். யாராவது உட்கார சொல்றாங்களா பாரு... நம்ம தமிழர் பண்பாடு எல்லாம் அழிஞ்சு போச்சு போல..." என்றான் பேச்சை மாற்றுவதற்காக...
மலர் சௌமியாவை பார்த்தாள்.

அவள் அவனை உள்ளே கூப்பிட
இது ஒன்றும் அவளது வீடு இல்லையே!!

அதற்குள் சௌமியாவும் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு நந்தனை
உள்ளே கூப்பிட்டு உபசரித்தாள்.

நந்தன் கிளம்பும் பொழுது சௌமியாவின் மொபைல் நம்பரை வாங்கிக்கொண்டு,
"உன்கிட்ட சௌமியா போன்ல பேசுறேன்" என்று மலரிடம் விடைபெற்றுக் கொண்டான்.

அவன் சென்ற பிறகு அறைக்குள் வந்த மலர் பல நாட்களுக்கு பிறகு ரொம்பவும் சந்தோசமாக இருந்தாள்.

நந்தன் வந்ததால்... இனி தன் அண்ணன் அண்ணி இருவருக்கும் தான் வீண் பாரமாக இருக்க வேண்டாம்... தனக்கும் இனி நந்தன் தான் எல்லாம்... என்று நினைத்து மகிழ்ந்த மலரின் மலர் முகம் கூடுதல் பிரகாசமாக இருந்தது.

ஆனால் இங்கு அறைக்கு வந்த சௌமியாவின் உள்ளம் திகுதிகுவென எரிந்து கொண்டிருந்தது.

அவளுக்கு மலரிடம் தோழமை வந்ததற்கு முதற்காரணம் அவளுக்கும் தன்னைப்போல் நிச்சயதார்த்தம் நின்றுவிட்டது என்பதால்தான்...
ஒருவருக்கொருவர் துணை என்று நினைத்து அதிக நேரம் மலருடன் செலவழித்தாள்.
ஆனால் அவளது அக்கா சுவாதி சொன்னதுபோல் மலரின் நிச்சயதார்த்தம் உடையவே இல்லையே...

சரி அதை கூட போனால் போகிறதென்று விட்டுவிடலாம். ஆனால் அவளது வருங்காலக் கணவன்... அவளது கல்லூரி காலத்தில் பல பெண்களின் முக்கியமாக அவளது தோழியர் கூட்டத்தின் கனவு நாயகனாக வலம் வந்த நந்தா... நந்தா மாஸ்டர் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவன்.
அவளது கல்லூரியின் முன்னாள் மாணவர் குழு தலைவன்.
அவன் எதில் பங்கு பெற்றாலும் வெற்றிதான். அதுவும் அவனது நடனத்திற்கு கல்லூரியில் ஏகப்பட்ட விசிறிகள். அதனால்தான் அவனது பெயரின் பின்னால் மாஸ்டர் வந்து ஒட்டிக்கொண்டது. ஒருகாலத்தில் அவளும் அவனது விசிறியாக இருந்தவள் தான். ஆனால் போயும் போயும் அந்த மலருக்கு நந்தா போன்ற ஒரு அழகான கணவனா...
அதை தான் அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.
வயிறு காந்தியது....!!

இப்பொழுது மட்டும் நந்தாவை அவள் திருமணம் செய்துகொண்டால், அவளை அன்று அவமானப்படுத்தி விட்டு சென்ற தோழியர் கூட்டத்திற்கு நல்ல பதிலடி கொடுக்கலாம்.
என்று ஏதேதோ யோசித்தவள்...
தான் ஒரு வில்லி மாதிரி யோசிப்பதை அப்பொழுதுதான் உணர்ந்தாள்.

அவளது அண்ணனைப் போலவே அவளும் கிரிமினல் வேலை செய்யப்போகிறாளா...?

நெவர்.. நெவர் ...என்று கத்தினாள் சௌமியா.

"ச்சே... பொறாமை என்னவெல்லாம் யோசிக்க வைக்குது..."
என்று நினைத்த சௌமியா மனதினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள்.
அதுவும் மறுநாள் வரையில்தான்....!!!

தொடரும்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN