ஆதித்யா சக்கரவர்த்தி-7

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்7


மறுநாள் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்தாள் மலர்.
அவள் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்வதற்கு பற்று கோலாக தான் நந்தன் கிடைத்து விட்டானே...
இனி அவளுக்கென்ன கவலை!!!

எப்போதும் போல சுறுசுறுப்பாக யோகா பயிற்சி செய்துவிட்டு குளித்துவிட்டு பால்கனியில் வந்து நின்று கொண்டாள்.
ஏனோ இன்று உலகமே அழகாக தெரிவது போல் இருந்தது.
சிறுசிறு விஷயங்களைக்கூட ரசனையாக பார்த்தாள்.

அப்பொழுதுதான் உதயமாகி இருந்த சூரியன் செந்நிறத்தில் கண்களுக்கு குளிர்ச்சியாக காட்சியளித்தான்.
தோட்டத்தில் பல வண்ண மலர்கள் மலர்ந்து கிடந்தது. அடர்ந்து வளர்ந்திருந்த மரங்கள் இதமாக அசைந்து குளிர்ச்சியான காற்றினை தந்தது. ஒருபுறம் தேன் சிட்டுக்கள் தேனை உறிஞ்ச, மறுபுறம் சிட்டுக்குருவிகள் அதன் கூட்டில் இருந்து இரை தேட வெளியே வர, மாமரத்தில் இருந்த கிளிகள் கூட தாங்களும் இருக்கிறோம் என்பதை காட்ட அதன் இறக்கையை அடித்துக்கொண்டிருந்தது. மேலும் குட்டி குட்டி பெயர் தெரியாத பறவைகள் எல்லாம் ஆங்காங்கே பறந்து கொண்டே இருந்தது. அதன் அழகை ரசித்து கொண்டிருந்தவள், தன்னை யாரோ பார்ப்பது போல் உள்ளுணர்வு உணர்த்த தோட்டத்தை சுற்றி ஒரு பார்வை பார்த்தாள்.

தூரத்தில் தோட்டகாரன் மட்டுமே ஏதோ புது செடியை நடுவதற்கு குழி தோண்டி கொண்டிருந்தான். வேறு யாரும் அங்கு இருப்பது போல் இல்லை. தனது பிரமை என்று தலையில் தட்டிக் கொண்டாள் மலர்.

இன்று நேரடியாக தோட்டத்திற்குள் சென்று எல்லாவற்றையும் அருகில் இருந்து ரசிக்க வேண்டும் போல் இருக்க...
"சௌமி அண்ணா இருந்தா போக முடியாதே... "என்று நினைத்தவளுக்கு நேற்று சௌமியா இரவு உணவின்போது சொன்னது ஞாபகம் வந்தது.

"அண்ணா ஏதோ வேலை விஷயமா வெளியே போயிருக்காங்க மலர்... நைட் வர லேட்டாகும்... அதனால நம்ம மூணு பேரையும் சாப்பிட சொன்னாங்க" என்று சொல்லி தான் மலரை சாப்பிட அழைத்து சென்றாள்.

"அப்போ நைட் லேட்டா தூங்குனா.. காலைல எப்படி தோட்டத்துக்கு வரமுடியும்??...கண்டிப்பா சௌமி அண்ணா வந்திருக்க மாட்டாங்க... நம்ம போகலாம்" என்று நினைத்தவள் கீழே தோட்டத்திற்கு சென்றாள்.

அவளது நீளமான முடி இன்னும் காயாமல்... ஈரமாக இருந்ததால், காதுகளின் அருகிருந்து சிறிய பகுதி முடியை எடுத்து கிளிப் கொண்டு மாட்டி முடியை விரித்து விட்டிருந்தாள்.
அவள் நடக்க நடக்க அதுவும் அவளுக்கு ஏற்றவாறு அசைந்து கொடுத்து கொண்டிருந்தது.
முடியை கைகளால் கோதிகொண்டே ஒவ்வொன்றையும், ஆசையாக பார்த்துக் கொண்டே வந்தவள் பின்னால் ஏதோ அரவம் கேட்கவும் சட்டென்று திரும்பினாள்.

அது ஆதித்யா வளர்க்கும் நாய்!!! குழந்தை வானதி இந்த வீட்டிற்கு வரும்போதெல்லாம் அது தோட்டத்தில் இருக்கும் சிறிய குடில் போன்ற பகுதியில் கட்டிப் போடப்பட்டிருக்கும். ஆதித்யா உடற்பயிற்சியை முடித்து விட்டு தோட்டத்திற்கு வரும் காலை நேரம் மட்டுமே அவிழ்த்து விடப்படும். அதுவும் சில நேரங்களில் மட்டுமே...!
இதை சௌமியா ஒருமுறை அவளிடம் கூறி இருக்கிறாள்.
அவளும் இரண்டு மூன்று முறைகள் அந்த நாயை ஆதித்யாவுடன் பார்த்திருக்கிறாள் தான். ஆனால் இன்று ஆதித்யா தோட்டத்திற்கு வராமல் இது எப்படி இங்கே?? என்று யோசனையில் இருந்தவளை நாய் வாலை ஆட்டிக்கொண்டே யாரையோ பார்த்து நன்றியுடன் குறைப்பது போல் இருக்கவும் திரும்பிப் பார்த்தாள்.
ஆதித்யா நின்றான்...

மலர் பயப்படவில்லை. அவன் தான் சிலநாட்களாக அவளிடம் பேசாமல் அமைதியாக இருக்கிறானே!!!
இன்றும் ஒன்றும் பேச மாட்டான்.
அவனை கடந்து வீட்டிற்குள் சென்று விடலாம் என்று நினைத்து நகர்ந்தவளின் இடையில் கை நீட்டி தடுத்தான் ஆதித்யா.

லேசான பயத்துடன்,
என்ன என்பது போல் பார்த்தாள் மலர்.
"வீட்டுக்குள்ள முத்து இருந்தா, எனக்கு காபி கொண்டு வர சொல்லு" என்றான் ஆதித்யா.
சரி என்பது போல் தலையாட்டினாள் மலர்.

அவள் காதில் அணிந்திருந்த ஜிமிக்கியும் கூடவே ஆடியது.
ஆதித்யாவின் கண்கள் அவளது காதணிகளில் பதிந்தது.
மலர் அவனை பார்க்காமலேயே வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
சிறிது நேரத்திலேயே திரும்பி வந்த மலர்,
"முத்து அண்ணா இன்னைக்கு லீவாம் சௌமி அண்ணா" என்றாள்.

"அப்ப நீயே போட்டு எடுத்துட்டு வா..." என்றான் ஆதித்யா அதிகார பாவனையுடன்,
மலர் என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தாள்.

"ஓ காபி கூட போட தெரியாதா?" என்று நக்கல் பார்வை பார்த்தான் ஆதித்யா.

"அதெல்லாம் நல்லாவே தெரியும்" என்றாள் மலர் ரோஷத்துடன்,

"ம்ம்ம் அப்போ சீக்கிரம் போட்டு எடுத்துட்டு வா... அப்படியே ஹாலில் இருக்கிற டீ பாய்ல நியூஸ் பேப்பர் இருக்கும் அதையும் சேர்த்து எடுத்துட்டு வா" என்றான் ஆதித்யா சற்றும் அலட்டிக்கொள்ளாமல்,


மலருக்கு ஆத்திரமாக வந்தது. அவளது வீட்டிலேயே சமைப்பதற்கு என்று லட்சுமி அம்மாள் இருப்பார் தான். இருந்தாலும் அவளுக்கு சமையலில் ஈடுபாடு அதிகம். அதனால் அம்மாவிடம் தனியாக சமையல் கற்றுக் கொண்டாள்.
ஆனால் ஒருநாளும் அவளது அப்பா அவளை சமைக்க விட்டதில்லை. என்றைக்காவது ஆபீஸ் டென்ஷன் என்று தலைவலியில் வந்தார் என்றால் அவளே காபி போட்டு கொண்டு கொடுப்பாள். அவர் மறுக்க மாட்டார். பாசமாக அவளது தலையை தட்டிக் கொடுப்பார்.
இவ்வளவு அதிகாரம் அலட்சியத்துடன் கேட்கும் இவனுக்கு தான் காபி போட்டுக் கொடுப்பதா? என்று கோபம் வந்தது மலருக்கு...

"கிச்சன்ல இன்னும் இரண்டு வேலைக்காரங்க இருக்காங்க. அவங்க கிட்ட சொல்லி..." என்று மலர் முடிக்கவில்லை...

"நான் உன்ன தான் போட்டுட்டு வர சொன்னேன்"
என்றான் ஆதித்யா அழுத்தத்துடன்.

அதற்குமேல் அவனுடன் வாயாட பிடிக்காமல்,
ம்ம்ச் என்று முக சுருக்கத்துடன் உள்ளே செல்ல திரும்பினாள் மலர்.

"காபி ஸ்ட்ராங்கா இருக்கணும்" என்ற ஆதித்யாவின் சிரிப்பு குரல் அவள் பின்னே தொடர்ந்தது.

கிச்சனுக்குச் சென்றவள்,
"அந்தக் காட்டுமிராண்டிக்கு காபி ஸ்ட்ராங்கா வேணுமாமே..." என்று உள்ளுக்குள் கொதித்துக் கொண்டே காபி கலக்கினாள்.
சூடான பாலில் காபித்தூள் அதிகமாக போட்டவள், சர்க்கரை ஒரு ஸ்பூன் மட்டுமே போட்டாள்.
இதை குடித்து அவனது முகம் எப்படி மாறும் என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் ஹாலிற்கு வந்து நியூஸ் பேப்பரையும் எடுத்துக்கொண்டு தோட்டத்திற்குள் சென்றாள்.

தோட்டத்தின் பக்கவாட்டில் செயற்கையாக அமைந்த ஒரு சிறிய குளம் இருக்கும். அதன் அருகில் ஒரு சிறிய டேபிளும் மூன்று நான்கு நாற்காலிகளும் எப்போதுமே கிடக்கும்.
அங்கேதான் ஆதித்யா அமர்ந்து தனது மொபைல் போனில் மூழ்கியிருந்தான்.

மலர் டேபிளில் காபியையும், நியூஸ் பேப்பரையும் வைத்த பின்தான் நிமிர்ந்தான்.
காபி கப்பை தூக்கிக் கொண்டு அதன் மணத்தை நுகர்ந்த ஆதித்யா,
"வாசனையே பிரமாதம்!" என்றான்.

மலருக்கு லேசாக குற்ற உணர்ச்சி வந்தது. அவன் வீட்டிலேயே இருந்து கொண்டு, அவன் சொன்ன வேலையை செய்யாமல், ஏதேதோ பண்ணி வைத்து விட்டாளே!!!
குடித்துவிட்டு என்ன சொல்லப் போகிறானோ... லேசாக பயமும் வந்து தொற்றிக் கொண்டது அவளுக்கு.

லேசான நடுக்கத்துடன் மலர் இருக்கும் போது.... ஆதித்யா காபியை பருகிக்கொண்டே,
"ரொம்ப நல்லா போட்ருக்க... எனக்கு ஏத்த மாதிரி எல்லாமே கரெக்டா இருக்கு என்னோட டேஸ்ட் உனக்கு எப்படி தெரியும்..." என்று பாராட்டினான்.
மலர் அதிசயித்து போய் அவனைப் பார்க்க,
அவன் மெய்யாகவே அதை விரும்பி தான் குடித்தான்.

'குணத்திற்கு தகுந்த மாதிரி டேஸ்ட்' என்று நினைத்த மலருக்கு சிரிப்பு வந்துவிட்டது.
ஆனால் வாயை இறுக மூடி அதை மறைத்து கொண்டாள்.
ஆனால் பெரிய பெரிய பிஸினஸ் செய்து... அரசியல்வாதிகளையும், அதிகாரத்தில் உள்ளவர்களையும் கைக்குள் வைத்திருக்கும் அவனுக்கா தெரியாது.
மலரின் கண்களின் பளபளப்பை ஆதித்யா பார்த்துவிட்டான்.

கடைசித்துளி காபியையும், உறிஞ்சிக்கொண்டே...
"எதுக்கு இப்போ சிரிச்ச???" என்று அவளிடம் கேட்டான்.
"ஒன்னும்... ஒன்னும் இல்லயே.." என்று நழுவி வீட்டிற்குள் சென்று மறைந்தாள் மலர்.

ஆதித்யா அலுவலத்திற்கு சென்றபின் சௌமியா மலரின் அறைக்கு வந்தாள்.
"மலர் உனக்கு நந்தன் கால் பண்ணினார். அண்ணன் இருந்ததால, உன்கிட்ட குடுக்க முடியல" என்றாள் சௌமியா.

"அப்படியா..."என்று இழுத்த மலர் ஆர்வத்துடன்...

"அவர் என்ன சொன்னார்?" என்று கேட்டாள்.

"உன்னை இன்னைக்கு வெளியில கூட்டிட்டு போறாராம்... நீ இப்போ கிளம்பினா நந்தன் வந்து உன்னை கூட்டிட்டு போக கரெக்ட்டா இருக்கும்..." என்று சௌமியா முயன்று சிரித்துக்கொண்டே சொல்ல...
மலர் அழகாக வெட்கப்பட்டாள்.

"சரி நான் கிளம்புறேன்" என்று வேகமாக வார்ட்ரோப் கதவை திறந்தவள்,
எதை அணிய என்று தெரியாமல் முழித்தாள்.

அவள் பின்னால் வந்து நின்ற சௌமியா, "எல்லாமே ரொம்ப ரொம்ப பழசா இருக்கே" என்றாள்.

"ஆமா செளமி... அண்ணா அவசர அவசரமா தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தாரு. கிளம்பும்போது எதை எடுக்க எதை எடுக்கக்கூடாதுனு எனக்கு சுத்தமா தெரியல...என்னோட நல்ல டிரஸ் எல்லாம் அங்க வீட்ல தான் இருக்கு" என்றால் மலர் சோகமாக,

"சரி விடு என்னோட டிரஸ் உனக்கு சரியா இருக்கும்னு நினைக்கிறேன். நம்ம ரெண்டு பேருமே கிட்டத்தட்ட ஒரே சைஸ் தான். நீ என்ன விட கொஞ்சம் ஷாட் அவ்வளவுதான், வா... போலாம். என்னோட ரூம்க்கு வந்து உனக்கு பிடிச்சத போட்டுட்டு சீக்கிரம் கிளம்பு" என்று அவசர படுத்தினாள் சௌமியா.
ஆனால் மலர் தயங்கினாள்.

"வேண்டாம் சௌமி... நந்தனுக்கு நான் எப்படி போனாலும் பிடிக்கும். நான் என்னோடதையே போட்டுக்கறேன்" என்றாள்.

"ப்ச்ச்... இதுல என்ன இருக்கு மலர். உன்ன நந்தா எங்க வேணாலும் கூட்டிட்டு போகலாம். கொஞ்சம் நல்ல டிரஸ் போட்டுக்க வேண்டாமா? இப்படி டிரஸ் பண்ணிட்டு போனா அந்த இடத்துக்கு தகுந்த மாதிரி இருக்குமா? நந்தாக்குனு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கும் அதை நீ கெடுக்கணுமா?" என்று சௌமியா கேட்க...
மலர் அமைதியாக,
"சரி நான் உன்னோட டிரஸ போட்டுக்கறேன்" என்றாள்.

"ஆனாலும் அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் இந்த பிடிவாதம் பிடிக்கிறதுல ஒரே மாதிரிதான்" என்று நினைத்துக்கொண்டாள்.

அவர்களின் பிடிவாதம் தான் தனது வாழ்க்கையையே மாற்ற போவதை அறியாமல்!!

மலர் ஒரு அழகான சிந்தாமணி கலரில் அனார்கலி சுடிதார் அணிந்திருந்தாள்.
சௌமியாவின் உடைதான் என்றாலும் அது மலருக்கு என்றே தைத்தது போல் அவ்வளவு அழகாக இருந்தது.
அவளது நீண்ட கூந்தலை பிரெஞ்சு ஸ்டைலில் பின்னி அலங்கரித்து விட்டாள் சௌமியா.

மலர் பெரும்பாலும் முகத்தில் க்ரீம் எதுவும் உபயோகிப்பது இல்லை.
அதெல்லாம் அவளது அம்மா சுமதிக்கு சுத்தமாக பிடிக்காது. 'இயற்கையாக இருக்கும் முகம் தான் அழகு' என்று அவள் அம்மா அடிக்கடி கூறுவார்.
அதனால் இன்றும் சௌமியா கேட்டும் க்ரீம், பவுண்டேஷன் எதுவும் வேண்டாம் என்று மறுத்துவிட்டாள்.

லேசாக பவுடர் போட்டு சிறிய கல் பொட்டு ஒன்றினை நெற்றியில் வைத்துக் கொண்டாள்.
மீன் போன்ற அழகிய விழிகளுக்கு மை இட்டுக் கொண்டாள். இயற்கையிலேயே சிவந்த உதடுகளுக்கு லேசாக லிப்கிளாஸ் அவ்வளவுதான் அலங்காரம் முடிந்துவிட்டது.

"வாவ் அத்தை நீ ரொம்ப அழகா இருக்க..." என்று வானதி பாராட்டினாள். மலர் குழந்தையின் தலையை கோதி விட்டு புன்னகைத்தாள்.

"அப்போ இந்த சித்தி அழகா இல்லையா?" என்று சௌமியா முகத்தைத் தூக்கிக் கொள்ள,
"நீயும் அழகு தான் சித்தி... ஆனா அத்தை ரொம்ப ரொம்ப அழகா இருக்கா" என்றாள் வானதி.
சௌமியாவின் முகம் சுருங்கியது.

மலர் கனவுலகத்தில் இருந்ததால் இதை கவனிக்கவில்லை

சரியாக 11 மணிக்கு நந்தன் அவனது காரில் வந்து இறங்கினான்.
சாதாரண கரு நீல நிற ஃபார்மல் ஷர்ட் அண்ட் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தான். அவனுக்காக காத்திருந்த மலரும் சரியாக வெளியே வர, அவளையே இமைக்க மறந்து பார்த்தான் நந்தன். அவனது பார்வையை உணர்ந்த மலரும் முகம் சிவந்தாள்.

கார் சத்தம் கேட்டு வானதியை தூக்கிக்கொண்டு வெளியே வந்த சௌமியாவும் இந்த காட்சியை பார்த்துவிட்டாள்.
மலரை நந்தனுடன் சேர்ந்து பார்த்ததும் மீண்டும் சௌமியாவின் மனது குரங்கு போல் ஆட்டம் போட ஆரம்பித்தது.
முயன்ற அளவு அதை வெளிக்காட்டாமல் பல்லை கடித்துக்கொண்டு நின்றாள் சௌமியா.

மலர் ஏறி அமர கதவினை திறந்து விட்டான் நந்தன்.
மலர் வெட்கச்சிரிப்புடன் ஏறி அமர சௌமியாவிடம் விடைபெற்று சென்றனர் இருவரும்.
அவர்கள் சென்றதும் சௌமியாவின் கண்கள் கலங்கி,உதடுகள் பிதுங்கி அழுவதற்கு தயாராக இருந்தது.

வானதியை ஆயாவிடம் ஒப்படைத்துவிட்டு அறைக்கு வந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.


முன்தினம் இரவு தாமதமாக வந்து காலையிலும் சீக்கிரம் எழுந்ததால், ஆதித்யா விற்கு சற்று ஓய்வு தேவைப்பட்டது.
அதனால் அலுவலக வேலைகள் எல்லாவற்றையும் அங்குள்ள ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு ஓய்வுக்காக மதிய வேளையில் வீடு வந்து சேர்ந்தான் ஆதித்யா.
வானதி மதியம் சாப்பிட்ட பின் தூங்கிக் கொண்டிருப்பதாக ஆயா ஆதித்யாவிடம் கூறிவிட்டு சென்றார்.

தங்கையும் மலரும் என்ன செய்கிறார்கள் என்று பார்ப்பதற்கு தோட்டத்திற்கு வந்தவன், அங்கு அவர்கள் இல்லாமல் போகவும் சௌமியாவின் அறைக்கு வந்தான்.
அங்கு அவன் பார்த்ததோ, அழுது வடிந்த முகத்துடன்... உலகையே வெறுக்கும் பாவனையுடன்...வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்த சௌமியாவை தான்.
இவ்வளவு நாள் மகிழ்ச்சியாக இருந்த தங்கை திடீரென்று அழவும் ஆதித்யா பதறினான்.

"சௌமி மா" என்று அழைத்துக்கொண்டே வந்த அண்ணனை பார்த்ததும்,
அவனின் தோளில் சாய்ந்து மீண்டும் அழ ஆரம்பித்துவிட்டாள் சௌமியா.

தங்கையின் தலையை ஆறுதலாக வருடி விட்டவன்...
"என்னாச்சு மா ஏன் அழுற?" என்று பரிவுடன் கேட்டான்.

"அண்ணா நா... நான் ரொம்ப துரதிர்ஷ்டசாலி அண்ணா... அழகில்லாதவ, அதிர்ஷ்டம் இல்லாதவ"
என்று ஏங்கி ஏங்கி அழுத தங்கையை என்ன சொல்ல சமாதானப்படுத்துவது என்று ஆதித்யாவிற்கு சுத்தமாக புரியவில்லை.

"இப்படி அழுதுட்டே இருந்தா என்ன அர்த்தம்...என்கிட்ட இப்ப நீ தெளிவா சொல்ல போறியா இல்லையா?" என்று ஆதித்யா அரட்டுவது போல் கேட்கவும்,
மடைதிறந்த வெள்ளம்போல் அனைத்தையும் சொல்லி அழுதாள்.

"அடுத்தவ பொருள் மேல ஆசைப்படுறேன், பொறாமைப் படுகிறேன்னு எனக்கு நல்லாவே புரியுது அண்ணா. ஆனா என்னால என்னையே கண்ட்ரோல் பண்ணிக்க முடியல... நான் ரொம்ப கெட்டவள் ஆகிட்டேன்" என்று மீண்டும் மீண்டும் அழுது கொண்டே இருந்தாள்.

"ப்ச்ச் யாரு சொன்னா நீ அடுத்தவ பொருள் மேல ஆசைப்படுறன்னு??" என்று ஒரு மாதிரி குரலில் கேட்ட அண்ணனை புரியாமல் பார்த்தாள் சௌமியா.

"அவங்க ரெண்டு பேருக்கும் இன்னும் கல்யாணம் முடியலல?" என்று அண்ணன் கேட்கவும்,
இல்லை என்பது போல் தலையாட்டினாள் சௌமியா.

"அதுக்குள்ள எப்படி நீ அவன அடுத்தவ பொருள்னு சொல்லுற?ஹான்ன்??"
என்றவனை புரியாமல் பார்த்த சௌமியா,
"அண்ணா ஆனா நிச்சயதார்த்தம் ஆகிட்டே... அதுமட்டுமில்லாம நந்தாவுக்கு மலர ரொம்ப பிடிச்சிருக்குனு தோணுது"
என்று சௌமியாவும் இதற்கு ஏதாவது வழி கிடைக்காதா? என்பதுபோல் அண்ணனை பார்த்து கேட்டாள்.

"சௌமி இந்த உலகத்தில நம்ம கேட்டது எல்லாம் கிடைக்காது.. நம்ம நெனச்சது எல்லாம் நடக்காது.. நமக்கு பிடித்ததை நம்மதான் பிடுங்கிகணும்... உனக்கு அவன புடிச்சிருக்குல... இனி இந்த அண்ணன் பாத்துக்குறேன்"
என்று உறுதி அளித்தான் ஆதித்யா.

"அண்ணா ஆனா மலர் கண்டிப்பா நந்தாவை விட்டுக்கொடுக்க மாட்டா" என்று இழுத்த தங்கையை பார்த்து கண்களில் கூர்மையுடன் சிரித்தவன்,
"உனக்கு உன்னோட அண்ணன பத்தி நல்லாவே தெரியுமே சௌமியா...!! ஒரு விஷயம் பண்றதுக்கு முன்னாடி நான் எல்லா வழியிலும் யோசிச்சு தெளிவா தான் பண்ணுவேன். நீ கவலையே படவேண்டாம். நிம்மதியா இரு ..."
என்று அவளது தலையை பரிவுடன் தடவி விட்டு வேகமாக வெளியேறினான் ஆதித்யா.

தங்களுக்கு பின்னே இவ்வளவு பெரிய சதி நடப்பது தெரியாமல்,
அந்த ரெஸ்டாரண்டில் பேசி சிரித்தவாறு ஐஸ்கிரீம் சாப்பிட்டு கொண்டிருந்தனர் மலரும் நந்தனும்....

தொடரும்....
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN