ஆதித்யா சக்கரவர்த்தி-5

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 5

மறுநாள் காலையில் எப்பொழுதும் போல் எழுந்த மலர்விழி... முகம் கழுவி விட்டு புத்துணர்ச்சியுடன்
தன் தந்தை கற்றுக் கொடுத்திருந்த யோகா கலையை மறக்காமல் செய்து முடித்தாள்.

அன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையிலேயே தலைக்கு குளித்துவிட்டு வந்தவளின் முடியிலிருந்து நீர் சொட்டு சொட்டாக விழுந்து கொண்டே இருக்க
துண்டினால் அதை முடிந்து கட்டியவள்.
பால்கனியில் நின்று நன்றாக துவட்ட ஆரம்பித்தாள்.

ஆதித்யா அப்பொழுதுதான் தனது உடற்பயிற்சிகளை முடித்துவிட்டு வழக்கம்போல் தோட்டத்திற்கு உலாவ வந்தான்.

மேலே ஏதோ அரவம் கேட்கவும் திரும்பிப் பார்த்தவன்... அந்த அதிகாலை சூரிய ஒளியில் பளிச்சென்று தேவதைபோல் மின்னிக் கொண்டிருந்தவளை ஆச்சரியமாக பார்த்தான்.

அவன் பார்த்த வரைக்கும் அவனது இரு தங்கைகளும் சூரிய உதயத்தை பார்க்கவே மாட்டார்கள். அதுவும் விடியற்காலையில் சுட்டு போட்டாலும் குளிக்கவே மாட்டார்கள். இவள் கொஞ்சம் வித்யாசமானவள் தான் போலும் என்று நினைத்தவன்... அவளிடமிருந்து தனது பார்வையை விலக்கிக் கொண்டு திரும்பி நடந்தான்.

அன்று காலை உணவின்போது வானதிக்கு ஊட்டி விட்டுக் கொண்டிருந்த மலர் விழியை அப்பொழுதுதான் சௌமியா முதல் முறையாக சந்தித்தாள்.

சௌமியா மாநிறம்தான்.. குழந்தை தனமான வட்ட முகம்... அளவான உதடுகள்... முதுகு வரை வெட்டி போட்டிருந்த முடி... ஒல்லியான உடல்வாகு பார்க்க லட்சணமாக தான் இருப்பாள்.
ஆனால் மலரை பார்த்தபின் தான் அழகில் குறைவுதானோ... என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

ஆனால் மலரோ, ஒருவருக்கொருவர் அறிமுகமாகிய ஒரு சில நொடிகளிலேயே...
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க சௌமியா" என்று பாராட்டினாள்.
லேசாக வெட்கப்பட்ட சௌமியா தான் அவளைப் பார்த்ததும் மனதில் நினைத்ததை கூறி சிரித்தாள்...

மலரும் அவளுடன் சேர்ந்து சிரித்துவிட்டு...
"எல்லாரும் ஒவ்வொரு விதத்துல அழகுதான் சௌமியா. சொல்லப்போனா உலகத்துல அழகு இல்லாதவங்க னு யாருமே இல்ல.
உங்க குழந்தைத்தனமான முகம்,சிரிப்பு இதெல்லாமே உங்களோட பிளஸ் பாயிண்ட்ஸ்... அதேமாதிரி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிளஸ் பாயிண்ட்ஸ் ...கண்டிப்பா இருக்கும் சௌமியா" என்று மலர் சொல்ல சொல்ல அவளை ஆச்சரியமாக பார்த்தாள் சௌமியா.

"நீங்க அழகா பேசுறீங்க... கரெக்டா பேசுறீங்க ...எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு ஐ லைக் இட்... மலர்
ம்ம்ம் எனக்கு ஒரு நல்ல பிரெண்ட் கிடைச்சாச்சு..." என்றாள் சௌமியா.

"ஃபிரண்ட்ஸ்" என்று சௌமியா கை கொடுக்க... புன்னகையுடனே அவளது கையைப் பற்றி குலுக்கி "ஃபிரண்ட்ஸ்" என்றாள் மலர்விழி.

எப்பொழுதுமே காலை உணவை சீக்கிரம் முடித்துவிட்டு அலுவலகம் சென்று விடுவான் ஆதித்யா.
அதனால் தான் என்னவோ சுமுகமாக பேசிக் கொண்டனர் இருவரும்...
இருவரும் அவர்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது ...என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டனர்.

சொந்த விஷயங்களை தவிர்த்து தங்களது பள்ளி,கல்லூரி வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை பற்றி பேசினர்.

மதிய உணவிற்குப்பின்,
குழந்தை வானதியுடன் சேர்ந்து தோட்டத்தில் கண்ணாம்பூச்சி, நொண்டி ஆட்டம் விளையாடி குழந்தையோடு குழந்தையாக மாறி ஆட்டம் போட்டனர்.

எப்பொழுதும் அறையிலேயே அடைந்து கிடந்து அழுதுகொண்டிருந்த சௌமியா எங்கே???என்று தேட வேண்டும் என்பதுபோல் நன்றாக சிரித்துக்கொண்டே இருந்தாள் அவள்.

மலர்விழியும் இந்த வீட்டில் தனக்கு ஒரு துணை கிடைத்தது என்று மகிழ்ச்சியாக இருந்தாள்.

இரவு உணவின்போது தங்கையின் முகத்தில் தெரிந்த தெளிவு ஆதித்யாவின் கண்களிலிருந்து தப்பவில்லை.
குழந்தை வானதி இங்கு வந்ததும் தன் தங்கை தெளிவாகி விட்டாள்... என்று அவனே தனக்குள் காரணம் சொல்லிக் கொண்டான்.
ஆனால் இதற்கு முன்பும் குழந்தை பலமுறை இங்கு வந்திருக்கிறாள் அப்பொழுதெல்லாம் சௌமியாவின் முகத்தில் சோகம் இருந்து கொண்டுதானே இருந்தது என்பதை மறந்து போனான்.

ஆதித்யா பாசத்துடன் வானதியை பார்க்க... அவளோ ஒரு ஸ்பூன் வைத்து சாப்பிட திணறிக் கொண்டிருந்தாள்.

மலர் தனது பிளேட்டில் இருந்து உணவை எடுத்து வானதிக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதை பொறுமையாக கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்த ஆதித்யாவிற்கு கோபம் வர மலரிடம் பாய்ந்தான்.
"ஏய் அறிவிருக்கா... சின்ன குழந்தைக்கு ஊட்டி விடுறத விட்டுட்டு... அவ கையில ஸ்பூனை கொடுத்து சாப்பிட சொல்லிட்டு இருக்க" என்று ஆதித்யா மலரிடம் தாம் தூம் என்று குதிக்க....

பயத்தில் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டு சதி செய்ய...
"அது... அது வந்து அவ..ள அடுத்..த வரு...ஷம் ஸ்கூல்ல சேர்..க்கணும்னு அண்ணி சொன்..னாங்க அதான் இப்பவே கொஞ்..சம் கொஞ்சமா ட்ரெய்னிங் கொடு..த்தா அடுத்த வருஷம் உதவியா இருக்கு..ம்னு" என்று மலர் சொல்லி முடிக்கவில்லை.

அதற்குள் கோபத்தில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்த கண்ணாடிக் குவளையை தூக்கி கீழே போட்டு உடைத்தான் ஆதித்யா.

சௌமியா எப்பொழுதும் நடப்பது தானே... என்று சாதாரணம் போல் பார்க்க... பயத்தில் மலரின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.

குழந்தை வானதியும் அவனை பயத்துடன் பார்ப்பதை உணர்ந்து,
ப்ச்ச் என்று கோபத்தை அடக்க தலைகோதி கொண்டவன்
மலரைப் பார்த்து,
"உங்க மிடில் கிளாஸ் புத்திய அடிக்கடி காமிக்கிற ....அப்படியே அடுத்த வருஷம் வானதி ஸ்கூலுக்கு போனாலும் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விடுறதுக்கு அந்த ஸ்கூல்ல கண்டிப்பா ஆள் இருப்பாங்க ...அப்படிப்பட்ட நல்ல ஹை கிளாஸ் ஸ்கூல் ல தா நான் வானதியை சேர்ப்பேன்... அதுக்கு முன்னாடி குழந்தையை கஷ்டப்படுத்தாத...
ஊட்டி விடு" என்று அதட்ட, மலரின் உடல் பயத்தில் நடுங்கியது
சௌமியா,

"பாவம் அண்ணா... எதுக்கு மலர பிடிச்சு கத்துற" என்று அவளுக்கு பரிந்து கொண்டு வர...
தங்கையைப் பார்த்து முறைத்தான் ஆதித்யா.

"நீ உன் பிளேட்ல உள்ளத சாப்டு சௌமி... தேவையில்லாமல் என்ன நீயும் கோபப்படுத்தாத" என்று அவளை அடக்கிவிட்டு...

மலரின் புறம் திரும்பி,
"உன்ன ஊட்டி விடுனு சொன்னேன்..." என்றான் அதிகாரமாக...

மலர் பதற்றத்துடன் அவளது பிளேட்டை ஒதுக்கி வைத்துவிட்டு வானதிக்கு ஊட்டி விட ஆரம்பித்தாள்.
சௌமியா மலரை பாவமாக பார்த்துவிட்டு....
தன் அண்ணனை முறைத்துக்கொண்டே பிளேட்டில் உள்ளதை உள்ளே தள்ளினாள்.
பின் அதற்கும் சேர்த்து வைத்து கத்துவான் எதற்கு வம்பு என்று தான்...!!

அன்று இரவு தங்கையின் அறைக்கு குட்நைட் சொல்ல சென்ற ஆதித்யாவிற்கு மலரின் குரல் தெளிவாக கேட்டது.

"இவ இந்த நேரத்துக்குல இங்க என்ன பண்றா" என்று யோசித்துக் கொண்டே அவன் வர...

"காட்ல உள்ள காட்டுமிராண்டி மாதிரி கத்தினா எனக்கு பயம் வராம இருக்குமா?? சௌமி..." என்ற மலரின் மெல்லிய குரலை அடுத்து, அவனின் தங்கையின் குரல் கேட்டது.

"அடிப்பாவி என் அண்ணா உனக்கு காட்டுமிராண்டி யா?"

"பின்ன அந்த மீசை, தாடி, முறைப்பு கத்தல்.... எல்லாத்தையும் பாத்தா காட்டுமிராண்டி மாதிரிதானே இருக்கு. இல்லனா புள்ள பிடிக்கிறவன்னு சொல்லலாமா???" என்று மலர் சந்தேகத்துடன் கேட்க...
சௌமியின் சிரிப்பு சத்தம் கூடவே கேட்டது.

மலரின் கூற்றில் கோபம் வந்தாலும் தங்கையின் சிரிப்பு இதமாக இருக்க... வந்த வழியே திரும்பிச் சென்று விட்டான் ஆதித்யா.

மறுநாள் காலையில் மலர் பால்கனியில் நின்று தோட்டத்தை பார்த்துக்கொண்டிருக்க... ஆதித்யா செடிகளுக்கு எல்லாம் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தான்.

மலர் இது என்ன அதிசயம்?
என்பது போல் பார்க்க... பக்கத்தில் தோட்டக்காரன் கைகட்டி நின்று கொண்டிருந்தார்.

ஓஓ...இப்படி தான் வேலை செய்யணும்னு சொல்லிக் கொடுக்கிறாங்க போல என்று நினைத்து மலர் உள்ளே சென்றுவிட்டாள்.

"ராமையா நீ வீட்டுக்குப் போ ன்னு சொன்னேன்... எதுக்கு இங்கே நிக்குற?" என்று ஆதித்யா அதட்டலாக கேட்க...

"ஐயா இத நானே செய்றேன்... தாங்க" என்றார் அவர்.

"உனக்கு உடம்பு சரியில்லைன்னு பார்த்தாலே தெரியுது... வீட்டுக்கு போ... நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு நாளைக்கு வந்து தெம்பா பண்ணு... இப்ப நீ போகலாம்"
என்று ஆதித்யா அதிகாரத்துடன் சொல்ல மறுக்கமுடியாமல் சென்றுவிட்டார்.

அன்றும் பகல் முழுவதும் மலர் சௌமியா, வானதி மூவரும் ஆட்டம் போட்டனர்.
ஆதித்யா அலுவலகத்திலிருந்து வரும் பொழுது நல்ல பிள்ளையாக இருந்து கொண்டனர்.

இதுவே தொடர...
அன்று இரவு உணவிற்குப்பின், மலர் அவளது அறையில் ஒரு புத்தகத்தை வைத்து வானதிக்கு கதைசொல்லி கொண்டிருந்தாள்.
குழந்தையும் ஆர்வமாக கதை கேட்டுக் கொண்டிருந்தாள்.

ஆங்கிலத்தில் உள்ள "The selfish Giant" என்ற கதையை வானதிக்கு சொல்லிவிட்டு...
அதில் இருந்த அரக்கனை காட்டி, "உன்னோட மாமா தான் இது..."
என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் மலர்.

குழந்தை உடனே மறுத்துவிட்டு....
"மாமா எப்பவுமே பெஸ்ட் ...ரொம்ப ஸ்ட்ராங்" என்றாள்.

"இந்த கதையில வர்ற அரக்கன் கூட ஸ்ட்ராங் தான்" என்றாள் மலரும் விடாமல்...

"ஆனா மலர் அத்த இந்த ஸ்டோரில வர்ற அரக்கன் ரொம்ப பேர்ட்... ஆனா மாமா ரொம்ப ரொம்ப குட் ... எனக்கு சாக்லேட் வாங்கி தருவாங்க" என்றாள் வானதி.

"உனக்கு சாக்லேட் வாங்கி தந்தா... எல்லாரும் ரொம்ப ரொம்ப குட் தான்..." என்று குழந்தையிடம் வழக்காடினாள் மலர்.

அவ்வளவு நேரம் கதவின் அருகில் நின்று இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஆதித்யா உள்ளே வந்தான்.

மலர் கதவிற்கு முதுகு காட்டி அமர்ந்திருந்ததால், அவள் அவனின் வரவை பார்க்கவில்லை ஆனால் வானதி பார்த்துவிட்டாள்.

வானதி வாயைத் திறப்பதற்கு முன்... உஷ் என்று வாயை மூடி சைகை காட்டினான் ஆதித்யா.

"குட்டிமா சாக்லேட் வாங்கி தர்ற யாரையும் நம்ப கூடாது..அவங்க ஒரு வேல புள்ள புடிக்கிறவங்களா... இல்லனா பூச்சாண்டியா கூட இருக்கலாம்... கவனமா இருக்கணும் நீ"
என்று மலர் சொல்லிக் கொண்டிருக்கும்போது குழந்தை அவளின் பின்னாலேயே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"பின்னால என்ன இருக்குன்னு அங்கேயே பாக்குற..."என்று மலர் எதேர்ச்சையாக திரும்ப ஆதித்யா முகத்தில் கொலைவெறியுடன் நின்றுகொண்டிருந்தான்.

சர்வமும் அடங்கிப்போனது மலர்விழிக்கு....

அறையில் இருந்ததால் துப்பட்டாவை கட்டிலில் போட்டிருந்தாள்.அதை எடுத்து மேலே போட்டுக்கொண்டு சட்டென்று எழுந்து நின்றாள்.
அதுவுமே ஆதித்யாவை கோபப்படுத்த தான் செய்தது.

ஆதித்யா ஒற்றை புருவத்தை தூக்கி முறைத்துக் கொண்டிருக்க...
மலர் பயத்துடன் எச்சிலை விழுங்கி அது... அது.. என்றுவிட்டு அவனை சுற்றி அறையை விட்டு வெளியேற பார்க்க...
ஆதித்யா அவளின் கையைப் பிடித்து நிறுத்தினான்.

கண்களில் கனல் பறக்க,
"என் பொறுமையை நீ ரொம்ப சோதிக்கிற... நீ இங்க கெஸ்ட் ...அத மனசுல வச்சுதான் உன்ன இப்ப விடுறேன் ... ஆனா எப்பவுமே இப்படியே விடமாட்டேன்"என்று விட்டு வேகமாக வெளியேறி விட்டான்.
என்ன செய்வதென்று தெரியாமல் மலர் விக்கித்து நின்றாள்.

மறுநாளிலிருந்து மலர் அடக்கி தான் வாசித்தாள்.

சௌமியா கூட "என்னாச்சு ரொம்ப அமைதியா இருக்க" என்று கேட்டாள்.
அவளிடமும் ஏதேதோ கூறி சமாளித்து விட்டாள்.

வானதியிடம் சௌமியா விசாரிக்க...
அவளுக்கு விஷயம் புரிந்து போனது.
"என்னோட அண்ணனுக்கு திரும்பவும் பயந்துட்டியா??" என்று சௌமியா நக்கலாக கேட்க...

"அப்டின்னா இல்ல..." என்ற மலர் சற்றுப் பொறுத்து,
"லைட்டா பயந்துட்டேன்..." என்று உதட்டை பிதுக்கினாள்.

"இதெல்லாம் நம்ம வீர வாழ்க்கைல சகஜம்" என்று சௌமியா தேறுதலாக சொல்ல....மலர் சிரித்து வைத்தாள்.

இப்படியே ஒரு வாரம் ஓடியது.
அன்று வெயில் அதிகமாக இருக்க... மூவரும் தோட்டத்தின் மரநிழலில் ஒரு ஸ்பீக்கரை வைத்து அதில் குத்து பாடல்களை ஒலிக்கவிட்டு ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்பொழுது செடிக்கு தண்ணீர் பாய்ச்சும் நீண்ட குழாயினை எடுத்த சௌமியா... மலரின் மீது நீரை அடித்து நன்றாக குளிக்க வைத்தாள்.

சித்தி நானும்... நானும்... என்று வானதி அடம்பிடிக்க... அவளையும் தண்ணீர் பாய்ச்சி குளிக்க வைத்தாள் .
மலர் சௌமியாவின் கைகளில் இருந்து குழாயினை பிடுங்கி சௌமியாவை நனைத்துக் கொண்டிருக்கும் சமயம் ஏதோ பைலை எடுக்க வீட்டிற்கு வந்த ஆதித்யா... வீட்டில் யாரும் இல்லாததை கண்டு தோட்டத்திற்கு வந்தான்.

அப்பொழுது தான் மலர் சௌமியாவின் மீது தண்ணீர் பாய்ச்சி அவளை நனைய வைத்து கொண்டிருந்தாள்.

குழந்தையும் ஈரமாக இருப்பதை பார்த்தவுடன் ஆதித்யாவின் சினம் எல்லை மீற...

மலரின் அருகில் வந்து அவளது முழங்கையை பற்றி அவனுக்கருகில் இழுத்து...
"ஹவ் டேர் யூ...?? அறிவு இருக்கா குழந்தையை நனைய வச்சு அப்படி என்ன விளையாட்டு உனக்கு... இடியட் இடியட்...சௌமி நீ கூட எல்லாத்தையும் பாத்துட்டு இருக்கியா... "
என்று தங்கைக்கும் அதட்டல் போட்ட ஆதித்யா தன் கைகளில் இருந்த மலரின் கை நழுவுவதை உணர்ந்து ...
திடுக்கிட்டு அவளை பார்க்க... அவள் பயத்தில் மயங்கி இருந்தாள்.

தொடரும்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN